ஒருவரது சிந்தனை இன்னொருவர் வாழ்வில் சிரிப்பை, கண்ணீரை, மாற்றத்தை ஏற்படுத்துவது தான் கலையின் சிறப்பு. அந்த வகையில், தற்காலத்தில், பல கலைகளின் தொகுப்பாக இருக்கும் சினிமா உலகமெங்கும் கோடிக்கணக் கானவர்களின் வாழ்வில் சிரிப்பை, கண்ணீரை, மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. வணிகரீதியான படங்கள் திரையரங்குகளில் கொண்டாடப்படுகின்றன என்றால், வணிகத்துக்குள் அடங்காத, வணிகத்தை எதிர்பார்க்காத கலை படைப்புகளாக உருவாக்கப்படும் படங்களும் சமூக பார்வை கொண்ட, பதிவு செய்யப்படாத வாழ்க்கைகளை பதிவு செய்யும் ஆவணப் படங்களும் கொண்டாடப்படும் இடம் திரைப்பட விழாக்கள். இந்தியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவாகக் கருதப்படுவது கோவாவில் நடத்தப்படும் சர்வதேச திரைப்பட விழா. "இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஆஃப் இந்தியா' எனப்படும் இவ்விழா ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகமும் கோவா மாநில அரசும் இணைந்து நடத்துவதாகும். "52-வது சர்வதேச திரைப்பட விழா' நடந்து முடிந்திருக்கிறது.
கோவாவின் பனாஜி பகுதியில் உள்ள "ஐநாக்ஸ்' திரையரங்கு விழாவின் மையமாக இருந்தது. அருகிலேயே இதற்கான அரசின் அலுவலகமும் அமைந்திருக்கிறது. இரவில் அந்தப் பகுதியே வண்ணமயமாக ஜொலித்தது. திரைப்படக் காதலர்களின் காதலர் தினக் கொண்டாட்டமாக இருந்தது அந்தச் சூழல். மகிழ்ச்சி, சிரிப்பு, உரையாடல், விவாதங்கள், கனவுகள் என நிரம்பி வழிந்தது அந்த இடம். திரையரங்குக்கு அருகிலேயே பார்வையாளர்களும் படைப்பாளர்களும் சந்தித்து உற்சாகமாக உரையாடும் வண்ணம் ஏற்பாடுகள் இருந்தன. வித்தியாசமான உடை, சுதந்திர உணர்வு தெறிக்கும் நடை, படைப்புத் தாகம் நிறைந்த பேச்சு என பலரும் பரபரப்பாக படங்களைப் பார்த்து, படங்களை பேசித் திரிந்தனர். ஒன்றுக்கு மேற்பட்ட அரங்குகளில் ஒரே நேரத்தில் பல்வேறு படங்கள் திரையிடப்படுவதால்... எதை விடுவது, எதை பார்ப்பது என்ற பதற்றத்துடன் பலர் இருந்தனர். அந்தப் பகுதியே பாசிட்டிவ் வைப்ஸ் பரவசத்தில் இருந்தது.
உலகின் பல்வேறு மொழிகள், நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு படங்கள் திரையிடப்படும் இந்த விழாவில் தமிழ்ப்படங்கள் இரண்டு திரையிடப் பட்டன. இயக்குனர் வினோத்ராஜின் "கூழாங்கல்' திரைப்படமும், இயக்குனர் ஜெயச்சந்திர ஹாஷ்மியின் "ஸ்வீட் பிரியாணி' குறும்படமும் தமிழ் சினிமாவின் பிரதிநிதிகளாக சர்வதேச மேடையில் கம்பீரமாக நின்றன. நயன்தாரா -விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள "கூழாங்கல்' திரைப் படம், மதுரை மேலூ ரில் மதுரை மக்களின் நடிப்பில் உருவாகி உலக விருதுகள் பலவற்றை வென்று இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆஸ்கர் நுழைவாக சென்றுள் ளது. இதனால் "கூழாங் கல்' திரையிடலுக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது.
"கூழாங்கல்' படம் திரையிடப்படும் அதே ஸ்லாட்டில் அதற்கு முன்பாக மத நம்பிக்கை பேசும் வேறொரு திரைப் படம் திரையிடப்பட கூழாங்கல் பார்க்க வந்த ரசிகர்கள் பொறுமை இழந்தனர். குறைவான நீளம் கொண்ட படங்கள் இரண்டு சேர்த்து திரையிடப்படுவது வழக்கம் தான் என்று விளக்கம் தந்தது விழாக்குழு. அந்த ஒரு மணிநேர அயற்சியை தாண்டியும் உற்சாக வரவேற்பையும் அதிரும் கைதட்டலையும் பெற்றது கூழாங்கல். இயக்குனர் வினோத்ராஜின் தாய், மனைவி, தம்பி உள்பட குடும்பத் தினரும் நண்பர்களும் அந்த வரவேற்பில் நெகிழ்ந்து நின்றனர். "திருப்பூர் பனியன் கம்பெனில வேலை பார்த் தான். திடீர்னு சினிமாவுக்குப் போறேன்னு சொன்னான். பயந்துக்கிட்டேதான் அனுப்புனோம், இன்னைக்கு என் புள்ள ஜெயிச்சு வந்துட்டான்'' என்று மகிழ்ந்தார் வினோத்ராஜின் தாய்.
இதற்கு நேர்மாறாக, எதிர்ப்பார்ப்பு இல்லாமல் திரையிடப்பட்ட தமிழ்க் குறும்படமான "ஸ்வீட் பிரியாணி' ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸாக அமைந்தது. இன்று நம் வாழ்வின் அங்கமாகிப்போன ஃபுட் டெலிவரி பாய்ஸின் ஒரு நாளைச் சொல்லும் "ஸ்வீட் பிரியாணி', நகரங்களில் நுட்பமாக நிலவும் சாதி ஏற்றத் தாழ்வு, பசி, உணவு அரசியல் என பல விஷயங்களை அரை மணி நேரத்துக்குள் அழுத்தமாகப் பேசிச் சென்றது. அதை ரசித்து சிரித்து நெகிழும் விதமாக சொல்லியிருந்தது இயக்குனர் ஜெயச்சந்திர ஹாஷ்மிக்கு பெரும் பாராட்டை பெற்றுத் தந்தது. படம் முடியும் போது நிறைந்திருந்த அரங்கம் கைதட்டலால் அதிர, கலைக்கும் மனித உணர்வுகளுக்கும் மொழி பேதம் இல்லை என்பது அந்த இருட் டில் வெளிச்சமாகத் தெரிந்தது. "எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரை ஒன்றுதான் இந்தப் படத்தின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. "நாளெல்லாம் உணவுடன் அலையும் ஒருவனையும் பசியுடன் அலையும் ஒரு குடும்பத்தையும் இணைக்கும் புள்ளிதான் இந்தப் படத்தின் மையப்புள்ளி' என நான் கருதுகிறேன். உண்மையாக நேசித்து சின்ஸிய ராக உழைத்து உருவாக்கிய ஒரு படைப்பு, எவ்வளவு அங்கீகாரத்தை பெற்றுத்தரும் என்பதை இந்தப் படம் உணர்த்தியுள்ளது'' என்று இதயத்தில் இருந்து பேசினார் ஜெயச்சந்திர ஹாஷ்மி. படைப்பாளர் களுக்குக் கிடைக்கும் சிவப்புக் கம்பள வரவேற் பும் அங்கீகாரமும் வருங் கால படைப்பாளர்களுக் குப் பெரும் ஊக்கத்தை அளிப்பதாக இருந்தது.
பல ஆண்டுகளாக திரைப்பட விழாவை மிஸ்பண்ணாமல் பங்கு பெறும் "உலக சினிமா' பாஸ்கரன், இந்த ஆண்டு, தான் ரசித்த படங்கள் குறித்துப் பேசும்போது, "ஹங்கேரியாவின் மிக முக்கிய இயக்குனரான பெல்லதார் இயக்கிய 'The Turin Horse' திரைப்படத்தை அந்த பெரிய திரையில் கண்டது பெரும் பரவசத்தை தந்தது. பாலைவனத்தின் சுவாரசியமற்ற வாழ்வை சுவாரசியமற்ற முறையில் படமாக்கி நம்மை உணர வைத்தது அவரின் வெற்றி. "பொறுமையாகப் பார்ப்பவர்களுக்கு அது காவியம்' என்று பாராட்டிய பாஸ்கரன் "அதற்கு இணையான திரையனுபவத்தைத் தந்த படம் நம் "கூழாங்கல்'. உலகின் பல மாஸ்டர்களின் படங் கள் திரையிடப்பட்டன. அவற்றுக்கு எந்த வகை யிலும் குறையாத திரைமொழியை கொண்டிருந் தது. அந்த நிலத்தின் வெம்மை திரையில் நிறைந்து அந்த வாழ்க்கையை வெப்பம் குறை யாமல் நமக்குக் கடத்தியது'' என்று கூழாங்கல்லை பாராட்டினார்.
கூழாங்கல் படத்துக்கு விழாவில் கிடைத்த வரவேற்பைப் பற்றி கூறும்போது "பொதுவாக விழாவில் வரவேற்பை பெறும் இத்தகைய படங்கள் மீண்டும் திரையிடப்படும். அதுவும் இந்த முறை நடக்கவில்லை. அதேபோல, இவ்வ ளவு சிறந்த படம், அது சார்ந்த பிரிவின் விருதையும் பெறவில்லை. இதில் ஏதேனும் அரசியல் இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது'' என்று தன் ஆதங் கத்தை வெளிப்படுத்தினார்.
பத்திரிகையாளர் -எழுத் தாளர் அதிஷா வினோத் திடம் அவரது ஃபேவரிட் லிஸ்ட்டை கேட்டோம். அவரது லிஸ்ட்டில் நம்பர் ஒன்னாக "தி ஹீரோ' என்ற ஈரானிய படம் இடம் பெற் றுள்ளது. "உலக சினிமா வின் முக்கிய இயக்குநர் அஸ்கர் பர்கதியின் படம். ஆஸ்கர் வெல்ல அதிக வாய்ப்புள்ள படம். "சமூக வலைதளங்களில் காலத்தில் வைரல் விஷயங்களின் மீதான மக்களின் அகச்சிக்கல்களை பேசுகிற படம்' என்று அந்தப் படம் குறித்துக் கூறிய அதிஷா,'Welcome to Siegheiikirchen', 'Bad Luck banging or Looney Porn', 'SPENCE', 'MOSCOW DOES NOT HAPPEN' ஆகிய படங்களையும் லிஸ்ட்டில் சேர்த்தார். "ரயிலில் சந்திக்கும் இருவருக்கிடையே உருவாகும் அழகான நட்பையும் காதலையும் சொல்லும் 'ஈஞஙடஆதபஙஊசப சஞ 6' மாஸ்கோவிலிருந்து ஆர்டிக் வரை நீளும் அந்த ரயில் பயணத்தில் நாமும் பயணித்த உணர்வை அளித்தது'' என்று ஃபீல் குட் உணர்வை பகிர்ந்தார் அதிஷா.
மொத்தத்தில் இந்த கோவா திரைப்படத் திருவிழா, ரசிகர்களின் பரவசத் திருவிழா!
-வசந்த்