ள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி பள்ளியில் மரணமடைந்த ஸ்ரீமதி விவகாரத்தில் ஒரு முக்கிய குற்றவாளியை பள்ளி நிர்வாகமும் போலீசாரும் இணைந்து மறைத்துவிட்டனர் என்கிறார்கள், இந்த விவகாரத்தை முதலில் விசாரித்த காவல்துறையைச் சார்ந்தவர்கள். அந்த குற்றவாளியின் பெயர் ஜெபஜீவப்பிரியா. இவர் ஒரு ஆசிரியை. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெபஜீவப்பிரியா, ஸ்ரீமதி தங்கியிருந்த ஹாஸ்டலில் துணை வார்டனாக பணியாற்றி வருபவர். அந்த ஹாஸ்டலில் 21 பெண் மாணவிகள் தங்கியிருந்தார்கள்.

srimathi

அவர்கள் அனைவரும் இரண்டு அறைகளில் தங்கியிருந் தார்கள். ஒரு அறையில் 9 பேர் இன்னொரு அறையில் 12 பேர் தங்கியிருந்தனர். இரண்டு அறைகளில் தங்கியிருந்த மாணவிகளில் 9 பேர், கிருத்திகாவின் கண்காணிப்பில் தங்கியிருந்தார்கள். 12 பேர் ஜெபஜீவப்பிரியாவின் கண்காணிப்பில் தங்கியிருந்தார்கள்.

அந்த ஹாஸ்டலில் அனைத்து மாணவிகளுக்கும் பொதுவான பாத்ரூம் உள்ளது. அந்த கழிப்பிடத் திற்கு மாணவிகள் செல்ல வேண்டு மென்றால் அவர்கள் அறையை விட்டு வெளியே வர வேண்டும். ஹாஸ்டலில் இருக்கக்கூடிய 3வது மாடியில் சி.சி.டி.வி. எதுவும் இல்லை. ஹாஸ்டல் அறையி லிருந்து கழிப்பிடத்திற்கு மாணவிகள் வருவதும் போவ தும் அடிக்கடி நடக்கும். அதை சி.சி.டி.வி.யில் பதிவு செய்யமாட்டார்கள்.

மரணமடைந்த அன்று, +2 படிக்கும் ஸ்ரீமதி, ஜெபஜீவப்பிரியாவின் கண்காணிப்பில்தான் தங்கியிருந்தார். அவருடன் யாமினி, ஜோதிலட்சுமி, மகாலட்சுமி, கோமதி ஆகிய மாணவிகளும், அவர் படுத்திருந்த மூன்று அடுக்குகள் கொண்ட கட்டிலில் படுத்திருந்தார்கள். பக்கத்து அறையில் கிருத்திகா தலைமையில் +1 படிக்கக்கூடிய 9 பேர் படுத்திருந்தனர். ஸ்ரீமதி இரவு நேரத்தில் எழுந்து வெளியே சென்றிருக்க வேண்டுமென்றால் அது ஜெபஜீவப்பிரியாவுக்குத் தெரியாமல் நடந்திருக்காது. ஏனென்றால், ஹாஸ்டலில் உள்ள அறையின் கதவு, கழிப்பிடம் செல்வதற்கு மட்டும் உபயோகப்படும்படி பூட்டாமல் இருக்கும். ஆனால், மூன்றாவது மாடியில் இருந்து வெளிவருவதற்கு இடையில் முக்கிய கதவு பூட்டப்பட்டிருக்கும். அதன் சாவி கிருத்திகாவிடமும், ஜெபஜீவப் பிரியாவிடமும் தான் இருக்கும். இந்த ஜெபஜீவப்பிரியா, கல்லுரி நிர்வாகத்திற்கு மிகவும் நெருக்கமாக, கிருத்திகாவை விட அதிக காலம் இந்த பள்ளியில் வேலை பார்த்து வருகிறார்.

Advertisment

srimathi

இந்த வழக்கில் குற்றவாளி ஆக்கப்பட்டுள்ள வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியாவும், ஜெபஜீவப்பிரியாவும், இந்த வகுப்பு ஆசிரியை களாக இருப்பவர்கள். கிருத்திகா, மாணவர்களுக்கு மட்டும் (மாணவிகளுக்கு அல்ல) கணிதப் பாடம் எடுத்தவர். ஸ்ரீமதியின் கணக்கு ஆசிரியை கிருத்திகா இல்லை. ஸ்ரீமதியின் கணக்கு ஆசிரியர் ஒரு ஆண். அவர் பெயர் வசந்த். கிருத்திகா சம்பவம் நடந்த அன்று ஸ்ரீமதியுடன் ஒரே அறையில் தங்கவில்லை. ஸ்ரீமதியின் தற்கொலைக் கடிதம் எனச் சொல்லப்படும் கடிதத்தில், 'என்னைத் திட்டினார்கள்' என ஸ்ரீமதி குற்றம்சாட்டியது போல் குறிப்பிடப்பட்ட கணக்கு ஆசிரியையும் இவர் இல்லை. பக்கத்து அறையில் படுத்திருந்த கிருத்திகாவை குற்றவாளி ஆக்கியிருக்கிறார்கள். ஆனால் ஜெபஜீவப்பிரியாவை குற்றவாளி பட்டியலில் கொண்டுவரவில்லை.

ஜெபஜீவப்பிரியா, கிருத்திகா, வாட்ச்மேன் மண்ணாங்கட்டி, பள்ளியின் தாளாளர் ரவிக்குமாரின் மனைவி சாந்தி ஆகிய நான்கு பேரும் இணைந்துதான் ஸ்ரீமதியின் உயிரற்ற உடலை தூக்கிக்கொண்டு வருகிறார்கள். அதில் வாட்ச்மேன் மண்ணாங்கட்டி முதலில் உடலைப் பார்த்தவர். அவருக்கும் ஸ்ரீமதி தங்கியிருந்த ஹாஸ்டல் அறைக்கும் தொடர்பு இல்லை. ஆனால் ஜெபஜீவப்பிரியாவுக்கும் ஸ்ரீமதி மரணத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஸ்ரீமதி மரணமடைவதற்கு ஒரு நாள் முன்பு அவரது பிரேஸ்லெட் ஒன்று காணாமல் போய்விட்டது. அதை ஜெபஜீவப்பிரியாவிடம் ஸ்ரீமதி புகாராகக் கொடுத்திருக்கிறார்.

ஸ்ரீமதிக்கு, மேகலா, திவ்யா, நஜீரியா மற்றும் கண்மணி என்று நான்கு நெருக்கமான நண்பர்கள் இருக்கிறார்கள். இவர்கள் பெயர்களை இணைத்து மேகனாஸ்ரீ என்ற பெயரில் ஒரு குழுவை ஸ்ரீமதி பள்ளியிலேயே உருவாக்கியிருக்கிறார். இதில் கண்மணி, ஸ்ரீமதிக்கு ஒரு பிரேஸ்லெட் பரிசளித்துள்ளார். அந்த பிரேஸ்லெட்தான் ஸ்ரீமதி மரணமடைவதற்கு முதல்நாள் காணாமல் போன பிரேஸ்லெட். இதை ஜெபஜீவப்பிரியா தேடி உள்ளார்.

மரணமடைவதற்கு முன்பு சப்பாத்தி மற்றும் ரசம் சோறு பரிமாறப்பட்டுள்ளது. அதன் பிறகு அனைவரும் படுத்துத் தூங்கிவிட்டார்கள் என ஸ்ரீமதியுடன் ஹாஸ்டலில் தங்கியிருக்கும் மாணவிகள் தெரிவித்திருக்கிறார்கள். அனைவரும் படுத்து உறங்கியபிறகே ஸ்ரீமதியை ஜெபஜீவப் பிரியா, பள்ளி பிரின்சிபலின் பிறந்தநாள் கொண் டாட்டத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ரவிக்குமார், சாந்தி, ஜெபஜீவப்பிரியா மற்றும் சில ஆசிரியைகள், ரவிக்குமாரின் மகன்கள் ஆகியோர் அந்த கொண்டாட்டத்தில் பங்கெடுத்திருக் கின்றனர். அங்கு நடந்த ஒரு களேபரத்தில் ஸ்ரீமதி தாக்கப்பட்டிருக்கிறார். அதன்மூலம் அவர் மரணமடைந்திருக்கிறார் என்கிறார்கள் காவல் துறையைச் சேர்ந்தவர்கள்.

Advertisment

srimathi

இப்படி, ஸ்ரீமதிக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி அனைத்துமறிந்த ஜெபஜீவப் பிரியா, குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப் படவில்லை. ஸ்ரீமதி தங்கியிருந்த ஹாஸ்டலின் இரண்டாவது மாடியில் உள்ள பள்ளி அறைகளில் தான் பள்ளி பிரின்சிபலின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்திருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட அரசு எலைட் பள்ளியில் தலைமை ஆசிரியராக மாவட்ட கல்வித்துறை அதிகாரி விஜயலட்சுமியால் நியமிக்கப்பட்டுள்ள மணி என்பவருக்கு சொந்தமான, சின்னசேலம் பகுதியிலுள்ள தனலட்சுமி பேக்கரியில் இருந்துதான் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான கேக்குகள் வாங்கப்பட்டுள்ளன.

கனியாமூர் சக்தி பள்ளிக்கு மிகவும் நெருக்கமான மணியும், சாந்தியின் உறவினருமான இன்னொரு கல்வி அதிகாரியும் சேர்ந்துதான் இந்தப் பள்ளிக்காக கல்வித்துறையில் உள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தார்கள். தன லட்சுமி பேக்கரியிலிருந்து மணியும், சாந்தியின் மகன்கள் சக்தி மற்றும் சரண் ஆகியோரும் கேக்கு வாங்கிவரும் சி.சி.டி.வி. காட்சிகள் போலீசிடம் சிக்கி விடக்கூடாது என்ப தற்காக, மணி தனியாக அதை எடுத்து வைத்துள் ளார். இதுபற்றி மணியிடம் கேட்டபோது, அவர் அதை மறுத்துள்ளார்.

இந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இதுபோல மாணவிகள் இறப்பது நிறைய நடக்கிறது. ஓமலூரிலுள்ள பாத்திமா பள்ளியில், அங்கு இருக்கக்கூடிய பாதிரியார்கள், 2012ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்து சுகன்யா என்கிற மாணவியை படுகொலை செய்துவிட்டார் கள். அதுபற்றி அறிய, உண்மை கண்டறியும் குழுவில் இடம்பெற்று நான் ஆய்வு செய்தேன். சுகன்யா இறந்துகிடந்த ஒரு கிணற்றைச் சுற்றி ஏராளமான ஆணுறைகள் இருந்தன. சக்தி பள்ளியில் இறந்த ஸ்ரீமதியின் மரணத்தில் குற்றம் சாட்டப்பட்ட கிருத்திகாவையும், ஹரிப்பிரியாவை யும் நான், மூத்த வழக்கறிஞர் ரத்தினம் இருவரும் சேலம் சிறையில் சென்று சந்தித்தோம். அதில் ஹரிப்பிரியா அதிகமாக பேசவில்லை. ஆனால், 'ஸ்ரீமதி படிப்பில் தங்கப்பதக்கம் வாங்குமளவுக்கு நன்கு படித்தவர். பொதுவாக மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டுமென்று புத்திமதி கூறுவது வழக்கம். அதைக்கூட நான் ஸ்ரீமதியிடம் சொன்ன தில்லை. என்னைக் குற்றவாளியாக்கிவிட்டார்கள்' என வருத்தப்படுகிறார், ஸ்ரீமதியின் வேதியியல் ஆசிரியரும் வகுப்பு ஆசிரியருமான ஹரிப்பிரியா. 'எனக்கும் ஸ்ரீமதிக்கும் எந்தத் தொடர்புமில்லை. என்னையும் குற்றவாளியாக்கி விட்டார்கள். திருமணமாகாத நான் இந்த வழக்கிலிருந்து எப்படி வெளியே வருவேன் என்று தெரியாது' என்று கலங்கி நிற்கிறார் கிருத்திகா.

இந்த இரண்டு ஆசிரியைகளும் ஸ்ரீமதி எழுதியதாக ஜோடிக்கப்பட்டுள்ள தற்கொலைக் கடிதத்தை அடிப்படையாக வைத்து குற்றவாளி களாக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீமதி கொலையில் முதலில் கூறப்பட்ட காதல் விவகாரம் பற்றி இந்த ஆசிரியைகளுக்கு எதுவும் தெரியவில்லை. ஸ்ரீமதியின் காதல் விவ காரம் போலியானது. அதைப் போல் அவர் எழுதிய தற்கொலைக் கடிதமும் போலியானது என உறுதியாகச் சொல் கிறார் பிரபல பெண் உரிமைகளுக்கான வழக் கறிஞரும் இளவரசன் /திவ்யா காதல் மற்றும் கொலை வழக்கிற்காக போராடிய வழக்கறிஞர் தமயந்தி.

ஸ்ரீமதியின் கொலையில் போதைப் பொருள்கள் சம்பந்தப்பட்டிருக்கிறது. பிறந்த நாள கொண்டாட்டத்தின் போது போதை அதிகமானவர்கள் ஸ்ரீமதியை சீரழிக்க முயன்றி ருக்கிறார்கள். அந்தப் போராட்டத்தில் ஸ்ரீமதி இறந்திருக்கிறார். ஸ்ரீமதியின் மரணம் திட்டமிட்ட கொலையல்ல. தவிர்க்க முடியாத நிலையில் இந்த கொலை நடந்திருக்கிறது என்கிறார் வழக்கறிஞர் தமயந்தியுடன் சிறைக்குச் சென்று குற்றவாளிகளை சந்தித்த மனித உரிமைப் போராளியும் கண்ணகி முருகேசன் கொலை வழக்கை வெளியுலகுக்கு கொண்டு வந்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்தவருமான சீனியர் வழக்கறிஞர் ரத்தினம்.

படங்கள்: அஜித், விவேக்