மயிலாடுதுறை நகரின் மையப் பகுதியில் கம்பீரமாக நின்ற அண்ணா பகுத்தறிவு மன்றம், தி.மு.க. நகர செயலாளரின் அலட்சியத்தால் இன்று கவனிப்பாரற்று, குடிகாரர்களின் கூடாரமாக மாறிவிட்டது என வேதனைப்படுகிறார்கள் மூத்த உடன் பிறப்புக்கள்.
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் கட்டுவதற்கு முன்பே, மயிலாடு துறையில் உள்ள பகுத்தறிவு மன்றம் கட்டப்பட்டுவிட்டது. 1969ஆம் ஆண்டு மன்னை நாரா யணசாமியால் அடிக்கல் நாட்டப் பட்டு, 1975இல் திறப்பு விழா கண்டது. மயிலாடு துறை முன்னாள் எம்.எல்.ஏ. கிட்டப்பாவும், நன்னிலம் எம்.எல்.ஏ. தேவேந்திரன் உள்ளிட்ட தி.மு.க.வின் முன்னோடி களும் இதற்காகப் பாடுபட்டனர்.
அண்ணா அறிவாலயத்தை போலவே பாரம்பரிய வரலாறு கொண்ட மயிலாடுதுறை அண்ணா பகுத்தறிவு மன்றத்தின் வரலாறு இன்றைய காலத்தில் மறைக்கப்பட்டதால், கவனிப்பாரற்று கழிவறையாகவும், மதுவருந்து மிடமாகவும் மாறிச் சீரழிந்துள்ளது. இதற்கு காரணம், தற்போதைய நகர செயலாளரும், நகர்மன்றத் தலைவருமான குண்டாமணி என்கிற செல்வராஜ், பகுத்தறிவு மன்றத்தை தனது குடும்பச் சொத்தைப்போல மாற்றியதால் வந்த வினை என்கிறார்கள் சீனியர்கள்.
மயிலாடுதுறை நகரத்தைச் சேர்ந்த மூத்த தி.மு.க. பிரமுகர் ஒருவர், "அறிவாலயத்துக்கு நிகரானது பகுத்தறிவு மன்றம். முன்னோர்களால் உயிராக நினைத்து உருவாக்கப்பட்ட அறிவுக்கோயில் அது. இரண்டடுக்கு கட்டடத்தில், மேலே நகர தி.மு.க.வினருக்கும், கீழே ஒன்றிய தி.மு.க.வினருக்கும் எனப் பிரித்து ஒவ்வொரு அரங்கிலும் 200 பேர் வந்தமர்ந்து ஆலோசிக்ககூடிய அளவிற்கு கட்டி முடிக்கப்பட்டது. செய்தித் தாள்களும், பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்டவர்களின் புத்தகங்களும் நிறைந்து, எந்நேரமும் சுயமரியாதை சார்ந்த விவாதங்கள் நடக்கும். ஆனால் இன்று தி.மு.க. நகர செயலாளராக இருக் கும் குண்டாமணி என்கிற செல்வராஜ், ஒட்டுமொத்த பகுத்தறிவு மன்றத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சிதைத்துவிட்டார்''’என வேதனைப் பட்டார்.
தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் கூறுகையில்,’"பகுத்தறிவு மன்றம் இடிந்து விழுவது குறித்து கழகத்தினர் மத்தியில் எழுந்த கோபத்தால், புதுப்பிக்கிறேன் என்கிற பெயரில் கட்டடத்தைச் சுற்றி சாரம் அமைத்து, பாழடைந்த கட்டடத்தை வலைகட்டி மறைத்தனர். இதோடு ஒரு வருடம் ஆகிவிட்டது. இன்னும் வேலை தொடங்காததால், தற்போது சமூக விரோதிகளின் ஒதுங்கும் இடமாக மாறிவிட்டது.
இதனைத் தட்டிக்கேட்க வேண்டிய மாவட்ட செயலாளரும் பூம்புகார் எம்.எல்.ஏ.வுமான நிவேதா முருகனும், நமக்கெதுக்கு வம்பு என்று 16 ஆயிரம் ரூபாய் வாடகைக் கட்டடத்தில் மாவட்ட அலு வலகத்தை நடத்திவருகிறார். இதுவரை கொடுத்துள்ள வாடகைத் தொகை யைக்கொண்டே பகுத்தறிவு மன்றத்தை புதுப்பித்திருக்கலாம். ஆனால் அவரும் இந்தக் கட்டிடத்தை ஒரு பொருட்டாகவே நினைக்கல. மயிலாடுதுறை மாவட்டத் தைப் பொறுத்தவரை சுமார் 1,800 கோடி ரூபாய்க்கு வேலை நடந்திருக்கிறது. மயிலாடுதுறை நகரத்தில் மட்டும் 200 கோடி ரூபாய்க்கு பணிகள் நடந்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் கறாரா இருபது சதவீதம் வரை கமிஷன் வாங்குறாங்க. மயிலாடு துறை நகரத்தில் நடக்கும் அனைத்துப் பணிகளையும், தி.மு.க. நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான செல்வராஜ், அவரது மருமகன் பெயரிலும், பினாமிகள் பெயரிலும் செய்கிறார். பாதாளச் சாக்கடையை நிர்வகிப்பதில் பல லட்சம் பில் போடுகிறார். அனுமதியோடு மணல் ஏற்றி வருபவர்களிடம் வசூல், வீடு கட்ட பூமி பூஜை போடுவதற்கு வசூல் என வசூலிலேயே குறியாக இருக்கிறார்.
நகர்மன்ற தலைவரான பிறகு சம்பாதித்த பணத்தில் மேலமங்கைநல்லூரில் 15 ஏக்கர், வரகடை கிராமத்தில் 120 ஏக்கர் நிலத்தில், மூன்று மீன்குட்டையை பங்களாவோடு வாங்கியுள்ளார். வைத்தீஸ்வரன் கோயில் வடபாதி கிராமத்தில் 1.80 கோடி ரூபாயில் மணல் குவாரிக்காக நிலம் வாங்கிப் போட்டிருக்கிறார். நல்லாத்துகுடி கிராமத்தில் ஆறு ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டிருக்கிறார். மூங்கில் தோட்டம் கலெக்டர் ஆபீஸ் பின்புறம் 5 1/2 ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டிருக்கிறார். பூம்புகார் சாலையில் புதிய பேருந்து நிலையம் வருவதால் அங்கும் இடம் வாங்கிப் போட்டிருக்கிறார். அவருக்கு கிடைக்கும் கமிஷன் வருமானத்திலிருந்து சிறு தொகையை ஒதுக்கினாலே பகுத்தறிவு மன்றத்தை மிகச்சிறப்பாக புதுப்பிக்க முடியும்'' என்கிறார்.
தி.மு.க. மாவட்ட செயலாளர் நிவேதா முருகனோ, "மன்றத்தை புதுப்பிப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. நிச்சயமாக மீண்டும் புதுப்பிக்கப்படும்''’என்றார்.
தி.மு.க. நகர செயலாளரும் நகர்மன்றத் தலைவருமான குண்டா மணி என்கிற செல்வராஜ் கூறுகையில், "வேலை ஆரம்பிச்சாச்சு. சிலைகளுக்கான வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு. விரைவில் புனரமைப்பு வேலை முடிந்துவிடும்''’என்றவரிடம், நகர்மன்ற தலைவரானதும் வாங்கிய கமிசன் தொடர்பான புகார்கள் குறித்து கேட்டோம்.
"எனக்கு வேண்டாத மாற்றுக் கட்சிக்காரங்க ஏதாவது கிளப்பிவிடுவாங்க சார். அதை நீங்க பெருசாக்க வேணாம், விடுங்க''’என்றார் கூலாக.
ஒருகாலத்தில் பகுத்தறிவை வளர்த்த அண்ணா பகுத்தறிவு மன்றம், வரலாற்றை உணராதவர்களின் பிடியில் சிக்கி மோசமாக மாறிவிட்டதே என்ற உடன்பிறப்புகளின் புலம்பல் என்று தீருமோ!