ல்விக்கூட வளாகங்களில் மாணவ மாணவிகளுக்கு பதிலாக பட்டுப்பூச்சிகளும் சிட்டுக்குருவிகளும் சிறகடிக்கின்றன. கண்ணுக்குத் தெரியாத கொரோனாவால் பள்ளி வகுப்பறைகளின் இடத்தை ஆன்லைன் வகுப்புகள் ஆக்கிரமித்துள்ளன.

oo

தற்போது 10, 11, 12 வகுப்புகளுக்கு ‘ஜூம்’ எனப்படும் நேரலையில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் அன்றன்றைய பாடத்தினை வீடியோவாக பதிவு செய்து வாட்ஸ்அப் மூலம் மாணவர்களுக்கு அனுப்ப, பதிலுக்கு மாணவர்களும் அதை மனப்பாடம் செய்தோ அல்லது படித்தோ, வீடியோ பதிவாக்கி வாட்ஸ்அப்பில் அனுப்புகின்றனர். அத்துடன் ஆன்லைன் மூலமாக ஒவ்வொரு நாளும் டெஸ்ட்டும் நடக்கிறது.

இந்த நிலையில்தான், பல கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிப்பதற்காகவே இந்த ஆன்லைன் கல்வியை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றன என்கிற குற்றச்சாட்டுகள் பரவலாக எழுந்துள்ளன. இன்னொருபுறம் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பை நடத்த முடியவில்லை. காரணம் அங்கே பெரும்பாலான மாணவர் களிடம் செல்போன் இல்லை. அதனால், ஒவ்வொரு பெற்றோரும் ஸ்மார்ட் போன், அதிலும் வீடியோ காட்சிகள் தெளிவாக தெரியும் ஆண்ட்ராய்டு மொபைலை வாங்கும்படி நிர்பந்திக்கப்படுகின்றனர். ரூபாய் 12 ஆயிரத்திற்கு மேல் வாங்கினால்தான் தெளிவாக காட்சிகள் தெரியும். கடந்த 6 மாதங்களாக ஊரடங்கு கழுத்தை நெரித்துவரும் நிலையில் , பிள்ளைகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் கொடுத்து எந்தப் பெற்றோர் போன் வாங்கிகொடுப்பார்கள்? என்ற கேள்வியும் கனத்த மனதோடு எழுப்பப்படுகின்றன.

Advertisment

இதுகுறித்து நம்மிடம் பேசிய தனியார் பள்ளி மாணவர்களின் பெற்றோர், ""ஊரடங்கால ஆறு மாசமா வருமானம் இல்லாத நிலையில் ஒரு பக்கம் பைனான்ஸ் கம்பெனிக்காரங்களும், வங்கிகளும், மகளிர்குழுக்காரங்களும் வாங்கிய கடனுக்குத் தவணையை செலுத்துங்கன்னு நெருக்கடி கொடுக்கறாங்க. இந்த லட்சணத்தில் ஸ்கூல்ல இருந்து பீஸ் கட்டுங்கன்னு நெருக்கடி கறாரா சொல்றாங்க. இப்ப அதோட பிள்ளைக்கு செல்போன் வாங்குங்க. அப்பதான் ஆன்லைன் மூலமா அவங்க படிக்க முடியும். இல்லன்னா உங்க பசங்க படிப்புக்கு நாங்க உத்தரவாதம் கொடுக்க முடியாதுன்னு மறைமுகமா மிரட்டறாங்க'' என்று கலக்கமாகச் சொன்னவர்கள், ""அரசாங்கம் இதைப் பத்தியெல்லாம் கவலைப்படலை. குடும்பத்தோடு தற்கொலை செய்துக்கலாம் போல இருக்கு'' என்று அதிரவைத்தனர்.

தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலைமையோ அதைவிட மோசம். ""நாங்களே வேலை கிடைக்காமல் தனியார் ஸ்கூல்லே குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்துகிட்டு இருக்கோம். ஊரடங்கால ஐந்து மாதமாக அந்த சம்பளம்கூட வரலை. இப்பதான் ரெண்டு மாசமா பாதி சம்பளம் கொடுக்கறாங்க. இதுல நாங்க எங்க செல்போன் மூலமாக வீடியோ எடுத்து ஆன்லைன் பாடம் நடத்தனுமாம். அரைமணி நேரம்கூட சார்ஜ் நிக்க மாட்டேங்குது. தவணைல வாங்கினா அதையும் எங்க சம்பளத்தில்தான் வாங்கனுமாம்'' என்கிறார் அந்த தனியார் பள்ளி ஆசிரியை கலக்கமாக.

ss

Advertisment

நம்மிடம் பேசிய அந்த செல்போன் விற்பனைப் பிரதிநிதி, ""கடந்த ஜூன் மாதத்தில் புதுச்சேரி, கடலூர், விழுப்புரத்தில் மட்டும் ஓப்போ, விவோ போன்கள் தலா 8000, 16000 விற்பனை ஆச்சு. இப்ப பள்ளிகள்ல ஆன்லைன் வகுப்புகள் தொடங்கிய பிறகு ஜூலையில் 14000 ஓப்போ மொபைல்களும், 16000 விவோ மொபைல்களும் விற்பனையாகியுள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் ஓப்போ 16000, விவோ 17000 என விற்பனையாகி இருக்கு. அதோடு, ரெட்மி, ரியல்மி, சாம்சங் மொபைல்களும் பெருமளவில் விற்பனையாகி இருக்கு. ஆன்லைன் வகுப்பு களால் எங்கள மாதிரி செல்போன் டீலர்களுக்கு நல்ல லாபம்'' என்றார் உற்சாகமாக. சூழலைப் பயன்படுத்தி செல்போன் விலை ஏற்றப்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்வி உரிமைக்குக் குரல் கொடுத்துவரும் பெற்றோர் சங்க ஆலோசகரான வழக்கறிஞர் ராஜூவிடம் இது பற்றி கேட்ட போது... ’""ஆன்லைன் வகுப்புகள் தேவையற்றது. மறைமுகமாக கல்வி கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூலிப் பதற்கான ஒரு வழி. அவ்வளவே. மேலும் ஆன்லைன் மாணவர்கள் கல்வியை மட்டுமே கற்கின்றனர் என சொல்ல முடியாது. அவர்களின் மனதைப் பாதிக்கும் தேவையில்லாத விஷயங்கள், வீடியோ கேம்கள் என அவர்களின் கண்வழியாக சில சாத்தான்களும் மூளைக்குள் செல்லும். அதனால் சிந்தனைத் தடுமாற்றம், பாதிப்பு ஏற்படும். மேலும் ஸ்மார்ட் போன் இல்லாததால் படிக்க முடியவில்லையே என்கிற தாழ்வு மனப்பான்மை ஏழை பிள்ளைகளுக்கு வரக்கூடும். எனவே பள்ளிகள் திறக்கப்படும் வரை ஆன்லைன் கல்வியைத் தடை செய்து, கல்வித் தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்துத் தொலைக்காட்சிகளின் வழியாகவும் பாடங்களைத் தர வேண்டும்'' என்கிறார் அக்கறையாய்.

கல்வி அவசியம்தான். அதற்காக பெற்றோரை வாட்டி, பிள்ளைகளின் சிந்தனையைச் சிதைத்து, ஏற்றத் தாழ்வான, அவசரக்கோலத்தில் அள்ளித் தெளிக்கப்படும் இந்த ஆன்லைன் கல்வி நடைமுறை அவசியமா?

-சுந்தரபாண்டியன்