தமிழக சட்டப்பேரவையில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து தனது விமர்சனத்தை இந்த இதழில் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் சட்டமன்ற பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதம் கடந்த 21-ந் தேதி சட்டப் பேரவையில் நடந்தது.
சபை கூடியதும் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப் பட்டது. இதில் அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு அமைச்சர்கள் பதிலளித்தார்கள்.
கேள்வி நேரம் முடிந்ததும் 110 விதியின்கீழ் விளையாட்டுத்துறை சார்ந்த அறிவிப்பினை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், ’உடல் வலிமையும் உள்ளத்தின் வலிமையும் இணைந்ததுதான் மனித சக்தி. இரண்டு ஆற்றலும் இணையும் போதுதான் வெற்றிகிடைக்கிறது. அறிவு சொத்து போலவே உடல் வலிமையும் ஒரு சொத்துதான். விளையாட்டுதான் உடலினை உறுதி செய் கிறது. குழுவாக இணைந்து செயல்படும் கூட்டு மனப்பான்மையை உருவாக்குவதும் விளை யாட்டுதான்”என்று விளையாட்டின் முக்கியத் துவத்தை உணர்த்தும் வகையில் பேசினார்.
மேலும், சென்னை அருகே விளை யாட்டு நகரம், 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒலிம்பிக் தங்கம் தேடும் திட்டம், அனைத்து தொகுதிகளிலும் 3 கோடி ரூபாயில் விளையாட்டு அரங்கம், 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமி உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். இந்திய தற்காப்பு கலைகளில் ஒன்றான சிலம்பம் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் அரசு வேலைவாய்ப்புகளில் சிலம்பம் வீரர்களுக்கு 3 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கான அரசாணை வெளியிட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார். விளையாட்டின் வளர்ச்சியை தமிழகத்தில் உயர்த்த வேண்டும் என்கிற அதீத அக்கறை அவரது அறிவிப்பில் வெளிப்பட்டது.
முதல்வரின் அறிவிப்புகளுக்கு நன்றி தெரிவித்து நான் உட்பட சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், மெய்யநாதன், மூர்த்தி, மனோதங்கராஜ், காங்கிரஸ் செல்வப் பெருந்தகை, பா.ஜ.க. நயினார் நாகேந்திரன், விடுதலை சிறுத்தைகள் எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்ட பலரும் பேசினோம்.
சமூகநலத்துறை மீதான விவாதத்தின்போது முதல்வர் ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்குமிடையே காரசார விவாதம் எதிரொலித்தது.
அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டம் என்ப தாலேயே தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தை ரத்து செய்துவிட்டீர்கள். இது படித்த ஏழைப் பெண்களுக்கான திட்டம் என்று அரசை குற்றம்சாட்டும் வகையில் சுட்டிக்காட்டினார் எடப்பாடி பழனிச்சாமி.
இதற்கு பதிலளித்த சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன்,”"திருமணத்தன்று பெண்களுக்கு உதவி செய்வதற்குத்தான் இந்த திட்டம். ஆனா, 3 லட்சம் பேரிடம் மனு வாங்கிட்டு மூணு வருஷமா நீங்கள் கொடுக்கலை. இப்படி காலதாமதம் செய்வதால் என்ன பலன்? அதுவும் அந்த 3 லட்சம் மனுக்களை நாங்கள் ஆய்வு செய்ததில் 24 விழுக்காடுதான் சரியான மனுக்களாக இருந்தன''’என்று விளக்கமளித்தார்.
மீண்டும் பேசிய பழனிச்சாமி, "ஏழைப் பெண்களிடம் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் எங்கள் அம்மா (ஜெயலலிதா) இந்த திட்டத்தை கொண்டுவந்தார்கள். அதை நிறுத்திட்டீங்களே''’என்று ஆதங்கத்துடன் சுட்டிக்காட்டவும் சபை அமைதியாக இருந்தது. அந்த அமைதியை உடைக்கும் வகையில், "உங்கள் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்பது எங்களின் நோக்கமல்ல! திட்டத்தை குறையும் சொல்லலை. இதைவிட பெண் கல்வியை ஊக்கப்படுத்துவதற்காக மாதம் 1000 ரூபாய் வழங்கப் போகிறோம்''’என விளக்கமளித்தார் முதலமைச்சர்.
மாற்றுத்திறனாளிகள் துறையின் மீது பேசிய முதலமைச்சரின் மகன் உதயநிதி ஸ்டாலின், தனது பேச்சினை கலகலப்பாகவே ஆரம்பித்தார். கடந்த ஆண்டு அவர் பேசியபோது இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் சபையிலிருந்து வெளிநடப்பு செய்ததை சுட்டிக்காட்டிவிட்டு, "தற்போதும் நான் பேசும்போது வெளிநடப்பு செய்துவிடுவீர்கள் என எதிர்பார்த்தேன்.செய்யவில்லை. அதற்கு நன்றி''’என்று சொன்ன உதயநிதி, "ஒருமுறை வெளிநடப்பு செய்தபோது என் காரில் ஏறிச் செல்ல முயற்சித்தீர்கள். நான்கூட 3 நாளைக்கு முன்பு உங்கள் காரில் ஏறிச் செல்ல முயற்சித்தேன். ஜெய லலிதா படம் இருந்ததால் சுதாரித்துக்கொண்டேன். அடுத்தமுறை தாராளமாக எடுத்துச் செல்லுங்கள். ஆனா, கமலாலயத்துக்கு மட்டும் சென்று விடாதீர்கள்''’என்று சொல்ல, சபையே சிரிப்பால் கலகலத்தது. காரணம் கமலாலயம் என்பது பா.ஜ.க. தலைமையகம்.
ஓ.பி.எஸ்.சும் இ.பி.எஸ்.சும் கூட இதனை ரசித்துச் சிரித்தார்கள். உடனே ஓ.பி.எஸ். எழுந்து, "எங்களுடைய கார் எப்போதும் எம்.ஜி.ஆர். மாளிகையை (அ.தி.மு.க. அலுவலகம்) நோக்கித் தான் செல்லும்'' என்றார்.
இப்படி சபையை கலகலப்பாக்கிய உதயநிதி, திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளின் நலன் குறித்து அழகாகப் பேசினார். 18 வயது நிரம்பிய திருநங்கையர்கள் அனைவரையும் ஆதரவற்ற வர்களாகக் கருதி அவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் நிதி உதவி வழங்கவேண்டும் என அவர் வலியுறுத்தியது ஆரோக்கியமான விசயம். இன்றைய சமூகச் சூழலில் திருநங்கைகளின் நலன் பாதுகாக்கப் பட வேண்டியது அவசியம்
மேலும், பல் வேறு மாற்றுத் திறனாளிகளைப் பற்றி பேசிய உதயநிதி, ‘’"21 வகையான மாற்றுத் திறனாளி களை நம்முடைய சட்டம் அங்கீகரிக் கிறது. அதனால் அரசுத் துறைகளில் அவர்களுக்கான பணியிடங்களைக் கண்டறிய ஒரு ஆணையம் அமைக்க வேண்டும்''’என வலியுறுத்தியது பாரட்டப்படத்தக்கது.
உதயநிதியின் பேச்சைக் கேட் பதற்காக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், மருமகள் கிருத்திகா உதயநிதி, மகள் செந்தாமரை சபரீசன் ஆகியோர் சட்டமன்றத்துக்கு வந்திருந்தனர்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் துறை குறித்த மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் 22-ந் தேதி நடந்தது. கேள்வி நேரம் முடிந்ததும், 110 விதியின் கீழ் அறிக்கை வாசித்த முதல்வர் ஸ்டாலின், இதுவரை வருடத்துக்கு 4 முறை மட்டுமே நடந்துவந்த கிராமசபைக் கூட்டங்களை இனி 6 முறை நடத்துவது என்றும், புதிதாக கிராமச் செயலகம் உருவாக்கப்படும் என்றும் புதிய அறிவிப்பை வெளி யிட்டார்.
நாடாளுமன்ற செயலகம், சட்டமன்ற செயலகம் இயங்கு வது போல, கிராமச் செயலகம் அமைக்கப் படும் என்பது வரவேற்கப்பட வேண்டிய விசயம். ஏற்கனவே கிராம அலுவலகம் இருந்தாலும் கூட செயலகம் உருவாக்கப்படும்போது ஊராட்சிகளின் தேவைகள், நிலுவையிலுள்ள பணிகள், மக்களின் அத்யாவசிய பிரச்சனைகள், அதனை நிறைவேற்றுவதிலுள்ள சிக்கல்கள் என மொத்த செயல்பாடுகளையும் கவனிக்க முடியும். கிராம உள்ளாட்சி அமைப்பினை வலிமையாக்கவும், அதிகாரமளிக்கவும், அவர்களை ஊக்குவிக்கவு மானதாகக் கவனிக்கப்பட்ட இந்த புதிய அறிவிப்புகள் சபையின் வரவேற்பைப் பெற்றன.
இது குறித்து நான் பேசியபோது,”"கிராம ராஜ்ஜியம்தான் ராம ராஜ்ஜியம். கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு. கிராமத்தின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சி. கிராம ஊராட்சிகளுக்கு புதிய அறிவிப்புகள் வலுச்சேர்க்கும்''’என்று குறிப் பிட்டேன். 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் அறிவிப்புகள் மீது விவாதங்கள் நடத்தப்படாது. ஆனால், கருத்துக்களைப் பதிவு செய்யலாம். அந்த வகையில் அ.தி.மு.க.வை தவிர எல்லா கட்சிகளும் வரவேற்றன. அ.தி.மு.க. தலைவர்கள் ஏனோ இதில் அமைதியாகவே இருந்தனர்.
கோடைகாலத்தில் ஏற்படும் மின் பற்றாக்குறை, மின் தடைகள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அ.தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கொடுத்திருந்த கவன ஈர்ப்புத் தீர்மானம் நேரமில்லா நேரத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
முதலில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, "கோடை காலத்தில் மின் தேவை அதிகரிக்கும் எனத் தெரிந்தும் நிலக்கரியை சேமிக்கவில்லை. நிலக்கரி பற்றாக்குறையால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு மின் தடை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. தடையற்ற மின்சாரத்தை வழங்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? அ.தி.மு.க. ஆட்சியில், வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரத்தை கொண்டுவர மின்பாதை அமைக் கப்பட்டது. இதன்வழியாக 4,000 மெகாவாட் கொண்டுவர முடியும். இதனை இந்த அரசு முறையாகப் பயன்படுத்தவில்லை''’என்றெல்லாம் குற்றம் சாட்டினார்.
இதற்கு விளக்கமளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, கோடைக்கால மின்தேவைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளையும், நிலக்கரி பற்றாக்குறையை சரிசெய்ய எடுத்துள்ள நடவடிக்கைகளையும் பட்டியலிட்டவர், ‘’கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 68 முறை மின்தடை ஏற்பட்டது. தி.மு.க. ஆட்சியில் முதல் முறையாக நடந்திருக்கிறது. இதற்குக்கூட காரணம், மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்கக்கூடிய மின்சாரத்தில் ஏற்பட்ட சிக்கல்தான்” என்று சொல்ல, அதற்கு மீண்டும் எதிர்வாதம் செய்தார் எடப்பாடி. இப்படி காரசாரமாக விவாதம் நடக்க, ஒரு கட்டத்தில் வெளிநடப்பு செய்தது அ.தி.மு.க.
அப்போது செல்லூர் ராஜு சபையிலேயே இருப்பதை கவனித்த சபாநாயகர்,”"நீங்க வெளிநடப்பு செய்யலையா?''’என்று காமடியாக கேட்க,”"மதுரையில் நடந்த சம்பவத்தைப் பேசுவதற்காக இருக்கிறேன்''’என்றார் செல்லூர் ராஜு.
பா.ம.க. சார்பில் நான் பேசும் போது,”"கோடை காலத்தின் மின்பயன்பாட்டை உணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும். மத்திய மின் தொகுப்பில் பெறக்கூடிய மின்சாரத்தில்தான் சிக்கல் என அமைச்சர் சொல்கிறார். இனி இந்த சூழல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பொதுவாக அனல்மின்நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டும். மேலும், மின்பற்றாக்குறையை சரிசெய்ய வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்குகிறீர்கள். இது நிரந்தர தீர்வாகாது. மாநிலத்தின் சொந்த மின்உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட வேண்டும்''’என்றேன். இதனை தனது பேச்சில் சுட்டிக்காட்டிய அமைச்சர் செந்தில் பாலாஜி,”"பா.ம.க. வலியுறுத்தியது கவனத்தில் கொள்ளப்படும்''’என்றார்.
இதனையடுத்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்துறை மீதான விவாதம் நடந்தது. இதில் "பழைய கட்டி டங்களை இடித்து விட்டு புதிய கட்டி டங்கள், விடுதிகள் அமைக்க வேண்டும், கல்வி உதவித்தொகையை அதிகரிக்க வேண்டும்' என்றெல்லாம் பல கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டன. இவைகளுக்கு பதிலளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன் பல புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
ம.ம.க.தலைவர் ஜவாஹிருல்லா பேசும்போது, "ஏற்கனவே இஸ்லாமியர்களுக்கும் அருந்ததியர் களுக்கும் உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக் கிறது. அந்த வகையில் வன்னியர் சமூகத்திற்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு நியாயமானது. அதனை முதல்வர் வழங்குவார்ங்கிற நம்பிக்கை இருக் கிறது''’என்றார். அதேபோல, தி.மு.க. உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் 10.5 சதவீதம் நியாயமானது என்பதை வலியுறுத்தினர்.
பொதுவாக, ஆரோக்கியமான விவாதங்களின் களமாக இருக்கிறது சட்டமன்றம். கேள்வி நேரங்களின்போது, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். ஆனா, தற்போதைய தி.மு.க. ஆட்சியில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படுகின்றன. எல்லோருக்கும் இது ஆச்சரியம்தான்.
ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் எதிரும் புதிருமாக நின்று விவாதங்கள் செய்தாலும், விவா தங்களுக்குப் பிறகு ஒருவருக்கொருவர் இணக்கமாக இருக்கக்கூடிய சூழலை சபையில் பார்க்கமுடிகிறது. இது ஆரோக்கியமாகவும் சட்டமன்ற ஜனநாயகத் தையும் உயர்த்திப் பிடிக்கின்றன.
பா.ம.க.வை பொறுத்தவரை அரசின் நல்ல திட்டங்களையும் அறிவிப்புகளையும் வரவேற்பதுடன், அரசு செய்யவேண்டி யவைகளை தவறாமல் சுட்டிக்காட்டி பொறுப்புள்ள கட்சியாக இருக்கிறது!