மாரத்தான் ஓட்டத்தில் உலகளாவிய சாதனை படைத்துவரும் திமுக எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியன், புதுமையான ஒரு மாரத்தான் ஓட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார்.
உலகம் முழுவதுமுள்ள விளையாட்டு வீரர்களும், உடற்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்களும் பங்கேற்கும் வகையில், "கலைஞர் நினைவு சர்வதேச மெய்நிகர் (விர்ச் சுவல்) மாரத்தான்' ஓட்டத்தை இணையவழி மூலம் நடத்தி முடித்திருக்கிறார் மா.சுப்ரமணியன். இந்த இணைய வழி மாரத்தான் ஓட்டத்தை ஆகஸ்ட் 6-ந்தேதி அறிவாலயத்தில் துவக்கி வைத்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 31-ந்தேதி இரவு வரை 25 நாட்கள் இந்த மெய்நிகர் மாரத்தான் நடந்தது.
இந்த 25 நாட்களில் இந்தியா, பங்களாதேஷ், வியட்நாம், அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, கனடா, ஸ்பெயின், நெதர்லாந்து, அயர்லாந்து, தாய்லாந்து, பின்லாந்து, நியூசிலாந்து, பிரான்ஸ், மெக்சிகோ, ஸ்வீடன், மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, குவைத், துபாய், அபுதாபி, ஓமன், கத்தார், லக்ஸம்பர்க், தென்னாப்பிரிக்கா, ஜோர்டான், இலங்கை உள்ளிட்ட 28 நாடுகளைச் சேர்ந்த 8,541 நபர்கள் இந்த மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்டு ஓடியிருக்கிறார்கள். இந்தியாவில் தமிழகம், கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி, மகாராஷ்ட்ரா, குஜராத், ஜார்கண்ட், உத்தர பிரதேசம், பஞ்சாப், டெல்லி ஆகிய 12 மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பலரும் இதில் பங்கேற்றனர்.
கொரோனா பேரிடர் காலத்தில் ஒவ்வொருவரும் உடற்பயிற்சி செய்வது அவசியம் என உலக சுகாதார நிறுவனம் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில், சர்வதே அளவில் மக்களிடம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாக வேண்டியதன் அவசியத்தையும், உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை சர்வதேச அளவில் பதிவு செய்யவும் புதுமை யான இந்த மாரத்தான் ஓட்டத்தை ஒருங்கிணைத்தார் மா.சுப்ரமணியன்.
மெய்நிகர் மாரத்தான் ஓட்டம் நிறைவு பெற்றி ருக்கும் நிலையில் மா.சுப்ரமணியனிடம் இதுகுறித்து பேசியபோது, ""உலக அளவில் விளையாட்டுகளை "டவுன் ஸ்க்ரிப்ட்' என்கிற அமைப்பின் உதவியுடன், இந்த மெய்நிகர் மாரத்தானை நடத்தி முடித்திருக்கிறோம். உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இந்த மாரத்தானில் கலந்துகொள்ள முடியும். 5 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர், 21 கிலோ மீட்டர் என மூன்று வகையிலான ஓட்டத்தை முன்னிருத்தியிருந்தோம்.
மாரத்தானில் கலந்துகொண்டு ஓடுபவர்கள் இதில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். ஆனால், ஓட்டத்தை துவக்குபவர்கள் அதன் இலக்கை நிறைவு செய்ய வேண்டும். கலந்துகொண்ட 8,541 பேரும் தங்கள் இலக்கை நிறைவு செய்தனர். கலந்துகொள்பவர்கள் சாலைகளில், வீட்டின் மொட்டை மாடியில், ட்ரட் மில்லில், தோட்டத்தில், கடற்கரையில், பூங்காக்களில் என எங்கு வேண்டுமானாலும் ஓடலாம்.
ரன் கீப்பர், ஸ்ட்ராவா, அடிடாஸ் ஆகிய 3 செயலிகளில் எதேனும் ஒன்றை தங்கள் மொபைல் ஃபோனில் பதிவிறக்கம் செய்து கொண்டு ஓட்டத்தை துவக்க வேண்டும். அவர்கள் எவ்வளவு தூரம் ஓடியிருக்கிறார்கள் என்பதை இந்த செயலிகள் தெரிவிக்கும். அதேபோல, ஃபிட்பிட், ஆப்பிள், கார்மின் ஆகிய டிஜிட்டல் வாட்ச்சுகளை அணிந்து கொண்டும் ஓடலாம். அதுவும் ஓடிய தூரத்தை துல்லியமாக கணக்கிட்டுச் சொல்லும். இதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, கலைஞர் மாரத்தான் டாட் காம் என்கிற இணைய முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன்படி கலந்துகொண்ட அனைவரும் அனுப்பி வைத்தனர்.
மாரத்தானில் கலந்துகொள்பவர்கள் முதலில் 300 ரூபாய் செலுத்தி தங்களை பதிவு செய்துகொண்டனர். ஒருங்கிணைப்பு பணிகளுக்காக இதிலிருந்து 26 ரூபாயை எடுத்துக் கொள்கிறது டவுன் ஸ்க்ரிப்ட் அமைப்பு. அந்த வகையில், மாரத்தானில் கலந்து கொண்ட 8,541 நபர்கள் மூலம் 23 லட்சத்து 41 ஆயிரத்து 178 ரூபாய் எங்களுக்கு வந்திருக்கிறது.
தலைவர் ஸ்டாலின் மூலம் இந்த மொத்த தொகையையும் கொரோனா பேரிடர் கால நிதியாக பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளரிடம் ஒப்படைக்கலாமா அல்லது மொத்த தொகைக்கும் பேரிடர் கால மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்து அரசு மருத்துவமனைகளுக்கு சுகாதார துறை மூலம் வழங்கலாமா என தலைவர் ஸ்டாலினிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
மெய்நிகர் மாரத்தானில் ஓடிய அனைவருக்கும் இ-மெயில் மூலம் சான்றிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களுக்கு கலைஞர் உருவம் பொறித்த மெடல்கள் நேரிலும், தபால் மூலமாகவும் அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறோம். இந்த மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொள்ள நினைத்து பதிவு செய்தவர்களில் பெரும்பாலானோர், எங்களை தொடர்புகொண்டு தலைவர் கலைஞரை பற்றி விவாதித்தனர். அவர்களுக்கு கலைஞரின் பெருமைகளையும், அவரது ஆட்சி காலத்தின் சாதனைகளையும் விவரித்தோம். '' என்கிறார் மிகப் பெருமிதமாக மா.சுப்பிரமணியன்.
-இரா. இளையசெல்வன்