திகாரிகளின் மெத்தனப் போக்கு காரணமாக ஒன்பது லட்சத்தில் கட்டப்பட்ட அரசு கட்டடம் இடித்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. எதற்காக?

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ளது சாத்துக்கூடல் கீழ்பாதி கிராமம். இந்த கிராமத்தில் சிறு குழந்தைகளை பராமரிப்பதற் காகவும், அவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுப்பதற்காகவும், அங்கன்வாடி மைய கட்டடம் கட்டுவதற்கு விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அனுமதி அளித்தனர். அதற்கான இடத்தை கிராம ஊராட்சி நிர்வாகம் தேர்வுசெய்து கொடுத்துள்ளது. அந்த இடத்தில் 9 லட்சம் மதிப்பில் 2023-ஆம் ஆண்டு புதிதாக கட்டடம் கட்டும் பணி தொடங்கப்பட்டு, 2024 அக்டோபர் மாதம் பணிகள் முடிக்கப்பட்டு திறப்புவிழா செய்ய காத்திருந்தது. அந்த நேரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் கட்டடம் இடிக்கப்பட்டது.

ss

இதனால் அரசுக்கு ஒன்பது லட்சம் ரூபாய் இழப்பு. ஏன் இந்த குளறுபடி? என்பதை அறிவதற்காக நாம் அந்த கிராமத்திற்கே சென்றோம் கிராமத்தின் முக்கியஸ்தர்களான செந்தில்நாதன், கிருஷ்ணமூர்த்தி, சிவசக்தி, பிரகாஷ் ஆகியோர் இதுகுறித்து, “"எங்கள் ஊரை சேர்ந்த சக்திவேல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதன் அடிப்படையில் கட்டடம் இடிக்கப்பட்டுள் ளது. கட்டடம் கட்டப்பட்ட இடம் நீர்வழிப் புறம்போக்கு என்று நீதிமன்றத்தில் ஆவணங்கள் சமர்ப்பித்துள்ளார். ஆனால் வருவாய்த்துறை ஆவணங்களில் 1979-ஆம் ஆண்டிலேயே அந்த இடம் நத்தம் என்று உள்ளது. இதுசம்பந்தமான வழக்கில் ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களைத் தாக்கல்செய்து விளக்கமளித்து நீதியை நிலைநாட்டி கட்டடத்தை காப்பாற்றத் தவறிவிட்டனர். தற்போது அந்த இடம் நத்தம் என்பதற்கான வருவாய்த்துறை ஆவணங்களுடன் மீண்டும் நீதிமன்றத்தை நாடவுள்ளோம்''’ என்கிறார்கள்

இதுகுறித்து கட்டடம் இடிக்கக் காரணமாக இருந்த சாத்துக்கூடல் கீழ்பாதியைச் சேர்ந்த தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க பிரமுகர் சக்திவேலிடம் கேட்டோம். "அந்த இடம் நீர்வழிப் பாதைதான். அதை நத்தம் என்று வருவாய்த் துறையினர் வகைமாற்றம் செய்திருந்தாலும் ஏரி, குளம், நீர் வரும் வழிப்பாதையை மறித்து கட்டடம் கட்டப்பட்டது தவறு. அதை நீதிமன்றம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. 2013-ஆம் ஆண்டு அந்த இடத்தில் ஊராட்சி கட்டடம் கட்ட முயற்சிசெய்தார்கள். அப்போதே நீர்வழிப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து கட்டடம் கட்டக்கூடாது. வேறிடத்தில் கட்டுங்கள் என்று கூறி வழக்கு தொடுத் துள்ளேன். அதே இடத்தில் தற்போது அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டுவதற்கு முயற்சி செய்தபோதும் அந்த இடத்தில் கட்டக்கூடாது என்பதை ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், அப்போதைய மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் ஆகியோருக்கு எழுத்து மூலமாக கொடுத்துள்ளேன்.

Advertisment

gg

எங்கள் ஊர் தாழ்வான பகுதியில் அமைந்துள் ளது. ஊரை ஒட்டி பெரிய ஓடை செல்கிறது. மேற்கே நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் பெய்யும் மழைநீர் இந்த ஓடை வழியாகத்தான் செல்லும். இந்த ஓடையில் வெள்ளம் அதிகரித்து பலமுறை ஊருக்குள் புகுந்து சேதப்படுத்தியுள்ளது. அதுபோன்று வரும் காலங்களில் நடந்துவிடக்கூடாது என்ற பொதுநோக்கத்தின் அடிப்படையிலே வழக்குத் தொடுத்தேன். மேலும் நீதிமன்றத்தில் அந்த இடத்தில் கட்டடம் கட்டவில்லை என்று அதிகாரிகள் தவறான தகவலைத் தெரிவித்துவிட்டு அதே இடத்தில் கட்டடம் கட்டினார்கள். இதை உரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தேன். நீதிமன்றம் அதிகாரிகளின் தவறான செயல்பாடுகளை கண்டித்ததோடு, இந்த கட்டடம் கட்டக் காரணமாக இருந்த ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், பொறியாளர்கள், கட்டடத்திற்குரிய தொகையை அரசுக்கு செலுத்தவேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். இதில் எனது சுயநலம் எதுவுமில்லை''’என்கிறார்.

இரு தரப்பினருமே அதிகாரிகளின் தவறுகள்தான் கட்டடம் இடிக்கக் காரணம் என்று குற்றம்சாட்டு கிறார்கள். விருத்தாசலம் வட்டாட்சியர் உதயகுமாரை சந்தித்தோம். அவரோ, “ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் சாத்துக்குடல் கீழ்பாதி கிராமப் பகுதியில் ஊராட்சி சம்பந்தமான வேறொரு கட்டடம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கித்தருமாறு கேட்டனர். அதன்படி ஒதுக்கிக்கொடுத்தோம். ஆனால் இந்த கட்டடம் கட்டுவதற்கு அந்த இடத்தில் எங்களிடம் அவர்கள் அனுமதி பெறவில்லை. அந்த இடம் கிராம வரைபடத்தில் நத்தம் என்றும், வருவாய் பதிவேட்டில் அய்யனார் குளம் நீர் வழிப்பாதை என்றும் உள்ளது. அதனடிப் படையிலும் நீதிமன்ற உத்தரவின் பேரிலும் அந்தக் கட்டடம் இடிக்கப் பட்டது''’என்றார்.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளை சந்திப்பதற்காக ஒன்றிய அலுவலகம் சென்றோம். ஒன்றிய ஆணை யர்கள் மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் கலந்துகொள்ள கடலூர் சென்றிருப்ப தாகக் கூறினார்கள். மீண்டும் கமிஷனர் எண்ணில் தொடர்புகொண்டோம். மீட்டிங்கில் இருப்பதாகவும், அதுகுறித்து பிறகு பேசுவதாகவும் தெரிவித்தனர். உரிய பதில் பெறமுடியவில்லை. கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுசென்று சேர்க்கவேண்டிய அதிகாரிகளின் அலட்சியத்தால் இது போன்ற தவறுகள் ஏற்பட்டு அரசுக்கு இழப்பை ஏற்படுத்துகிறார்கள் என்ற குற்றம்சாட்டுகிறார்கள் சாத்துக்கூடல் கிராம மக்கள்.

-எஸ்.பி.எஸ்.