வீட்டில் இருங்கள்-விலகியே இருங்கள் என்ற முதல்வரே முக கவசம் அணிவது பற்றி மாறுபட்ட கருத்துகளை ஆரம்பத்தில் தெரிவித்தார். அதன்பிறகு, முக கவசம் கட்டாயம் என்ற நிலை வந்தது.

Advertisment

facemask

பின்னர் மிகவும் தாமதமாக, 2 கோடியே 80 லட்சம் ரேஷன் கார்டுகளில் உறுப்பினர்களாக உள்ள 6 கோடியே 74 லட்சம் பேருக்கு துணியால் செய்யப்பட்ட முக கவசம் தலா 2 வழங்கப்படும் என தமிழக அரசின் சார்பில் கூட்டுறவுத்துறை மற்றும் உணவு வழங்கல் துறை அறிவித்தது. இதன் உற்பத்திக்கான ஆர்டர் பல்வேறு மாவட்டங்களில் அரசு மூலம் பெறப்பட்டு, முக கவசங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால், உற்பத்தி செய்யப்பட்ட முககவசங்களை அரசு முழுமையாக கொள்முதல் செய்யாமலும், ஏற்கனவே கொள்முதல் செய்த முககவசத்துக்கு முழு தொகையை கொடுக்காமலும் இழுத்தடிக்கிறது. இதனால் உற்பத்தியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

ஈரோடு மாவட்டத்தில் முககவசம் உற்பத்தியில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டவர்கள் நம்மிடம், ""ரேஷன்கார்டு உறுப்பினர்கள் 6.74 கோடி பேருக்கு, 13.48 கோடி முககவசமும், இதர பயன்பாட்டுக்காக ஒரு கோடி முககவசம் என 14.48 கோடி முககவசத்துக்கு, உற்பத்தியாளர்களுக்கு அரசு ஒப்பந்தம் வழங்கியது. இதில், 24 நிறுவனங்கள் டெண்டர் கோரியதில், 13 நிறுவனங்களின் டெண்டரை அரசு ஏற்றது.

ஈரோடு, திருப்பூர், தாராபுரம், தர்மபுரி, சேலம், விருதுநகர் என பல்வேறு பகுதியில் ஆயத்த ஆடை தயாரிப்போர், மகளிர் தையல் குழுவினர், அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா சீருடை தைத்து கொடுப்போரிடம் முக கவசம் உற்பத்தி செய்யும் பணி பிரித்து வழங்கப்பட்டது. ஒரு முக கவசத்திற்கு ரூபாய் 6 ரூபாய் 45 பைசா என ஒப்புதல் செய்தனர். இளம்பச்சை, அடர் பச்சை, நீல நிற துணியை வெட்டி, தைத்து கொடுக்க, ஒரு முக கவசத்திற்கு ரூபாய் இரண்டு என கூலி நிர்ணயம் செய்யப்பட்டது.

Advertisment

facemask

கடந்த அக்டோபர் மாதம் முதல் உற்பத்தி செய்யப்பட்ட முக கவசங்கள் பல்வேறு மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு ரேஷன் கடை மூலம் விநியோகம் தொடங்கியது. ஆனால், அதன் தரம் பற்றி சர்ச்சைகள் எழுந்தன. எதிர்கட்சிகள் தமிழக அரசின் முக கவசம் உற்பத்தி பணியில் முறைகேடு நடந்ததாக குற்றம் சுமத்தியது. இந்நிலையில், டெண்டர் பெற்றவர்களுக்கு முதற்கட்டமாக ஒரு தொகையை அரசு வழங்கிய பின், மீதத்தொகையை தரவே இல்லை.

fa

ரேஷன் கடைகளிலும் 40 முதல் 60 சதவீதம் பேருக்குத்தான் முககவசம் வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு வழங்குவதற்கான முககவசத்தை உற்பத்தி செய்து 5 கோடி முககவசம் தயாராக உள்ளது. டெண்டர்கள் எடுத்தவர்கள் உற்பத்தியாளர்களுக்கு பணம் தரவில்லை. அரசு முழு பணத்தை விடுவித்ததும், உற்பத்திக்கான கூலியை மொத்தமாக வழங்கி தைத்து வைத்துள்ள முக கவசத்தை கொள்முதல் செய்து கொள்கிறோம் என டெண்டர்கள் எடுத்தவர்கள் கூறுகின்றனர். 5 கோடி முக கவசத்தை எப்போது எடுத்துக்கொண்டு, பணம் தருவார்கள் என தெரியவில்லை. முக கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டவர்களில் 80% பேர் பெண்கள்தான். அவர்களுக்கான கூலியையும் தர முடியவில்லை'' என்றனர்.

"பத்தாயிரம் கோடி, இருபதாயிரம் கோடி என கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு செலவிட்டுள்ளது' என முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சும் கூறுகிறார்கள். முறைப்படி டெண்டர் எடுத்து முக கவசம் தைத்து வைத்துள்ளவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்தபாடில்லை. மக்களுக்கு இலவசமாக முகக்கவசமும் கொடுக்கவில்லை. இதுதான் அரசு நிர்வாக லட்சணம்.

-ஜீவாதங்கவேல்