உலக பாரம்பரியச் சின்னமாக விளங்கி தமிழர்களுக்கு பெருமை சேர்த்துவரும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலை எழுப்பிய மாமன்னன் ராஜராஜன்சோழன் பிறந்த நாளான சதய விழா, இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருப்பது தமிழர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
மாமன்னன் ராஜராஜசோழன், சோழப் பேரரசர்களில் பெயர்பெற்றவர். மன்னர்களின் காலத்திலேயே மக்களாட்சி முறையினைக் கொண்டுவந்தவர். அவரால் எழுப்பப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக வானுயர்ந்து நின்று தமிழர்களின் கட்டடக்கலைக்கு பெருமை சேர்த்துவருகிறது. மழைநீர் சேகரிப்பு, பாசனமுறை, விவசாயம், நீர்நிலை பராமரிப்பு, வங்கிமுறையைப் பின்பற்றியது எனப் பலவகையிலும் பொது மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆட்சி நடத்தியவர் எனும் பெருமை ராஜராஜ சோழனுக்கு உண்டு.
ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால், ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் வரும் நாள் சதய விழாவாக விமர்சையாகக் கொண்டாடப்படும்.
இந்த ஆண்டு முதல் அரசு விழாவாக முதல்வர் அறிவித்ததால், 1037-வது சதய விழாவையொட்டி தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டது. விழாவில் கலந்துகொண்ட தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிய பரமாச்சார்ய சுவாமிகள், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின், “"மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் இனி ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். இனி ராஜராஜசோழன் புகழ் தமிழகம் தாண்டி உலகத்தின் செவிகளை எட்டும்'' என்றார்.
சதய விழாவிற்கு தலைமையேற்றுப் பேசிய தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், "ஒரு மன்னன் மக்கள் நலனை முதன்மை யாகக் கொண்டு செயல்பட்டால் எக்காலத்திலும் யாராலும் மறக்கமுடியாது என்பதற்கு ராஜராஜ சோழனே சான்று. இதற்கு களக்காட்டூர் காடான் மைந்தன் கல்வெட்டே சாட்சி. காலத்தினால் அழிக்கமுடியாத பல பொக்கிஷங்களைத் தந்தவர். போரில் படைக்குப் பின்னிருந்து வழிநடத்தாமல் படைக்கும் முன்நின்று வழிநடத்துவதில் சிறந்தவர் ராஜ ராஜசோழன்'' எனப் புகழாரம் சூட்டினார்.
ராஜராஜசோழனின் சமாதியிருக்கும் கும்பகோணம் உடையாளூர் பகுதியிலும் விழாக் கொண்டாட்டம் நடந்தது. ராஜராஜசோழனின் வரலாற்று ஆய்வு மையத்தின் சார்பில் உடையாளூர் அருகேயுள்ள பம்படையூரில், மறைந்த தி.மு.க. தலைவர் கலைஞரால் கொண்டு வரப்பட்ட சமத்துவபுரத்தில் மாமன்னன் ராஜராஜசோழனின் சதயவிழா கருத்தரங்கம், பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, வீரவிளை யாட்டுகள், கலைநிகழ்ச்சிகள் களைகட்டின. நிகழ்ச்சியில் சோழர்களின் வரலாற்றுப் படக்காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டன. தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
"பம்படையூர், பழையறை, உடையாளூர், சோழன்மாளிகை, தாராசுரம் ஆகிய ஊர்கள் சோழப்பேரரசின் அழியாத அடையாளங்களைச் சுமந்துகொண்டிருக்கும் சரித்திரப் பிரசித்திபெற்ற ஊர்களாகும். தமிழனின் நீண்ட வரலாற்றில் சேர, சோழ, பாண்டிய பேரரசுகளின் காலம் குறிப்பிடத்தக்கவை. தொன்மையான நாகரிகம் கொண்ட மூத்த குடிமக்கள் தமிழர்கள் என்பதற்கு இங்கு கொட்டிக்கிடக்கும் சான்றுகள் ஏராளம். இப்பகுதிகளில் தமிழகத் தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு வெளிக்கொணர வேண்டிய சரித்திர மிச்சங்கள் ஏராளமாக உள்ளன.
மைய அரசை வலியுறுத்தி இப்பகுதியில் தீவிர ஆராய்ச்சி முயற்சிகளை மேற்கொண்டால் கீழடியைப்போல் ஏராளமான உண்மைகள் இங்கும் வெளிவர வாய்ப்புண்டு. திட்டமிட்டு தமிழர்களின் புகழை மறைக்கத் துடிப்போரிடமிருந்து நம் பாரம்பரிய அடையாளங்களைப் பாதுகாத்தால் தான் தமிழ் இனத்தின் தொன்மையையும் பெருமையையும் பாரறிய பறைசாற்ற முடியும்'' எனக் கருத்தரங்கில் பலரும் பேசினார்கள்.
இவ்வளவு நாள் அரசுதானே விழா நடத்தி யது, தற்போது அரசு விழாவாக அறிவித்திருப்பது குறித்து கோயில் நிர்வாகக் குழுவினரிடம் கேட் டோம். “"அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த பெரிய கோயில் அறங்காவலரான பாபாஜி ராஜாபோன்ஸ்லே ஒருங்கிணைப்பில் அறநிலையத் துறை, மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு சதய விழா நடத்தப்படுவது வழக்கம். விழாவிற்கு தேவையான நிதி, அரண்மனை தேவஸ்தானத்தின் சார்பில் வசூல் செய்யப்படும். அந்த நிதியின் மூலமே விழா நடத்தப்படும்.
அறநிலையத் துறையின் மேற்பார்வையில் விழா நடைபெற்றதால் அரசு விழாவாக பலரும் கருதிவந்தனர். அரசு விழாவாக அறிவித்திருப்பதன் மூலம் விழாவிற்கான செலவை இனி அரசே ஏற்று நிதி ஒதுக்கும். அத்துடன் இந்த மாவட்டத்தில் மட் டும் கொண்டாடப்பட்டுவந்த சதய விழா, இனி தமி ழகம் முழுவதும் கொண்டாடப்படுவதற்கான வாய்ப்பை அரசு உருவாக்கிக் கொடுத்திருக்கிறது'' என்றனர்.
ராஜராஜனின் சமாதி இருக்குமிடம் மிகவும் சிதிலமடைந்து காணப்படுவது வேதனையளிக்கிறது. ராஜராஜ சோழனுக்கு அந்த இடத்தில் மணி மண்டபம் அமைத்துத் தரவேண்டும் என்கிறார்கள் விழாவில் கலந்துகொண்டவர்கள்.
-செல்வா