(67) திருப்புமுனை ஏற்படுத்திய டி.ஆர்.!

நான் சென்னை -அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது சில படங்களில் நடித்தேன்.

1979-ல் "சின்னஞ்சிறு கிளியே',’"தரையில் வாழும் மீன்கள்'’என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வந்தேன்.

"சின்னஞ்சிறு கிளியே'’படப்பிடிப்பு சிவகங்கை -திருப்பத்தூரிலும், "தரையில் வாழும் மீன்கள்'’படப்பிடிப்பு பட்டுக்கோட்டையிலும் நடந்தன. இரண்டு இடங்களுக்கும் காரில் மாறி, மாறி பயணித்து நடித்துக் கொடுத்தேன்.

Advertisment

"தரையில் வாழும் மீன்கள்'’படத்தில் வில்லன் வேஷம். எஸ்.எஸ்.மாமா (எஸ்.எஸ். சந்திரன்)தான் என்னை, அந்தப் படத்தைத் தயாரித்த கே.கே.கம்பைன்ஸில் அறிமுகம் செய்துவைத்தார். இது நடிகை அம்பிகாவுடைய முதல் படம். விஜய்பாபு ஹீரோ. இந்தப் பட ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்...

radharavi

ராஜாமடம், சின்ன ஆறு பாலத்தில் ஷூட்டிங். வில்லனான என்னை, என்னோட காதலியாக இருக்கிற வனிதாவே அரிவாளால் வெட்டுவதைப்போல ஸீன். நான் இறந்துவிடுவேன். அதுதான் க்ளைமாக்ஸ் ஸீன். அந்த ஸீன் ஷூட்டிங் எடுத்த நாள் என்னுடைய முதல் கல்யாண நாள்.

Advertisment

ஆனால், நான் ஆகஸ்ட் 27 கல்யாண நாள் என்பதை மறந்து ஷூட்டிங்கில் பிசியாக இருந்துவிட்டேன். ஞாபகம் வந்ததும்... என்னுடைய மனைவி பாக்யலட்சுமிக்கு போன்பண்ணி ஸாரி கேட்டேன்.

(அந்த ஒருவருஷம் கல்யாண நாளை மிஸ்பண்ணியதால் சென்ட்டிமெண்ட்டாக தொடர்ந்து மூன்று வருஷம் கல்யாணநாளைக் கொண்டாட முடியவில்லை. என் அப்பா இறந்ததால் ஒரு வருஷம் ஆகாமல், கொண்டாட்டம் கூடாது என்பதால்... அடுத்த வருஷமும் கல்யாண நாளை என்னால் கொண்டாட முடியாமல் போனது. மூன்றாவது வருஷம் கல்யாண நாளில் "தண்ணீர் தண்ணீர்'’படப்பிடிப்பில் இருந்தேன். அன்னைக்கி எடுக்கப்பட்ட ஸீன்... என்னோட மனைவியா நடிச்ச சரிதா, தாலியை அறுத்து என் கையில கொடுப்பாங்க. மூன்று வருஷமும் கல்யாண நாளை கொண்டாட முடியாமல் போனதால்... அதன்பிறகு என் கல்யாண நாளில் வீட்டில் இருக்கிற மாதிரி ஷெட்யூல் அமைத்துக்கொள்வேன். தவிர்க்க முடியாமல் வெளியூரில் இருந்தால் என் மனைவியை அங்கே வரச் சொல்லி கல்யாண நாளைக் கொண்டாடுவேன்.)

"சின்னஞ்சிறு கிளியே'’படப்பிடிப்பிற்காக திருப்பத்தூரில் மெயின்ரோட்ல இருந்த ஒரு கட்ட டத்தோட முதல்மாடியில் இருந்த அறையில்தான் முதலில் நான் தங்க வைக்கப்பட்டேன். என் அறைக்குப் பக்கத்து அறையில் படத்தின் நாயகி கீதாசவுத்ரி தங்க வைக்கப்பட்டிருந்தார்.

ஒரு பெரிய பணக்காரர்தான் அந்தப் படத்துக்கு எல்லா வகையிலயும் உதவி செய்துக்கிட்டிருப்பதாகச் சொன்னார்கள். அந்தப் பணக்காரர்... "ராதாரவி நடிகை கீதாசவுத்ரி ரூமுக்கு பக்கத்துல தங்கக் கூடாது'’எனச் சொல்லி பிரச்சினை பண்ணிட்டார். இது பெரிய அளவில் தகராறு ஆகி.... ஊர் பிரச் சினையாகிவிட்டது. அப்புறம்... திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை காலேஜில் இருக்கிற கெஸ்ட் ஹவுஸில் தங்கினேன். அந்தக் காலகட்டத்தில் நான் பிரபலமான நடிகனாக இல்லாதபோதும் ’எம்.ஆர். ராதாவோட மகன்’ என தெரியவந்ததால் ஹாஸ்டல் மாணவர்கள் எல்லாரும் என்கூட நட்பா பழகினார்கள்.

அந்தப் படத்தில் இரட்டைக் காளைகள் பூட்டிய தட்டுவண்டி ரேஸ் சீன். அதுவும் மறக்க முடியாத அனுபவம். திருப்பத்தூரிலிருந்து சிவகங்கை ரோடுவரை தட்டுவண்டி ரேஸ் எடுக்கப்பட்டது. மெயின்ரோட்டில் போக்குவரத்தை நிறுத்திவிட்டு, ரேஸ் ஷூட்டிங் எடுத்தார்கள். முதல்முறையாக தட்டுவண்டியை நானே ஓட்டின அனுபவத்தை என்னால மறக்கவே முடியாது. ’அடிச்சி ஓட்டுனா அம்பாசிடர் கார் வேகத்துக்கு போகுது. ரொம்ப த்ரிலிங்காக இருந்தது.

"சின்னஞ் சிறு கிளியே'‘படத்தில் நடிகனா மட்டும் இல்லாமல் புரொடக்ஷன் மேனேஜர், வேன் டிரைவராகவும் இருந்தேன். மெட்ரோல் வேன் ஓட்டுவேன். பிரான்மலைக்கு ஷூட்டிங்குக்கு வருவோம். எனக்கு ஷூட்டிங் இல்லையென்றால் உதவி இயக்குநர் வேலையையும் செய்வேன். கிளாப் அடிக்கிறது டிராலி தள்ளுறது... இப்படிச் செய்வேன். சும்மா இருக்கவே மாட்டேன். ஏதாவது ஒரு வேலையை எடுத்து செய்துகொண்டே இருப்பேன்.

(1979-ல் பட்டுக்கோட்டையில என் அப்பாவோட "ரத்தக்கண்ணீர்'’நாடகம் நடந்தது. ஷூட்டிங்கில் இருந்த நான், அம்பிகா, அம்பிகாவோட அம்மா உட்பட எல்லாரும் நாடகம் பார்த்ததையும், அதுதான் நான் பார்த்த என் அப்பாவின் கடைசி நடிப்பு என்பதையும், "தரையில் வாழும் மீன்கள்'’படத்திற்காக ஏவி.எம்.மில் டப்பிங் பேசிக்கிட்டிருந்தபோது... என் அப்பா திருச்சியில் சீரியஸாக இருப்பதாக தகவல் வந்ததையும் ஏற்கனவே சொல்லியிருக்கேன்.)

கே.பி. சாரின் "தண்ணீர் தண்ணீர்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்க, நடிகை சரிதாம்மாதான் காரணம். அய்யா கோபாலி அவர்கள் மிக முக்கிய காரணம். அவருடைய நாடகத்தில் என் நடிப்பை பார்த்துவிட்டு சரிதா... கே.பி. சாரிடம் சிபாரிசு செய்தார்கள்.

முதலில் அந்தக் கேரக்டரில் நடிகை விஜயகுமாரி அம்மா பையன் ரவிதான் நடித்திருக்கிறார். பிறகு அவரை மாற்றிவிட்டு என்னை நடிக்கவைத்தார்கள்.

அந்தக்காலத்தில் ’சூப்பர் எக்ஸ்பிரஸ்’ பஸ்ஸில்தான் ஷூட்டிங்கிற்கு கோயில் பட்டிக்குப் போவேன். அந்த பஸ்ஸில் குடிக்க தண்ணீர் எல்லாம் வைத்திருப் பார்கள். அப்போது அது புதுமையாக பேசப்பட்டது.

முதல்நாள் ஷூட்டிங். நான் நடந்து வரும்போது மாடு பயந்து எழுந்திரிப்பது போல் ஸீன் எடுத்தார்கள். கோயில்பட்டியில ஷூட்டிங் நடந்தது.

ஷூட்டிங் இல்லாத நாட்களில் எல்லாரும் சேர்ந்து குடிக்கலாம் என முடிவு பண்ணுவோம். கே.பி. சார் தங்கியிருந்த வீட்டை தாண்டித்தான் மதுக்கடைக்குப் போகவேண்டும். அப்படிப் போகும்போது அவரோட கண்ணில் படாதபடி... பதுங்கிப் பதுங்கிப் போவோம். அதெல்லாம் ரொம்ப ஜாலியான சம்பவங்கள்.

ஷூட்டிங் லொகேஷனான மஞ்சநாயக்கன் பட்டி கிராமத்துக்குப் போக சாலை வசதியே இல்லாமல் இருந்தது ஊர் அப்ப. எங்களுக்காகத்தான் ரோடு போட்டுக் கொடுத்தாங்க. கதைக்கு ஏற்ற மாதிரியே அந்த ஊர் வறட்சியாக இருந்தது.

"தண்ணீர் தண்ணீர்'’ படப்பிடிப்பு முடிந்து... படம் ரிலீஸ் ஆவதற்கு முன்.... ஒரு சம்பவம் நடந்தது.

"சினிமா ஃபீல்டு நமக்கு பெரிசா கை கொடுக்குமா?'’ என்கிற எண்ணம் சுழன்றடித்த அந்த நேரத்தில்...

அமெரிக்காவில் OHIO மாகாணத்தில் TRESS PASS AVENUE பகுதியில்... MR.RAO STUDIO-வில் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்று தெரிந்த... ஏதேனும் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு சீரியல் டைரக்டர் வேலை வாய்ப்பு இருப்பதாக... வந்திருந்த அறிவிப்பை என் அக்கா எனக்கு அனுப்பி னார்.

நான் புதுக்கல்லூரியில் பட்டப் படிப்பு முடித்திருக்கிறேன். செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்திய பள்ளியில் படித்ததால் ஆங்கிலம் நன்றாகப் பேசுவேன். தமிழ் நன்கு தெரியும்.

அவர்கள் கேட்டிருந்த தகுதியெல்லாம் இருந்ததால்... என்னுடைய பயோ-டேட்டாவுடன் வேலைக்கு விண்ணப்பித்தேன்.

"தண்ணீர் தண்ணீர்'’ படம் ரிலீஸ் ஆனது. படம் நன்றாகப் போனது. எனது நடிப்பும் வரவேற்பைப் பெற்றது. ஆனாலும் அடுத்தப் பட வாய்ப்பு உடனே அமையவில்லை. அடுத்து பாரதிராஜா சாரோட "காதல் ஓவியம்'’படத்துல நடித்தேன். அவரோட டைரக்ஷனில் நான் நடித்த ஒரே படம் அது.

சரியாக ஒருவருஷம் கழித்து அமெரிக்க ஸ்டுடியோவிலிருந்து... "நீங்கள் வேலைக்கு தேர்வாகியுள்ளீர்கள்'’என எனக்கு லெட்டர் வந்தது. அந்த நேரத்திலேயே... டி.ராஜேந்தர் அவர்கள் தன்னுடைய "உயிருள்ளவரை உஷா'’படத்திற்காக என்னை ஒப்பந்தம் செய்தார்.

"அமெரிக்காவில் வேலையா? சினிமாவில் நடிப்பா?' என்கிற குழப்பம் சுற்றியபோதும் தெளிவாக நான் எடுத்த முடிவு... சினிமா.

"நேரம் சரியில்லன்னா வீசுற செருப்பு நம்ம தலையிலதான் விழும்'னு ஒரு அனுபவ மொழி சொல்வாங்க. "அமெரிக்கா போய்ட்டா நீ நல்லா சம்பாதிக்கலாம். அங்க நிறைய வாய்ப்புகள் இருக்கு. சினிமாவ நம்பி அமெரிக்க வேலையை விடணும்னு நினைக்காத' என அட்வைஸ் செய்தார்கள் நண்பர் கள். அவர்கள் சொன்ன தில் நியாயம் இருந்தது.

என் முடிவிலோ நம்பிக்கை இருந்தது.

சினிமாதான்’’என உறுதியானேன்.

டி.ராஜேந்தர் அவர் கள் என் அப்பாவின் ரசிகர். ஒருதடவை ’"உயி ருள்ளவரை உஷா'’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது... "மாப்ள... (ரவி) அவங்க நைனா மாதிரியே பேசுவாப்ல'’எனச் சொல்ல... உடனே டி.ஆர்., "ராதா சார் மாதிரி பேசி நடிங்க' என்றார். அப்படியே பேசி நடித்தேன்.

எடுத்த காட்சி களுக்கு அவ்வப்போது டப்பிங் நடந்துவிடுவதால்... அந்தப் படத்தில் என் குரலில் பல காட்சிகளிலும், என் அப்பாவின் குரலில் சில காட்சிகளிலும் நான் பேசியிருப்பதை படம் பார்த்தால் உணரமுடியும்.

"உயிருள்ளவரை உஷா'’படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. என்னுடைய சினிமா வாழ்க்கையிலும் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன்பின் சிலபல வருடங்கள்... "நான் நடிக்காத படங்களே இல்லை' என்கிற அளவிற்கு பிஸியானேன்.

(நான் சொன்ன ஒரு வார்த்தையால்... கடைசிவரை தனது படங்களில் என்னை நடிக்க வைக்காத ஒரு பிரபலம்...)

கல்லூரிக் காலம்!

செயின்ட் பீட்ஸில் +1ல் எல்லாரும் ஹை-செகன்ட் க்ளாஸில் பாஸானோம். மார்க் ஷீட் தரும்போது... “"நீ எப்படி பாஸ் ஆன?'’என ஹெட் மாஸ்டர் டி-னட்டோ கேட்டார். உடனே நான், ""எல்லாம் உங்க ட்ரெய்னிங் சார்''’என்றேன். சிரித்தார்.

எங்களோட ஸ்கூல் செட்ல இருந்த பிரடிக் குரியன், சீத்தாராம் ராவ், எட்வின் ஜேசுதாஸ் எல்லாரும் லயோலா காலேஜில் பி.யு.சி. சேர்ந்தோம். E.C.L ... அதாவது ECONOMICS COMMERCE LOGIC பிரிவில் படித்தோம். லயோலாவில் படித்தபோது... என்னை சீனியர் மாணவன் என நினைத்து யாரும் ராகிங் செய்யவில்லை. நானும் சில நண்பர்களும் வகுப்பறையில் இருப்பதைவிட "குட்டீஸ் பங்க்' அடியில்தான் அதிகம் இருப்போம்.

கல்லூரிக்கு எதிரேதான் நுங்கம்பாக்கம் மயானம். அங்கே சாவு மேளம் அடிப்பவர்களுடன் சேர்ந்து... அந்த மேளத்தை அடித்தபடி கல்லூரித் தேர்தலில் ஓட்டுக் கேட்போம்.