வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம். மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்ட அரங்கம். “"நாங்க பத்தாவது, பன்னிரண்டாவது படிக்கிறோம் சார், இப்பவந்து வீடுகளை இடிச்சா நாங்க பொதுத்தேர்வு எழுதமுடியாத சூழ்நிலை உருவாகும். வீட்டைக் காலிசெய்ய இரண்டு மாதம் டைம் தாங்க சார்''’எனக் கேட்டார்கள் குடியாத்தம் நெல்லூர்ப் பேட்டை பகுதி மாணவர்கள். "ஒண்ணும் செய்ய முடியாது போங்க' எனச் சொல்லி அனுப்பினார் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன். மறுநாளே கௌண்ட்யா நதியோரம் கட்டப்பட்டிருந்த சுமார் 300 வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டன.

houses

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குவிந்திருந்த மக்களிடம், “"நீங்க நீர்வழிப்பாதையில வீடுகள் கட்டியிருக்கீங்க, ஒன்னும் செய்யமுடியாது, வேற இடம் பார்த்துக் குங்க. சொன்ன தேதியில் ஆக்ரமிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் இடிக்கப்படும், உங்க பொருட்களை எடுத்துக்கிட்டு வெளியேறுங்க''’என்றனர் அதிகாரிகள். சொன்னது போல் இடித்துத் தள்ளினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த பல்லமுள்வாடி கிராமத்தில் பாலு என்பவர் நீர்நிலை கால்வாயை ஆக்கிரமித்து ஒரு ஏக்கர் நெல் பயிரிட்டிருந்தார். அறுவடைக்கு சில வாரங்களே உள்ள நிலையில் வருவாய்த்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் இணைந்து பொக்லைன் இயந்திரம் மூலமாக அதனை நிரவினர். இப்படி வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டங்களில் மட்டுமல்ல,…தமிழ்நாடு முழுவதுமே ஆறு, குளம், ஏரி மற்றும் நீர்ப்பிடிப்பு, நீர் வழிப்பாதைகளில் கட்டப்பட்ட வீடுகள், குடிசைகள், நிலங்கள் என அனைத்தையும் அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக களமிறங்கி யுள்ளன வருவாய்த்துறையும், நீர்வளத்துறையும்.

இதுகுறித்து விசாரித்தபோது, "2015-ஆம் ஆண்டு சென்னையில் அதீத மழை, செம்பரம் பாக்கம் ஏரி நள்ளிரவு திறப்பு போன்றவற்றில் சிக்கி சென்னை மக்கள் தத்தளித்தனர். நீர்வழிப்பாதைகள் ஆக்கிரமிப்புகளால்தான் இந்த நிலையென உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப் பட்டது, அந்த வழக்கு விசாரணை தொடர்ச்சியாக நடந்துவந்தது. 2018-ல் சென்னை உயர்நீதிமன்றம் "8 வார காலத்துக்குள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். இல்லையேல் அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்' என உத்தரவிட்டது, அப்போதும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

Advertisment

houses

Advertisment

அரியலூர் மாவட்டம் பெரியதிருக்கோணம் ஏரி ஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்றத்திற்கு வழக்கு வந்தது. இப்படி கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்தும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் என வழக்குகள் தாக்கலாகின. விசாரணையின்போது, அப்போது ஆட்சியிலிருந்த அ.தி.மு.க. அரசு நீதிமன்றத்துக்கு சரியாக பதிலளிக்கவில்லை. சில உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்தும் அ.தி.மு.க. அரசு அதனைப் பின்பற்ற வில்லை. 2021 மழைக்காலத்தில் தமிழகம் முழுவதும் மீண்டும் பெரும் மழை. சென்னை மீண்டும் தத்தளித்தது. இதன்பின் நீர்நிலை ஆக்கிரமிப்பு வழக்குகள் ஒன்றாக்கப்பட்டு விசாரிக் கப்படுகின்றன.

இந்த வழக்கில் வேகம் காட்டிய நீதிமன்றம், 2015 பெருவெள்ளத்துக்குப் பிறகு நீர்வழிப் பாதைகளை சரிசெய்ய கடந்த 7 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்?, தமிழ்நாடு முழுவதும் நீர்வழிப்பாதை, குளங்கள், கால்வாய்களில், ஏரிகளில் ஆக்கிரமிப்பு எவ்வளவு உள்ளது என நவம்பர் மாதம் பட்டியல் கேட்டது. 57,688 ஆக்கிரமிப்புகள் உள்ளன, அதில் 8,797 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாக அறிக்கை தந்தது வருவாய்த்துறை. அதுகுறித்த முழுமையான விவரங்கள் இல்லாததால் தலைமைச்செயலாளர் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.

கடந்த டிசம்பர் மாதம் தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்தார். இது மேம்போக்கான அறிக்கை என கோபத்தைக்காட்டிய நீதிபதிகள், "தவறுகளுக்கு அதிகாரிகளே காரணம், அதிகாரிகளுக்கு கருணை காட்டமுடியாது, அதிகாரிகளின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும்' என உத்தரவிட்டனர்.

கடந்த பிப்ரவரி மாதம், நீர்நிலை ஆக்கிரமிப்புகளைத் தடுக்க, அகற்ற, மூன்று விதமான குழு அமைத்து அரசாணை வெளியிட்டது வருவாய்த்துறை. ஆக்கிரமிப்புகளை அகற்றி அதுகுறித்த அறிக்கையை உடனடியாக அனுப்புங்கள் என மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பினார் தலைமைச்செயலாளர். இதன்பின்பே அதிகாரிகள் களமிறங்கி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் தரப்பட்டு இப்போது இடிக்கின்றனர்''’என்றார்கள்.

ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுவது குறித்து வேலூர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "ஏரிகளின் நீர்பிடிப்புப் பகுதி, நீர்வரத்து பகுதி, ஆறுகள், குளங்களின் கொள்ளளவு, நீர்வரத்து பாதை குறித்த வரைபடம் நீர்வளத்துறையிடமும், எங்களிடமும் உள்ளது. கால்வாயில் நிரம்பி தண்ணீர் போனால் அதன் அருகிலுள்ள பகுதி எவ்வளவு பாதிக்கப்படும் என அளவு உள்ளது. இதையெல்லாம் கணக்கிட்டே கால்வாயிலிருந்து 200 மீட்டர், ஏரிப்பகுதியிலிருந்து 100 மீட்டர் என அளவுவைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம், இதில் பாரபட்சமே காட்டவில்லை''’என்றார்.

"நீதிமன்ற நடவடிக்கை சரிதான். ஆனால் கடைசிப் புகலிடமாகத்தான் நீர்நிலை, குளத்தோரங்களை வாழ வழியற்றவர்கள் நாடுகிறார்கள். நீர்நிலைப் பகுதிகளில் வீடு கட்டியவர்கள் பணக்காரர்கள் கிடையாது, உழைக்கும் மக்களான எங்களுக்கு, அரசு கருணை அடிப்படையில் மாற்று இடம் வழங்கவேண்டும்'' என கோரிக்கை விடுக்கிறார்கள் பாதிக்கப்பட்ட குடியாத்தம் ராமமூர்த்தி, விஜயகுமார் உள்ளிட்டவர்கள்.

செய்வாரா தமிழக முதல்வர் ஸ்டாலின்?