n ram

இந்தியாவில் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர், பல நாடுகளுக்கு பயணித்து பத்திரிகையாளராக பணிபுரிந்தவர். மரியாதைக்குரிய என்.ராம் அவர்களை நக்கீரன் சிறப்பு பேட்டிக்காக சந்தித்தோம். நம்முடைய கேள்விகளுக்கு பல்வேறு சுவாரசியமான தகவல்களை, தன்னுடைய கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

Advertisment

இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா நடந்து முடிந்திருக்கிறது. இந்திய பாராளுமன்றத் தேர்தல் உலக அளவில் எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெருகிறது?

Advertisment

முக்கியமான ஒரு லோக்சபா எலெக்சன் நடந்து முடிந்திருக்கிறது. 970 மில்லியன் தகுதிவாய்ந்த வாக்காளர்கள் இருந்த தேர்தலில் 61 சதவிகிதம் வாக்களித்திருக்கிறார்கள். இது ஒரு பெரிய விசயம்தான். அயோத்தியில் உள்ள பைசாபாத் மற்றும் உத்திரப்பிரதேசத்தில் சில தொகுதிகளிலும் பா.ஜ.க. தோற்றிருப்பதுதான் இந்த தேர்தலில் குறிப்பிடும்படியான ஒரு விசயமாகும்.

"ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தேன் கருணாநிதி' என்ற ஸ்டேட்மெண்ட்டைப் பற்றி?

பா.ஜ.க.வைப் பொறுத்தவரை அவங்களுக்கு மோர் டேஞ்சரஸôக ஸ்டாலின் இருக்கலாம். முன்பு எம்.ஜி.ஆர். இருந்தாரு, அப்புறம் ஜெயலலிதா இருந்தாங்க,பா.ஜ.க.வில் தமிழகத்தில் அப்டி யாரு இருக்காங்க... ***********? அவரை நான் ஜோக்கர்னுதான் சொல்வேன். மீடியாவை மதிக்கமாட்டாரு, மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவாரு, ************* கடுமையா வேலை செஞ்சாருதான், ஆனால் அசிங்கமாக பேசுறாரு. அதனாலதான் நானும், நக்கீரன் ஆசிரியரும் சேர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம்.

************ கோயம்புத்தூரில் ஏன் நின்னாருன்னு தெரியலை. அவருக்கு யாரோ உள்ளுக்குள் இருந்த எதிரிதான் நிறுத்தி வச்சிருக்காங்க. எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம் ஜெயிக்க மாட்டாருன்னு. ஆனால், நிறைய பணம் செலவழிச்சு இரண்டாவது இடத்திற்கு வந்துட்டாரு. அவர் ஒன்மேன் ஷோ போல கட்சியை நடத்தினார். உண்மை என்னவெனில் *************, மோடியோ ஒன்மேன் ஷோவாக கட்சியை நடத்த முடியாது. அவங்க ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கிரியேசன்கள்தான். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தால் உருவாக்கப்பட்டதுதானே பி.ஜே.பி. அந்த இயக்கம் இல்லையெனில் இவங்க ஜீரோதான்.

இரண்டு முறை ஆட்சி அமைத்தும், பெரிய விமர்சனங்கள் இருந்தும், மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து விட்டார்கள் இதை வீழ்ச்சி என்று எப்படி சொல்ல முடியும்?

தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் இது பி.ஜே.பி.க்கு தோல்விதான். 400 தொகுதிகள் வெற்றிபெறுவோம் என்று சொல்லிக்கொண்டேயிருந்தார்கள். ஆனால் அவ்வளவு வரவில்லையே. அது தோல்விதானே. பா.ஜ.க.வுக்கு மெஜாரிட்டியை விட 32 சீட் குறைவு. 2014 தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வந்தார்கள். அப்போது இந்தியாவின் வளர்ச்சி பற்றி பேசினார்கள். 2019-ல் முந்தைய தேர்தலைவிட அதிக பெரும்பான்மையுடன் வந்ததால், கூட்டணியை எல்லாம் கண்டுகொள்ளாமல் மோடியும், அமித்ஷாவும்தான் அனைத்து முடிவுகளையும் எடுத்தனர்.

தேர்தல் வந்ததும் எதிர்க்கட்சித் தலைவர்களை, முதல்வர்களை கைது செய்வது என பல வேலைகளைச் செய்தார்கள். பத்திரிகை சுதந்திரத்தை தடுத்தார்கள். பல பத்திரிகையாளர்களை கைது செய்தார்கள். 2014-க்கு பிறகு 14 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இவர்களெல்லாம் அரசின் ஊழலை வெளிக்கொண்டு வந்த மீடியாவைச் சேர்ந்தவர்கள். இதையெல்லாம் நியூயார்க்கை மையமாகக்கொண்டு செயல்படும் இயக்கம் டாகுமெண்டரியாக வெளியிட்டிருக்கிறது.

பாராளுமன்ற விவாதங்களுக்குள்ளேயே கொண்டுவராமல் காஷ்மீர் மாநிலத்தை உடைத்து லடாக் தனியான யூனியன் பிரதேசமாக மாற்றினார்கள். சி.ஏ.ஏ. கொண்டுவந்தார்கள். விவசாயிகளின் போராட்டத்தை கடுமையாக நசுக்கினார்கள். ஆனால் அதில் தோற்றுப் போனார்கள். அதனால் அந்த சட்டங்களை திரும்பப் பெற்றுக்கொண்டனர். மோசமான எதேச்சதிகாரப் போக்கு இருந்தது. இப்போது அது அடிவாங்கியிருக்கிறது. இப்ப மெஜாரிட்டி இல்லாமல் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆதரவோட ஆட்சி அமைக்கிறாங்க.

ஒரு கூட்டணியிலிருந்து இன்னொரு கூட்டணிக்குப் போவதில் நிபுணர்கள் சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும். சிலசமயம் தப்புக் கணக்குப் போட்டு தோற்றும்விடுவார்கள். 2020 அக்டோபரில் இந்தியா கூட்டணி உதவியுடன் ஆட்சியமைக்கிறார் நிதிஷ்குமார், பிறகு, என்.டி.ஏ. கூட்டணி பக்கம் போயிட்டாரு, எப்படி வேண்டுமானாலும் பல்டி அடிக்கக் கூடியவர். சந்திரபாபு நாயுடு திறமையான அரசியல்வாதி. அமித்ஷா இவரை மாமனாருக்கு முதுகில் குத்தி துரோகம் செய்தவர்னு கடுமையா விமர்சித்திருக்கிறார். ஆனால், இன்று இருவரின் தயவால்தான் ஆட்சி அமைக்கிறார் மோடி. இதை மோடி 3 என்று கூட சொல்லமுடியாது. மோடி 2.5 என்றுதான் சொல்லவேண்டும்.

பி.ஜே.பி. அரசு செய்த அரசியல் சேதாரங்கள் பற்றி சொன்னீங்க, அதில் எதை பெரிய சேதாரமாகப் பார்க்கிறீர்கள்?

மிகப்பெரிய டேமேஜ்கள்னு ஒன்றுமட்டும் சொல்ல முடியாது. நிறைய விசயங்களை இணைத்துதான் சொல்லமுடியும். இன்ஸ்டிடியூசன்களை மானிபுலேட் பண்ணியது, குறிப்பாக சுப்ரீம் கோர்ட்டின் மீது அழுத்தம் கொடுத்தது, எலக்சன் கமிஷனை சுதந்திரமாக செயல்படாமல் தடுத்தது... ஆனாலும் பெரிய அளவிலான கலவரங்கள் இல்லாமல், வேறெந்த பிராடுத்தனமும் இல்லாமல் நடந்துகொண்டதே பெரிய சாதனைதான். திருட்டுத்தனமாக சில விசயங்கள் செய்வார்கள் என்று விமர்சித்தார்கள் அதெல்லாம் இல்லை. நேர்மையாகத்தான் நடந்து கொண்டார்கள்.

எதிர்க்கட்சிகளின் பொருளாதார நிலையை கடுமையான ஒடுக்கினார்கள். சுதந்திர இந்தியாவில் இதுபோன்று இதற்கு முன்பு நடந்ததே இல்லை. சி.பி.ஐ., இன்கம்டேக்ஸ், மத்திய காவல்படை ஆகியோர்களை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை எல்லாம் முடக்கினார்கள். மதவெறியைத் தூண்டியது மிக முக்கியமாக இவர்கள் செய்த டேமேஜ், 20 கோடி மக்களைக் கொண்ட முஸ்லிம்களைத் தாக்கினார்கள். இந்துமத வெறியைத் தூண்டி விடுவதே இவர்களின் அரசியல் செயல்பாடாகப் பார்க்கிறார்கள்.

அயோத்தியில் கோவில் திறந்ததே மதவெறி அரசியல்தான் எனும்போது, வேறு எந்த விளைவுகளெல்லாம் இவர்களது சாதகமாகவும், பாதகமாகவும் அமைந்தது?

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூறு வருட திட்டம் இந்து மத வெறியை தூண்டிவிட்டுக் கொண்டேயிருப்பது. 1990களுக்குப் பிறகு பி.ஜே.பி. வந்ததும் ராமஜென்ம பூமி அரசியலை கையில் எடுத்தார்கள். மசூதிகளை திட்டமிட்டு சேதாரம் செய்ய நினைத்திருக்கிற அஜெண்டா கூட அவர்களிடம் உள்ளது. இதெல்லாம் பெரிய அளவிலான பாதிப்பு தான். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையை ஒருபோதும் மாற்ற முடியாது. அரசும், அரசியலும் வேறாக இருக்கவேண்டும். அதாவது கோவில்களும், அரசாங்கமும் வேறு, வேறாக இருக்க வேண்டும். அரசியலும் மதமும் வேறாக இருக்க வேண்டுமே தவிர அவற்றை கலக்கக்கூடாது என்று சட்டம் சொல்கிறது. ஆனால் அதுக்கு நேர்மாறாகத்தான் செயல்பட்டிருக்கிறார்கள். பிரதமர் ஒரு கோவிலுக்கு வழிபடப் போவதைவிட, இவரே பூஜை செய்பவராகவும் மாறியே இருந்தார். ஆச்சாரமாக இருக்கிற கோவில்களுக்கு பூஜை செய்பவர்களுக்கு, இவர் பூஜை செய்ய முன்வந்தது சுத்தமாகப் பிடிக்கவில்லை.

இவர் ஏன் விவேகானந்தர் மணிமண்டபத்தில் போய் தியானம் செய்கிறார். இண்டலிஜெண்ட்ஸ் எலெக்சன் ரிப்போர்ட் சொல்லியிருப்பார்கள். எக்ஸிட் போல் வேறு மாதிரி வந்தது. ஆனால் அது எந்த விதத்திலும் ரிசல்டை பாதிக்கவில்லை. ஆனால் பங்குச்சந்தையில் பெரிய மாற்றம் நிகழ்ந்தது. இதைத்தான் இப்போது ராகுல்காந்தி கேள்வி எழுப்புகிறார். நீங்களே உங்களுடைய ஸ்டாக்கை வாங்குனீர்களா? விற்றீர்களா? உங்களுடைய நண்பர்களைக் கொண்டு வாங்க வைத்தீர்களா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்.

ஒரு பி.எம்.மும், ஹோம் மினிஸ்டருமே ஸ்டாக் வாங்குங்க என்று மக்களுக்கு பரிந்துரை செய்தார்களே?

அது ரொம்ப தப்பான விசயம். இவர்களை செபி கேள்வி கேட்க முடியாது. ஆனால் ஜாயின்ட் பார்லிமெண்டரி கமிட்டி ராகுல்காந்தி கேள்வி கேட்டிருக்கிறார். மீடியா இதை இன்வஸ்டிகேசன் செய்யலாம். இண்டர்பெர்க் பண்ணியதுபோல செய்யலாம். பிசினஸ் மீடியா ஸ்டாக் மூவ்மெண்ட்ஸ் பற்றி அனலைஸ் பண்ணலாம். செய்வார்கள் என்று நினைக்கிறேன்.

பேட்டி : வசந்த் பாலகிருஷ்ணன்

தொகுப்பு : தாஸ்

("இந்து' என்.ராம் பேட்டி தொடரும்...)