(76) ""வாடா அண்ணன் மகனே...!''
"நடிகர்திலகம்' சிவாஜி அப்பாவுடன் நான் முதலில் நடித்த படம் "பரீட்சைக்கு நேரமாச்சு.'’
அந்தப் படப்பிடிப்பின்போது சிவாஜி அப்பா, தனது கேரக்டருக்காக மெனக்கிட்ட விஷயங்களை... சொல்லியிருந்தேன்.
அதன்பிறகு நான், சிவாஜி அப்பாவுடன் நடித்த படம்... "சிம்ம சொப்பனம்.' இதில் நம்பியார் அப்பாவின் மகனாக வில்லன் வேஷத்தில் நடித்தேன். சாத்தூர் எம்.எல்.ஏ.வாக இருந்த, அருப்புக்கோட்டைக்காரரான எஸ்.எஸ்.கருப்பசாமி அவர்கள் "எஸ்.எஸ்.கே. ஃபிலிம்ஸ்'’சார்பில் இந்தப் படத்தை தயாரித்தார்.
பின்னாளில் நடிகராகவும் ஆன "கல்தூண்'’வசனகர்த்தா விஜய்கிருஷ்ணராஜ் இயக்கிய படம். இதில்... நாய்க்கு சாப்பிட பிஸ்கெட் போட்டுவிட்டு, அதைச் சாப்பிட முடியாதபடி... ஒரு பக்கெட்டால் அதன் முகத்தை மூடிவிடுவேன். என் கேரக்டரின் குணாதிசயத்தைச் சொல்வதற்காக இந்தக் காட்சியை வைத்திருந்தார் கதாசிரியர் விஜய்கிருஷ்ணராஜ்.
ஷூட்டிங் ஸ்பாட்டில்... நான் சிவாஜி அப்பாவுடன் நடிக்கிற ஒரு நடிகராக இருந்தாலும்கூட... அவரை ஆச்சரியத்துடன் வாய்பிளந்து பார்த்துக்கொண்டே இருப்பது எனக்குப் பிடிக்கும்.
""வாடா... அண்ணன் மகனே... “என்னடா அண்ணன் மகனே'’என்றுதான் சிவாஜி அப்பா என்னை அழைப்பார் எப்போதும்.
இந்தப் படப்பிடிப்பின்போது... எனக்கு ஒரு காட்சியில் கோட் காஸ்ட்யூம் கொடுத்தார்கள். அதைப் போட்டுக்கொண்டு... சிவாஜி அப்பாவுடன் நடிக்க தயாராக நின்றேன்.
என்னையும், நான் போட்டிருந்த கோட்டையும் பார்த்தவர்... ""யார்ரா... காஸ்ட்யூமர்?''’என கர்ஜிக்க... காஸ்ட்யூமர் வந்தார்.
""என்னடா இது கோட்? ஏதோ அழுக்கு மூட்டைலருந்து எடுத்த துணி மாதிரி இருக்கு?''’என திட்டினார்.
அது சிவாஜி அப்பாவுக்கு என்மேல் இருந்த அக்கறை.
அந்தக் காட்சி படமாக்கப்பட்ட பிறகு... நான் வெளியே வர... காஸ்ட்யூமர் வந்தார்.
""தம்பி... நீங்க போட்டிருக்க கோட் கிளாத்தே அப்படி... கசங்கலான மாடல்தான். இதே மெட்டீரியல்ல... வேற கலர்ல ஒரு கோட் சிவாஜி சாருக்காக ரெடி பண்ணீருக்கேன். அதுக்கு என்ன சொல்லப்போறாரோ?''’என்றார்.
நான் எப்போதும் வெளிப்படையாக... மனதில் பட்டதை பேசக்கூடியவன். சினிமாவில் நடிக்கத் தொடங்கிய... வளரும் நடிகனாக இருந்த காலத்திலேயே... ஏவி.எம்.ஸ்டுடியோவில் சிவாஜி அப்பாவைப் பார்த்து... ""நீங்க ஏன் என் அப்பா சாவுக்கு வரல?''’என கேட்டேன்.
""அவர் சாகிறதுக்கு முதல்நாள்... திருச்சி ஆஸ்பிடல்ல... அவரைப் பார்த்திட்டு வந்தேண்டா''’என்றார்.
""நீங்க என் அப்பா சாவுக்கு வராதது வருத்தம்''’என்றேன்.
சிவாஜி அப்பா மௌனமாக இருந்தார்.
எவ்வளவு பெரிய நடிப்பின் இமயம், புகழ்பெற்ற மனிதர். அவரிடத்தில் வேறு யாராவது இப்படி கேட்டிருந்தால்... கேட்டவன் நிலமை என்னவாகியிருக்கும். ஆனால்... எங்கள் குடும்பம் மீதுள்ள மதிப்பு காரணமாக சிவாஜி அப்பா எதுவும் பேசவில்லை.
நான் தப்பாக பேசாதபோதும்... "அவன் பேசியிருப்பான்... ராதாரவி அப்படிப்பட்ட ஆளுதான்'’ என்கிற என்மீதான இமேஜ் காரணமாக, நான் பேசாத ஒரு விஷயத்துக்காக என்மீது சிவாஜி அப்பா மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக ஒரு தகவல் எனக்குக் கிடைத்தது.
அது... நான் முதன்முதலாக நடிகர் சங்கத்திற்கு தலைவராகியிருந்த 1986 காலகட்டம்.
நான் ஜெயித்ததும்... ""என் அப்பா இப்ப இல்ல... நீங்கதான், அப்பா ஸ்தானத்துல இருந்து என்னை ஆசிர்வதிக்கணும்''’என்றேன்.
""நல்லா இருடா, இன்னைக்கு உன்ன "வாழ்க'னு சொல்றவன்... நாளைக்கு ‘"ஒழிக'னு சொல்வான்... புரிஞ்சு நடந்துக்க...''’என ஆசிர்வாதத்துடன், அட்வைஸும் செய்தார்.
அப்படியிருக்கையில்... நான் சிவாஜி அப்பாவைப் பற்றி தவறாகப் பேசியதாக ஒரு பத்திரிகையில் செய்தி வர... அந்த செய்தி வந்து பல மாதங்களுக்குப் பிறகே... அந்தச் செய்தியால் என் மீது சிவாஜி அப்பா வருத்தத்தில் இருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்தது.
"நாம தப்பா பேசல. ஆனா... நாம தப்பா பேசினதா சிவாஜி அப்பா மனம் வருத்தப்பட்டா... மதிப்புக்குரிய பெரியவங்க மனசு நொந்தா... நாம நல்லாருக்க முடியாதே'’என நினைத்த நான்... விஜகாந்த்துடன் நடிக்க... படப்பிடிப்புக்கு கிளம்பிக்கொண்டிருந்த நிலையிலும், உடனே... எனது மேக்-அப்மேன் கஜபதி அண்ணனை அழைத்துக்கொண்டு... "அன்னை இல்ல'த்திற்குப் போனேன்.
மாடியில்... சிவாஜி அப்பாவும், கமலா அம்மாவும் அமர்ந்திருந்தார்கள்.
என்னைப் பார்த்ததும் கமலா அம்மா புன்னகைத்தார்.
""வாடா... அண்ணன் மகனே...'' என்றபடியே... பலநாளாக தன் தலையணைக்கடியில் பாதுகாப்பாக வைத்திருந்த அந்த பேப்பர் செய்தியை எடுத்து என்னிடம் காட்டி...’""இப்படித்தாண்டா நீ என்னைப்பத்திச் சொன்ன?''’என்றார்.
""அப்பா... நான் உங்களைப்பத்தி தப்பா எதுவும் பேசலப்பா. என்னை நம்புங்கப்பா. என்மேல மன வருத்தப்படாதீங்கப்பா...''’என்றேன்.
சிவாஜி அப்பா, ""சரிடா''’’என்றாரே தவிர... சமாதானம் ஆனமாதிரி தெரியவில்லை.
""ஏங்க... ரவி நம்ம புள்ளங்க.... அப்படியெல்லாம் பேசீருக்காது''’என கமலா அம்மா எனக்கு சப்போர்ட் செய்தார்.
நான் விடைபெற்றுக்கொண்டு... விஜயகாந்த் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தேன்.
""என்ன ரவி லேட்?''’என விஜிமா கேட்டார்.
நான் சிவாஜி அப்பா வீட்டுக்குப் போய்விட்டு வந்த விஷயத்தைச் சொன்னேன்.
(எனக்காக சிவாஜி அப்பாவும், கமலா அம்மாவும் ரயிலில் கொண்டு வந்த ஆட்டுக்கால் பாயா)
இது சிவாஜி ஸ்டைல்!
சாவித்திரி அம்மாவோட "பிராப்தம்'’படத்தை மிட்லேண்ட் தியேட்டரில் பார்த்துவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். அப்போது ஒருவர்... "உன் அப்பாவ ரிலீஸ் பண்ணீட்டாங்க. வீட்டுக்கு வந்திட்டார்'’(எம்.ஜி.ஆர். சூட்டிங் கேஸ்) எனச் சொல்ல... சைக்கிளை வேகமாக மிதித்து வீட்டுக்கு வந்தேன். ஒரே கூட்டம் வீட்டு முன்பாக.
நான் மாடிக்குப்போய் அப்பாவைப் பார்த்தேன். ""வாடா... மகனே...''னு சினிமாவுல வர்ற மாதிரியெல்லாம் என்னை கட்டிப்பிடிச்சுக்கல. தன்னோட இயல்புப்படி... “""வாடா... வெளியில போய்ட்டு வர்றியா?''னு மட்டும் கேட்டார்.
சிவாஜி அப்பாவின் தம்பி சண்முகம் சார் வந்தார்.
""வாடா... சண்முகம்''’என்றார் அப்பா.
""அண்ணன் உங்கள பார்க்கணும்கிறாரு...''’’
""ஏண்டா... இதுக்கெல்லாம் அப்பாயின்ட்மெண்ட்டா வாங்கணும்? வரச்சொல்லு''’என்றார்.
சண்முகம் சார் கிளம்பிச்சென்ற சிறிதுநேரத்தில் சிவாஜி அப்பா புளூ கலர் யஆமலஐஆகக காரில் வொய்ட் அண்ட் வொய்ட்டில் வந்து இறங்கினார். நான் வாசலில் நின்று... அவரை பிரமிப்பு விலகாமல் பார்க்க... சிவாஜி அப்பா... ஸ்டைலாக 555 சிகரெட்டை புகைத்தபடி வந்தார். வீட்டு வாசலில் சிகரெட்டை கீழேபோட்டுவிட்டு... ஸ்டைலாக காலால் அதை அணைத்துவிட்டு... தன் கையிலிருந்த சிகரெட் பாக்கெட்டை என் கையில் கொடுத்தவர்... ""அண்ணன் எங்க இருக்காரு?''’என கேட்டார்.
""மேல மாடியில இருக்கார்''னு சொன்னேன்.
மாடியில்... முன்ஹாலில்... தரையில் கே.பாலாஜி சாரும், நாகேஷ் சாரும் உட்கார்ந்து அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்.
சிவாஜி அப்பா உள்ளே நுழைந்ததும்... ""வாப்பா... ராஜபார்ட் ரங்கதுரை''’என்றார். சேரில் உட்காரச் சொன்னார். ஆனால் சிவாஜி அப்பா உட்காரவில்லை.
""டேய்... நீ எவ்வளவு பெரிய நடிகன். நின்னுக்கிட்டிருக்கலாமா...? உட்காரு''’என்றதும் சிவாஜி அப்பா உட்கார்ந்தார்.
பரஸ்பர விசாரிப்பைத் தவிர அதிகமா பேசிக்கல.
சிறிது நேரம் அமர்ந்துவிட்டு எழுந்தார் சிவாஜி அப்பா..
""அண்ணே... நாளைக்கி மதிய சாப்பாடு அனுப்புறேன்''’’
""ஏங் கணேசு? என் வீட்ல சாப்பாடு இருக்கே...''’’
""நாளைக்கி என் கல்யாண நாள்...''’’
""அப்படியா... வெரிகுட். சரி... சாப்பாடு அனுப்பு. நான் சாப்பிடுறேன்''’என்றார் அப்பா.
மறுநாள் சிவாஜி அப்பா வீட்டிலிருந்து பெரிய பெரிய கேரியர்களில் சாப்பாடு வந்தது.
அப்பா விருப்பமுடன் சாப்பிட்டு முடித்த நேரம்... போன். சிவாஜி அப்பா, “""சாப்பிட்டீங்களாண்ணே...''’என விசாரித்தார்.
சிவாஜி அப்பாவைப் பார்த்து ""வாப்பா... ராஜபார்ட் ரங்கதுரை''’எனச் சொன்னது... சிவாஜியப்பா மனதில் அப்படியே பதிந்ததோ என்னவோ... அடுத்த சில மாதங்களில் சிவாஜி அப்பா நடிப்பில் ஒரு படத்திற்கான தொடக்கவிழா பூஜை போடப்பட்டு நாளிதழில் முழுப்பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டது. அந்தப் படத்திற்குப் பெயர்... "ராஜபார்ட் ரங்கதுரை'.