யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என எதிர்பார்க்கும் நேரத்தில் அரசு மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் பல முறைகேடுகள் நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடக்கும். ஆனால் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்கான மாணவர்கள் சேர்க்கை, பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் தான் நடைபெறும். தமிழகத்தில், 2 அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் இயங்கிவருகின்றன. சென்னை அரும்பாக்கத்தில் செயல்பட்டுவரும் அரசு யோகா மருத்துவக் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும், பயிற்சி மருத்துவர்களும், முப்பதுக்கும் மேற்பட்ட மருத்துவர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பயிலும் மாணவர்கள், வகுப்புகளுக்கு சரியாக வராமல், இறுதியாண்டில் பயிற்சி மருத்துவம் முடிக்காமல் இருந்தபோதும் அவர்களுக்கான பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன்காரணமாக இந்த ஆண்டு யோகா மருத்துவப் படிப்புக்கு சேர்வதற்கு மாணவர்கள் தயக்கம் காட்டுகிறார்கள்.

yy

இது தொடர்பாக நாம் விசாரிக்கையில், தேர்வெழுத 80% வருகைப்பதிவு அவசியம் என்ற நிலையில், வெறும் 10 சதவீதம்கூட வருகைப்பதிவு இல்லாத ஒரு மாணவன், தனது அரசியல் செல்வாக்கு மூலமாக, கல்லூரி முதல்வரின் துணையோடு தேர்வு எழுதியுள்ளதாக ஒரு புகார், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநருக்கு சென்றதால், இதுகுறித்த முதற்கட்ட விசாரணையை, கோட்டார் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி முதல்வர் கிளாரன்ஸ் டேவிட் மூலமாக நடத்த உத்தரவிட்டுள்ளார். அந்த விசாரணையில், கல்லூரிக்கு வராமலேயே மாணவர் தேர்வெழு தியதும், தேர்ச்சி பெற்றதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அம்மாணவனின் பட்டப்படிப்பு சான்றிதழை பல்கலைக்கழகம் நிறுத்திவைத்துள் ளது. இதன் அடுத்தகட்ட விசாரணையில், மேலும் பல நிர்வாகிகளும், முதல்வர் மணவாளனும் மாட்டிக்கொள்ள நேருமோ என்ற அச்சத்தில் விசாரணை முடக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தேர்வு எழுதியவர்கள், தேர்ச்சி பெறுவதற்கு ஒரு தொகையும், தேர்ச்சி பெற்ற பிறகு ஒரு வருட காலம் பயிற்சி மருத்துவராகப் பணிபுரிவதற்கு, பணி புரியாமலேயே பணி புரிந்தது போல் சான்றிதழ் கொடுப்பதற்கென ஒரு தொகையும் வசூலிக்கப்படுகிறது. அதேபோல, பயிற்சி மருத்துவர்களுக்கு மாதந்தோறும் அரசு வழங்கும் உதவித் தொகையை பணிக்கே வராத மாணவர்களின் பெயரில் வரவழைத்து, அரசுக்கு பல லட்சங்கள் இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். இப்படி குறுக்கு வழியில் வருமானத்தை ஈட்டுவதற்காக பல முறைகேடுகளைச் செய்து போலியான மருத்துவர்களை உருவாக்கி வருகிறார்கள். சிறந்த மாணவர்களை உருவாக்கத்தான் கல்லூரி என்ற நிலை மாறி, போலியான மாணவர்களை உருவாக்குவது பேரதிர்ச்சியாக உள்ளது .

Advertisment

yy

இதுகுறித்து அக்கல்லூரியில் பயிலும் மாணவர்களிடம் கேட்டபோது, "முதல்வரே இதுநாள் வரை கல்லூரிக்கு சரியாக வருவ தில்லை. வருகைப் பதிவேட்டில் இவர் கையொப்பமும் போடுவதில் லை. பிறகு எப்படி மற்றவர்களிடம் ஒழுங்கை அவர் எதிர்பார்க்கமுடி யும்? இதனால் சரியாகக் கல்லூரிக்கு வருகின்ற நாங்களும், கல்லூரிக்கே வராதவர்களும், ஒரே மருத்துவப் படிப்பு சான்றிதழ் பெற்றால் இதில் எங்கு இருக்கு நீதி? இதற்கு படிக்காமலே சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாமே? இப்படி வாங்குவதற்கு எதற்கு கல்லூரி? எம்.பி.பி.எஸ். பயிலும் மாணவர்களுக்கான மருத்துவக் கல்லூரிகளில் இருப்பதைப்போல் எங்கள் கல்லூரியிலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை கொண்டுவரப்பட வேண்டும். அப்படிச் செய்தால் முறைகேடுகள் தடுக்கப்படும்'' என்கிறார்கள்.

மேலும், தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள முதல்வரான மணவாளனின் உறவினர் என்பதால், இந்த விசாரணையும் மூடி மறைக்கப்படவே வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து முதல்வர் மணவாளனிடம் கேட்டபோது, "வேண்டு மென்றே என்மீது குற்றம்சாட்டி வருகிறார்கள். அப்படி எதுவுமே நடக்கவில்லை'' என்று மறுத்தார். இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடியிடம் கேட்டபோது, "இதுபோன்று ஏதாவது நடைபெற்றிருக்கிறதா என்று விசாரித்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

யோகா கல்லூரியின் முறைகேடுகள் தடுக்கப்பட வேண்டும்.