யிலாப்பூர் ஆர்.ஏ.புரத்தில் பக்கிங்காம் கால்வாயை ஆக்கிரமித்துக் கட்டியுள்ள வீடுகளை பொதுப்பணித் துறை அதிகாரிகள் அகற்றிவந்த நிலையில், இந்த ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிர்ப்புத்தெரிவித்து, மே 8-ஆம் தேதி பழ வியாபாரியான கண்ணையன் தீக்குளித்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கிவந்த நிலையில் அவர் மரணமடைந்தார்.

ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகர், இளங்கோ தெரு பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் பக்கிங்காம் கால்வாயை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருப்பதாக ராஜிவ் ராய் என்கிற தொழிலதிபர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

ss

Advertisment

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து பக்கிங்காம் கரையோரமாக இருந்த 366 வீடுகள் உடனடியாக அகற்றப்பட்டது.

கடந்த ஏப்ரல் 29 முதல் அதிகாரிகள் மிச்சமிருந்த வீடுகளை இடிக்கும் பணியைத் தொடங் கினர். மக்களின் எதிர்ப்பைச் சமாளித்து 150 வீடுகள் வரை இடிக்கப்பட்டன. அங்கிருந்து அகற்றப்பட்டவர்களுக்கு பெரும்பாக்கம், எழில் நகர், படப்பை ஆகிய பகுதிகளில் வீடுகள் வழங்கப்பட்டது. வீடுகள் சரியான பராமரிப்பின்றியும், சுகாதாரச் சீர்கேடுகளுடன் இருப்பதாகவும், தங்கள் வாழ்வாதாரத்திற்கு பொருத்தமாக இல்லையெனவும் கூறி அங்கே பலரும் போகமறுத்தனர்.

அப்பகுதியில் பழக்கடை நடத்திவரும் கண்ணையனின் வீடும் இளங்கோ நகர் பகுதியில்தான் இருந்தது. சில நாட்களாகவே தனது வீடு இடிக்கப்பட்டுவிடும் என்ற மன உளைச்சலில் இருந்த அவர், வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்த நிலையில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டுவந்த பக்கத்துக் குடியிருப்பினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். எனினும் அவரது தீக்காயம் 92 சதவிகிதமாக இருந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, தற்காலிகமாக ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இறந்தவர் பா.ம.க. நிர்வாகி என்பதாலும், கண்ணையனின் மரணத்தை யடுத்து அப்பகுதி மக்கள் போராடியதாலும் இந்தப் பிரச்சினை சட்டசபை வரை சென்றது. எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பி.எஸ்., நேரமில்லா நேரத்தில் இது குறித்து கேள்வி யெழுப்பி, உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் வழங்கவேண்டுமென்றார்.

தீக்குளித்து இறந்த கண்ணையன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி அறிவித்த முதல்வர் ஸ்டாலின், "இந்த ஆக்கிரமிப்பு அகற்றல் விவகாரத்தில் இதுவே கடைசி உயிரிழப்பு சம்பவமாக இருக்க வேண்டும்'' என வேண்டிக்கொண்டார். அப்பகுதியிலேயே, அவர்களது மறு குடியமர்வு இருக்கவேண்டும் என மக்கள் கருதுவதை கருத்தில்கொண்டு, "மயிலாப்பூர் பகுதிகளிலே அவர்களுக்கு வீடு ஒதுக்கித்தர அரசு முடிவெடுத்திருக்கிறது'' எனவும் அறிவித்தார்.