ராகுல் தினேஷ் சுரானா, அவரது தந்தை தினேஷ்சந்த் சுரானா மற்றும் விஜய்ராஜ் சுரானா ஆகியோரின் தலைமையில், சென்னை பாரிமுனையில் இயங்கிவந்த சுரானா நிறுவனம், தங்கம் மற்றும் எஃகு வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறந்தது. ஆரம்பத்தில் வட மாநிலத்திலிருந்து வியாபார நோக்கில் சென்னைக்கு வந்த தினேஷ்சந்த் சுரனாவுக்கு, போலிப்பத்திரம் போடும் நபர்களுடன் பழக்கம் ஏற்படவே, மாதவரம் பகுதியில் அவருக்கு 100 ஏக்கர் நிலம் இருப்பது போல் போலிப் பத்திரம் தயாரித்து, அந்த பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து பல கோடி ரூபாயைக் கடனாகப் பெற்றிருக்கிறார். அந்த தொகையைப் பயன் படுத்தி தங்க வியாபாரத்தில் இறங்கியிருக்கிறார். சுரானா நிறுவனம் அடுத்தடுத்து வளர்ச்சி யடைய, இந்தியா முழுவதும் தனது வியாபாரத்தை விரிவுபடுத்தினார். தொடக்கத் தில் அப்போதைய காங்கிரஸ் அரசை ஆதரித்து வந்தவர், ஆட்சி மாற்றத்துக்குப்பின் பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டு, அரசாங்கத்தின் ஆதரவுடன் தனது தொழிலைப் பாதுகாப்போடு நடத்திவந்திருக்கிறார். இதனிடையே, தமிழகத்திற்கும், டெல்லிக்கும் இடைப்பட்ட லாபியில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது சுரானா நிறுவனம்.

bjp

தற்போது டெல்லி பா.ஜ.க., வாஜ்பாய் ஆதரவாளர் கள், மோடி-அமித்ஷா ஆதரவாளர்கள் என்று இரு பிரிவாகச் செயல்பட்டுவருகிறது. அதேபோன்ற மாற்றம் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கிறது. தமிழகத்தில், முன்னாள் தேசியத் தலைவரான நிதின் கட்கரி, வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா போன்றவர்களின் அரசியல் லாபி ஒட்டுமொத்தமாக மாறி, கர்நாடகா ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவரான சந்தோஷ் என்பவரால் கைகாட்டப்பட்டு, அமித்ஷா ஆதரவுடன் களமிறக்கப் பட்ட அண்ணாமலையின் கை ஓங்கியிருக்கிறது. தற்போது அண்ணா மலை, எல்.முருகன் தலை மையிலான புதிய டீம்தான் தமிழகம் சார் பாக டெல்லியில் லாபி செய்துவரு கிறது. பொதுவாக, அரசியல்வாதிகளுக்கும் தொழிலதிபர்களுக்குமான உறவு ஒரு கட்டத்துக்குமேல் தவிர்க்கமுடியாததாக இருக்கும். தங்கள் தொழிலின் அடுத்தகட்ட வளர்ச்சிக்காக அரசியல்வாதிகளில் எவரை யேனும் தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்வது சகஜமாக இருக்கிறது. அந்த வகையில், தங்கத்தை பெரிய அளவில் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் இந்த நிறுவனத்துக்கும் மத்திய ஆளுங்கட்சியின் ஆதரவு அவசியப்பட்டிருக்கிறது.

சுரானா நிறுவனத்தின் குழுமத்தில், சுரானா இண்டஸ்ட்ரி லிமிடெட், சுரானா பவர் பிளான்ட் ஆகிய நிறுவனங்களும் செயல்பட்டுவந்தன. வட மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து தொழில் நடத்தும் சூழலில், தமிழக பா.ஜ.க. தலைவர்களுக்கு ஆதரவாளர்களாகத் தங்களைக் காட்டிக் கொண்டு, பிசினஸை பாதுகாப்பாக நடத்திவந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு, வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாகத் தங்கத்தை இறக்குமதி செய்து விற்பனை செய்ததாக இந்த நிறுவனத் தின்மீது புகாரளிக்கப்பட்டதில், அதுகுறித்த விசாரணையில் சி.பி.ஐ. இறங்கியது. சி.பி.ஐ. விசாரணையில் சிக்கிய இந்நிறுவனத்துக்கு ஆதரவாக தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. தலைவர் ஒருவர் களமிறங்கி, தனது டெல்லி லாபி மூலம் விசாரணையில் சுணக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இதற்கான பிரதிபலனை அந்நிறுவனத்திலிருந்து பெற்றிருக்கிறார்.

Advertisment

bjp

அடுத்ததாக, 2014-ம் ஆண்டு மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த நிலையில், தங்க மான பா.ஜ.க. தமிழக தலைவர் மூலமாக தற்போது டெல்லியில் முக்கிய பதவியிலிருக் கும் பா.ஜ.க. தலைவரிடம் லாபி செய்து அவ்வழக்கை தொடர்ச்சியாக மந்தப்படுத்தி வைத்திருந்தார்கள். அடுத்தடுத்து தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளில் மாற்றங்கள் வந்தபோதும், அந்தந்த தலைவர்களின் ஆதரவோடு விசாரணையை ஆமை வேகத்தில் நகரவைத்திருக்கிறார்கள்.

அடுத்து, 2020 காலகட்டத்தில், கர்நாடகாவில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதாக வங்கிகளில் போலியான ஆவணங் களைக் கொடுத்து சுமார் 1,495 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்திருப்ப தாக சுரானா பவர் பிளான்ட் நிறுவனம் பற்றி புகாரளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், கர்நாடகாவில் காவல்துறை உயர் அதிகாரியாகப் பணியாற்றிய ஒருவரே தமிழக பா.ஜ.க.வில் செல்வாக்கு பெற, அவருக்கு, கர்நாடகாவில் சுரானா நிறுவனத்தின் மோசடிகள் குறித்தும், அதற்கு தமிழக பா.ஜ.க. தலைவர்கள் சிலரே ஆதரவாகச் செயல்பட்டது குறித்தும் தெரிந்திருந்தது. எனவே இந்த தகவலை அப்போதைய தமிழக பா.ஜ.க. தலைவரிடம் தெரிவித்து, பழைய பா.ஜ.க. தமிழக தலைவர்களின் லாபியை ஒழிக்கும் நடவடிக்கையைத் தொடங்கினார். ஏற்கெனவே டெல்லியிலும் அமித்ஷா தலைமையிலான புதிய லாபி செயல்பட்டதால், பா.ஜ.க.வின் அரசியல் லாபிக்குள் சிக்கிய சுரானா, மீண்டும் பெருஞ்சிக்கலில் மாட்டியது.

கடந்த 2012-ஆம் ஆண்டு சுரானா நிறுவனத்தில் சி.பி.ஐ. சோதனை செய்தபோது, சுரானா அலுவலக லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 400 கிலோ தங்கக் கட்டிகள், நகைகள் அப்படியே சீல் வைக்கப்பட்டன. ஆனால் தற்போது அந்த லாக்கரைச் சோதனையிட்டதில், அதிலிருந்த 103 தங்கக்கட்டிகள் மாயமாகியுள்ளன. இதுதொடர்பாக சுரானா நிறுவனத்தின் மீது புதிதாக ஒரு வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்தது. இது தொடர்பான விசாரணைக்கு சுரானா நிறுவனத் தலைவர்களை சி.பி.ஐ. வரவழைத்த நிலையில், கர்நாடக வங்கிகளில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்த வழக்கில் ராகுல்தினேஷ் சுரானாவின் தந்தை தினேஷ்சந்த் சுரானா மற்றும் மாமா விஜய்ராஜ் சுரானா ஆகியோர் அமலாக்கத்துறை இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

bjp

இதனையடுத்து இம்மாதத் தொடக்கத்தில், தற்போதைய சுரானா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் தினேஷ் சுரானா மீது சென்னை தீவிர குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். சுரானா நிறுவனத்தின் பெயரில் போலியான கிளை நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருவதும், அதன் பெயரில் பொதுத்துறை வங்கிகளில் 8,045 கோடி ரூபாய் கடன் பெற்று அவை செலுத்தப்படாமல் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இந்நிறுவனத்தின் மோசடிகள் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விசாரணையின் முடிவில், தங்கக் கட்டிகளை யார் எடுத்தார்கள்? யாருக்கு கொடுப்பதற்காக எடுத்தார்கள்? தற்போது அந்த தங்கக்கட்டிகள் யார் வசமுள்ளது என்பது அனைத்தும் வெட்டவெளிச்சமாகத் தெரியவரும் என்கிறார்கள்.

சுரானா நிறுவனத்தின் மோசடிகளுக்குப் பின்னணியில் பா.ஜ.க. தலைவர்களின் செல்வாக்கு இருப்பதைப்போல், கடந்த சில ஆண்டுகளில், மத்தியிலுள்ள கட்சியின், ஆட்சியின் செல்வாக்கைப் பயன்படுத்தி, வங்கி மோசடி, நிதி மோசடி, சீட்டு மோசடி, போதைப்பொருள் கடத்தல், குட்கா பதுக்கல் எனப் பல்வேறு குற்றச்செயல்களில் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் ஈடுபட்டு கைதானது குறித்து பல்வேறு செய்திகள் வந்துள்ளன. அவற்றிலிருந்து சாம்பிளுக்கு சில...

* தஞ்சை மாவட் டம், கும்பகோணத்தைச் சேர்ந்த 'ஹெலிகாப்டர் சகோதரர்கள்' எனப்படும் எம்.ஆர்.கணேஷ் -எம்.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர், பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக்கூறி, பல நூறு கோடி மோசடி செய்த தற்காக கைது செய்யப் பட்டனர். சகோதரர்களில் ஒருவரான எம்.ஆர். கணேஷ், தஞ்சை வடக்கு மாவட்ட பா.ஜனதா வர்த்தகப்பிரிவு தலைவ ராக பொறுப்பு வகித்தார்.

* 2020ஆம் ஆண் டில், சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தி லுள்ள 1,735 சதுர அடி சொத்துக்கு போலி ஆவணங்களைச் சமர்ப் பித்தது, பஞ்சாப் நேஷனல் வங்கியின் அபிராமபுரம் கிளையில், 2.2 கோடி ரூபாய் வீட்டுக்கடன் பெற்ற புகாரின் அடிப் படையில், தமிழக பா.ஜ.க. மீனவர் பிரிவு துணைச் செயலாளராக இருந்த கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

* காரைக்குடியைச் சேர்ந்த எஸ்.ஆர்.தேவர், பா.ஜ.க. மாநில விவசாயி அணி துணைத் தலைவ ராக இருக்கிறார். இவர், 200 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த போத்ரா என்பவ ரிடம் 4 கோடி ரூபாயை மோசடி செய்திருக்கிறார்.

* சேலம் மாநகர், ரெட்டியூர் பகுதியை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் பாலசுப்ரமணியம், 'நரேந்திரமோடி விகாஷ் மிஷன்' என்ற அமைப்பின் மாநிலத் தலைவராக உள்ளார். தனது நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 2 லட்சத்து 16 ஆயிரம் ரூபாயாக திருப்பி தருவதாகக் கூறி, நூற்றுக்கணக்கானவர்களிடம் 2 கோடியே 16 லட்சம் ரூபாய் மோசடி செய்திருக்கிறார்.

* தமிழ்நாடு பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினரான மதுவந்தி, 3 லட்சம் ரூபாய் கொடுத்தால் சென்னை பி.எஸ்.பி.பி. பள்ளியில் அட்மிஷன் வாங்கித் தருவதாகக் கூறி கிருஷ்ணபிரசாத் என்பவரிடம் 19 லட்சம் ரூபாய்வரை வாங்கியிருக்கிறார். சொன்னபடி மாணவர்களுக்கு சீட்டு வாங்கிக் கொடுக்காததால் பணத்தைத் திருப்பிக் கேட்க, 13 லட்ச ரூபாயை மட்டும் கொடுத்துவிட்டு, 6 லட்ச ரூபாயை மோசடி செய்ததாக மதுவந்தி மீது காவல் ஆணையரிடம் புகாரளிக்கப்பட்டது.

* பெரம்பூர் பா.ஜ.க. வர்த்தக அணிப் பிரிவு தலைவரான வி.எஸ்.சீனிவாசன் சுவர்ணலட்சுமி என்ற நிதி நிறுவனத்தை நடத்தி, 70 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக தனசேகரன் என்பவர் அளித்த புகாரின் பேரில், அவரையும் அவரது மனைவியையும் போலீசார் கைது செய்தனர்.

* சேலம் மாவட்ட தம்மம்பட்டி பகுதியில், பா.ஜ.க வர்த்தக அணியின் மாவட்டச் செயலாளராக உள்ள பிரகாஷ் என்பவர், 20.05 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1455 கிலோ குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்ததற்காகக் கைது செய்யப்பட்டார்.

* தூத்துக்குடி மாவட்டம், வீரமாணிக்கம் கிராமத்திலுள்ள பத்ரகாளியம்மன், சந்தி அம்மன், சுடலை மாடன் கோவில்களை பா.ஜ.க. பிரமுகர் பட்டு ராமசுந்தரம் என்பர் நிர்வகித்துவந்தார். இந்த மூன்று கோவில்களையும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபோது, கோவிலுக்குச் சொந்தமான 100 சவரன் நகைகளை ராமசுந்தரம் கையாடல் செய்தது தெரியவந்தது.

* பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க ஓ.பி.சி. அணி மாநில செயற்குழு உறுப்பினராக இருக்கும் அடைக்கலராஜ் மற்றும் அவரது நண்பர் ஆதடையான் ஆகியோர், 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள அபின் போதைப்பொருட்களை காரில் பதுக்கி வைத்திருப்பதாக, திருச்சி போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும் நிலையில், அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி தங்களது பண பலத்தை உயர்த்திக்கொள்வதற்காக, குற்றச்செயல்களில் தொடர்புடைய பலர் அக்கட்சியில் இணைவதும், பல்வேறு மோசடிகளில் ஈடுபடுவதும் தொடர்கதையாகியுள்ளது.

பா.ஜ.க. இனியாவது இவற்றைக் கட்டுப்படுத்துமா? என்பதே பொதுமக்களின் கேள்வி!

-அஸ்வின், ஆதவன்