தமிழக அரசு கடந்த ஆண்டிலிருந்து, தமிழகத்திலுள்ள பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் அரசு உதவியுடன் வெளிநாட்டுக்குச் சென்று படிப்பதற்கான நிதியுதவியை வழங்கிவருகிறது. இத்திட்டத்தில் சில சிக்கல்கள் இருக்கின்றன. அவை களையப்பட்டு, மாணவர்களுக்கு உதவிகரமாக மாற்றப்படவேண்டும் என்கின்றனர் திட்டத்தின்கீழ் உதவி பெறும் மாணவர்கள்.
தமிழகத்தில் 2023, ஏப்ரல் 14-ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த நாள் விழாவின்போது, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் அரசு உதவியுடன் வெளிநாடு சென்று படிப்பதற்கான நிதியுதவி அளிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, நடைமுறைப் படுத்தப்பட்டது. இதில் கல்விக் கட்டணம், இதர கட்டணம், விசா கட்டணம் மற்றும் விமானக் கட்டணம் அனைத்துக்கும் சேர்த்து ஆண்டுக்கு ரூ.36 லட்சம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2023-ஆம் ஆண்டு 66 மாணவர்களும், 2024-ஆம் ஆண்டு 150 மாணவர்களும், 2025-ஆம் ஆண்டு 174 மாணவர்களும் வெளிநாட்டில் சென்று படிக்க நிதியுதவி பெற்றுள்ளனர்.
இத்திட்டம் ஏழை எளிய மக்களின் கனவை நனவாக்கும் வகையில் இருந்தாலும், இந்த 36 லட்சம் ரூபாய், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் சேர்ந்து, அவர்கள் கல்லூரி சேர்க்கை உறுதிசெய்யப்பட்ட பிறகு இரண்டு மூன்று மாதங்கள் கழித்தே கொடுக்கப்படுகிறது. பல மாணவர்களால் விமானக் கட்டணம், விசா செலவு, கல்லூரிக் கட்டணம் அனைத்தையும் முன்கூட்டியே தயார் செய்யமுடியாமல், பலரது கல்விக் கனவு கனவாகவே நின்றுவிடுகிறது. பட்டியலினச் சமூகம் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைய மானியத்தோடான தாட்கோ லோன் வழங்கப்படுகிறது. அதிலுள்ள சிக்கலைப் போன்றே இந்த உயர்கல்வித் திட்டத்திலும் சில சிக்கல்கள் உள்ளன. பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள தொழில் ஆர்வமுள்ள, ஒரு பட்டியலின நபருக்கு தமிழக அரசு மானியம் தர ஆர்வமாக உள்ளது. ஆனாலும், இத்திட்டத்தின் பலன் பலருக்கும் ஏன் கிடைப்பதில்லை?
எந்த வங்கியும் பட்டியலின மக்களுக்கு லோன் தர முன்வருவதில்லை. அரசு, மானியம் தர தயாராக உள்ளது. ஆனால் வங்கி தரமறுக்கிறது. இதையும் மீறி கடன்பெற வேண்டுமென்றால், ஆதிதிராவிடர் இயக்குனர், செகரெட்டரி, அந்த மாவட்ட ஆட்சியர் என பலரிடமும் சென்று வங்கிகள் கடன் தர வலியுறுத்தச் சொல்லவேண் டும். அரசு சார்பில் அமைச்சரே தாட்கோ லோனை உறுதிப்படுத்திக் கொடுத்த பிறகும் "உங்களிடம் எந்த உடைமையும் இல்லை, சிபில்ஸ் ஸ்கோர் இல்லை என மறுக்கின்றன வங்கிகள். பொருளாதரத்தில் நலிவடைந்த மக்கள் பொருளாதாரத்தில் மேலேறி வரவே இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்காக ஆண்டு வருமானம் 1 லட்சத்துக்கும் குறைவாக இருக்கவேண்டும் என சொல்கிறது அரசு, இத்தகைய மக்கள் வங்கியிடம் எப்படி சொத்தோ, சிபில் ஸ்கோரோ காட்டமுடியும்?
இதற்கு இவர்கள் நேரடியாகவே உங்களுக்கு எந்தக் கடனும் தரமுடியாது எனச் சொல்லிவிட லாமே, எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கான பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கும் பணம் அப்படியே கிடப்பில் இருக்கும். இல்லையென்றால் அந்தப் பணத்தை வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்து வார்கள். இல்லையேல், அதனை ஒன்றிய அரசுக்கு மீண்டும் திருப்பியனுப்புவார்கள். இதேபோலதான் வெளிநாடுகளில் தரம் வாய்ந்த கல்லூரிகளில் இடம்கிடைத்தும், பல பட்டியலின, பழங்குடி யின மாணவர்கள் சேர முடியாமல் உள்ளனர். ஒருசில மாணவர்களே வட்டிக்குக் கடன் வாங்கி கல்லூரியில் சென்று சேர்கின்றனர். அப்படி செல்லுகின்ற மாணவர் களுக்கும் அரசு கொடுக்கும் 36 லட்சம் போதுமானதாக இருப்ப தில்லை. இங்கிலாந்து போன்ற நாடுகளில் டியூசன் பீஸ் மட்டுமே 40 லட்சம். அரசு கொடுக்கும் 36 லட்சத்திலே 4 லட்சம் பற்றாக்குறை. மேலும் அந்த மாணவர்கள் தங்கும் இடம், உணவு, புத்தகம், விசா, டிக்கெட் கட்டணம் என நெருக்கும் கட்டண நெருக்கடியை சமாளிக்க முடியாமல் பலர் இடை நின்றுவிடுகிறார்கள். கர்நாடகா மற்றும் மகாராஷ் டிரா மாநிலங்களில் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் மாணவர் களுக்கான கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே வழங்குகிறது. அதுபோக இதர செலவுகளுக்கு என்று மகாராஷ்டிரா அரசு 12 லட்சம் ரூபாயும், கர்நாடகா அரசு 8 லட்சம் ரூபாயும் வழங்குகின்றன. இதுபோக புத்தகம், விசா கட்டணம், விமானக் கட்டணம் போன்றவற்றுக்கும் தனியாக நிதி வழங்கப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் 150 இளங்கலை மாண வர்களுக்கும், 250 முதுநிலை மாணவர்களுக்கும் அதுபோக முனைவர் படிப்பிற்கு விண்ணப்பங் களின் எண்ணிக்கையைப் பொறுத்தும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் அத்தகைய குறிப்பிட்ட எண்ணிக்கை ஏதும் அர சால் நிர்ணயிக்கப்படவில்லை. இதுபோக கர்நாடக மாநிலத்தில் பயன்பெறும் மாணவர்களில், பெண் களுக்கு என்று 33 சதவீதமும் மாற்றுத்திறனாளி களுக்கு 5 சதவீதமும் சிறப்புச் சலுகை வழங்கப்படுகிறது. அத்தகைய சிறப்புத் திட்டம் எதுவும் தமிழகத்தில் நடைமுறையில் இல்லை.
குடும்ப வருமான உச்சவரம்பைப் பொறுத்த மட்டில் 8 லட்சத்திற்கும் குறைவானவர்கள் மற்றும் 8 முதல் 12 லட்சம் உள்ள மாணவர்களுக்கு தமிழகத்தில் ஆண்டுக்கு முறையே 36 லட்சம் மற்றும் 24 லட்சம் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் கர்நாடகாவில் குடும்ப வருமானம் 8 லட்சம், 8 லட்சம் முதல் 15 லட்சம், 15 லட்சம் முதல் 25 லட்சம் உள்ள மாணவர்களுக்கு முறையே 100 சதவீத மானியம், 50 சதவீத மானியம், 33 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. இத் திட்டமானது, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் இணைய வழியாகச் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் அவ்வாறில் லாத காரணத்தினால் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை அரசு அதிகாரிகளால் மாணவர்கள் சந்திக்க நேரிடுகிறது.
2025-ஆம் ஆண்டிற்கு இத்திட்டத்துக்கு ரூ.60 கோடி நிதி ஒதுக்கியுள்ளது தமிழகம். ஆனால் மாணவர்கள் சேர்க்கை 174 என கணக்கு காட்டப்படுகிறது. ஒரு மாணவருக்கு ஆண்டிற்கு 36 லட்சம் எனப் பார்த்தால் 174 மாணவர்களுக்கு 62 கோடியே 64 லட்சம் தேவைப்படுகிறது. ஆனால் இந்தாண்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி 60 கோடி. அதிலேயே 2 கோடியே 64 லட்சம் பற்றாக்குறை.
தமிழகத்தில் இத்திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான விசா கட்டணம், விமான கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்கான எந்தத் தொகையும் அவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு முன்பே வழங்கப்படாததால் ஏழை எளிய மாணவர் கள் இத்தகைய கட்டணங்களுக்கு கடன் வாங் கும் சூழல் இருக்கிறது. மேற்கண்ட தொகைகளை தமிழக அரசு ஒரு மாதம் கழித்தே வழங்குவதால் புதிதாக வெளிநாடு சென்ற மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
இதுகுறித்து பேசிய ஆராய்ச்சி மாணவர் பாரதிதாசன், “"நான் மலேசியாவில் ஆராய்ச்சி மாணவராகப் படித்துவருகிறேன். நான் இந்தாண்டிற்கான சேர்க்கையில் தேர்வுசெய்யப் பட்டு வெளிநாடு செல்வதற்கு உறுதி செய்யப் பட்டபின், எனக்கான விசா மற்றும் டிக்கெட், வங்கியில் இருப்புக்கான பணம் என அனைத்தையும் அரசு கொடுக்கும் எனச் சொல்லப்பட்டது. ஆனால் எதுவுமே கொடுக்கப்படவில்லை. நீங்கள் கல்லூரியில் சேர்ந்து 1 மாதம் கழித்து கொடுக்கப்படும் என்றனர். வங்கியிருப்பு 7 லட்சம், டிக்கெட், தங்குமிடம் என 12 லட்சத்திற்கு மேலே தேவைப்படும். இதற்கு தகுதிபெற வருமான வரம்பு ஆண்டிற்கு 8 லட்சத்துக்குக் குறைவாக இருக்கவேண்டும். முக்கிய பிரபலங்கள் சிலர் உதவிசெய்ததால் நான் கல்லூரியில் சேர முடிந்தது. சேர்ந்து இரண்டு மாதம் கடந்துவிட்டது. இன்னும் பணம் வழங்கவில்லை. இதனால் பல சிக்கல்கள். என்னுடன் பயிலும் மற்ற மாநில மாணவர்களுக்கு அனைத்துச் செலவையும் அவர்களது மாநில அரசே ஏற்றுக்கொள்கிறது. இதுபோன்ற சிக்கலால் பல மாணவர்கள் தவித்துவருகின்றனர்''’என்றார்.
அதேபோல இங்கிலாந்தில் படிக்கும் யாழினி என்ற மாணவியும் இதே குற்றச்சாட்டை வைத்துள்ளார். கர்நாடகா, மகாராஷ்ட்ரா போன்று இத்திட்டத்தில் இளநிலை மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படவேண்டும். அதுபோல பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்கிறார் யாழினி.
சமூக நீதி, திராவிட மாடல் என்று சொல்லிக்கொள்ளும் தமிழக அரசு, இத்திட்டத்தில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டாமா…? அந்நிய மண்ணில் படிக்கச் செல்லும் மாணவர்களின் குறைகளைக் களைய தமிழக அரசு முன்வரவேண்டாமா என்கிறார்கள் மாணவர்கள்.
-சே