அறிஞர் அண்ணா காலத்திலிருந்தே தி.மு.க.வுக்கும் இஸ்லாம் சமூகத்திற்கும் இடையே நெருங்கிய பந்தமும் நல்லுறவும் இருந்து வருகிறது. அண்ணாவின் மறைவுக்குப்பின், கலைஞர் அந்த உறவை மேலும் வலுவாக்கினார். ஆட்சிப் புகழின் உச்சியில் எம்.ஜி.ஆர். இருந்தபோது கூட தி.மு.க.வை ஆதரிப்பதை தங்கள் கடமையாகவே கருதினார்கள், இஸ்லாம் சமூகத்தினர்.
1999-ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசை ஆதரிக்க தி.மு.க. எடுத்த அரசியல் கொள்கை முடிவு இஸ்லாமியர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. அதனால் ஜெ. தலைமையிலான அ.தி.மு.க.வை ஆதரித்தது முஸ்லிம் சமூகம். ஆனால் ஜெ.வும் வழக்குகளிலிருந்து தப்பிக்க, பா.ஜ.க.வின் அபிமானியாகி தீவிர இந்துத்துவாவாதியாக தன்னைக் காட்டிக்கொண்டதால், அவரிடமிருந்தும் விலகினார்கள் முஸ்லிம்கள்.
அதுவரை அப்துல் லத்தீப் தலைமையிலான முஸ்லிம் லீக் தி.மு.க.வையும், அப்துல் சமது தலைமையிலான அமைப்பு அ.தி.மு.க.வையும் ஆதரித்து வந்த நிலையில்…பெரிய மாற்றம் ஏற்பட்டு, த.மு.மு.க., எஸ்.டி.பி.ஐ., தவ்ஹீத் ஜமாத், போன்ற பல்வேறு இஸ்லாம் சமூக இயக்கங்கள் தோன்றி, கடந்த இருபது வருடங்களில் நல்ல வளர்ச்சி அடைந்துவிட்டன.
இஸ்லாம் சமூகத்தினரிடையே ஏற்பட்ட இந்த வளர்ச்சி குறித்தும் அந்த சமூகங்களுக்குள்ளேயே ஒரு பிரிவினருக்கு தி.மு.க.வில் வாய்ப்புகள் வழங்கப்படாதது குறித்தும் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த இஸ்லாம் சமூகப் பெரியவர் ஒருவர் நம்மிடம் பேசினார்.
""தமிழகத்தைப் பொறுத்தவரை எங்கள் சமூகத்தில் ஷாஃபி, ஹனஃபி என இரண்டு பிரிவுகள் உள்ளன. இரண்டு பிரிவுமே சமஅளவில் இருக்கின்றன. ஷாஃபி பிரிவினர் தங்களது தந்தையை "வாப்பா'’ என்றும் ஹனஃபி பிரிவினர் "அத்தா' என்றும் அழைக்கின்றனர். ஆரம்பத்தில் அந்தந்த பிரிவினருக்கிடையே மட்டும் இருந்த பெண் கொடுப்பது, எடுப்பது என்ற நிலை மாறி இப்போது இரு பிரிவினரும் பரஸ்பரம் சம்பந்தம் செய்துகொள்கின்றனர்.
தென்தமிழகத்தில் மேலப்பாளையம், ஏர்வாடி, கீழக்கரை, காயல்பட்டணம் போன்ற பகுதிகளில் ஷாஃபி பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் வசிக்கின்றனர். தி.மு.க. எடுத்த சில அரசியல் முடிவுகளால் எங்களுக்கு சில வருத்தம் இருந்தாலும், இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்குரிய தோழமையாக இருப்பது அந்த இயக்கம்தான்.
அதேபோல் இஸ்லாமியர்களுக்குத் தகுந்த பிரதிநிதித்துவம் கொடுப்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் அதேசமயம் தி.மு.க.வின் பொருளாளராகவும், அமைச்சராகவும் இருந்த சாதிக்பாட்ஷா, முன்னாள் எம்.எல்.ஏ.வும் வர்த்தக அணி பொறுப்பாளருமான தஞ்சை உபயதுல்லா, சட்டமன்ற தி.மு.க. கொறடாவாக இருந்து மறைந்த கா.மு.கதிரவன், சமீபத்தில் மறைந்த ரகுமான்கான், பாளையங்கோட்டையின் தற்போதைய எம்.எல்.ஏ. மைதீன்கான், கட்சியில் தற்போது மா.செ.க்களாக இருக்கும் அப்துல்வஹாப், ஆவடி நாசர், செஞ்சி மஸ்தான் (தற்போது எம்.எல்.ஏ.) முபாரக், முன்னாள் மா.செ. முகமது சஹி (அத்தா) என அனைவருமே ஹனஃபி பிரிவைச் சேர்ந்தவர்கள்.
ஷாஃபி (வாப்பா) பிரிவுக்கு பிரதிநிதித்துவம் இல்லாததால்தான் அப்பிரிவின் இளைஞர்கள் எங்கள் சமூகத்தைச் சார்ந்த புதிய இயக்கங்களில் அதிக அளவில் இணைகின்றனர். சிலரோ வேறு பாதைக்குத் திரும்புகின்றனர். அதனால் இப்போதைய இஸ்லாமிய இளைஞர்கள் தி.மு.க.வை நோக்கி திரும்பவில்லை என்பதையும், அதேபோல் சாதிக்பாட்ஷாவிற்குப் பிறகு, தி.மு.க.வின் தலைமை நிர்வாகப் பொறுப்பில் இஸ்லாமியர் யாரும் நியமிக்கப்படவில்லை என்பதையும் கட்சியின் தலைமை கவனத்தில் கொள்ளவேண்டும்.
எனவே வரும் காலங்களில் ‘வாப்பா’ பிரிவுக்குரிய பிரதிநிதித்துவத்தை கட்சியின் தலைவர் ஸ்டாலின் வழங்குவார் என நம்புகிறோம்'' என விரிவாகவே பேசினார்.
பொதுவாகவே, தி.மு.கவில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைந்துவிட்டது என்கிற வருத்தம் நீண்டகாலமாக அக்கட்சியை ஆதரித்துவரும் முஸ்லிம்களிடம் உள்ளது. கூட்டணியில் சேரும் முஸ்லிம் அமைப்புகளும் கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகளை எதிர்பார்க்கின்றன. இரண்டு நிலைமைகளையும் அலசி ஆராய்ந்து, சிறுபான்மை வாக்குகளை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் தி.மு.க தலைமைக்கு இருக்கிறது.
-பரமு