கஜா, ஒக்கி. அடுத்தடுத்து தாக்கிய இந்த இரண்டு புயல்களால் கேரளா மீளமுடியாத பலத்த அடிவாங்கியது. மாநிலமும் மக்களும் பெரும் சேதாரத்தைச் சந்தித்த அவல நாட்கள் அவை.. நிவாரணப் பணியின் காரணமாக கேரள அரசின் கஜானா காலியானது. புயல் பாதிப்பிற்காக மக்களுக்கு உதவும்படி மத்திய அரசிடம் மடிப் பிச்சையேந்தியது. ஆனால் கிடைத்ததோ அகோர யானைப் பசிக்குச் சோளப்பொறிதான்.
தனிப்பட்ட முறையில் பினராய் விஜயன் சிறந்த விருந்தோம்பல் பண்பு கொண்டவர். தங்களுக்கான நல்ல நண்பர் என்ற காரணத்தால் தத்தளிக்கும் கேரளாவிற்கு உதவ ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உறுப்பு நாடுகள் முன்வந்தன. கணிசமான நிதி அளிப்பதை ஏற்றுக்கொள்ளும்படி பினராயை வற்புறுத்தின. ஆனாலும் இந்திய வெளியுறவுக் கொள்கையைச் சுட்டிக்காட்டி மத்திய அரசு, வெளிநாடுகளின் உதவிக்குத் தடை போட்டது என்றாலும் துவண்டுவிடவில்லை பினராய் விஜயன்.
வெளிநாடுகளில் பல்வேறு துறைகளில் கோலோச்சிக் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கும் கேரளவாழ் என்.ஆர்.ஐ.களுக்கு நிலைமையைக் கொண்டுசென்றார். அவர்களின் மாநாட்டைத் தலைநகரில் கூட்டிய பினராய் விஜயன், மாநிலத்தின் நெருக்கடியான சூழலை முன்வைத்தார். உயிர்தந்த மண்ணும் உற்ற மக்களும் பேரிடரில் இருப்பது கண்ட வெளிநாடுவாழ் என்.ஆர்.ஐ.கள் தோள் கொடுத்தனர். நிதி உதவி தாராளமாகக் கிடைத்தது. அதேசமயம், கேரளாவின் பாமர மக்கள் முதல் பணம் படைத்த செல்வந்தர்கள் வரை இயன்றளவு வாரி வழங்கினர். அரசுக்குத் தோளோடு தோள் நின்றார்கள். சேதாரங்களை மக்களின் பங்களிப்போடு சமாளித்து மூச்சுத்திணறிய கேரளாவை சுவாசநிலைக்குக் கொண்டுவந்தார் முதல்வர் பினராய் விஜயன்.
புயல்களால் வாங்கிய அடியிலிருந்து மீண்டுகொண்டிருந்த நேரத்தில் மரண அடியாய் வந்து நின்றது கொரோனா எனும் வல்லரக்கன். அன்றாடம் பத்தாயிரம், பதினைந்தாயிரம் எனத் தொற்று நோயாளிகளின் பாதிப்பு பேனல் ஏறிக்கொண்டே போனது. நிர்பயா, ஸ்வைன் புளூ உள்ளிட்ட கொடிய வைரஸ்களின் ஆராய்ச்சி வல்லுநர்களின் துணையோடும், பிளாஸ்மா சிகிச்சையின் மூலமாகவும் கொரோனா முதல் அலையை லாகவமாகச் சமாளித்தார் பினராய் விஜயன். கொரோனாத் தொற்று ஏற்படாமலிருக்க மக்களுக்கான தடுப்பூசியை அரசு இலவசமாகவே வழங்கும், "கேரளாவின் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும்' என்று கடந்த வருட ஆகஸ்ட் மாதத்தின்போதே அறிவித்தார் பினராய் விஜயன்.
டெக்னிக்கலாக முதல் அலையைத் தடுத்தாலும், அடுத்து வந்த கொரோனா 2-ஆம் அலை கேரளாவைச் சுனாமியாயத் தாக்கியது. தொற்றுத் தாக்கின் அளவுகோல் தமிழகத்தைவிட இரண்டு மடங்காக கடந்த 2 நாள் முன்புகூட 28,000 என்ற அளவுக்குப் பறந்தது கேரளாவின் பாதிப்பு விகிதம். அதேசமயம் கோவாக்சீன், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்தபோது, அவை "மாநில அரசுக்கு டோஸ் ஒன்று 150 விலையில் சப்ளை செய்யப்படும்' என மத்திய அரசு அறிவித்தது. அதே நேரத்தில் கொரோனா 2-ஆம் அலை தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங் களில் அசுர வேகமெடுக்க, தடுப்பூசியின் பயன்பாடுகள் உச்சிக்குப் போயின. இந்த டிமாண்டை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட தடுப் பூசித் தயாரிப்பின் புனே சீரம் நிறுவனம், தனது கோவிஷீல்டின் விலையை 400 ரூபாய் என்று உயர்த்தியது. இந்த விலையேற்றத்தால், மோடியின் மத்திய அரசு, திடீரென்று தடுப்பூசிகளை மாநில அரசு களே தன் சொந்த செலவில் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று அறிவித்தது. கேரளாவில் மோடி மீதான மக்களின் சர்ச்சையும் அதிருப்தியும் வெளிப்பட்டன. "ரூ.150-க்கு சப்ளை செய்யப்படும்' என்று அறிவித்துவிட்டுப், பின்னர் மொத்தச் சுமையையும் மாநில அரசின் மீது ஏற்றிவைத்தது, கேரளாவின் அனைத்துத் தரப்பிலும் விவாதமானது.
வாங்கிய அடிகளால் படுநெருக்கடியில் பொருளா தாரம். தொடர்ச்சியான பேரிடர்களால் கேரளா அரசின் நிதி நிலையோ படுபாதாளத்தில். அதேசமயம், கொரோனா பாதிப்பு சூழ்நிலைகள் தடுப் பூசியின் அவசியத்தைக் கடுமையாக்கின. இந்தச் சூழலிலும், மத்திய அரசு பேச்சு மாறினாலும் நான் பேச்சு மாறமாட் டேன். நான் ஏற்கனவே சொன்னது சொன்னது தான். கொடுத்த வாக்குறுதியில் உறுதி யாய் நின்ற பினராய் விஜயன், அனைவருக்கும் தடுப்பூசி இலவசம் என்று தற்போதைய நெருக்கடியிலும் அறிவித்திருக்கிறார்.
கல்வி கலாச்சாரங்களில் முன்னணியிலிருக்கிற கேரள சேட்டன் சேச்சிகளோ ஒரு ஸ்டெப் முன்னேறி, கவலை வேண்டாம், நெருக்கடியான நேரத்தில் தோள் கொடுப்போம் என்று சொல்லாத குறையாக, தங்க ளுக்குள் ஒரு அமைப்பை ஏற்படுத்திக்கொண்டார்கள். அவர்களோடு சமூக நல அமைப்புகளும் துணை நின்று தங்களால் இயன்ற அளவு தொகைகளை சி.எம்.டி.எப். எனப்படும்(CHIEF MINISTERS DISASTRES FUND) முதல்வர் பேரிடர் நிதிக்கு அனுப்பத் தொடங்கினர். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்தில் 25 லட்சம் வரை அனுப்பியுள்ளனர். ஒருநாள் முழுக்க முதல்வரின் பேரிடர் நிதிக்கு அனுப்பப்பட்ட தொகையின் அளவு ஒரு கோடியாக உயர்ந்திருக்கிறது. அடித்தட்டு விளிம்பு நிலை மக்கள் தொடங்கி, பணம் படைத்த சீமான்கள் வரையிலான தனி மனித னின் பங்களிப்புகள் உயர்ந்துகொண்டே போகின்றன. 500, 400 என்று கூட ஏழைபாளை கள் முதல்வரின் பேரிடர் நிதிக்கு அனுப்பிய வண்ணமுள்ளனர். நீங்கள் கவலைப்பட வேண்டாம், நாங்கள் இருக்கிறோம் என்று முதல்வர் கேட்காமலேயே தன்னெழுச்சியாக இயன்ற அளவு அனுப்பி வருவதாகக் கூறுகின்ற னர், கொல்லம் பகுதிவாசிகள். இப்படி நிதி அனுப்பி வருகிற ஒவ்வொருவரும் அனுப்பு கிற தொகையின் அளவு பார்க்காமல் பேத மில்லாமல் கேரள அரசு, அவர்களின் பெருந் தன்மைக்கான சான்றிதழ்களை உடனுக்குடன் அனுப்பி வருகிறது.
கொல்லம் நகரில் சிறிய டீக்கடை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருப்பவர்கள், 70 வயதான சுபைதாவும் அவரது கணவரும். கடந்த ஒக்கிப் புயலின்போது தன்னுடைய 10 ஆடுகளில் 7 ஆடுகளை விற்றுக் கிடைத்த இரு பத்தைந்தாயிரம் பணத்தை அப்படியே முதல் வரின் பேரிடர் நிதிக்கு அனுப்பி வைத்திருக் கிறார் அன்றாடம் காய்ச்சியான சுபைதா. தற்போது கொரோனாத் தொற்றுத் தடுப்பூசித் திட்டத்திற்காக சுபைதா தன்னிடம் மிஞ்சி யிருக்கிற இரண்டு ஆடுகளையும் விற்றுக் கிடைத்த ஐந்தாயிரத்தையும் அனுப்பி வைத்திருக்கிறார். வறிய நிலையிலும் மக்களுக்கு உதவும் பண்புள்ளம் கொண்ட சுபைதாவை வரவழைத்துக் கௌரவித்துச் சான்றிதழும் வழங்கியிருக்கிறார் பினராய் விஜயன்.
கொல்லம் மேற்கு மண்டலத்தின் நிரஞ்சனா என்ற 6ம் வகுப்பு பயிலும் மாணவி, தன்னுடைய வங்கிச் சேமிப்புத் தொகை முழுவதையும் சி.எம்.டி.எப். நிதிக்கு அனுப்பி, கேரள மக்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பியிருக்கிறார். இதன்மூலம் முதல்வரின் பேரிடர் நிதி ஆதாரம் பல கோடி அளவில் ஏறிக்கொண்டே போகிறதாம்.
கடவுள்களின் தேசத்தில் சுமைதாங்கிகள் பெருகிக்கொண்டே போகின்றன.