மிழக வேளாண்மை விரிவாக்க மையங்களில் இணை இயக்குநர்களாக இருக்கும் அதிகாரிகள், மத்திய மாநில அரசுகள் அறிவிக்கும் பல்வேறு திட்டங்களில் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்துவதாக வும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. திருச்சியில் கடந்த மூன்றாண்டுகளாக இணை இயக்குநராக பணியாற்றும் முருகேசன், விளைச்சல் நிலங்களையெல்லாம், விளைச்ச லுக்கு உகந்ததல்ல என்று குறிப்பிட்டு, அந்தநல்லூர், அதவத்தூர், சோமரசம் பேட்டை, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள நிலங்களை, ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு, பிளாட் போடுவதற்கு அனுமதி அளித்ததாகக் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

dd

வேளாண் அமைச்சருக்கு நெருக்கமாக இருக்கும் அவர், திருச்சி அமைச்சர்களுக்கும் நெருக்கமாக இருப்பதுபோல் காட்டிக்கொள் கிறாராம். அதனால்தான் இந்த மூன்றாண்டு களில் பல்வேறு புகார்கள் வந்தபோதும், பல கோடிகளைச் சம்பாதித்திருந்தாலும் அவர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை பாயவில்லை என்கிறார்கள்.

விவசாயிகளுக்கான திட்டங்களான ஆத்மா திட்டம், விதை கிராமத் திட்டம், உழவர் உற்பத்தியாளர் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களிலும் இவர் ஊழல் செய்துள்ளதாகக் குற்றம்சாட்டுகிறார்கள். மேலும், மத்திய, மாநில அரசுகள் அங்கீகரிக்கும் உரங்களை மட்டுமே விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறை உள்ள நிலையில், மத்திய அரசால் அங்கீகரிக்கப்படாத உரங்களை விற்போருக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள்.

இவர்மீது எந்த குற்றச்சாட்டை வைத்தாலும் மாவட்ட ஆட்சியர் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லையென்று விவசாயிகள் புலம்புகின்றனர். இந்த மாதத்துடன் பதவி உயர்வு பெற்று கூடுதல் இயக்குநராக பொறுப்பேற்க உள்ளதாகவும், அந்த பதவியைக் கைப்பற்றியது குறித்தும் சர்ச்சை எழுந்துள்ளது. வேளாண் துறை இணை இயக்குனர் முருகேசனிடம் அவர்மீதான புகார்கள் குறித்து கேட்டபோது, "நிலம் உற்பத்திக்கு உகந்ததா? இல்லையா? என்பது குறித்த என்.ஓ.சி. கொடுப்பது மாவட்ட ஆட்சியரின் அதிகாரத்திற்கு உட்பட்டது. நான் அதை ஆய்வு செய்து என்னுடைய தரப்பில் ஒப்பீனியன் சர்ட்டிபிகேட் மட்டும்தான் கொடுப்பேன். நான் யாரிடமும் எதற்காகவும் பணம் வாங்கியதும் இல்லை, கேட்டதும் இல்லை. என் மேல் தொடர்ந்து இப்படிப்பட்ட புகார்கள் வருவதற்கு முக்கிய காரணம், மணப்பாறையை சேர்ந்த அப்துல்லா என்பவர் தான். விவசாயி என்ற போர்வையில் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள வேளாண்துறை அதிகாரிகளை தொந்தரவு செய்து தொடர்ந்து பணம் வாங்கி வந்துள்ளார். நான் வந்த பிறகு அதைத் தடுத்து நிறுத்தியுள்ளேன். எனவே என்மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் அவர் இப்படிப்பட்ட பொய்ப் புகார்களைத் தொடர்ந்து பரப்பிவருகிறார்'' என்று விளக்கமளித்தார்.

இவர்மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தவேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைக்கிறார்கள்.

Advertisment