விடுதலை!’
உலகெங்குமுள்ள தமிழர்கள் பல்லாண்டுகளாக எதிர்பார்த்த இந்த ஒற்றை வார்த்தை, மே 18-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஒலித்தது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப் பட்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலான சட்டப் போராட்டத்துக்குப்பின், தூக்குத் தண்டனையி லிருந்து ஆயுள் தண்டனையாகி, ஆயுள் தண்டனை யிலிருந்து பிணையில் விடுதலை என்றும் படிப் படியான வெற்றிக்குப்பின், தற்போது பேரறிவாளன் விடுதலை என்ற தீர்ப்பு வெளிவந்திருக்கிறது. பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் தன்னம்பிக்கையான சட்டப் போராட்டம் வென்றிருக்கிறது.
பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கப்பட்ட தீர்ப்பின் இறுதிக்கட்ட விசாரணையில், தமிழ்நாடு அரசு - ஒன்றிய அரசு - ஆளுநர் என்ற மூன்று அதிகார மட்டங்களுக்கு இடைப்பட்ட சட்டரீதியான மோதல் உருவாகி, இறுதியில் தமிழ்நாடு அரசின் வாதமே தீர்ப்பின் சாரமாக வெளிவந்துள்ளது. இதன்மூலம், ஆளுநரின் மூலம் மாநில அரசுகளுக்குத் தொல்லை கொடுத்துவரும் ஒன்றிய அரசின் செயல்பாடுகளுக்கு அடி விழுந்திருக்கிறது. இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையில், தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி, இவ்வழக்கில் ஆளுநரின் அதிகார வரம்பு மீறல்களைத் தெளிவாக எடுத்துரைத்தார்.
"மாநில அரசுக்குள்ள அதிகாரத்தின்படிதான் பேரறிவாளனை விடுதலை செய்யும் முடிவு எடுக் கப்பட்டுள்ளது. ஆனால், ஆளுநரோ தேவையின்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளனர். இது, அரசியல் சாசனப்படி தவறானது'' எனத் தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் சுட்டிக் காட்டினார். மேலும், "தமிழக அரசு தனக்கு இருக்கும் அதிகாரத்தின் மூலம் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க எடுத்துள்ள முடிவை மத்திய அரசிடம் பகிர்ந்து கொண்டது. இதைச் சாக்காக வைத்து, இவ்விவகா ரத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிட்டதால்தான் குழப்பங்கள் தொடங்கியது'' என்று மத்திய அரசின் தலையீட்டை எடுத்துரைத் தார்.
மத்திய அரசு வழக் கறிஞரோ, "இவ்வழக்கில் தொடர்புடையவர்களை விடுதலை செய்யும் அதிகாரம், 72-வது அரசியல் சாசனத்தின் படி மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. மத்திய அரசின் விசாரணை அமைப்பு கள் விசாரணை நடத்தியுள்ளதால், இதில் முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது. மாநில அரசின் வரம்புக்குள் வரும் அமைப்புகளின் விசாரணையில் மட்டுமே மாநில அரசு தலையிட முடியும்'' என்று வாதிட்டார்.
அதற்குப் பதிலடியாக, "ஒரு மாநில அமைச்சரவை தனது சட்ட அதிகாரப் பிரிவின்கீழ் ஒரு முடிவெடுத்து ஆளுந ருக்கு அனுப்பும்போது, ஆளுநர் அதன்மீது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு களைச் செலுத்த முடியாது. ஒரு நபரை விடுவிக்கவோ அல்லது விடுவிக்க மறுக்கவோ தனிப்பட்ட முறையில் அவர் முடிவெடுக்க முடியாது. மாநில அமைச்ச ரவையின் முடிவிற்கு அவர் முழுமை யாகக் கட்டுப்பட்டவர். ஆளுநரே கையெழுத்திட்டு இவ்விவகாரத்தை முடித்திருக்க முடியும். தேவையில்லாமல் இவ்வழக்கில் குடியரசுத் தலைவரையும் இழுத்துவிட்டுள்ளார். இதன்மூலம், மிகப்பெரிய அரசியல் சாசனப் பிழையை தமிழக ஆளுநர் செய்துள்ளார்'' என்று தமிழக அரசின் வழக்கறிஞர் விளக்கமாக எடுத்துரைத்தார்.
ஆளுநர் தரப்பின் தவறுகளைப் புரிந்துகொண்ட உச்ச நீதிமன்றம், அத்தகைய ஆளுநருக்கு ஆதரவாக மத்திய அரசு பேசுவதையும் கேள்வி யெழுப்பியது. "மாநில அமைச்சரவையின் பரிந்துரை சார்பிலான கவர்னரின் செயல்பாடுகளுக்கு மாநில அரசுதான் பதில் சொல்லவேண்டுமே தவிர, மத்திய அரசு அல்ல'' என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், "அரசியலமைப்புச் சட்டம் மீறப்படும்போது கண்ணை மூடிப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது'' என்று கடுமை காட்டினர்.
இதையடுத்து, நீதிபதிகள் நாகேஸ் வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, "அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161-ன்படி தமிழக அமைச்சரவை முடிவெடுத்தால், அதற்கு மாநில ஆளுநர் கட்டுப்பட்டவர். அதனைச் செயல்படுத்த ஆளுநர் தாமதப்படுத்தினால், நீதிமன்றம் அதுகுறித்து பரிசீலனை செய்யலாம். அதன்படி, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 142-ன்படி பேரறிவாளனை விடுதலை செய்கிறோம்'' என்று தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பின்மூலம், மாநில அரசின் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் வலிமையும், ஆளுநர் என்ற பதவிக்கான அதிகார வரம்பும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன், "நல்லவர்கள் வாழவேண்டும், தீயவர்கள் வீழவேண்டும் என்பதுதான் நியதி. நல்லவருக்கு விளையும் கேடு என்பதுதான் சிறைவாசம். எங்கள் பக்கம் இருந்த உண்மையும், நியாயமும் எங்களுக்கு வலிமையைக் கொடுத்தது'' என்றார்.
விடுதலையான பேரறிவாளனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில். "32 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இது நீதி -சட்டம் -அரசியல் -நிர்வாகவியல் வரலாற்றில் இடம்பெறத்தக்க தீர்ப்பு. விசாரணையின்போது தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் வைத்த வாதம், மாநில உரிமைகளை நிலைநாட்டுவதாக அமைந்திருந்தது. அதுவே இறுதித் தீர்ப்பாக வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், இதே வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேரும் விடுதலையாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.