தமிழக அரசு நிதி உதவியுடன், தனியார் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க இன்றே முந்துங்கள் என சமூக வலைத்தளங்களில் விளம்பரம் சூடுபறக்கிறது. இந்த விளம்பரங்களைச் செய்வது தனியார் பள்ளி நிர்வாகங்கள் அல்ல, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்பதுதான் வேதனை.
தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடங்களை இலவசமாக மாணவர்களுக்கு அளிக்கவேண்டு மென்பதை அரசு பயன்படுத்திக்கொள்ளத் துடிக்கிறது.
அரசுப் பள்ளிகளில் படித்து வெற்றிபெற்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ- மாணவிகள், அவர்கள் விரும்பும் சிறந்த தனியார் பள்ளிகளில் 11, 12-ஆம் வகுப்பு படிக்க அரசு நிதி உதவி செய்யும் என்ற விளம்பரம் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியராலும் அடுத்த மாதம் வெளியிடப்படும்.
இப்படி முதல் வகுப்பில் தொடங்கி 11-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை, அரசாங்கமே தனியார் பள்ளி களுக்கு தாரைவார்க்கும் விளம்பரங்களைக் கொடுத்துவிட்டு, மாணவர்கள் குறைவாகவரும் அரசுப்பள்ளிகளை மூடும்செயலில் அரசு ஆர்வம்காட்டிவருகிறது.
அரசும் அரசுப் பள்ளி ஆசிரியர்களும், அரசுப் பள்ளிகளுக்கு எதிரான பிரச்சாரங்களைச் செய்துகொண்டிருக்கும் நிலையில் தன்னார்வமுள்ள இளைஞர்களும், உணர்வுள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்களும் தனியார் பள்ளிகளுக்குப் போட்டியாக விடுமுறை நாட்களிலேயே வீடு வீடாகச் சென்று அரசுப் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்தி வருகின்றனர்.
மாணவர்களை அரசுப் பள்ளிகளை நோக்கி ஈர்க்க சிறப்பு பரிசுகளையும் பள்ளிகளுக்கு சிறப்பு வசதிகளையும் செய்துகொடுத்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், அப்பகுதி இளைஞர்கள், பெற்றோர்கள் குழுக்கள் அமைத்து மாணவர்கள் நலனுக்காக கணினிகள் வாங்கிக்கொடுத்ததுடன், ஆங்கிலம், கணினிப் பயிற்சிக்கு சிறப்பு ஆசிரியர்களையும் நியமித்தனர். மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல வேன், 19 மாணவ- மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வாங்கிக்கொடுத்து மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தியுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் துளுக்கவிடுதியில் இந்த ஆண்டு பள்ளியில் சேரும் அனைத்து மாணவர் களுக்கும் ஒரு கிராம் தங்க நாணயம் என அறி வித்தது இளைஞர்கள் குழு. முதல் கட்டமாக கோடைகால சேர்க்கை நடத்தி 15 பேருக்கு தங்க நாணயம் தலா ரூ 1000 ஊக்கப் பரிசும் கொடுத்து பெற்றோர்களை ஈர்த்துவருகின்றனர். கறம்பக்குடி அருகில் குளந்திரான்பட்டு கிராம நடுநிலைப்பள்ளி இந்த ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு பள்ளியில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச சைக்கிள் திட்டத்தை கிராம இளைஞர்கள் அறிவித்து சேர்க்கையை அதிகரித்துவருகின்றனர்.
மூன்றாண்டுகளுக்கு முன்பு அறந்தாங்கி ஒன்றியம் வல்லம்பக்காடு கிராம தொடக்கப்பள்ளி மாணவர்கள் வருகை குறைந்து மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. மாங்குடி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமணி வல்லம்பக்காடு சென்று பெற்றோர்களையும் கிராமத்தார்களையும் அழைத்துப் பேசினார். இதையடுத்து உள்ளூர் இளைஞர்கள், ஊரிலிருந்து வெளிநாடுசென்ற இளைஞர்கள் மூலம் நிதிதிரட்டி, அங்கன்வாடிக்கு புதிய ஷெட், அனைத்துக் குழந்தைகளுக்கு சீருடை, பேக், ஷூ தந்து எல்.கே.ஜி., யு.கே.ஜி.யில் சேர்த்தார்கள். அதிலிருந்து படித்துவரும் குழந்தை களை தொடக்கப்பள்ளியில் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
மாங்குடி நடுநிலைப்பள்ளியில் தற்சமயம் குளிர்சாதன வசதி, டிஜிட்டல் வகுப்பறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி விடுமுறை விடப்பட்டதுமே புதுக்கோட்டை நகராட்சி சந்தைப்பேட்டை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் விஜயமாணிக்கம் தனது சொந்த முயற்சியால் 60 மாணவர்களைச் சேர்த்ததுடன், பள்ளி வளாகத்தில் விடுமுறையில் சிலம்பம், கலைப்பயிற்சி வழங்கி மாணவர்களை ஈர்த்துவருகிறார்.
அதேபோல புதுக்கோட்டை சாந்தாபுரம் பள்ளிக்கு அதன் தலைமை யாசிரியர் வீரமணி. கந்தர்வகோட்டை ஒன்றியம் பல்லவராயன்பட்டி உயர்நிலைப்பள்ளியின் சில ஆசிரியர்கள் விடுமுறை நாட்களில் வேறெங்கும் செல்லாமல் மாணவர் சேர்க்கையில் ஆர்வம் காட்டிவருகிறார்கள்.
இது பொறுக்காமல், தனியார் பள்ளிகள் சில அரசுப் பள்ளி ஆசிரியர்களைக் கொண்டே, தமிழக அரசின் 25 சதவிகித இலவசக் கல்வித் திட்டத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க விளம்பரம் செய்துவருகிறார்கள்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களே இந்த விளம்பரங்களைச் செய்துவருவதால், அறியாமையிலுள்ள பெற்றோர்கள் தனியார் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பிவிட்டு, வேன் பீஸ், புத்தக கட்டணம் என கொஞ்சம் கொஞ்சமாக கட்டணம் கட்டுகிறார்கள். இன்னும் சில தனியார் பள்ளிகளோ, "அரசாங்கம் கட்டணத்தைக் கட்டல, உங்க பணத்தை அரசு கட்டியதும் திருப்பி வாங்கிக்கங்க. இப்ப பீஸைக் கட்டுங்க' என பணத்தைப் பிடுங்குகின்றன.
உலக வங்கியின் நெருக்கடி, பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் அரசுகளுக்கு மத்தியில், அரசுப் பள்ளிகளை காப்பாற்றும் வலிமை ஆசிரியர்களுக்கும், மாணவர்களின் பெற்றோர்களுக்கும் மட்டுமே இருக்கிறது.
-இரா. பகத்சிங்