அ.தி.மு.க. ஆட்சியில் பரப்பரப் பாகப் பேசப்பட்ட குட்கா ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன் னாள் அமைச்சர்கள், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு அனுமதியளித்திருக்கிறது தி.மு.க. அரசு. பரபரப்பாக பேசப்படும் இந்த விவகாரத்தில் அரசின் ரகசிய ஆவணம் லீக் ஆகியிருப்பதாக சர்ச்சையும் எழுந்திருக்கிறது.

மாதம் 40 கோடி கப்பம்!

ஜெயலலிதா ஆட்சியில் தடை செய்யப் பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தமிழகம் முழுவதும் தடையின்றி விற்பனையான விவகாரத்தில், குட்கா வியாபாரியான மாதவராவின் சென்னை நெற்குன்றம் குடோனில் அதிரடி ரெய்டு நடத்திய ஒன்றிய அரசின் வருமான வரித்துறையிடம் சிக்கிய பென் ட்ரைவ் மற்றும் ரகசிய டைரியில், அ.தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் உயர் பொறுப்புகளிலிருந்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாதந்தோறும் சுமார் 40 கோடி ரூபாய் கப்பம் கட்டிவந்த வில்லங்கம் அம்பலமானது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வருமான வரித்துறையினர், லஞ்சம் பெற்ற அமைச்சர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கும், டி.ஜி.பி. அசோக்குமாருக்கும் எழுதிய கடிதத்தை கிடப்பில் போட்டார் ஜெயலலிதா.

Advertisment

guttka

ஜெயலலிதாவால் மிரட்டப்பட்ட டி.ஜி.பி!

தங்களின் கடிதத்திற்கு ஆக்சன் எடுக்கப் படாததால் டி.ஜி.பி. அசோக்குமாருக்கு தொடர்ச்சியாக நினைவூட்டல் கடிதம் எழுதியது வருமான வரித்துறை. இதற்காக ஜெயலலிதாவை சந்திக்க பல முறை அசோக்குமார் முயற்சித்தும் சந்திக்க நேரம் கொடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அசோக்குமார், அப்போதைய தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவை சந்தித்து, "வருமான வரித்துறையினரின் நெருக்குதல் எனக்கு அதிகமாக இருக்கிறது. ஆக்ஷன் எடுக்க முதல்வரை வலியுறுத்துங்கள். பிரச்சனையில் மத்திய உள்துறை தலையிட்டால் நிலைமை சிக்கலாகும்''’என்று சொல்லியிருக்கிறார். இதனை ஜெயலலிதாவிடம் ராம்மோகன்ராவ் விவரிக்க, ‘’"எனக்கே அந்த ஆள் (அசோக்குமார்) அட்வைஸ் செய்கிறாரா? மரியாதையாக வி.ஆர்.எஸ். வாங்கிக்கிட்டு ஓடச்சொல்லுங்கள்''’என்று ஏக வசனத்தில் எச்சரித்தார் ஜெயலலிதா. இதனை ஏற்க மறுத்தார் அசோக்குமார். ஆனால் ஜெய லலிதாவின் மிரட்டல் அதிகரிக்கவும் வி.ஆர்.எஸ். கொடுத்துவிட்டு, பணியிலிருந்து விலகினார் அசோக்குமார். சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார்.

அம்பலமான ஆதாரங்கள்!

அசோக்குமாரின் பணிவிலகல், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், ஜெய லலிதாவுக்கு வருமான வரித்துறை எழுதிய கடிதம் அவரது மறைவுக்குப் பிறகு 2017-ல் லீக் ஆனது. அதில், குட்கா வியாபாரி மாதவராவிடம் மாதம் மாதம் லஞ்சம் பெற்றதாக அ.தி.மு.க. அமைச்சர்கள் ரமணா, விஜயபாஸ்கர், ஐ.பி.எஸ். அதிகாரிகள் எஸ்.ஜார்ஜ், முன்னாள் டி.ஜி.பி., வணிகவரி மற்றும் காவல்துறை அதிகாரிகள் என 11 பேரின் தொடர்புகள் அம்பலமானது. இதனை சட்டமன்றத்தில் பிரச்சினையாக்கிய தி.மு.க., "குட்கா ஊழலுக்கு சி.பி.ஐ. விசாரணை வேண்டும்' என போர்க்குரல் கொடுத்தது. அப்போது, வருமானவரித்துறை ஜெயலலிதாவுக்கு அப்படி ஒரு கடிதத்தை எழுதவே இல்லை என மறுத்தார் எடப்பாடி. ஆனால், ஜெயலலிதா வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது, ஜெயலலிதாவுக்கு எழுதிய அந்த கடிதம் சிக்கி அதுவும் அம்பலமாக, எடப்பாடி அரசு ஆட்டம் கண்டது.

சி.பி.ஐ.க்கு மாறிய குட்கா வழக்கு!

தி.மு.க. அரசின் கடுமையான போர்க்குரலால் குட்கா ஊழல் வழக்கை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைத்தார் எடப்பாடி. குட்கா ஊழலை விசாரித்த லஞ்ச ஒழிப்புத்துறையின் இணை இயக்குநர் முருகன், குட்காவில் லஞ்சம் புழங்கிய அனைத்து வழிகளுக்குமான பல ஆதாரங்களை கண்டறிந்தார். விசாரணை 90 சதவீதம் முடிந்த சூழலில், "குட்கா வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றவேண்டும்'’என்று தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர... சி.பி.ஐ.க்கு மாற்ற உத்தரவிட்டது அப்போதைய தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி தலைமையிலான அமர்வு. தாங்கள் கண்டுபிடித்த ஆதாரங்கள் அனைத்தையும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தது லஞ்ச ஒழிப்புத்துறை.

Advertisment

hh

சி.பி.ஐ.யும் லஞ்ச ஒழிப்புத்துறையும்!

சி.பி.ஐ.யிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது குறித்து தற்போதைய லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் நாம் விசாரித்தபோது, "குட்கா வழக்கில் நாங்கள் பதிவு செய்திருந்த எஃப்.ஐ.ஆரை அப்படியே எடுத்துக்கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள், குற்றவாளிகள் என யாரையெல்லாம் நாங்கள் சொல்லியிருந்தோமோ அவர்களையெல்லாம் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி., கமிஷனர் ஜார்ஜ் ஆகிய மூவருக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களும் இருந்ததால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கேட்டு அப்போதைய எடப்பாடி அரசுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை கடிதம் எழுதியது. ஆனால், அனுமதி கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் அந்த மூவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்திருக்கும். அனுமதி கிடைக்காதது மட்டுமல்லாமல் எஃப்.ஐ.ஆரில் அவர்கள் மூவர் பெயரையும் சேர்க்கக்கூடாது என அரசுத் தரப்பில் அழுத்தம் தரப்பட்டதாலேயே அவர்களின் பெயர் சேர்க்கப்படவில்லை. ஆனால், சி.பி.ஐ. அதிகாரிகளோ, அந்த மூவரின் பெயரையும் சேர்த்தனர்''’என்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத்துறையினர்.

சி.பி.ஐ.யின் இரண்டாவது பாய்ச்சல்!

குட்கா ஊழல் வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு 4 வருடங்கள் உருண்டோடி விட்டன. லஞ்ச ஒழிப்புத்துறை கொடுத்திருந்த ஆதாரங்களைக் கொண்டு முதல் கட்ட விசாரணையை தீவிரப்படுத்திய சி.பி.ஐ., குட்கா வியாபாரி மாதவராவ், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், கலால் துறை அதிகாரி பாண்டியன் உள்ளிட்ட 6 நபர்களை கைது செய்ததுடன் அவர்கள் மீது குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தது. அதன்பிறகு எந்த முன்னேற்றமும் இல்லை. இது குறித்து சி.பி.ஐ.க்கு நெருக்கமான ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலரிடம் நாம் பேசியபோது, ”அ.தி.மு.க. அமைச்சர்களுக் கும், ஐ.பிஎஸ். அதி காரிகளுக்கும் எதிரான ஆதாரங்களை எப்போதோ சேகரித்து விட்டது சி.பி.ஐ.

சம்பந்தப்பட்டவர்களின் உதவியாளர்கள் சி.பி.ஐ.யிடம் உண்மைகளைக் கக்கிவிட்டனர். ஆனால், ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க., பா.ஜ.க.வோடு கூட்டணி யில் இருந்ததால், சி.பி.ஐ.யின் நடவடிக்கை அடுத்த கட்டத்துக்குச் செல்லவில்லை. மேலும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சில டெல்லி லாபிகள் இருந்தன. அதன் மூலமாகவும் சி.பி.ஐ.யின் கைகள் கட்டப்பட்டிருந்தன. தற்போது ஒன்றிய அரசுக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் சிலபல அரசியல்களால் உரசல் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், குட்கா வழக்கின் இரண்டாவது பாய்ச்சலைத் துவக்கலாம் என டெல்லி மேலிடத் திலிருந்து சி.பி.ஐ.க்கு க்ரீன் சிக்னல் தரப் பட்டது.

hh

இதனையடுத்து இந்த பிரச்சனையில் வேகம் காட்டிய சி.பி.ஐ. அதிகாரிகள், அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச் சர்கள், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரிகளின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தி.மு.க. அரசிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதி னர்’என்று சுட்டிக் காட்டுகிறார்கள்.

மாஜிக்கள் கைது செய்யப்படுவார்களா?

சி.பி.ஐ. கேட்ட அனுமதியை தற்போது தந்துள்ளது தி.மு.க. அரசு. இதனையடுத்து ஒன்றிய அரசின் உள்துறையிடம் விவாதிக்கத் துவங்கி யுள்ளது சி.பி.ஐ. உள்துறையிடமிருந்து கொடுக்கப்படும் உத்தரவுகளுக்கேற்ப, மாஜிக்கள் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்கிறது சி.பி.ஐ. வட்டாரம். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை துவங்கும் போது மாஜிக்கள் ஆஜராக வேண்டியதிருக்கும். நீதிமன்றத்தில் விசாரணையின் போக்கு எப்படி செல்கிறது என்பதைப் பொறுத்தே மாஜி மந்திரிகளும் ஐ.பி.எஸ். அதிகாரிகளும் கைது செய்யப்படுவார்களா? தப்பிப்பார்களா? என்பது தெரியவரும் என்கிறார்கள் சி.பி.ஐ. வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்கள்.

கோட்டையில் ஓட்டை!

மாஜிக்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தி.மு.க. அரசு அனுமதியளித்திருக்கும் நிலையில், இது தொடர்பான ரகசிய நோட் ஆர்டர்கள் ரிலீஸ் ஆகியிருப்பதில் அதிர்ச்சி யடைந்துள்ளது தலைமைச் செயலகம். இதுகுறித்து நம்மிடம் பேசிய சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்,”"தமிழக உள்துறையில் ஹோம் சீக்ரெட் செக்ஷன், பப்ளிக் சீக்ரெட் செக்ஷன், விஜிலென்ஸ் ஆன்டி கரப்ஷன் சீக்ரெட் செக்ஷன் ஆகிய மூன்று முக்கிய பிரிவுகள் இருக்கிறது. இந்த சீக்ரெட் செக்ஷனுக்குள் சம்பந்தப்பட்டவர்களைத் தவிர வேறு யாரும் நுழைந்துவிட முடியாது. ஆனால், குட்கா வழக்கில் சி.பி.ஐ.க்கு அனுமதி தருவது தொடர்பாக 35 பக்கம் கொண்ட நோட் ஆர்டர் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதில் முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் செக்ஷன் அதிகாரி கள் கையெழுத்திட்டுள்ள னர். துறையின் செகரட்டரி பணீந்தர்ரெட்டி மட்டும் கையெழுத்திடவில்லை.

இந்த 35 பக்கம் கொண்ட நோட் ஆர்டரில், முதல் ஐந்து பக்கங்களில் தமிழக அரசுக்கு சி.பி.ஐ. எழுதிய கடித விபரங்களை சுட்டிக்காட்டிய தமிழக அரசு, அதனையடுத்து மாஜி அமைச்சர்கள் ரமணா, விஜயபாஸ்கர், மாஜி ஐ.பி.எஸ். அதிகாரி கள் ஜார்ஜ், முன்னாள் டி.ஜி.பி., உள்ளிட்ட 11 நபர்களுக்குமான தொடர்புகளை விவரித்துள்ளனர். அந்த 11 பேரில் ரமணா, விஜயபாஸ்கர் உள்ளிட்ட 9 பேரின் மீதும் வழக்குத் தொடர அனுமதியளித் திருக்கிறது. ஜார்ஜ் மற்றும் முன்னாள் டி.ஜி.பி. மீது வழக்கு தொடர மத்திய உள்துறையிடம் அனுமதி பெற்றுக்கொள்ளவும் என்று அந்த நோட் ஆர்டரில் தெரிவித்துள்ளது தமிழக அரசு. மிக மிக ரகசியமாக இருக்க வேண்டிய இந்த ஆவணங்களில் சில பக்கங்கள் அம்பலமாகியிருக்கிறது.

guttka

மிகமிக ரகசியமாக பாதுகாக்க வேண்டிய ஆவணங்கள் வெளியே சென்றிருப்பதால், கோட்டையில் ஓட்டை விழுந்துள்ளது தெரிகிறது. ஏற்கனவே, கவர்னர் ஆர்.என்.ரவி நடத்தும் ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொண்டு துறையின் செயலாளர்கள் விளக்கமளிக்க வேண்டும் என அனைத்துத் துறை செயலாளர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதிய கடிதம் லீக் ஆனது சர்ச்சையானது. இப்போது குட்கா விவகார ஆவணங்களும் லீக் ஆகியிருக்கிறது. அரசின் முக்கிய ஆவண ரகசியங்களை உயரதிகாரிகள் பாதுகாப்பதில்லை.

இப்படி கோட்டையில் பெரிய ஓட்டை விழுந்திருப்பதால்தான் பா.ஜ.க. அண்ணாமலை போன்றவர்களுக்கு எல்லா ஆவணங்களும் கிடைக்கின்றன. தி.மு.க. அரசுக்கு சி.பி.ஐ. எழுதிய விபரங்களும் லீக் ஆகியிருப்பதால் அதிர்ச்சியடைந்துள்ள சி.பி.ஐ. தரப்பும், எப்படி லீக் ஆனது? லீக் பண்ணியவர்கள் யார்? என ரகசியமாக விசாரிக்கிறது. ரகசிய ஆவணங்கள் இப்படி தொடர்ச்சியாக லீக் ஆவது தி.மு.க. அரசுக்கு ஆபத்தானது. முதல்வர் ஸ்டாலின் இதில் கவனம் செலுத்த வேண்டும்'' ’என்கிறார்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.