தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளில் யார், யார் என்னென்ன முறைகேட்டில் ஈடுபடுகிறார்கள் என்பதை அந்தந்த ஊர் மக்கள் அறிந்திருப்பார்கள். விருதுநகர் நகராட்சியும் விதிவிலக்கல்ல. நகர் நலனில் அக்கறையுள்ளவர்கள், விருதுநகர் நகராட்சியில் சுகாதார அலுவலராகப் பணிபுரியும் இளங்கோ மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் எக்கச்சக்கம்.
பரப்புரையாளரான அந்தப் பெண் ஊழியரிடம் நிறையப் பேசி ‘வம்பு’ வளர்த்தார் இளங்கோ. அதனால், அந்தப் பெண் மனஉளைச்சலுக்கு ஆளானார். விருதுநகர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசனிடம் இந்த விவகாரம் போனது. விருதுநகர் நகர்மன்றத் தலைவர் மாதவன் தலையிட்டு ‘சமரசம்’ செய்துவைத்து, அந்தப் பெண் ஊழியரை ‘கூல்’ செய்தார்.
பெண் ஊழியர் சம்பந்தப் பட்ட பிரச்சனை ஒருபுறம் வெடித்தாலும், மாமூல் பெறுவதிலும் அசகாயசூரர் எனப் பெயரெடுத்திருக்கிறார் இளங்கோ. விருதுநகர் பர்மா கடையில் ஓசி பிரியாணி சாப்பிடுவதைக்கூட கணக்கில் கொள்ள வேண்டியதில்லை. பாலிதீன் கேரி பேக் விற்பனையாளர்களிடம் மாதந்தோறும் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் பெறுவதற்கு இளம் பரப்புரையாளர் ஒருவரை அனுப்பிவைப்பதை என்னவென்று சொல் வது? மிரட்டிப் பணம் பறிப்பதற்கு தமிழ்நாடு அரசின் பிளாஸ்டிக் ஒழிப்புச் சட்டம் இளங்கோவுக்கு பலவகையிலும் உதவுகிறது. வேறு வழிகளிலும் பணம் கறக்கிறார்.
வீட்டுக்கு வெளியே இட்லி மாவு விற்கும் பெண்களிடம் சுகாதாரத்தைக் காரணம் காட்டி மாமூல் கேட்டிருக்கிறார். தெருவில் வடை சுட்டு விற்கும் பெண்களையும் விட்டுவைக்கவில்லை. இளங்கோவிடம் ஒரு பெண், "ஆபீசர் சார்.. உங்ககிட்ட பத்தாயிரம் கொடுக்க வசதியிருந்தால், நான் எதுக்கு வெயில்ல காய்ஞ்சு வடை சுட்டு விற்கணும்?''’என்று கேட்க, "அப்படியில்லம்மா.. எனக்கு மேல இருக்கிற மூணு பேருக்கு கொடுக்கணும். அதுக்குத்தான் கேட்கிறேன். ஒரு ரெண்டாயிரமாச்சும் கொடுங்க''’என பேரம் பேசி வாங்கியிருக்கிறார்.
துப்புரவுப் பணியாளர் தங்கப்பாண்டி ஐந்தாறு மாதங்களாக வேலைக்கு வரவில்லை. சுகாதார மேற்பார்வையாளர் கந்தசாமி, வேலைக்கு வராத தங்கப்பாண்டிக்கு வேலை பார்ப்பதாக ‘அட்டென்டன்ஸ்’ போட்டு, சம்பளத்தைத் தானே எடுத்துவந்தார். அதில் சம்பந்தப்பட்ட பணியாளருக்கும் ஒரு பங்கினைக் கொடுத்தார். இந்த முறைகேட்டை சுகாதார ஆய்வாளர் இளங்கோ கண்டுபிடித்தார். கந்தசாமியை சஸ்பென்ட் செய்யவோ, குப்பைக் கிடங்கிற்கு மாற்றவோ, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில், கந்தசாமியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றுக் கொண்டு, அதே பிரிவில் பணியைத் தொடர அனுமதித்துவிட்டார்.
எதற்கும் அஞ்சாமல் கையூட்டு பெறுபவராக இளங்கோ இருப்பதற்கு வலுவான காரணம் இருக்கிறது. நகராட்சியில் நடந்த கூட்டமொன்றில் பேசும்போது விருதுநகர் மாவட்ட ஆட்சியாளர் ஜெயசீலன், "எங்க சொந்த ஊருல இங்கே சுகாதார ஆய்வாளரா இருக்கிற இளங்கோவும் நானும் பக்கத்துப் பக்கத்து வீட்ல இருந்தோம்''’என்று குறிப்பிட, அதுவே விருதுநகர் நகராட்சியில் இளங்கோவுக்கான தனிச் செல்வாக்காக அமைந்துவிட்டது.
விருதுநகர் நகராட்சியின் சுகாதார அலுவலர் இளங்கோவைத் தொடர்புகொண்டோம். ““"நீங்க குறிப்பிடும் அந்தப் பெண் ஊழியர் பரப்புரை யாளரா இருக்காங்க. அவங்களுக்கும் எனக்கும் எந்தப் பிரச்சனையும் இல்ல. நான் யார்கிட்டயும் வம்பு பண்ணல. நான் லஞ்சமெல்லாம் வாங்குறது இல்ல. எல்லாமே தவறான தகவல்கள். நீங்க சொல்லுற அத்தனை குற்றச்சாட்டையும் மறுக்கிறேன். வேணும்னா என்னைப் பற்றி விசாரிச்சுக்கங்க. நான் தேனி மாவட்டத்துக்காரன். கலெக்டர் எங்க ஊர்க்காரர்''’என்று ஒரே போடாகப் போட்டார்.
அந்தப் பெண் பரப்புரையாளரைத் தொடர்புகொண்டோம். “"என்னையும் எஸ்.ஓ.வையும் சம்பந்தப்படுத்தி நக்கீரனுக்கு வந்த புகாரை எனக்கு அனுப்ப முடியுமா? எனக்கு குடும்பம் இருக்குது. நடந்தத வெளிய சொல்ல முடியாதுல்ல''’என்று முதலில் தயங்கிவிட்டு, "சொல்லுறேன் சார்''’என்றவர்... ஏனோ லைனைத் துண்டித்துவிட்டார். தொடர்ந்து நமது அழைப்புகளைத் தவிர்த்தார்.
விருதுநகர் நகராட்சி ஆணையாளர் லீனாசைமன் நமது லைனுக்கு வராத நிலையில், விருதுநகர் தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர். சீனிவாசனிடம் பெண் பரப்புரையாளர் விவகாரம் குறித்து கேட்டோம். “
"எனக்குத் தெரிந்து அப்படி எதுவும் நடக்கல. என் கவனத்துக்கும் வரல''’என்று சமாளித்தார்.
விருதுநகர் நகர்மன்றத் தலைவர் மாதவனிடம் பேசினோம். “"அந்தப் பெண் பரப்புரையாளர் வேலை பார்த்தது சரியில்லைன்னு சத்தம் போட்டிருக்காரு எஸ்.ஓ. இளங்கோ. அதனால மனசு சரியிலைன்னு சொன்னாங்க அந்தம்மா. அப்புறம் உட்கார வச்சு பேசி, அந்தம்மாவுக்கு அழுத்தம் கொடுக்க வேணாம்னு சொல்லியாச்சு. எல்லாம் மட்கும் குப்பை, மட்காத குப்பை பிரிக்கிற பிரச்சினைதான். மக்கள் பிரிக்காம கொடுத்தா என்ன பண்ண முடியும்? வாங்கமாட்டேன்னு சொல்லமுடியுமா? இதையெல்லாம் உடனே திருத்தணும்னா முடியாது. அடுத்த தலைமுறைக்கு சரியா வரும். ஆனா சொல்லிட்டே இருக்கணும். இந்தப் பிரச்சினைய வச்சி பரப்புரையாளர்கிட்ட எஸ்.ஓ. என்னமோ பேசி, அந்தம்மாவுக்கு மனஅழுத்தம் வந்திருச்சு. இதெல்லாம் சின்னச் சின்ன பிரஷர்தான். எம்.எல்.ஏ. காதுக்கும் இந்த விவகாரம் போச்சு. நாங்க பேசி கொஞ்சம் கரெக்ட் பண்ணியாச்சு. மற்றபடி.. லஞ்சம் வாங்குறதா எந்த கம்ப்ளைண்டும் வரல. ஆமா.. கலெக்டர் ஒரு மீட்டிங்ல இளங்கோ சார் எனக்கு நண்பர்னு சொன்னாரு''’என்றார்.
உள்ளாட்சி அமைப்புகளில் பல விவகா ரங்களும் ‘கரெக்ட்’ செய்யப்பட்டு மூடி மறைக்கப்படுகின்றன.