""தமிழக அரசியலில் தனது ஆபரேசனைத் துவக்க மூன்று கோப்புகளை தயார்படுத்தி வைத்திருக்கும் பா.ஜ.க. தலைமை, முதல் கோப்பிற்கான நடவடிக்கைகளைத் துவக்கிவிட்டது. அதன் முதல் அஸ்திரத்தின் இலக்கு என்னவோ அதற்கேற்றபடி, அ.தி.மு.க. உள்விவகாரங்கள் தொடர்பான வழக்கில் நான்கு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும்''’ என தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். இந்த உத்தரவு இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.சை பதட்டமடைய வைத்திருக்கிறது.

bjplan

வழக்குக்கு காரணமானவரான அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமியிடம் பேசியபோது, ""முறையற்ற வழியில் அ.தி.மு.க.வை யாரும் கைப்பற்றிடக்கூடாது. தொண்டன்தான் தலைமையை தீர்மானிக்க வேண்டும் என்பதற்காக வலிமையான சட்டவிதிகளை உருவாக்கி வைத்துவிட்டு மறைந்தார் எம்.ஜி.ஆர்.! அ.தி.மு.க.வை பொறுத்தவரை பொதுச்செயலாளருக்குத் தான் அனைத்து அதிகாரமும் உண்டு. அந்த பொதுச்செயலாளரை, கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே கட்சியின் சட்டவிதி. இந்த விதிப்படி சசிகலா தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதனை எதிர்த்து தலைமைத் தேர்தல் ஆணையத்தில் வழக்குப் போட்டிருக்கிறேன். இதில் சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது ஆணையம். அதற்குப் பதிலளித்த சசிகலா, பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க வேண்டும் என கோரியிருந்தார். அதுகுறித்து ஆணையம் முடிவெடுக்கவில்லை.

சில மாதங்களுக்குப் பிறகு, இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் இணைந்து அ.தி.மு.க.வின் பொதுக்குழுவைக் கூட்டி பொதுச்செயலாளர் பதவியை நீக்கியதுடன் புதிதாக ஒருங்கிணைப்பாளர், இணை மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் என பதவிகளை உருவாக்கி அதற்கேற்ப சட்ட விதிகளைத் திருத்தினர். அதன்படி கட்சி நிர்வாகிகளை நீக்கவும் சேர்க்கவும் செய்தனர். அப்படி விதிகளைத் திருத்தியது சட்ட விரோதம். கட்சி உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படும் பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. பொதுக்குழுவுக்குக்கூட விதிகளை திருத்தும் அதிகாரம் கிடையாது.

amitsha-nirmala

அந்த வகையில் சசிகலா நியமனம், விதிகளைத் திருத்தி ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம், நிர்வாகிகள் நீக்கம்-சேர்த்தல் ஆகிய அனைத்தும் செல்லாது என்றுதான் வழக்கு போட்டிருக்கிறேன். இதுகுறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் செய்து வருவதால், அதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில்தான், 4 வாரத்துக்குள் முடிவை தெரிவிக்க வேண்டும் என தற்போது உத்தரவு தந்துள்ளது கோர்ட். இந்த வழக்கில் நிச்சயம் எனக்கு நியாயம் கிடைக்கும். சசிகலா, இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். பதவிகள் பறிக்கப்படும். அப்போது பல தாக்கங்கள் தமிழக அரசியலில் எதிரொலிக்கும். புதிய தலைமை அ.தி.மு.க.வில் உருவாகும்'' என்கிறார் அதிரடியாக.

"டெல்லி நீதிமன்றத்தில் கே.சி.பழனிச்சாமி போட்டிருக்கும் வழக்கின் பின்னணியில் பா.ஜ.க. தலைமை இருக்கிறது' என்கிறார்கள் பா.ஜ.க.வோடு நெருக்கம் பாராட்டும் அ.தி.மு.க. எம்.பி.க்கள். அவர்களில் சிலரிடம் நாம் பேசியபோது, ""சமீபத்தில் சென்னை வந்த அமித் ஷா, "புதிய கூட்டணியை தமிழகத்தில் உருவாக்குவோம்' என சொல்லியிருந்தார். அமித் ஷாவின் பேச்சு எங்களை அதிர்ச்சியடைய வைத்தது. இதுகுறித்து பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களிடம் நாங்கள் விசாரித்தபோது, ’"அ.தி.மு.க.-தி.மு.க. இரண்டையும் பலகீனப்படுத்தினால் மட்டுமே தமிழகத்தில் பா.ஜ.க. வளர முடியும் என்பதால் நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்து அதற்கான அசைன்மெண்ட் துவங்கிவிட்டது.

அதனால்தான், அண்மைக்காலமாக, எடப்பாடி பழனிச்சாமியையும் ஓ.பன்னீர்செல்வத்தை யும் மோடியும் அமித் ஷாவும் புறக்கணிக்கின்றனர். அ.தி.மு.க.வில் ஒரு புதிய தலைமையை உருவாக்குவது அல்லது மீண்டும் கட்சியையும் சின்னத்தையும் முடக்குவது என்கிற திட்டத்தில்தான், அமைச்சர் நிர்மலா சீதாராமன் - கே.சி.பழனிச்சாமி சந்திப்பு நடந்தது. இனி, அ.தி.மு.க. தொடர்பான ஒவ்வொரு வழக்கின் முடிவும் உங்கள் தலைமைக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும் வகையில் வலிமையான சட்ட ஆலோசனைகள் தரப்படும்' என சொன்னதைக்கேட்டு எங்களுக்கு அதிர்ச்சி. அதனால், தேர்தல் ஆணையத்துக்கு இந்த நெருக்கடி ஏற்பட வேண்டும் என பா.ஜ.க. முனைப்பு காட்டியது.

மேலும், சென்னையிலும் டெல்லியிலும் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.சுக்கு எதிராக போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் அக்டோபருக்குள் உச்சநீதிமன்றத்தில் ஒரு புள்ளியில் குவியவிருக்கிறது. .குறிப்பாக 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு, ஓ.பி.எஸ். உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கு, எடப்பாடியால் கூட்டப்பட்ட அ.தி.மு.க.வின் பொதுக்குழுவுக்கு எதிராக வெற்றிவேல் போட்டிருக்கும் வழக்கு, இரட்டை இலைக்கு எதிராக டெல்லியிலுள்ள வழக்கு என அனைத்தும் மேல்முறையீடு என்கிற வகையில் உச்சநீதிமன்றத்துக்கு வருமாறு திட்டமிட்டு செயலாற்றுகிறது பா.ஜ.க.!

அனைத்து வழக்குகளிலும் நவம்பருக்குள் தீர்ப்புகள் வருவதற்கேற்ப சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன''’ என்கின்றனர். ஆனால், "அ.தி.மு.க.வை பலகீனப்படுத்த பா.ஜ.க.வுக்கு துணை போகும் நோக்கம் தனக்கு சிறிதும் இல்லை. தனி நபரின் பிடியில் கட்சி சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே போராடுகிறேன்''’என்கிறார் கே.சி.பழனிச்சாமி. ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு எதிரான கே.சி.பழனிச்சாமியின் வழக்கு குறித்தும், அ.தி.மு.க.வை முழுமையாக முடக்க பா.ஜ.க. திட்டமிடுவது பற்றியும் கருத்தறிய அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் எம்.பி.யை தொடர்புகொண்டு கேட்டபோது, ""ஏர்போர்ட்டில் இருக்கிறேன். இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை'' என்பதோடு முடித்துக்கொண்டார்.

kcpalanisamy

நான்கு வாரத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டதன் நகல் சசிகலாவுக்கும் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.சுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சீனியர் அமைச்சர்களிடமும் மூத்த வழக்கறிஞர்களிடமும் சீரியசாக விவாதித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதில், டெல்லி நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஸ்டே வாங்கலாமா? அல்லது தேர்தல் ஆணையத்தின் முடிவு தெரிந்த பிறகு மேல்முறையீடு செய்யலாமா? என விவாதித்துள்ளனர்.

இதுகுறித்து ஆட்சியாளர்கள் தரப்பில் நாம் விசாரித்த போது, ""வழக்குகள் சுறுசுறுப்படைவது எடப்பாடி உள்ளிட்டவர்களை பதட்டமடைய வைத்திருக்கிறது. அக்டோபர்-நவம்பருக்குள் வழக்குகளை முடிக்கும் கையோடு, வருமானவரித்துறை விசாரிக்கும் வழக்குகளில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மற்றும் அமைச்சர்களை சிக்க வைக்கவும் டெல்லி திட்டமிட்டிருப்பதாக விவாதித்துள்ளனர். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் அண்மையில் சென்னை வந்து ஆட்சியாளர்களுக்கு எதிரான வழக்குகளின் நிலவரத்தை ஆய்வு செய்துவிட்டு சென்றுள்ளனர்.

அதனால் நவம்பர் நெருங்க நெருங்க ஆட்சியாளர்களுக்கு நடுக்கம்தான். ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு ஆதரவாக டெல்லி பசுமைத்தீர்ப்பாயம் கொடுத்துள்ள உத்தரவை எதிர்கொள்வது குறித்து அமைச்சர்களிடம் விவாதித்து முடித்ததும் தனிப்பட்ட முறையில் மூத்த அமைச்சர்களிடம் எடப்பாடி ஆலோசித்துள்ளார். அப்போது, "தேர்தல் ஆணையத்தில் நமக்கு பாதகமான தீர்ப்பு வந்தால், அது 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கிலும், இரட்டை இலை வழக்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் நாம் நிம்மதியோடு இருக்கமுடியாது என்றார்' என சுட்டிக்காட்டுகிறார்கள்.

தமிழக அரசியல் நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து டெல்லிக்கு ரிப்போர்ட் அனுப்பி வரும் மத்திய உளவுத்துறையினரிடம் விசாரித்தபோது, ""ஆபரேசன் அ.தி.மு.க., ஆபரேசன் தி.மு.க., ஆபரேசன் தமிழ்நாடு என மூன்று கோப்புகளை தயாரித்திருக்கிறது பா.ஜ.க. தலைமை. அ.தி.மு.க.வை பலகீனப்படுத்த ஒரு வியூகமும், தி.மு.க.வை பலகீனப்படுத்த ஒரு வியூகமும், இவை இரண்டுக்குமான சுருக்க குறிப்புகள் அடங்கிய ஒரு வியூகமும் என 3 கோப்புகள் ரெடியாகியிருக்கின்றன.

அந்த ஆபரேஷன்களில் ஒரு வியூகம், நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும்போது தமிழக ஆட்சி கவர்னரிடம் இருக்க வேண்டுமென்பது. அடுத்த ஒரு வியூகம், இரட்டை இலை முடக்கப்பட்டது போல, தேவைப்படின் தேர்தல் நேரத்தில் உதயசூரியனை முடக்க வேண்டுமென்பது. அதற்கான ஆலோசனைகள் டெல்லியில் நடக்கின்றன. அந்த பதட்டத்தின் விளைவுதான் ஆகஸ்ட் 20-ல் கூடும் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம்'' என்கின்றனர் சீரியஸாகவே.

-இரா.இளையசெல்வன்