இலங்கையின் ஏகபோக "வெள்ளை வேன்' ஆபரேட்டர் கோத்தபய ராஜபக்சதான் என்பது மீண்டும் நிரூ பிக்கப்பட்டிருக்கிறது. சில ஆண்டுகளாக ஓடாமலிருந்த "வெள்ளை வேன், கோதா அதிபரானவுடன் மீண்டும் ஓடத்தொடங்கி யிருக்கிறது. இந்தமுறை வெள்ளை வேனில் கடத்தப்பட்டவர், தமிழரோ பத்திரிகையாளரோ அல்ல... கொழும்பி லுள்ள சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி.
அதிபர் தேர்தலுக்கு முன்பு, கோத்தபயவின் "வெள்ளை வேன்' அரசியலை நக்கலடிக்கும் கேலிச் சித்திரமொன்று சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ளப்பட்டிருந்தது. "அதில் என்ன சொல்லப்பட்டதோ அது அப்படியே நடக்கிறது பாருங்கள்'... இதுதான் கோத்தபய.
கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக பெண் அதிகாரி, இலங்கையைச் சேர்ந்தவர். அவரைக் கடத்தியவர்கள், அவரது அலைபேசியில் உள்ள பதிவுகளையும், அவரைத் தொடர்புகொண்டவர்களின் விவரங்களையும் அறிந்துகொள்ள முயன்றிருக்கின்றனர். கடத்தல் குறித்த தகவல் கிடைத்ததும், சுவிஸ் தூதரகம் அதிரடியாகக் களத்தில் இறங்க... இரண்டு மணி நேர விசாரணைக்குப் பிறகு அந்தப் பெண் அதிகாரி விடுவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அரசிடம் இதுதொடர்பாக சுவிஸ் தூதரகம் முறைப்படி புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, சி.ஐ.டி. விசாரணைக்கு இலங்கை உத்தரவிட்டுள்ளது. கூடவே, "அரசாங்கத்துக்கு இந்தக் கடத்தல் குறித்து எதுவுமே தெரியாது' என்கிற "கள்ளபார்ட்' நாடக வசனத்தை மீண்டும் ஒருமுறை ஒப்பிக்கிறது.
இந்தக் கடத்தலின் பின்னணி என்ன என்பதை அறிய விசாரணையெல்லாம் தேவையே இல்லை. எதற்காக இந்தக் கடத்தல் நடந்ததென்பது, தலைநகர் கொழும்பிலுள்ள உயர்நிலை அதிகாரிகள் அனைவருக்கும் தெரியும்.
கோத்தபய ராஜபக்சவின் ரகசிய ராணுவக் கொலைக் குழு செய்த கொலைகளை விசாரித்துவந்த சி.ஐ.டி. அதிகாரி நிஷாந்த சில்வா, நவம்பர் 24-ஆம் தேதி, இலங்கையை விட்டு குடும்பத்தோடு வெளியேறினார். அவர் சுவிட்சர் லாந்துக்குப் போய்விட்டதாகச் சொல்லப்பட்டது. மறுநாள் (25-ஆம் தேதி) சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தப்பட்டிருக்கிறார். எதற்காக அந்த அதிகாரி கடத்தப்பட்டிருப்பார் என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் எளிதானது.
பத்திரிகையாளர்கள் லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னலிகொட இருவரையும் கொலை செய்தது கோத்தபய ராஜபக்சவின் ரகசியக் கொலைக் குழுதான் என்பதை நிரூபித்தவர் நிஷாந்த சில்வா. விபத்தில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட ரக்பி வீரர் தாஜுதீன் மரணத்திலிருந்த மர்ம முடிச்சை அவிழ்த்து, அவரது கொலையில் ராஜபக்ச குடும்பத்துக்கு இருக்கிற தொடர்பை அம்பலப்படுத்தியவரும் அவர்தான்.
நிஷாந்த சில்வா ஓர் அபூர்வமான புலனாய்வு அதிகாரி. லசந்த, பிரகீத், தாஜுதீன் வழக்குகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்ட சமயத்தில், அந்த வழக்குகள் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் அழிக்கப்பட்டிருந்தன. தன்னுடைய அறிவியல்பூர்வ மான புலனாய்வின் மூலம் அந்த ஆதாரங்களை அவர் மீட்டெடுத்தார்.
கோத்தபயவின் கொத்தடிமைகள் போல இருந்து கொலைவெறித் தாக்குதல்களை நடத்தியிருந்த காவல்துறை, ராணுவம் மற்றும் கடற்படை அதிகாரிகளைக் கைதுசெய்து சிறையிலடைக்கும் துணிவு, நிஷாந்த சில்வாவுக்கு இருந்தது. அவர்களுக்கு உத்தரவிட்ட நபர் கோத்தபயதான் என்பதை அறிந்து, அவரை நெருங்கவும் அவர் தயங்கவில்லை.
கோத்தபயவின் கழுத்துக்குக் கத்தி வந்த நிலையில்... ‘சில்வா "புலிகளின் ஆதரவாளர்'’ என்கிற பொய்க் குற்றச்சாட்டின் மூலம் அவரைத் தூக்கியெறிய பினாமி அதிபராக இருந்த மைத்திரிபாலாவை வைத்து கோதா காய் நகர்த்தியதை யாரும் மறந்திருக்க முடியாது. நிஷாந்த சில்வாவை அப்போது காப்பாற்றி யவர்கள் சி.ஐ.டி. உயர் அதிகாரிகளான ஷானி அபய சேகர போன்ற வர்கள். சென்ற ஆண்டு கடைசியில் அந்த நாடகம் நடந்தது.
அதிபர் தேர்தலுக்கு முன்பே, “"சிறையில் வைக்கப்பட்டிருக்கிற ராணுவ அதிகாரிகளை விடுதலை செய்வேன்' என்று பகிரங்கமாக அறிவித்தவர் கோத்தபய. அதிபராகப் பதவியேற்ற உடனேயே தனது குற்றப்பின்னணியை அம்பலப்படுத்திய அதிகாரிகள் மீது பாய்ந்தார். ஷானி அபய சேகரவுக்கும் நிஷாந்த சில்வாவுக்கும் தரப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் ரத்து செய்யப்பட்டன. ஷானியைப் பதவியிறக்கம் செய்து, உப்புக்கும் பெறாத ஒரு பொறுப்புக்கு மாற்றி பழிவாங்கினார்.
இவ்வளவுக்கும் பிறகு, நிஷாந்த சில்வாவுக்கு நாட்டைவிட்டு வெளியேறுவதைவிட வேறு வழியில்லாமல் போய்விட்டது. சுவிஸ் விசா இல்லாமல், சுவிஸ் தூதரகத்தின் துணையில்லாமல் சில்வா இலங்கையிலிருந்து வெளியேறியிருக்க முடியாது என்பதாலேயே மீண்டும் "வெள்ளை வேன்' ஓட்டத் தொடங்கியிருக்கிறது கோத்தபய வின் கொலைக் குழு.
கோத்தபய ராஜபக்ச நேரடியாக சம்பந்தப் பட்ட கொலைகள், எண்ணற்றவை! "கொலைகாரர்' என்று அவரைக் குறிப்பிடுவதைக் காட்டிலும் ‘"கொலை வெறியர்'’ என்று குறிப்பிடுவதுதான் பொருத்தமானது. "சீரியல் கில்லர்' என்று குறிப்பிட்டால்கூட மிகையில்லை. (ஓர் அண்டை நாட்டின் அதிபர் என்பதால், ‘"கொலை வெறியன்'’ என்று குறிப்பிடாமல், ‘"கொலை வெறியர்'’ என்று மரியாதையோடு குறிப்பிட வேண்டியிருக்கிறது.)
சாட்சியமே இல்லாமல் கொலை செய்வது கோத்தபயவுக் குக் கைவந்த கலை. செய்த கொலைகளை மூடி மறைப்பதில், கோதாவுக்கு நிகர் கோதாதான்! அப்படியொரு சூழ்ச்சித் திறன் மிக்க கொலை வெறியர் செய்த கொலைகளை ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய நிகரற்ற துப்பறிவாளன் நிஷாந்த சில்வா.
அதற்காக சுமார் 1200 பேரை சி.ஐ.டி. விசாரிக்க வேண்டியிருந்தது. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட அலைபேசி/தொலைபேசி அழைப்பு பதிவுகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டி யிருந்தது. சில்வாவின் குழு அதையெல்லாம் சளைக்காமல் செய்ததால்தான், கோத்தபய என்கிற கொலைவெறியனின் ரகசியக் கொலைக் குழுவினரைச் சுற்றிவளைக்க முடிந்தது.
தன்னுடைய குற்றப் பின்னணி யைக் கண்டுபிடித்த நிஷாந்த சில்வா சுவிட்சர்லாந்துக்குப் போய்விட்டதற் காக, கோத்தபய ராஜபக்ச எந்த வகையிலும் மகிழ்ச்சியடைய முடியாது. கோத்தபயவின் கொலைக்குழுவினர் செய்த கொலைகள் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் சில்வா கையோடு எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்று கோத்தபய தரப்பு அஞ்சுகிறது. அனைத்தும் வலுவான ஆதாரங்கள் என்பதால், அஞ்சி நடுங்குகிறார்கள் குற்றவாளிகள். அதன் வெளிப்பாடுதான், சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தல். டெல்லியில் மோடியோடு நின்று கைகுலுக்கும்போது கோத்தபய சிரிக்கிற சிரிப்பு, வலிந்து வரவழைக்கப்பட்டிருக்கும் சிரிப்பு. உள்ளுக்குள், "நிஷாந்த எங்கே' என்கிற கொந்தளிப்பில் கோத்தபய குமுறிக்கொண்டி ருப்பதுதான் உண்மை.
கோத்தபயவின் ரகசியக் கொலைக் குழுவினர் செய்த கொலைகளை சில்வாவின் புலனாய்வுக் குழு அம்பலப்படுத்திய காலகட்டத்தில் கோத்த பயவால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எதிரி ரணிலுக்கும், முதுகில் குத்திய துரோகி மைத்திரிக்கும் கூட நண்பர்களைத் தூது அனுப்பி உதவி கேட்டார். இப்போது அவர் அதிபராகவே இருந்தாலும், சில்வா சுவிட்சர்லாந்தில் இருக்கிறவரை கோத்தபய நிம்மதியாகத் தூங்க முடியாது.
சுவிட்சர்லாந்து நாட்டின் விசா இல்லாமல், நிஷாந்த சில்வா அங்கே போயிருக்க முடியாது. சில்வா தஞ்சமடைந்திருக்கிற நாடு சுவிஸ்தான் என்பது உறுதியாகத் தெரிகிற நிலையில், சில்வா எடுத்துச் சென்றிருக்கிற ஆதாரங்கள் ஜெனிவா வரை எளிதாகப் போய்ச்சேரும் என்பதை எவராலும் யூகிக்க முடியும். கொலை வெறியர் கோத்தபய இதை வேடிக்கை பார்ப்பாரா என்பது தான் கேள்வி.
மிக் விமான பேரத்தை அம்பலப்படுத்திய "சண்டே லீடர்' ஆசிரியர் லசந்த விக்கிரம துங்கவை நடுத்தெருவில் படுகொலை செய்தது கோத்தபயவின் கொலைக் குழு. தமிழ் மக்கள் மீது ரசாயன ஆயுதங்கள் பிரயோகிக் கப்படுவதை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் பிரகீத்தை அக்கரைப் பற்று கடலில் ஜலசமாதி செய்தது கோதாவின் இன்னொரு கொலைக் குழு.
உண்மையில், கோத்தபய என்கிற மனிதரை "இன வெறியர்' என்று அழைப்பதை விட ‘"கொலைவெறியர்'’ என்று அழைப்பதுதான் பொருத்தம். இப்படியொரு கொலை வெறியர், தனக்கு எதிரான சகல ஆதாரங் களுடனும் நாட்டைவிட்டு வெளி யேறியிருக்கும் நிஷாந்தவை விட்டு வைப்பாரா என்பது பில்லியன் டாலர் கேள்வி.
கொலை வெறியுடன் திரியும் ஒரு நாட்டின் அரசியல்வாதிக்கும், அறிவியல் பூர்வமாக கொலையாளியைக் கண்டுபிடிக்கத் துணிந்த ஒரு புலனாய்வு அதிகாரிக்கும் இடையிலான இந்த மோதல், நம் ஊர் சினிமா வில்லன்களுக்கு எதிரான போலி கதாநாயகர்களின் மோதல்களைப் போன்றதல்ல. இது நிஷாந்த சில்வா என்கிற நிஜமான நாயகனின் மோதல்.
நிஷாந்த சில்வா என்கிற நிஜமான நாயகன், கோத்தபய என்கிற கொலை வெறியனை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்துவது, வீழ்ந்து கிடக்கிற தமிழினத்துக்கு மட்டுமல்ல, தாழ்ந்து கிடக்கிற சிங்கள இனத்துக்கும் நல்லது.