சமீபத்தில் ஐ.நா. சபை ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் சுமார் 145.8 மில்லியன் பெண்கள் கடந்த ஐம்பதாண்டுகளில் காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்திருந்தனர். குறிப்பாக 2013 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் மட்டும் 4,60,000 குழந்தைகள் காணவில்லை. அதிலும் 3 லட்சம் குழந்தைகள் பெண்ணாக பிறந்ததற்காகவே காணாமல் போனதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இப்படி காணாமல்போன பெண்களில் பெரும்பாலான சிறுமிகள் விற்கப்படுவதாகவும், பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படுவதாகவும் அந்த அறிக்கை மேலும் அதிர்ச்சியை அளித்தது. குறிப்பாக 1000 குழந்தைகள் பிறக்கிறது என்றால் அதில் 13-க்கும் மேலான குழந்தைகள் இறந்துபோவதாகவும், அதிலும் உலக நாடுகளில் எங்குமில்லாத அளவிற்கு இந்தியாவில்தான் அதிக பெண்கள் உயிரிழப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 943 பெண்கள் இருந்ததாகவும் தற்போது 2020-ல் 1000 ஆண்களுக்கு 924 பெண்கள் மட்டுமே இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் குழந்தை திருமணம் நடக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், வரும்காலத்தில் இதே நிலை தொடர்ந்தால் மேலும் அதிக பெண்கள் காணாமல்போக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
ஒரு பெண் தன் தாயின் வயிற்றிலிருந்து வெளிவருவது முதல் சுடுகாட்டிற்குச் செல்லும் வரை அவள் எல்லா நிலையிலும் அநீதிகளைச் சந்திக்கிறாள். குழந்தை கருக்கலைப்பு, பெண் குழந்தை பிறந்தால் அதை கள்ளிப்பால் ஊற்றி கொலைசெய்வது, சிறுமிகளைக் கடத்துவது, உறவினர்களே சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது, பள்ளிகளில் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் பாலியல்ரீதியாக தாக்கப்படுவது, கல்லூரிகளில் காதலர்கள் இருவருக்கும் நடக்கும் மோதலில் பெண் மட்டுமே பாதிக்கப்படுவது, திருமணமான பிறகு கணவன், மாமியார் மூலம் கொடுமைகள், சாதிய ஆணவக் கொலைகள், பெண்கள் கடத்தப்படுவது என்ற பல பிரச்சனைகளுக்கு மத்தியில்தான் இந்த சுதந்திர சமூகத்தில் பெண்கள் வாழவேண்டிய கட்டாயம் உள்ளது.
ஐ.நா.வின் அந்த அறிக்கையில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பாக 2 ஆயிரத்து 43 புகார்கள் அளித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், அதிகபட்சமாக கண்ணியத்துடன் வாழும் உரிமைக்காக 603 புகார்களையும், குடும்ப வன்முறை தொடர்பாக 452 புகார்களையும், வரதட்சணைக் கொடுமை குறித்து 252 புகார்களையும் பெண்கள் அளித்துள்ளனர்.
இதைத்தவிர, பாலியல் தொந்தரவு (194 புகார்கள்), போலீஸ் அடக்குமுறை (113 புகார்கள்), சைபர் குற்றங்கள் (100 புகார்கள்), பாலியல் வல்லுறவு முயற்சி (78 புகார்கள்), பாலியல் துன்புறுத்தல் (38 புகார்கள்) உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாகவும் புகார்களை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா இதுதொடர்பாக பேட்டி ஒன்றையும் அளித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் பொதுமுடக்க காலத்தில் மட்டும் 204 குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக, தெலுங்கானா சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கூறியுள்ளது. இதுதொடர்பாக பேட்டி அளித்திருக்கும் அதிகாரி புருந்தாதர் ராவ், “பள்ளிகள் மூடப்பட்டு குழந்தைகள் வீட்டிலிருப்பதால் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளதாகவும், திருமணம் செய்துவிட்டால், தங்கள் கடமை முடியும் என்று பெரும்பாலான குடும்பங்கள் நினைப்பதாக தெரிவித்துள்ளார்.
“சமூக ஊடகத் தளங்களில் மகளிர் ஆணையத்தின் செயல்பாடு அதிகரித்துள்ளதால் புகார்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. டுவிட்டர் மற்றும் பிற சமூக ஊடகத் தளங்களிலிருந்தும் நாங்கள் புகார்களைப் பெறுகிறோம். வாட்ஸ்-ஆப் எண்ணில் எங்களை அணுகுவது பெண்களுக்கு எளிதாக உள்ளது. பெண்கள் நலனுக்காகவும் அவர்கள் அதி காரம் பெறுவதற்காகவும் மகளிர் ஆணையம் செயல்பட்டு வருகிறது. எனவே பெண்கள் எந்த நாளிலும் எந்த நேரத்தி லும் எங்களை அணுகலாம்’’என்று ரேகா சர்மா கூறியுள்ளார்.
ஐ.நா. அறிக்கை குறித்து சமூக ஆர்வலர் கிருத்திகா ஸ்ரீனிவாசனிடம் கருத்துக் கேட்டபோது, ""இந்தியாவில் மோடி அரசு, "பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ்' என்று பெண்களை பாதுகாக்கும் சட்டங்களை கொண்டுவந்தது. ஆனால் இதுவரை இந்தியாவில் பெரிதும் பேசப்பட்ட பாலியல் குற்றச் சம்பவங்களுக்கு எதிராக மோடி இதுவரை வாயே திறக்கவில்லை. குறிப்பாக கேரளாவில் கடந்த ஜூன் மாதம் பன்றிக்கு வைக்கப்பட்ட வெடிகுண்டால் கர்ப்பிணி யானை உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு கேரள அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யக்கோரி கட்டளை யிட்டது. ஆனால் இதே காலகட்டத்தில் தமிழகத்தில் மட்டும் 4 சிறுமிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். மூடநம்பிக்கையின் தாக்கத்தால் தந்தையே தன் மகளை கொலைசெய்துள்ளார். 10-ஆம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ கொடூரமாக ஆளும்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மூலம் கொல்லப்பட்டார். புதுக்கோட் டையில் ஒரு சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். திருச்சியில் 9-ஆம் வகுப்பு மாணவி எரித்துக் கொல்லப்பட்டார்.
ஆனால் இந்த சம்பவங்கள் குறித்து மத்திய அரசு எந்த ஒரு அறிக் கையும் மாநில அரசிடம் கேட்க வில்லை. ஒரு யானைக்கு காட்டப் படும் முக்கியத்துவம், கொல்லப் படும் சிறுமிகளுக்கு இல்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது.
பாலியல் குற்றங்களுக்கு எப்படி போக்சோ சட்டம் இருப்பது அனைவருக்கும் தெரிந்துள்ளதோ அதுபோல குழந்தைகள் கடத்தலுக்கு என்ன சட்டம்? இப்படி பெண்கள் மீது நடத்தப்படும் அனைத்து விதமான துன்புறுத்தலுக்கும் என்ன சட்டம் பாயும் என்பது குறித்த விழிப்புணர்வு வேண்டும்'' என்றார்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்மாநிலச் செயலாளர் பி.சுகந்தி வேறொரு பார்வையை முன்வைத்தார். ""ஊரடங்கு காலத்தில் அதிகரிக்கும் குடும்ப வன்முறைகளைக் கண்டறிய எங்கள் அமைப்பு வாட்ஸ்ஆப் எண்ணை கொடுத்து புகார்களைக் கண்டறிந்து தீர்வை நோக்கி செயல்பட்டு வருகிறோம். குறிப்பாக, வாட்ஸ் ஆப் எண் மூலம் ஒரு தந்தை தன் மகளை அவருடைய கணவன் அடித்துத் துன்புறுத்துவதாக நுங்கம்பாக்கத் திலிருந்து புகார் ஒன்று வந்தது. அதன் அடிப்படையில் சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்துக்கு இரவு 10 மணியளவில் சென்றபோது காவல்துறையினர் புகாரை ஏற்கமறுக்கிறார்கள். ஒரு தேசிய அமைப்பு காவல்துறையை அணுகியபோதே புகார்களை ஏற்கமறுக்கிறார்கள் என்றால் சாதாரண மக்கள் எந்த நம்பிக்கையில் காவல்துறையை நம்பமுடியும். எனவே விழிப்புணர்வு என்பது முதலில் காவல்துறைக்குதான் வேண்டும்.
சமீபத்தில் காவல்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் பெண்கள் தொடர்பான பல ஆயிரம் வழக்குகளை நாங்கள் தீர்வு கண்டுள்ளோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக காவல்துறையிடம் எப்படி பிரச்சனைகளுக்கு தீர்வு கொண்டு வரப்பட்டது என்று விசாரித்தபோது, பெண்களிடம் சமாதானம் பேசி அவர்களை புகுந்த வீட்டிற்கே அனுப்பியதாகத் தெரிவித்தனர். அது எப்படி சரியான தீர்வாகும்? குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை தருவதைவிட்டு, பாதிக்கப்பட்டவர்களை குடும்பநலன் கருதி சமாதானமாகப் போ என்ற அறிவுறுத்தல்தான் இங்கே தொடர்கிறது. ஐ.நா. சபையும், தேசிய மகளிர் ஆணையமும் வெளியிட்ட அறிக்கை என்பது கணக்கில் வந்த புள்ளிவிவரம்தான். இன்னும் இந்தியாவில் கணக்கிற்கு வராத அதாவது காவல் நிலையத்திற்கு வராத எவ்வளவோ தற்கொலைகள், கொலைகள், பெண்கள் கடத்தப்படுவது, குடும்ப வன்முறைகள் இருக்கிறது. அதையெல்லாம் கணக்கிலெடுத்தால் இந்த புள்ளிவிவரத்தின் எண்ணிக்கை அச்சமூட்டுவதாக மாறிவிடும்.
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை கொடுப்பதாலோ, அல்ல வேறு ஏதேனும் கொடு மையான தண்டனைகள் கொடுத்தலோ இப்படியான குற்றங்கள் குறைய வாய்ப்புகள் இல்லை. குற்றங்களை குறைக்க சமூகத்தில் இருந்தே மாற்றம்வேண்டும். "குட் டச், பேட் டச்'’என்று பெண் குழந்தைகளுக்கு மட்டும் கற்றுக் கொடுத்தால் போதாது டோன்ட் டச் என்று ஆண் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கவேண்டும். நமது பாடத்திட்டமே தவறான கல்வியை புகுத்துகிறது. இப்படியான மோசமான கல்வியை விட்டுவிட்டு ஆண் பெண் சமம் என்று கற்றுக்கொடுக்க வேண்டும்''’என்றார்.
-சேகுவேரா