(70) டைரக்டரை வெட்ட வந்த நடிகர்!
"சரணம் ஐயப்பா'’படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து பெட்போர்டு வேனில் பம்பையிலிருந்து திரும்பினோம். வழியில் ஒரு யானைக்கூட்டம். இதைப் பார்த்ததும் டைரக்டர் தசரதனுக்கு பயத்தில் லூஸ்மோஷன் ஆகிவிட்டது. பயத்தில் நான், "வேனைவிட்டு இறங்கி ஓடிவிடலாமா?' என முயற்சித்தபோது... "ரவி சார்... யானை வேகமா ஓடக்கூடியது...'’எனச் சொன்னார். டிரைவருக்கும் பயத்தில் வயிற்றுவலி வந்துவிட்டது. அவரால் வண்டியை ஓட்ட முடியவில்லை.
எங்களை வழிமறித்திருந்த யானைக்கூட்டம் ஒரு வழியாக காட்டுக்குள் போனபிறகு... வண்டியை நானே ஓட்டினேன். குற்றாலம்வரை நான்தான் ஓட்டிவந்தேன்.
இந்தப் படத்தில் மலையாளம் கலந்த தமிழில் நான் பேசவேண்டியிருந்ததால், எனக்கு தசரதன் டப்பிங் கொடுத்தார்.
படம் வெளியானது.
படம் வெளியான பெங்களூரு பல்லவி தியேட்டரில் ஒரு ஐயப்பன் சிலையுடன் ஒரு ஷோவில் நாங்கள் கலந்துகொண்டோம். அங்கிருந்து சிலையுடன் சேலம், கோவை என சில இடங்களில் தியேட்டர்களில்... ரசிகர்களுடன் ஷோவில் கலந்துகொண்டோம். இந்தப் பயணத்தின்போதும் நாங்கள் பயணித்த பழைய வேனை, நான்தான் ஓட்டி வந்தேன்.
அடுத்ததாக "கடவுளை நம்புங்கள்'’என்கிற படத்தை தசரதன் எடுத்தார். சென்னை -தி.நகர், மேட்லி சாலையில் ஒரு திருமண மண்டபத்தில் கிட்டத்தட்ட முக்கால்வாசி படப்பிடிப்பும் நடந்தது. நான், சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நடித்தோம். படப்பிடிப்பில் ஓய்வு கிடைக்கும்போது... கிருஷ்ணவேணி தியேட்டர் அருகே சக்கரவர்த்தி தங்கியிருந்த அறையில் நான், சக்கரவர்த்தி, நடிகர் நம்பிராஜன் (நம்பிராஜனின் ஒரிஜினல் பெயர் சின்னாளபட்டி சக்திவேல். அ.தி.மு.க.வின் முதல் எம்.பி.யான திண்டுக்கல் தொகுதி மாயத்தேவரின் மருமகன். ராஜ்கிரண் படங்களில் தொடர்ந்து நடித்தவர்), இப்போது நடிகராகியிருக்கும் "எல்லாம் அவன் செயல்’ ஆர்.கே.' ஆகியோர் ஒரு ரூபாய் வைத்து சீட்டு விளையாடுவோம்.
ஒருநாள் தசரதன் என்னிடம்... “""ரவி... நான் ஃபாரீன் கார் வாங்கப்போறேன். அந்தக் காரை வந்து பாரு''’என்றார்.
“""ஃபாரின் காரும், ஃபாரின் பொண்ணும் வேணாம். எங்கப்பா ஃபாரின் கார் வாங்கின பிறகுதான் எம்.ஜி.ஆர். ஷூட்டிங் கேஸ்ல ஆரம்பிச்சி... பல கஷ்டங்களை அனுபவிச்சார்... அதனால் வேண்டாம்''’என்றேன்.
"தேனாம்பேட்டை தே... பசங்க நான் ஃபாரீன் கார்ல போறத பார்க்கணும்'’என்றார் தசரதன்.
"சினிமாவில் ஒருவனுக்கு மதம் பிடித்துவிட்டால்... அவன் உருப்படமாட்டான். இதை அவரே உணரட்டும்' என நான் எதுவும் சொல்லவில்லை.
கல்யாண மண்டபத்தில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போது ஒருநாள்... நாலைந்து கார்களில் முரட்டு ஆட்கள் பலருடன் சக்திவேல் வந்து இறங்கினார்.
""எங்கடா தசரதன்? அவனை வெட்டாம விடமாட்டேன்''’என தகராறில் இறங்க...
தசரதன் மண்டபத்திற்குள் ஒளிந்துகொண்டார்.
நான் சக்திவேலிடம் ""என்னண்ணே பிரச்சினை?''’என விசாரித்தேன்.
""ஷூட்டிங் செலவுக்காக மோதிரத்த அடகு வச்சு பத்தாயிரம் ரூபா கொடுத்தேன். அதை திருப்பித் தரமாட்டேங்கிறான்''’என்றார்.
""ஏண்ணே... பத்தாயிரம் பெரிய தொகைதான். ஆனா... அதை வசூலிக்க... இத்தனை காரும், இவ்வளவு ஆளுகளையும் ஊர்ப்பக்கம் இருந்து கூட்டிட்டு வந்து, அவங்கள தங்க வச்சு, சாப்பாடு போட்டு... எம்புட்டு செலவாகியிருக்கும்...''’’
""இல்ல தம்பி... அவனை வெட்டிட்டு ஜெயிலுக்குப் போறேன்...''’’
""ஏண்ணே... ஜெயிலுக்குப் போறது முக்கியமா குடும்பத்தோட வாழ்றது முக்கியமா?''’எனக் கேட்டு அவரை சமாதானப்படுத்தினேன்.
(அதிலிருந்து இன்றுவரைக்கும்... எந்த விஷயமாக இருந்தாலும் என்னிடம் ஆலோசனை கேட்காமல் செய்யமாட்டார் சக்திவேல் அண்ணன்.
நடிகர்சங்கத் தேர்தலில் எனக்கு எதிராக நல்லதம்பியுடன் சேர்ந்துகொண்டு செயல்பட்டார் தசரதன். ஆனாலும் அந்தத் தேர்தலில் நான் வெற்றிபெற்றேன்.
ஒரு மாலையை வாங்கிக்கொண்டு தசரதன் நடிகர் சங்கம் வந்திருக்கிறார். நான் அப்போது அங்கு இல்லை. "இந்த மாலைதான் அவன் கழுத்துல விழுற கடைசி மாலை. இனிமே எப்பவுமே அவன் ஜெயிக்க முடியாது. நானும், கமலும் பேசி முடிவெடுத்திட்டோம். அவன் வந்தா சொல்லு. நான் வந்து அவனோட கடைசி மாலையை போட்டுட்டுப் போறேன்''’என நடிகர் சங்க நிர்வாகியிடம் ஆவேசமாக சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.
நான் வந்ததும் என்னிடம் சொன்னார்கள். ""நண்பர்தானே... பேசிவிட்டுப் போகட்டும்''’என நான் அதை பெரிதுபடுத்தவில்லை.
அடுத்த கொஞ்சநாட்களில் தசரதன் மாரடைப்பால் காலமானார். நான் எந்தப் பகையையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் போய் நின்றேன்.
டைரக்டர்-தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் அவர்களின் படம் "சிகப்பு சூரியன்'.’
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்தப் படத்தின் ஹீரோ. ரஜினி சார்கூட நான் நடித்த முதல் படம் அதுதான். அந்தப் படத்தில் மூன்று வில்லன்களாக நான், சங்கிலி முருகன், சிவச்சந்திரன்... நடித்தோம். இருவரும் லயோலா காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் என்பதால் எனக்கும் சிவச்சந்திரனுக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. அந்த நேரத்தில் சிவச்சந்திரன் பெரிய வில்லன். நான் அப்கம்மிங் வில்லன்.
நடிகை சில்க் ஸ்மிதா டாப் நடிகையாக இருந்தார். "சிலுக்கு டான்ஸ் இல்லாத சினிமாவே இல்லை' என்கிற நிலமை இருந்தது அப்போது.
சோழா ஹோட்டல் மாடியில் பாட்டு ஸீன் படமாக்கப்பட்டது. எல்லோருக்கும் மதிய சாப்பாடு வந்தது. எங்களுக்கெல்லாம் சினிமா கம்பெனியிலிருந்து அலுமினிய பாத்திரத்தில் சாப்பாடு வந்தது. சில்க் ஸ்மிதாவுக்கு சோழா ஹோட்டலிலிருந்து... சிக்கன். அது... இது... என உணவு ஆர்டர் பண்ணினார்கள். இதைக் கேள்விப்பட்டதும் சிவச்சந்திரனுக்கு கோபம் வந்துவிட்டது.
சினிமா கம்பெனி சாப்பாட்டை மதிப்புக் குறைவாக சிவச்சந்திரன் நினைக்கவில்லை. ஆனால் அந்த பாரபட்சத்தை ஏற்க முடியவில்லை.
"சிலக் ஸ்மிதாவுக்கு மட்டும் ஹோட்டல்ல சாப்பாடு ஆர்டர் பண்றாங்க. நமக்கு மட்டும் சினிமா கம்பெனி சாப்பாடு. இந்தச் சாப்பாடு நமக்கு வேண்டாம், வெளியே போய் சாப்பிடுவோம்'’எனச் சொல்லி என்னைக் கூப்பிட்டுச் சென்றார். இருவரும் கன்னிமாரா ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வந்தோம்.
"சுயமரியாதையை விட்டுக் கொடுக்கக்கூடாது'’என சிவச்சந்திரன் நினைத்தார். அந்த விஷயம் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது.
இயக்குநர் இராம.நாராயணன் சார் என்னோட வாழ்க்கையில முக்கியமான நபர். இந்த ராதாரவியோட வளர்ச்சிக்கு அவர் முக்கிய காரணம். முதல் முதல்ல இராம.நாராயணன் சாரோட இயக்கத்துல "இது எங்க நாடு'’படத்தில் நடித்தேன். போலீஸ் ஆபீஸர் கதாபாத்திரம். அந்தப் படத்தில் எனக்கு ஒரு பாட்டும் கொடுத்தார்.
இராம.நாராயணன் சார் என்னை அவருடைய படங்களில் தொடர்ந்து நடிக்கவைத்து, பெரிய வில்லனாகக் காட்டினார். நான் ரொம்ப பிஸியான ஆர்டிஸ்ட் ஆனேன்.
அந்தப் படத்துக்கு பிறகு இராமநாராயணன் சாரோட நெருக்கமான நபராக ஆகிவிட்டேன். அவரோட குடும்பத்துல ஒருத்தரா என்னை நினைத்தார்கள்.
அதுக்கு அப்புறம் பிரபு ஹீரோவா நடித்த "சூரக்கோட்டை சிங்க குட்டி'’படம். ஏவி.எம். தயாரிப்பு. இராம.நாராயணன் சார் இயக்கம்.
"சூரக்கோட்டை சிங்க குட்டி' படம் முழுவதும், நான் என்னோட அப்பா வாய்ஸில் பேசி நடித்தேன்.
(விஜயகாந்த்துடன் அறிமுகம்... கமல் மீது விஜயகாந்த் ஆத்திரம்....)
--------------------------------------------
"டப்பிங்' சக்கரவர்த்தி!
நடிகர் சக்கரவர்த்தி என் வாழ்க்கையில் முக்கியமானவர்களில் முக்கியமான நண்பர். "ரிஷிமூலம்'’படத்தில் நடிகர்திலகம் சிவாஜி அப்பாவின் மகனாக நடித்தவர். பலப் பல படங்களில் நடித்திருந்தாலும்... அடுத்தடுத்து வாய்ப்புகள் அமையாத நிலையில்... டப்பிங் யூனியனில் உறுப்பினரானார். அந்த அனுபவத்துடன் மும்பை சென்றார்.
இன்று மும்பை விளம்பரப் படஉலகில் விளம்பரங்களை தமிழில் டப்பிங் செய்வதில் நம்பர்-1 ஆக இருக்கிறார். நாம் டி.வி.யில் பார்க்கிற விளம்பரங்களில் பல... சக்கரவர்த்தியால் தமிழ்ப்படுத்தப்பட்டவைதான்.
சக்கரவர்த்தி, சொந்தமாக இரண்டு வீடுகள் உள்ளிட்ட வசதிகளோடு மும்பையில் வசிக்கிறார். நான் மும்பை சென்றால் என் நண்பர் நாராயணன் வீட்டுக்கும், சக்கரவர்த்தி வீட்டுக்கும் செல்லாமல் வருவதில்லை.