கடந்த ஆறு மாத காலமாக அமலில் இருக்கும் ஊரடங்கு, கொரோனாவை ஒழிப்பதற்காக என்று நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் கொரோனாவுக்குப் பதிலாக ஒழிந்தது என்னவோ வேறு.
ஊரடங்கால் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்தனர், ஒரு வேலை சோற்றுக்கு வழி இல்லாமல் சொந்த நாட்டிலேயே அகதிகளானார்கள். தங்கள் வாழ்நாளில் கொஞ்சம் கொஞ்சமாக சம்பாதித்துச் சேர்த்துவைத்த பணம் மற்றும் நகைகளை எல்லாம் இந்த ஊரடங்கில் விற்றுத் தங்களின் பசியைப் போக்கினார்கள்.
இப்படியாக இந்த ஊரடங்கால் பாதிக்காத தொழிலாளர்களே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இதில், ஆண்டாண்டு காலமாக செய்துவந்த தொழிலை விட்டுவிட்டு, வேறு தொழிலை நோக்கிப் பலரும் சென்றுவிட்டார்கள். குறிப்பாக, கோடிக்கணக்கில் சம்பாதிக்க முடியும் என சராசரி ரசிகர்கள் நினைத்துக்கொண் டிருக்கும் சினிமா துறையின் அடிமட்டத் தொழிலாளர்களின் நிலை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
"எந்திரன்', "விஸ்வரூபம்', "பாகுபலி' போன்ற படங்களின் பிரம்மாண்டமான செட்டிங் காட்சியமைப்புகளைப் பார்த்து நாம் வியந்து போனதுண்டு. ஆனால் ஒரு நாளும் அந்த பிரமாண்ட செட்டிங்குகளின் பின்னால் மறைந்திருக்கும் உழைப்பாளர்களின் முகங்களை நாம் பார்த்திருக்கவோ அல்லது அவர்களைப் பற்றி அறிந்திருக்கவோ மாட்டோம். ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரிக்க, இயக்குநர், தயாரிப்பாளர், மற்றும் கதாபாத்தி ரங்கள் மட்டுமின்றி குறைந்த பட்சம் 100 தொழிலாளர்களாவது தேவைப்படும் என்கின்றனர் திரைத்துறையினர். ஆனால் நாம் திரையில் காண்பதோ எஞ்சிய சிலரை மட்டுமே .
கடந்த ஆறு மாதங்களாக திரையரங்குகள் இயங்காததாலும் படப்பிடிப்புகள் இல்லாததாலும் திரைத் துறையைச் சார்ந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் திரைப்படங்கள் எடுப்பதற்காக பிரம்மாண்ட செட்டுகளை அமைக்கும் தொழிலாளர்கள் இந்த ஊரடங்கால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டதோடு தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்துள்ளனர். குறிப்பாக செட் அமைக்கும் கார்பெண்டர், பெயிண்டர், மோல்டர் உள்ளிட்ட கடின உழைப்பாளர்கள் மற்றும் இவர்களோடு இணைந்து புரொடக்ஷன் துறையில் பணியாற்றும் சமையல் செய்பவர்கள், பாத்திரம் கழுவுகிறவர்கள், மற்றும் இதர தொழிலாளர்களும், இன்று வேறுவழியில்லாமல் எங்கெங்கோ பிழைப்பு தேடிப் போய்விட்டார்கள்.
இதுகுறித்து செட் அமைக்கும் தொழிலாளி கோபிகிருஷ்ணா சொல்லும் போது...’""நான் ஆரம்பத்தில் சினிமா துறையை நம்பித்தான் சென்னைக்கு மிதிவண்டியில் வந்தேன். இன்று நான் இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு வருகிறேன். என் மகளையும் நல்ல முறையில் படிக்கவைத்து வரு கிறேன். பிரபல முன்னணி நடிகர்களின் படத்திற் கெல்லாம் நான் செட் அமைக்கும் பணியைச் செய்திருக்கிறேன். கொரோனா இல்லாத இயல்பான காலத்திலேயே எங்களுக்கு மாதத்தில் வெறும் 15 முதல் 20 நாட்கள்தான் வேலை இருக்கும். அதுவும் படப்பிடிப்புகளைப் பொறுத்துதான் எங்களுக்கு வேலைகள் இருக்கும். ஆனால் இந்த கொரோனா காலத்தில் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள் ளோம். இப்படியான நெருக்கடியான காலத்தில் எங்கள் தொழிலைச் சேர்ந்தவர்கள் பலர் வேறு வேறு தொழிலை நோக்கிச் சென்று விட்டனர்.
ஊரடங்கு காலத்தில் எங்களின் சினிமா துறை சங்கத்தின் மூலமும் பல சினிமா பிரபலங்களும் எங்களுக்கு நிவாரண பொருட்கள் கொடுத்து உதவினார்கள். அவர்கள் செய்த உதவியால்தான் நாங்கள் இன்றுவரை தாக்குப்பிடித்துள்ளோம். அதே நேரத்தில் அரசாங்கத்திடம் இருந்து 1000 ரூபாய் இரண்டு மாதங்கள் கொடுக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டாலும் எங்களுக்கு இன்னும் விடிவு காலம் பிறக்கவில்லை''’ என்றார் கவலையாய்.
திரைத் தொழிலாளியான ராஜ்குமாரோ, ""நான் சினிமா துறையில் சுமார் 24 ஆண்டுகளாக செட் அமைக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன் . என்னுடைய வாழ் நாளில் நான் சம்பாதித்து சேர்த்து வைத்ததை எல்லாம் இந்தக் கொரோனா ஊரடங்கில் பயன்படுத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இந்த தொழிலில் பல வருடமாக வேலை செய்துவந்தவர்களில் பலரும் தற்போது வீதிவீதியாக தேநீர் விற்று வருகிறார்கள், எனக்குத் தெரிந்த ஒருவர் தக்காளி விற்கிறார். தற்போது ஊரடங்கு தளர்வு அறிவித்தாலும் சினிமா படப்பிடிப்புகள் சரிவரத் தொடங்கவில்லை. சிறு சிறு விளம்பரப் படங்களுக்கு தற்போது நாங்கள் வேலைபார்த்து வருகிறோம். மாதம் 5 நாள் வேலை கிடைத்தாலே பெரிதாக உள்ளது. சினிமாப் படபிடிப்புகள் எப்போது தொடங்கும் என்று நாங்கள் காத்துக் கொண்டு இருக்கிறோம்'' என்றார் வேதனையோடு.
இப்படிப்பட்ட கவலைப் புலம்பல்களே கோடம்பாக்கம் பகுதியில் அதிகம் கேட்கிறது.
திரையரங்கு இல்லாத திரைப்பட யுகத்தில், கனவுத் தொழிற்சாலையைக் கட்டமைக்கும் இந்த அடிப்படைத் தொழிலாளர்களின் பசியும் பட்டினி வாழ்வும் எப்போது மாறும்?
-சேகுவேரா