ருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில், 102 மதிப்பெண் பெற்ற புதுக்கோட்டை மாவட்டம் கீழாநிலைக்கோட்டை மாணவி நவதாரணிக்கு முதல்நாள் கலந் தாய்விலேயே மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்துள்ளது. குறைந்த மதிப்பெண்ணில் எப்படி இடம் கிடைத்தது? +2 முடித்தபோதும், நவதாரணிக்கு 10 வயது சிறுமியின் உயரம் தான். எனவே மாற்றுத் திறனாளிக்கான ஒதுக்கீடு மூல மாக மருத்துவப் படிப்பில் இடம்பிடித்துள்ளார். இவரது சகோதரனும் அதே உயரம்தான்.

இதுகுறித்து நவதாரணி நம்மிடம், "எங்க அம்மா அமுதா -அப்பா தனபால் இருவருமே சராசரியான உயரம். அப்பா டிரைவர். அம்மா கூலி வேலைக்கு போவாங்க. நானும் தம்பியும் பிறந்தப்ப மனசுடைஞ்சு போயிட்டாங்க. மற்ற குழந்தை கள்போல இல்லையேன்னு வருத்தத்தோட மருத்துவர்களிடம் போனாங்க. ஊசி மூலம் குழந்தை களை வளர வைக்கலாம்னு சொல்லி ரூ.20, 30 லட்சம் பணம் கேட்டிருக்காங்க. பணத்துக்கு எங்கே போறது? அதுக்கு பிறகுதான், நீங்க நல்லா படிச்சு சாதிச்சாதான் இந்த சமுதாயம் மதிக்கும்னு சொல்லிச் சொல்லியே வளர்த்தாங்க. எங்களுக்காக அப்பா, வெளிநாட்டில் கஷ்டப்பட்டதை நினைத்து நல்லா படிச்சேன்.

hh

Advertisment

நல்லா படிச்சதோட, பேட் மிட்டன் உட்பட பல விளையாட்டிலும் தேசிய அளவில் சாதிச்சேன். அழகா எழுதுவேன், டான்ஸ் ஆடுவேன். இப்படி தனித்திறமைகளை வளர்த்துக்கிட்ட பிறகு என்னை ஏளனமாகப் பார்த்த உறவுகளும்கூட திரும்பிப் பார்த்து பிரமிச்சாங்க.

இப்ப காரைக்குடி தனியார் பள்ளியில் +2 முடிச்சதும் நீட் எழுதினேன். 102 மார்க். மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்திருப்பது பெருமையாக உள்ளது. இத்தனை பெருமைகளுக்கும் எங்க அம்மா-அப்பாதான் காரணம். எங்களைப் போல லட்சத்தில் ஒருவர் பிறக்கிறார்கள். இதற்காக வெட்கப்பட்டு வீட்டில் முடங்கிவிடக்கூடாது'' என்றார் தன்னம்பிக்கையோடு.

Advertisment

அம்மா அமுதா தனபால், "கூலி வேலை செய்ற எங்களுக்கு கடவுள் கொடுத்த பரிசு எங்க இரு குழந்தைகள். இவர்களுக்காகத் தான் எங்கள் வாழ்க்கையே. காலை 4 மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளை முடிச்சுட்டு, மகனை பள்ளிக்கு அனுப்பிட்டு, ஸ்கூட்டியில நவதாரணியை ஏத்திக்கிட்டு 20 கி.மீ. தூரத்தில் காரைக்குடிக்கு போய் பள்ளியில விட்டுட்டு அங்கேயே இருந்து மாலை 6 மணிக்கு பிறகு கிளம்பி இரவு 7 மணிக்கு வீட்டுக்கு வந்து, படிக்க வச்சுட்டே மற்ற வேலைகளை முடிச்சுட்டுப் படுக்க இரவு 11 மணி ஆகிடும். ஒவ்வொரு நாளும் இப்படித்தான். இப்ப நவதாரணி டாக்டர் ஆகப் போறது ரொம்ப சந்தோசமா இருக்கு. என் குழந்தைகள் உயரம் தான் குறைவு. சாதனைகள் பெரிதாக இருக்கும்'' என்று கண்களை துடைத்துக் கொண்டார். சாதிக்க உயரம் தடையில்லை.