(68) பக்தி உண்டு; மதம் இல்லை!

பிரபுவுடன் நான் நடித்த முதல் படம் "சூரப்புலி' அந்தப் படத்தில் பிரபுமா... (நான் எப்போதும் பிரபுவை "பிரபுமா'’என்றுதான் அழைப்பேன்) பிரபு, திருடன் கதாபாத்திரத்திலேயும், நான் போலீஸ் கதாபாத்திரத்திலேயும் நடித்திருப்போம். அந்த நேரத்தில் தொடர்ச்சியா 10 படம் பிரபுவோட சேர்ந்து நடிக்க ஒப்பந்தமாகியிருந்தேன். நான் "நடிகர் திலகம்' சிவாஜி அப்பாவோட ரசிகன். ரசிகன் என்பதைவிட நடிகர் திலகத்தோட வெறியன் என்றே சொல்லலாம். நடிகர் திலகம் நடித்த ’"பாரத விலாஸ்'’ படத்தை நானும் என்னோட ஃப்ரெண்ட் அசோக்கும் 30 தடவை பார்த்திருப்போம். "வசந்த மாளிகை' படத்தை எத்தனை முறை பார்த்தோம் என்கிற கணக்கே இல்லை. அதனால்தான் நடிகர் திலகத்தோட மகன் பிரபுவோட படத்துல நடிக்க வாய்ப்பு வந்தா உடனே சம்மதித்துவிடுவேன்.

"சூரப்புலி' படம் முழுக்க... முழுக்க திருச்சியிலதான் எடுக்கப்பட்டது. நான் பிறந்த மண் திருச்சி. சிவாஜி அப்பாவுக்கும் திருச்சி ரொம்ப முக்கியமான இடம். அதனால் ரொம்ப மகிழ்ச்சியோட மொத்தமாக கால்ஷீட் கொடுத்துவிட்டேன்.

இந்தச் சமயத்தில்தான் பிரபல தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. அவர்கள், தான் தயாரிக்கும் படத்திற்கு என்னிடம் கால்ஷீட் கேட்டார்.

Advertisment

(கே.ஆர்.ஜி. சார், திராவிடர் கழகத்தில் என் அப்பாவுடன் இருந்தவர். இதை கே.ஆர்.ஜி. சார் அடிக்கடி என்னிடம் சொல்லியிருக்கிறார். நான் அவரை "சார்' என்று வெளியில் சொன்னாலும் "அப்பா' என்றுதான் கூப்பிடுவேன்.)

""என் படத்துல நடிடா'' என்றார்.

""இல்ல சார்... "சூரப்புலி' படத்துக்காக மொத்தமா கால்ஷீட் குடுத்திட்டேன்'' என்றேன்.

Advertisment

""டேய் நான் சம்பளம் கொடுக்குற புரொடியூஸர்டா...''

""நீங்க மட்டும் சம்பளம் தர்ற புரொடியூஸர். மீதி பேரெல்லாம் பருத்திக்கொட்டையும், புண்ணாக்குமா தர்றாங்க?''’என "சட்'டென கேட்டுவிட்டேன்.

நான் கேட்ட அந்த ஒரு வார்த்தைக்காக... அப்போதிலிருந்து, தான் இறக்கும்வரை அவரோட படங்கள்ல நான் நடிக்க முடியாமலே போய்விட்டது.

நான் அப்படி கேட்ட பிறகும்கூட... தனிப்பட்ட முறையில் கே.ஆர்.ஜி. சார் என் மேல அன்பா இருந்தார். தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் தலைவராக இருந்தபோது, அவருக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறேன். தமிழ்த் திரைப்படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கென்றே... "தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்' உருவாக்கப்பட்ட பிறகு... அவருக்கு தீவிர ஆதரவாக இருந்திருக்கிறேன். (இப்போது இருக்கும் தயாரிப்பாளர் சங்கம்). நான் தயாரிப்பாளராக ஆனபிறகு... நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் அவருக்குத்தான் ஓட்டுப் போட்டேன். நான் எப்போதும் அவர் பக்கமே இருந்தேன். அவர் இறந்தபிறகு... அவரோட இறுதிச் சடங்கிலும் கலந்துகிட்டேன். நான் கேட்ட அந்த வார்த்தை அவரை ரொம்பவும் பாதித்திருக்கும் என நினைக்கிறேன்.

"சூரப்புலி' பட தயாரிப்பாளர் ராமன், சின்ன புரொடியூஸரா இருக்கலாம். ஆனாலும் அந்தப் படத்தில் அவர் எனக்கு முதலாளி. அதனால் அவரை அந்த இடத்தில் விட்டுக்கொடுக்கக் கூடாது என நினைத்துத்தான் அப்படிப் பேசிவிட்டேன்.

ஒருதடவை திராவிடர் கழக தலைவர் அண்ணன் கி.வீரமணி அவர்கள்... "முதல்ல ராதா மகன் தன்னோட நெத்தியில வச்சிருக்க மத அடையாளத்த அழிக்கட்டும்' என்று சொல்கிற அளவிற்கு எனக்கு ஆன்மிக ஈடுபாடு இருக்கிறது.

radharavi

எங்க அப்பாவுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனாலும் எங்கள் வீட்டில் எம்மதமும், சம்மதம். ஹோலி ஏஞ்சல்ஸ், செயின்ட் பீட்ஸ் பள்ளிகளில் படித்ததால்... நான் இந்துவாக இருந்தபோதும்... இந்துக் கடவுளைப் பற்றியும்... இந்துக் கடவுளை எப்படி கும்பிடுவது என்றும்கூட எனக்கு தெரியாது.. 1969-ல்தான் என் அம்மா தனலட்சுமியம்மாள் என்னை சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு போவதற்காக மாலை போடச் சொன்னார்கள். அந்த வருஷம் நான் கன்னிச்சாமி. கடுமையான விரதம் இருக்க வைத்தார்கள். நானும் அத்தனை விரதத்தையும் கடைப்பிடித்தேன். வெறும் தரையில படுக்கச் சொன்னார்கள். மெத்தையில படுத்து வளர்ந்ததால் திடீர் என தரையில படுத்தபோது தூக்கம் வராமல் மிகவும் கஷ்டப்பட்டேன்.

அதிகாலையிலும், இரவிலும் குளிர்ந்த தண்ணீரில் குளித்துவிட்டு வெறும் தரையில படுத்தேன். நான் சபரிமலை கோயிலுக்குப் போனபோது... "எம்.ஆர்.ராதாவோட மகன்டா... கோயிலுக்கு வரான்' என என் காதுபடவே பேசுவார்கள். நான் அதைப்பற்றியெல்லாம் கவலையேபடமாட்டேன். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குப் போய் மொட்டை போடுவேன். நாங்கள் குடும்பத்தோடு அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திற்கு போவோம். அப்படிப்போகும் சமயங்களில் நாகூர் தர்காவுக்கும் போவோம். அங்கிருந்து தஞ்சாவூர் கோயிலுக்கும் போவோம். இந்துக் கோயில், கிறிஸ்துவ தேவாலயம், மசூதிகளுக்குப் போற வழக்கம் எங்க குடும்பத்தில் அப்பவே இருந்தது.

எங்க வீட்டில் ஜாதி, மதத்தைப் பத்தி அதிகமாக பேசவே மாட்டாங்க. என்னோட குடும்பத்துல யாரையும் சாதி, மதத்தை குறிப்பிட்டு பேசமாட்டோம். "சாதி, மதம்' என யாராவது என்னிடம் பேசுகிறபோது... "யானைக்கு மதம் பிடிக்கலாம், நாய்க்கு வெறி பிடிக்கலாம். மனிதனுக்கு ஏன் மதவெறி பிடிக்கணும்?' எனக் கேட்பேன்.

சபரிமலைக்கு மாலைபோட்டுச் செல்வது எனக்கு மன நிறைவைத் தந்ததால்... நான் தொடர்ந்து மாலை போட்டு, விரதமிருந்து சபரிமலை சென்று வந்தேன். 1969-ல் இருந்து 2008-வரை கிட்டத்தட்ட 36 வருஷம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு போயிருக்கேன். எங்க அப்பாவும், அண்ணன் எம்.ஆர்.வாசுவும் இறந்ததால்... இரண்டு வருஷம் மாலை போட முடியாமல் போனது. இருந்தாலும், அந்த ரெண்டு வருஷமும் மாலை போடாமல் கடுமையா விரதம் இருந்தேன். 18-ஆம் படி ஏறாமல் சாதாரணமா போய் ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டு வருவேன். என்னோட சின்னஅக்கா ராணி நாகேந்திரனோட முதல் குழந்தை இறந்துவிட்டது. அதனால் இரண்டாவது குழந்தை பிறந்ததும் "மணிகண்டன்' என பெயர் வைத்து அவனுடைய ஐந்து வயதில் சபரிமலைக்கு மாலை போட்டு அவனை அழைத்து வருவதாக வேண்டிக்கொண்டார்கள். அதன்படி அழைத்துச் சென்றோம். இதேபோல் என்னோட தங்கை ரதிகலாவும் ஐயப்பனிடம் வேண்டிக்கொண்டதால்... அவருக்குப் பிறந்த குழந்தைக்கு "ஐயப்பா' என பெயர் வைத்தோம். ("சங்கிலி புங்கிலி கதவைத் திற' படத்தை "ஐய்க்' என்ற பெயரில் இயக்கியவர் ஐயப்பா)

எங்கள் தெருவில் வசிக்கும் கோதண்டராமன் சாருக்கு கடுமையான வயிற்று வலி நீண்டகாலமாக இருந்தது. வலி வரும்போது மிகுந்த அவஸ்தைப்படுவார். சாப்பிடக்கூட முடியாது. அவரிடம்... ""சபரிமலைக்கு மாலை போட்டு போயிட்டு வாங்களேன்... நல்லா இருக்கும்'' எனச் சொன்னேன். அவரும் அதன்படி செய்தார். பக்தியால் நடந்ததா... இல்லேன்னா... அந்த மலையோட இயற்கையான மூலிகை வளமா.... அதுக்குள்ள நான் போகவிரும்பவில்லை ஆனால்... அவர் சபரிமலைக்குப் போயிட்டு வந்தபிறகு, அவரது நெடுநாள் வயிற்றுவலி "க்யூர்' ஆகிவிட்டது. அதனால்... கோதண்டராமன் சார், அவரோட அறையில் என்னுடைய போட்டோவை மாட்டி வைத்திருந்தார். (அவருக்கிருந்த நன்றியுணர்ச்சி அவரோட மகன் ரமேஸூக்கு இருக்கான்னு தெரியல.)

என் அப்பா இறந்த வருடம் நான் சபரிமலைக்கு மாலை போடவில்லை. அந்தச் சமயம்தான் டைரக்டர் தசரதன் அவர்கள் "சரணம் ஐயப்பா' என்கிற படத்தை எடுத்தார். அதில் நான் நடித்தேன். மாலை போடாவிட்டாலும், கடுமையாக விரதம் மேற்கொண்டு அந்தப் படத்தில் நடித்தேன். ‘

நாங்கள் சபரிமலை கோயிலுக்கு செல்கிறபோது கிடைக்கிற, பார்க்கிற, கேட்கிற அனுபவங்களை வைத்தே "சரணம் ஐயப்பா' படத்தின் கதையை எழுதினார் தசரதன். இந்தப் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், கதாசிரியர், ஸ்டண்ட் மாஸ்டர், டான்ஸ் மாஸ்டர்... என எல்லா வேலைகளையும் தசரதனே செய்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பிலும் நான் உதவி டைரக்டராக, புரொடக்ஷன் மேனேஜராக... நட்பு ரீதியில் பல வேலைகளைச் செய்தேன். ("களத்தூர் கண்ணம்மா'’ காலம் முதல் கமலின் நண்பரான... திறமைசாலியான... நல்ல நடிகரான... தசரதன் எனக்கும் நல்ல நண்பர்.)

1970-ல் எரிமேலியில் சாராயக்கடை இருந்தது. பம்பையிலும் சாராயக் கடை இருந்தது. அங்கே ஒரு டூரிங் டாக்கீஸும் இருந்தது. (கேரள ஐயப்ப பக்தர்கள் சாராயம் உள்ளிட்ட மது குடித்துவிட்டு கோயிலுக்கு வரும் பழக்கம் இருந்தது. முப்பத்தங்காவல் சிவன் கோயிலில் சாமிக்கு மீன் உணவை படையல் போடுகிற பழக்கமும் உண்டு.) "அந்தச் சாராயக் கடைகளையும், டூரிங் டாக்கீஸையும் அப்புறப்படுத்த வேண்டும்...' என கையெழுத்து வேட்டை நடத்தி... கோயில் நிர்வாகத்திடம் நாங்கள் கொடுத்தோம். அடுத்த வருஷமே... டூரிங் டாக்கீஸ் தீப்பிடித்து எரிந்தது. சாராயக் கடைகள் மூடப்பட்டன.

சபரிமலை பகுதியில் இருந்த சாராயக் கடைகளை அப்புறப்படுத்த போராடியவர்களில் ஒருவனான எனக்கு... "சரணம் ஐயப்பா'வில் கிடைத்தது... சாராயம் விற்கிற வேஷம்....

(சபரிமலை ஷூட்டிங் த்ரில் அனுபவங்கள்....)

-------------------------------

நடு ரோட்டில்...!

நான் லயோலாவில் பி.யூ.சி. படிக்கும்போது... "ஆசிரியர் லூர்துசாமி அவர்களுக்கும், எனக்கும் தகராறு ஆகிவிட்டது. இதில் உச்சகட்டமாக... சாரை நான் அறைந்துவிட்டேன். ‘"நீ உருப்படமாட்ட...' எனச் சொன்னார்.

சில வருடங்களுக்குப் பின்... நான் தசரதன் இயக்கத்தில் "கடவுளை நம்புங்கள்' படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது... நுங்கம்பாக்கம் காலேஜ் ரோட்டில் படப்பிடிப்பு.

"ராதாரவி நடிக்கிற படம்' என்று சொன்னதால்... "நான் ராதாரவியப் பார்க்கணும்'னு சொல்லியிருக்கார் லூர்துசாமி சார்.

"சாரை உடனே வரச்சொல்லுங்க'’ என்றேன். வந்ததும் எழுந்து நின்று சாரை வரவேற்றேன். காபி கொடுத்தேன். குடித்துவிட்டு, "நான் சொல்லல... இப்பவும் நீ ஷூட்டிங்குக்காக எல்லாரும் வேடிக்கை பார்க்கிற மாதிரி நடுரோட்ல நிற்கிற பார்' என சாபம் விடுவதுபோல் சொல்லிவிட்டுப் போனார்.