வேலூர் மாவட்ட தி.மு.க.வில் கட்சி நிர்வாகியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

vvகடந்த வாரம் சட்டமன்றத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “"நான் மறைந்தபின் என் சமாதியில் கோபாலபுரத்தின் விசுவாசி உறங்குகிறான்” என எழுதி வையுங்கள்'' என உருக்கமாகப் பேசினார். இதனை அ.தி.மு.க., பா.ஜ.க. தரப்பினர் இணையத்தில் கிண்டல் செய்தனர். அ.தி.மு.க.வை சேர்ந்த கெடிலம் விநோத், ப.சதிஷ் தங்களது முகநூல் பக்கத்தில், கல்லறை ஒன்றில் துரைமுருகன் படத்தைப் போட்டு “இங்கே கோபாலபுரத்தின் கொத்தடிமை உறங்குகிறான்” என வாசகம் பொறித்த கிராபிக்ஸ் செய்த கல்லறை போட்டோவை இணையத்தில் வைர லாக்கினார். இந்தப் பதிவு வேலூர் மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜகுப்பம் முருகானந்தத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கவைத்துள்ளது.

என்ன நடந்ததென அறிய வேலூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியினர் மத்தியில் பேசியபோது, “"பொதுச் செயலாளர் குறித்த இந்த அநாகரிகப் பதிவைப் பார்த்து மாநில ஐ.டி. விங்கிலிருந்து தொடர்புகொண்டு வேலூர் காவல்நிலையத்தில் புகார் கொடுங்கள் என முருகானந்தத்திடம் சொன்னார்கள். அவர் அதுபற்றி மாவட்டச் செயலாளரும், அணைக்கட்டு எம்.எல்.ஏ.வுமான நந்தகுமா ரிடம் தகவல் சொல்லியுள்ளார். அவர் அந்த லிங்க்கை கேட்க, அதனை முகநூலி-ருந்து அவருக்கு ஷேர் செய்துள்ளார். அதேநேரத்தில் அது பப்ளிக்காகவும் ஷேர் ஆகியுள்ளது. இதனைப் பார்த்த பொதுச்செயலாளர் ஆதரவாளர்கள், அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அமைச்சருக்கு அனுப்பிவிட்டார்கள். இதனால் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்துள்ளனர்''’என்றார்கள்.

இதுகுறித்து கருத்தறிய தி.மு.க. முன்னாள் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் முருகானந்தத்தைத் தொடர்புகொண்டபோது, அவர் செல்போனை எடுக்கவில்லை.

Advertisment

vv

பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தரப்பில் கேட்டபோது, "அது எப்படிங்க தெரியாமல் ஆகும்? வேணும்னே செய்தது, அதனால்தான் தலைவரிடம் புகார் சொல்லப்பட்டது, விசாரித்தே நடவடிக்கை எடுத்தார்கள்'' என்கின்றனர்.

Advertisment

கட்சியினர் மத்தியில் விசாரித்தபோது, “"மா.செ. நந்தகுமார் -கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகனின் மகனும், அமைப்புசாரா தொழிலாளர் அணியின் மாநில தலைவரு மான வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த் இருவருக்கும் இடையே உட்கட்சி மோதல் நடந்து வருகிறது.

vv

இதில் தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப் பாளரான முருகானந்தம், மா.செ. பக்கம் இருக்கிறார். இந்த ஐ.டி. அணி உருவாவதற்கு முன்பிருந்தே சோசியல் மீடியாவில் முருகானந்தம் கட்சிக்காக இயங்கியும், மா.செ. நந்தகுமாரை புரமோட் செய்தும் வந்தார். அணியாக உருவான பின்பும் மா.செ.வுக்கு மட்டும் ஆதரவாக செயல்பட்டுவந்தது கதிர்ஆனந்த் தரப்பில் அதிருப்தியை உருவாக்கியது. கட்சியின் பொதுச்செயலாளர், அமைச்சராக உள்ளார். அவர் குறித்து தகவல்களை சமூக ஊடகத்தில் ஐ.டி.விங்க் வெளி யிடுவதில்லை. ஆனால் மா.செ. தூங்கிக்கொண்டு இருந்தால்கூட கட்சிக்காகவே தூங்குகிறார் என்கிற அளவில் புரமோட் duriaimuruganசெய்கிறீர்களே எனக் கேட்டுள்ளார்கள். இந்நிலையில் முருகானந்தம் ‘தெரியாமல்’ செய்த தவறுக்கு பொதுச்செயலாளரை நேரடியாகவே சந்தித்து விளக்கம் சொல்லி மன்னிப்பு கேட்டார். ஆனாலும் தலைமை விசாரணை நடத்தியது, மா.செ.விடம் கடிதம் வாங்கி அவரை கட்டம் கட்டிவிட்டார்கள்'' ’என்கிறார்கள்.

தி.மு.க.வில் தீவிர கட்சி விசுவாசிகள், கொள்கைவாதிகளை கோஷ்டி பூசல்களாலும், கேள்வி கேட்கிறார்கள் என குறிவைத்து கட்டம் கட்டுவது தொடர்கதையாகி வருகிறது.

தேனியை சேர்ந்த பெ.வீ.கல்யாணசுந்தரம், தி.மு.க. அமைப்புச் செயலாளராக இருந்தபோது 2014 ஆகஸ்ட் மாதம், தி.மு.க.வை வலுப்படுத்த யோசனைகள் என தலைவர் கலைஞருக்கு எழுதிய கடிதத்தில், 2016 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினை அறிவிக்கவேண்டும் உட்பட சில ஆலோசனை கூறியிருந்தார். கட்சி விதிகளை மீறினார் என கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இன்றுவரை அவரை கட்சியில் சேர்க்கவில்லை.

இரண்டு ஆண்டுக்கு முன்பு திருவண்ணாமலை தெற்கு மா.செ. அமைச்சர் எ.வ.வேலு, தனது மகன் கம்பனை கட்சிக்குள் கொண்டுவந்து மா.செ.வாக்க முயற்சிப்பதை கேள்வி எழுப்பியதால், இளைஞரணிச் செயலாளர் உதயநிதியை வாரிசு அரசியல்வாதி எனச் சொல்லி விமர்சித்தார் என ஆடியோ பதிவொன்றை காரணம்காட்டி தி.மு.க. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட துணைச்செயலாளராக இருந்த கவிஞர் சாவல்பூண்டி சுந்தரேசன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இப்படி தமிழகம் முழுவதும் கழகப் பற்றாளர்களான நிர்வாகிகள் சிலர் ஏதாவது காரணம் சொல்லி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்கள். தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள், தி.மு.க. தலைவர்களை அநாகரிகமாகப் பேசியவர்கள், தி.மு.க.வுக்கு வந்ததும் பதவி தந்து அழகு பார்க்கும் தலைமை, சொந்த கட்சியினர் தெரிந்தோ, தெரியாமலோ செய்த தவறை மன்னிக்காமல் இருப்பது, தீவிர தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கிறது. இது தொடர்ந்தால் தி.மு.க.வின் மனசாட்சிகள் காணாமல்போய் ஜால்ராக்களின் சத்தம் அதிகமாகிவிடும், அது கட்சிக்கு நல்லதல்ல என சுட்டிக்காட்டுகின்றனர். கட்சித் தலைமை யோசிக்குமா?

-து.ராஜா