மயிலுக்கு சோறு போடும் மோடி, மனிதர்களுக்கு சோறு போடுவாரா? மோடியின் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை' என்று அக்டோபர் 6-ந் தேதி வடசென்னை காங்கிரஸ் கூட்டத்தில் பேசியவர் குஷ்பு. அதற்கடுத்த ஆறாவது நாளில் (அக்டோபர் 12-ந் தேதி), அதே குஷ்பு, காங்கிரசிலிருந்து விலகி பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டதுடன், "மோடியே அனைத்து மக்களுக்கும் காவலர்; நாட்டை நல்வழியில் நடத்திச் செல்கிறார் பிரதமர்' என்று அதிரடி காட்டினார்,
கட்சித்தாவல் என்பது குஷ்புக்கு புதிதல்ல. தி.மு.க.வில் ஓரங்கட்டப்பட்டபோது காங்கிரசுக்குத் தாவினார். காங்கிரசிலிருந்து பா.ஜ.க.வுக்குத் தாவியுள்ளார். எனினும், "பா.ஜ.க. தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட மிரட்டல்தான் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்புவின் கட்சித் தாவலுக்குப் பின்னணி' என்கின்றன டெல்லி தகவல்கள்.
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருவதால் மாற்று கட்சியிலிருக்கும் பிரபலங்களை பா.ஜ.க.விற்குள் இழுக்கும் அசைன் மெண்ட்டில் முக்கியமானது, ஆபரேஷன் குஷ்பு. காங்கிரசில் குஷ்புவின் அதிருப்தியை ஏற்கனவே அறிந்திருந்த மத்திய அமைச்சர் அமீத்ஷா, குஷ்புவிடம் பேசுமாறு தமிழக பா.ஜ.க. தலைவர் முருகனுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, குஷ்புவையும் அவரது கணவர் சுந்தர்.சி.யையும் பொதுவான நண்பர் ஒருவரின் வீட்டில் சந்தித்தார் முருகன் (இதனை முதன்முதலாக அப்போதே பதிவு செய்திருக்கிறது நக்கீரன்).
அந்த சந்திப்பில், ராஜ்யசபா எம்.பி., தேசிய அளவில் கட்சி பொறுப்பு ஆகிய நிபந்தனைகளை வைத்தார் குஷ்பு. அதற்கான உத்தர வாதத்தை முருகனால் தர முடிய வில்லை. அமித்ஷாவுக்கு இதனை முருகன் பாஸ் செய்ய... ""காங்கிரசில் அவருக்கான முக்கியத்துவம் இல்லை என்கிற நிலையில்தான், பா.ஜ.க.வின் அழைப்பை பயன்படுத்திக்க குஷ்பு நினைக்கிறார். அவரைத் தவிர அவருடன் யாரும் வரப்போவதில்லை. அப்படியிருக்கும் நிலையில், கட்சியில் சேர்வதற்கு முன்பே நிபந்தனை போடுவது சரி அல்ல. பாஜகவில் இணையச் சொல்லுங்கள்; பிறகு பதவிகள் வரும். நம்பியவர்கள் கை விடப்பட மாட்டார்கள்'' என்றிருக் கிறார் அமித்ஷா. இதனை குஷ்புவின் கணவரிடம் தெரிவித்துள்ளார் முருகன்.
இதனையறிந்த குஷ்பு, "எல்லா அரசியல்கட்சிகளும் ஒரே மாதிரி தான். நம்முடைய பாப்புலா ரிட்டியை பயன்படுத்திக்க குறியாக இருக்கிறார்கள். ஆனால், நம் எதிர்பார்ப்புகளை மட்டும் ஏற்பதில்லை. பா.ஜ.க.விலிருந்து இனி அழைப்பு வந்தால் பேசவேண்டாம்' என கோபமும் வெறுப்புமாக தனது கணவரிடம் தெரிவித்திருக்கிறார் குஷ்பு. அந்த கோபம்தான் 6-ந் தேதி நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் மோடிக்கும் பா.ஜ.க.வுக்கும் எதிராக அவர் கர்ஜித்தவை'' என்கிறார் நம்மிடம் பேசிய முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஒருவர்.
குஷ்புவின் கட்சித்தாவல் குறித்து மேலும் விசாரித்தபோது, ""குஷ்பு வைத்த கோரிக்கையை அமித்ஷா நிராகரித்த நிலையில் அவர் அமைதியாக இருந்திருக்க லாம். ஆனால், காங்கிரஸ் கூட் டத்தில் பா.ஜ.க.வை அட்டாக் செய்த குஷ்புவின் பேச்சை முழுமையாக டேப் செய்த மத்திய உளவுத்துறையினர் அதனை பிரதமர் அலுவலகத் துக்கு அனுப்பி வைக்க, பிரதமர் அலுவலகம் டென்சனாகி யிருக்கிறது. அமித்ஷாவும் கோப மாகியிருக்கிறார். மோடிக்கு எதிராக குஷ்புவை பயன்படுத் தும் வகையில், அவரது அதிருப்தியை சரி செய்து, காங்கிரசில் முக்கியத்துவம் தர ராகுல்காந்தி யோசிக்கலாம். அது காங்கிரசுக்கு ப்ளஸ் பாயிண்டாக அமையலாம்'' என யோசித்தது பா.ஜ.க. தலைமை.
காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அக்கட்சியின் பிரபலங் களின் வருமான வழிகளையும் முதலீடுகளையும் சேகரித்து வைத்திருக்கிறது மத்திய வருமானவரித்துறை. அந்த வகையில், குஷ்பு மற்றும் அவரது கணவர் சுந்தர்.சி.யின் வெளி நாட்டு முதலீடுகளும் பா.ஜ.க.விடம் சிக்கியிருக்கிறது. அதனை வைத்து சுந்தர்.சி.யின் வழியாக மிரட்டப்பட்டார் குஷ்பு. சினிமாவிலும் சரி, பொதுவாழ்விலும் சரி, மிகவும் துணிச்சலானவர் என பெயரெடுத்துள்ள குஷ்புவும் அவரது கணவரும் பா.ஜ.க.வின் இத்தகைய மிரட்டலை எதிர்கொள்ள முடியவில்லை. வேறு வழியில்லாமல் பா.ஜ.க.வில் இணைய நேரிட்டுள்ளது''‘என்கிறார்கள் டெல்லி சோர்ஸ்கள்.
டெல்லியிலிருந்து சென்னை வந்த குஷ்புவுக்கு அசத்தலான வரவேற்பை தந்தனர் தமிழக பா.ஜ.க.வினர். இதனையடுத்து கமலாலயத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த குஷ்பு, ’’""எதிர்க் கட்சியான காங்கிரசில் இருந்ததால் பா.ஜ.க.வையும் மோடியையும் விமர்சிக்க நேர்ந்தது. என் கணவர் வலியுறுத்தியதால் தான் பா.ஜ.க.வில் சேர்ந் தேன் என காங்கிரஸ் தலைவர் (கே.எஸ்.அழகிரி) சொல்வது அபத்தம். கணவருக்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லை. காங்கிரஸில் இருக்கும்போது நான் நடிகையாகத் தெரிய வில்லையா? சிந்திக்கக்கூடிய மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ்'' என்றெல்லாம் போட்டுத் தாக்கினார் குஷ்பு. அதேநேரத்தில் ""கட்சி மாறினாலும் கொள்கை மாறவில்லை என்றும், பா.ஜ.க.வில் இருந் தாலும் பெரியார் கொள்கையுடன் இருப்பேன்'' என் றும் தெரிவித்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேட்டபோது,’ ""அரசியலுக்கும் தனது கணவருக்கும் (சுந்தர் சி) சம்மந்தம் இல்லையெனில் பா.ஜ.க.வில் சேர டெல்லிக்கு செல்லும் போது சுந்தர்சி.யை அழைத்துச் சென்றது ஏன்? குஷ்பு நடிகை என்பதை தவறாக நாங்கள் பார்க்கவில்லை. நடிகை என்பது தவறான சொல் கிடையாது. அது பெருமையானது. அவர் நடிகை என்ப தால்தான் காங்கிர ஸில் அவர் சேர்த்துக் கொள்ளப்பட்டாரே தவிர சுதந்திரப் போராட்ட தியாகி என்பதாலோ, பொருளாதார நிபுணர் என்பதாலோ அல்ல. இப்போ, பா.ஜ.க. அவரை சேர்த்துக்கொண்டது கூட நடிகை என்பதால்தான். காங்கிரசில் இருந்துகொண்டே பா.ஜ.க.வுடன் தொடர்பில் இருந்தது துரோகமில்லையா?''’என்கிறார் அழகிரி.
இதற்கிடையே குஷ்புவின் கட்சித் தாவல், காங்கிரஸ் தலைவர் களிடம் விவாதத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. அவர்களில் சிலரிடம் பேசியபோது, ""குஷ்புவின் பாப்புலாரிட்டி காங்கிரஸுக்கு தேவை. அதனால் அவரை பாதுகாக்க கட்சித் தலைமை தவறிவிட்டது. பா.ஜ.க.வில் இருக்கும் நயினார் நாகேந்திரன் அதிருப்தியாக இருப்பதையும் அவரை தி.மு.க. வளைக்க முயற்சிப்பதையும் அறிந்த பா.ஜ.க. முருகன், உடனே நெல்லைக்கு கிளம்பிபோய் அவரை சமாதானப்படுத்தினார். அந்த அணுகுமுறை குஷ்பு விஷயத்தில் காங்கிரசில் இல்லைங்கிறது துரதிர்ஷ்டம். குஷ்புவைத் தொடர்ந்து, தலைமையால் புறக்கணிக்கப்படும் முக்கிய நிர்வாகிகள் பலரையும் வளைக்க பா.ஜ.க. ஸ்கெட்ச் போட்டுள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க பா.ஜ.க.வின் ஆட்டம் காங்கிரசை மிரள வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை''’ என்கின்றனர்.
-இரா.இளையசெல்வன்
படங்கள்: ஸ்டாலின்
________________
அடுத்த ஆபரேஷன்!
மாநிலத்தின் தன்மைக்கேற்ப அரசியல் காய்களை நகர்த்தும் பா.ஜ.க. மேலிடம், தமிழ்நாட்டில் மத ரீதியான அரசியல் பெரியளவில் எடுபடாது என்பதை உணர்ந்திருக்கிறது. கர்நாடகாவில் சாதி அரசியலை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த நிலையில், தமிழ்நாட்டில் சினிமா பிரபலம், அரசியலில் தனிப்பட்ட செல்வாக்கு கொண்டவர்கள், சாதி அமைப்புகளின் வாக்குவங்கி இவற்றை முன்வைத்தே காய் நகர்த்துகிறது. காங்கிரசிலிருந்து குஷ்புவை பா.ஜ.க.வுக்குக் கொண்டுபோன நிலையில், மேலும் யார், யார் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதிலும் தீவிர கவனம் செலுத்திவருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான விஜயதாரணி, தமிழக காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக பா.ஜ.க. ஸ்மெல் பண்ண, அவரை பா.ஜ.க.வுக்கு கொண்டுவரும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளனவாம். "தி.மு.க. கூட்டணியில் இருந்தபோதும், சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை பாராட்டியவர் விஜயதாரணி. வெளிப்படைத் தன்மையுடன் செயல்படக்கூடியவர். ஆனால், கட்சி என்கிறபோது காங்கிரஸ் பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்கமாட்டார் என்கிறார்கள்' குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர்.
எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததையும்கூட பா.ஜ.க. மேலிடம் ரசிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ். டீம் ஒன்று சசிகலாவுடன் தொடர்பில் உள்ளது. மீண்டும் அவரை பொதுச்செயலாளராக்கி அ.தி.மு.க.வை சசி வசம் கொண்டு வருவதற்கான டெல்லி லாபியை இந்த டீம் தொடங்கியுள்ளது. இதனிடையே, தென்மாவட்டங்களில் தேவந்திரகுல வேளாளர் அமைப்புகளின் ஆதரவைத் திரட்டியுள்ள பா.ஜ.க., முக்குலத்தோரைக் கவரும் வகையில் ப்ளான் பண்ணுகிறது. அக்டோபர் 30 தேவர் குருபூஜை அன்று பா.ஜ.க.வின் தேசியத்தலைவர் ஜெ.பி.நட்டா நேரில் வந்து மலரஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் தயாராகின்றன. இதற்கான அணிவகுப்பில் நூற்றுக்கணக் கான கார்கள் பங்கேற்க வேண்டும் என மாநிலத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளாராம்.
-தமிழ்