லவச வேட்டி சேலை உற்பத்தி செய்வதற்கான ஆணையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதோடு, அரசின் கவனத்தை ஈர்க்க ஈரோட்டில் 10-ஆம் தேதி ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்கள்.

இந்த போராட்டத்திற்கு தலைமை வகித்த தமிழ்நாடு விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் சுரேஷ் கூறும்போது, "இலவச வேட்டி சேலைத் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 225 விசைத் தறி கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த 67 ஆயிரம் தறிகளும், சுமார் 3 லட்சம் தொழிலாளர்களும், நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பைப் பெற்றுவருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 1.80 கோடி வேட்டி, 1.80 கோடி சேலை தயாரிக்கப்படும். அதில் 30 லட்சம் வேட்டி, 30 லட்சம் சேலைகள் கைத்தறி மற்றும் பெடல் தறி உற்பத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக பட்ஜெட்டில் 493 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த மொத்த உற்பத்தியில் ஈரோடு மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் மட்டும் சுமார் 70 சதவீதம் வேட்டி சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

dd

Advertisment

கடந்த ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் தாமதமாக செப்டம்பர் மாதம்தான் ஆணை வழங்கப்பட்டது. இதனால் பொங்கல் முடிந்த பிறகும் பிப்ரவரி மாதம்வரை வேட்டி, சேலை உற்பத்தி தொடர்ந்தது. தை பொங்கலுக்கு அந்த பண்டிகைக் காலத்திற்கு முன்பே ரேஷன் கடைகள் மூலம் வேட்டி -சேலைகள் ஏழை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். எனவே தற்போது அதற்கான ஆர்டரை வழங்கினால்தான் உற்பத்தியை டிசம்பருக்குள் பூர்த்தி செய்யமுடியும். சென்ற 7 ஆண்டுகளாக விசைத்தறி சங்கத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட துணிக்கான கூலி ரூபாய் 150 கோடியை அரசு இன்னும் வழங்கவில்லை. இதனால் பல கூட்டுறவு சங்கங்கள் நஷ்டத்தை சந்திக் கின்றன.

2019 முதல் வேட்டி உற்பத்திக்கு ரூபாய் 24 கூலியாகவும், சேலைக்கு ரூபாய் 43 கூலியாகவும் தரப்படுகிறது. அரசு நிர்ணயித்த கூலியை உயர்த்தித் தர நாங்கள் கோரவில்லை. சென்ற 7 ஆண்டுகளாக வழங்கவேண்டிய கூலிப் பாக்கியை வழங்குமாறுதான் கேட்கிறோம். விசைத் தறிகளுக்கு மானியங்கள், கடன்கள் வழங்கும் பவர் டெக்ஸ் இந்தியா திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. ஆனால் கடந்த மூன்றாண்டுகளாக அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. அதையும் நிறைவேற்ற வேண்டும்.

இதன்மூலம் மாநில அரசின் பள்ளி மாணவ மாணவிகளுக்கான சீருடைத் துணியையும் உற்பத்தி செய்ய இயலும். எங்கள் கோரிக்கையை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்'' என்றார். இலவச வேட்டி, சேலை தயாரிப்புப் பணியை விரைவில் தொடங்க கைத்தறித்துறை கவனம் செலுத்தவேண்டும்.

Advertisment