தமிழக கவர்னர் ரவி டெல்லியில் முகாமிட்டிருக்கும் சூழலில் அவருக்கு எதிராக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி அதிர்ச்சி வைத்தியம் தந்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர் எழுதியுள்ள 16 பக்கக் கடிதம் தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகத்தில் கவர்னராக பொறுப்பேற்றதிலிருந்தே தி.மு.க. அரசை சீண்டிப் பார்ப்பதிலும், தனது அதிகாரத்தை மீறி இயங்குவதிலும், தனது கடமையில் ஒரு தலைப்பட்சமாக நடந்துகொள் வதிலும், திராவிடக் கொள்கைகளுக்கு மாறாகப் பேசி பதட்டத்தை உருவாக்கு வதிலுமே முழு நேரமும் கவனத்தை செலுத்தி வருகிறார் ரவி.
இதற்கு தமிழக அரசும், முதல்வர் ஸ்டாலினும் அவ்வப் போது பதிலடி தந்திருந் தாலும், ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு தற்போது முதல்வர் எழுதியுள்ள கடிதம், கவர்னரின் மொத்த உரு வத்தையும் கிழித்திருக்கிறது.
தனது 16 பக்கக் கடிதத்தில் பல்வேறு சம்பவங்கள் மூலம் கவர்னரின் முகத்தை அம்பலப் படுத்தியிருக்கும் ஸ்டாலின், ஆளுநர் என்பவர் அரசியலமைப் புக் கடமைகளை செய்பவராகவும், பாரபட்சமற்ற அப்பழுக்கற்ற நேர்மை யானவராகவும் இருக்க வேண்டும். அரசியல் சாசனத்தின் மீதும், அதன் கொள்கைகள் மீதும் ஆளுநருக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும்.
இந்தியா ஒரு இறையாண்மை மிக்க, சோசலிச, மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு நாடு. இந்த அடிப்படைக் கொள்கைகளில் ஏதேனும் ஒன்றில் கூட நம்பிக்கை இல்லாத ஆளுநர், அரசியலமைப்புப் பதவியை வகிக்கத் தகுதியற்றவர். அரசியல்வாதியாக மாறும் அவர் அப்பதவியில் தொடரவே கூடாது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கை களுக்கு முரணாகவும், சட்டமன்றம் நிறைவேற்றும் சட்டமுன்வடிவு களுக்கு ஒப்புதல் தராமல் முட்டுக்கட்டைபோட்டும் வருகிறார் ஆளுநர். அவரது பல்வேறு நடவடிக்கைகள், ஆளுநர் பதவியை வகிக்கவே தகுதியற்றவர் ஆர்.என்.ரவி என்பதைப் புலப்படுத்துகிறது.
அமைச்சரவையின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரையின்படி தான் ஆளுநர் தனது கடமையை செய்யவேண்டும். தன்னிச்சையாகவோ, விருப்பு வெறுப்புகளுக்கேற்பவோ செயல்படமுடியாது. ஆனால், அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் எடுத்துக் கொண்ட உறுதிமொழியை மீறும் வகையில் சட்ட மன்றத்தில் அவரது நடவடிக்கைகள் இருந்தன. மலிவான அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.
ஒன்றிய ஆளும்கட்சியை எதிர்க்கும் ஒரு கட்சியின் கைகளில் மாநில ஆட்சி இருக்கும் போது, அந்த மாநில அரசை கவிழ்க்கும் வாய்ப் பைத் தேடும் ஆளுநரை ஒன்றியத்தின் முகவராகத் தான் கருதமுடியும். ஆளுநரின் இத்தகைய செயல் கூட்டாட்சித் தத்துவத்தை சிதைத்து, இழிவுபடுத்தி, ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவங்களையே அழித்துவிடும். தமிழ்நாடு ஆளுநர் ரவி அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
வகுப்புவாத வெறுப்பைத் தூண்டிவிட்டு மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக் கிறார். ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு தகுதியானவர். இந்திய அரசியலமைப்பின் மாண்பு களைப் பாதுகாக்கும் உயர்ந்த பதவியில் ஆர்.என் .ரவி நீடிப்பது விரும்பத்தக்கதாகவோ, பொருத்த மானதாகவோ உள்ளதா என்பதை குடியரசுத் தலைவரின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்' என்று அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஆளுநர் பதவி யை வகிக்க ஆர்.என்.ரவி தகுதியற்றவர் என்பதை நிரூபிக்கும் வகையில், பல்வேறு நிகழ்வுகளை சுட்டிக்காட்டியிருக்கிறார்.
குறிப்பாக, சட்டமுன்வடிவு களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தேவை யற்ற காலதாமதம், குற்றவாளிகள் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்குவதில் தாமதம், மாநில அரசின் அரசியல் மற்றும் கருத்தியல்களுக்கு எதிராளியாக செயல்படுதல், குற்றவாளிகளை ஆதரித்தல் மற்றும் காவல்துறை விசாரணைகளில் தலையிடுதல், அரசியலமைப்பை மீறுதல் ஆகிய தலைப்புகளில் ஆர்.என்.ரவியின் முகத்தை கிழித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதற்கு எதிராக செயல்பட்ட கவர்ன ரின் உத்தரவுகளை கண்டித்து சட்டச் சர்ச்சைகள் வெடித்த நிலையில், தனது உத்தரவை நிறுத்தி வைத்துவிட்டு 6 நாள் பயணமாக டெல்லி சென்ற ஆர்.என்.ரவி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ள சூழலில் கவர்னருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் எழுதிய இந்த கடிதமும் அதன் சாராம்சங்களும் தேசிய அளவில் விவாதங்களை உருவாக்கி வருகிறது. ஒரு ஆளுநருக்கு எதிராக எந்த ஒரு முதலமைச்சரும் இப்படி கடுமையாக எதிர்வினையாற்றியது இல்லை என்பதால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது முதல்வர் ஸ்டாலினின் கடிதம்.
டெல்லி சென்ற கவர்னர் ரவி, அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அந்த சந்திப்பில், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின் பேரிலேயே செந்தில் பாலாஜி விவகாரத்தில் நடந்துகொண்டதை விவரித்த கவர்னர், உத்தரவை நிறுத்தி வைத்திருக்கிறோம்; ஆனால், அதனை திரும்பப்பெற சட்ட அதிகாரம் இருக்கிறதா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது என்பதை தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக, ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர்களிடம் உள்துறை அமைச்சகம் விவாதித்திருக்கிறது. அது குறித்த ரிப்போர்ட் அமித்ஷாவிடம் தரப்படவில்லை. அந்த அறிக்கை கொடுக்கப்பட்டதற்கு பிறகே, செந்தில்பாலாஜி நீக்கம் குறித்து விவகாரத்தில் இறுதி வடிவம் கிடைக்கும் என்கின்றனர் டெல்லி சோர்ஸ்கள்.
மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் அதிகரித்திருப்பதாக வழக்கம் போல ஒரு அறிக்கையை கவர்னர் கொடுக்க, சட்டப்பிரிவு 355லியை பயன்படுத்தி சட்டமன்றத்தை முடக்கு வதற்கு வாய்ப்புகள் உண்டா? என்கிற ஒரு விவாத மும் நடந்து முடிந்துள்ளது. அதில், 355-யை பயன் படுத்துவதற்கேற்ப தமிழகத்தில் எதிர்மறையான சம்பவங்கள் இல்லையே என்று அமித்ஷா கேள்வி எழுப்பியதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின் றன. கவர்னருக்கு எதிராக ஒன்றிய அரசிடம் முதல்வர் ஸ்டாலின் மோதி வரும் சூழலில், முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் போக்குகள் நிர்வாக ரீதியாக தி.மு.க. அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி யிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இரண்டு நாட்களுக்கு முன்பு 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். குறிப்பாக, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை செயலாளராக தாரேஷ் அகமது, நில நிர்வாகத் துறை ஆணையராக வெங்கடாச்சலம், பொதுத் துறை கூடுதல் செயலாளராக சிவஞானம், பொதுத்துறை துணை செயலாளராக பத்மஜா, வருவாய் நிர்வாக ஆணையராக கலையரசி, உள்துறை சிறப்பு செயலாளராக சுகந்தி, சமூக நலத்துறை ஆணையராக அமுதவல்லி, நகராட்சி நிர்வாக கூடுதல் செயலாளராக மகேஷ்வரி ரவிக்குமார் உள்பட 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதுகுறித்து கோட்டையில் நாம் விசாரித்தபோது, ‘’அந்த 13 அதிகாரிகளில் ஓரிரு வரைத் தவிர மற்றவர்கள் அனைவருமே உதய சந்திரனுக்கு வேண்டப் பட்டவர்களாகவே இருக்கிறார்கள். இவருக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளுக்கு மட்டும் அடிக்கடி நல்ல நல்ல துறைகளில் இடமாற்றம் செய்து தரப்படுகிறது. ஆனால், திறமையான அதிகாரிகள் பலரையும் டம்மி போஸ்டிங்கிலேயே வைத்திருக்கிறார்கள்.
சுரங்கத்துறையிலிருந்து சமூகநலத்துறைக்கு 20 நாட்களுக்கு முன்பு மாற்றப்பட்ட ஜெயகாந்தன், கடந்த 8-ந்தேதி பொறுப்பேற்கிறார். அன்றைய தினமே அவர் ஊரகவளர்ச்சித்துறைக்கு மாற்றப்படுகிறார். இவர் பொறுப்பேற்றது கூட தெரியாமல் மாற்றுகிறார்கள். ஒரு மாதத்தில் அடுத்தடுத்து மாற்றப் பட்டவர் இவர்தான்.
அதிகாரிகளின் மாற்றத்தில் விருப்பு வெறுப்புகள் அதிக முள்ளதால் நிர்வாக ரீதியாக பல தவறுகள் நடந்து கொண்டிருக் கின்றன. அவை பெரும் பாலும் முதல்வரின் கவனத்துக்கு செல்லாமல் பார்த்துக் கொள்கிறது அவரைச் சுற்றியுள்ள அதிகார வர்க்கம்” என்று சுட்டிக்காட்டுக் காட்டுகிறார்கள் சீனியர் ஐ.ஏ.எஸ்.கள்.
இதற்கிடையே, இன்னொரு முக்கிய விவகாரமும் மூடி மறைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ஓ.பி.எஸ். மகனும் தேனி தொகுதி எம்.பி.யுமான ரவீந்திரநாத்தின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அவர் வெற்றி பெற்றது செல்லாது எனத் தீர்ப்பளித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். வேட்பாளர் விண் ணப்பத்தில் சில விவரங்களை ரவீந்திரநாத் மறைத்து விட்டார் என்பதுதான் குற்றச் சாட்டு. ரவீந்திரநாத்தின் வேட்பு மனுவை பரிசீலித்த அன்றைய தேனி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான பல்லவி பல்தேவ் ஐ.ஏ.எஸ். மீது தனது தீர்ப்பில் குற்றம் சுமத்தியிருக்கிறது உயர்நீதிமன்றம்.
ரவீந்திரநாத்தின் வேட்புமனு பரிசீலனை யின் போது அவரது மனுவை நிராகரிக்கச் சொல்லி இரண்டு பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை புறக் கணித்துவிட்டு ரவீந்திரநாத்தின் மனு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஓ.பி.எஸ். குடும்பத்துக்கு சேவகம் செய்வதே தனது பணி என்று இருந்தவர் பல்லவி. அந்த வகையில் ரவீந்திரநாத் மனு ஏற்கத்தக்கதாக இல்லாத நிலையிலும் அதனை ஏற்றுக்கொண்டு, அவரை தேர்தலில் போட்டியிட வழி ஏற்படுத்தி தந்திருக்கிறார். இதனைத்தான் தனது தீர்ப்பில், ஒருதலைபட்சமாக நடந்து கொண்டிருக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளது உயர்நீதிமன்றம். மேலும், விடுபட்ட சொத்துக்கள் குறித்த ஆவணங்களை எடுத்துவரச் செய்து அதனை யாருக்கும் தெரியாமல் ரவீந்திரநாத் தின் வேட்புமனுவோடு இணைத்திருக்கிறார் பல்லவி.
தேர்தல் விதிகளை அதிகாரிகள் புறக்கணிப் பதும், தவறுகள் செய் வதும் கிரிமினல் குற்றமாகக் கருதப்படும் என்கிற நிலையில், பல்லவி பல்தேவ் மீது உடனடி யாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், நடவடிக்கை எடுக்கவிடாமல் அவரை பாதுகாக்கும் நோக்கத் திலேயே செயல்படுகிறார்கள் முதல்வருக்கு நெருக்கமாக இருக்கும் அதிகாரிகள்.
இப்படிப்பட்ட சூழலில், நிர்வாக ரீதியாக முதல்வர் மீது அதிருப்தியடைந்துள்ள மூத்த அமைச்சர் துரைமுருகனை ஸ்டாலின் சமா தானப்படுத்தியிருக்கும் சம்பவமும் தி.மு.க.வில் ஹைலிலைட்டாகப் பேசப்படுகிறது. தனது துறையான நீர்வளத்துறையின் அலுவலகத்திலேயே லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்துகிறது என்றும், இதெல்லாம் முதல்வருக்கு தெரியாமல் நடக்குமா? என்றும் ஏக அதிருப்தியில் இருந்து வந்தார் துரைமுருகன்.
அதாவது, மேகாதாது அணை விவகாரம் குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஷெகாவத்திடம் கர்நாடகாவை பற்றி புகார் தெரிவிக்க துரைமுருகன் டெல்லிக்கு சென்ற சமயத்தில், அவருடையை நீர்வளத் துறையின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தியது. இதையறிந்து செம காட்டமாகி விட்டார் துரைமுருகன். டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய துரைமுருகன், தலைமைச் செயலகத்துக்கும் செல்லவில்லை; அறிவாலயத் துக்கும் செல்லவில்லை. முதல்வரிடம் பேசவும் இல்லை.
கடந்த 7-ந்தேதி சென்னை திருவான்மியூரில் நடந்த காங்கிரஸ் எம்.பி. விஷ்ணுபிரசாத்தின் மகள் திருமண வரவேற்பிற்கு செல்ல வீட்டில் காத்திருந்தார் துரைமுருகன். அந்த விழாவுக்கு ஸ்டாலின் வந்துவிட்டு சென்ற பிறகு போகலாம் எனத் திட்டமிட்டிருந்தார். ஆனால், துரைமுருகன் அதிருப்தியில் இருப்பதை அறிந்த ஸ்டாலின், விழாவுக்கு செல்வதற்கு முன்பாக நேராக துரைமுருகன் வீட்டுக்கு சென்று அதிருப்தியிலிருந்த துரைமுருகனை சமாதானப்படுத்தி தனது காரிலேயே விழாவுக்கு அழைத்துச் சென்றார். தனது வீட்டுக்கு ஸ்டாலின் வந்தபோதும் காரில் அவருடன் செல்லும் போதும், அரசு நிர்வாகத்தில் நடக்கும் அத்தனை தவறுகளையும் முதல்வரிடம் விவரித்து வருத்தப்பட்டிருக்கிறார் துரைமுருகன். அதையெல்லாம் உள்வாங்கிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின் என்கிறார்கள் சம்பவத்தை அறிந்தவர்கள்.
ஒன்றிய அரசுக்கு எதிராகவும், கவர்னருக்கு எதிராகவும் கடுமையாக வாள் சுழற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது அரசு நிர்வாகத்தில் தனக்கு தெரியாமல் தவறுகளை செய்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராகவும் வாள் சுழற்ற வேண்டும். இல்லையேல், தி.மு.க. அரசுக்கு ஆபத்துதான். ஒன்றிய அரசிடம் எச்சரிக்கையாக இருப்பதை விட தன்னை சுற்றியிருக்கும் அதிகாரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பதுதான் அவசரத்தேவை என்கிறார்கள்.