திருச்சி மண்டல சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக பணியாற்றும் ஜெயபாரதி, தொடர்ந்து பல்வேறு ஊழல் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக நக்கீரன் இதழில் செய்தி வெளியிடப்பட்டது. அந்த செய்தியின் எதிரொலியாக சிறைத்துறை டி.ஐ.ஜி. கனகராஜ் என்பவரை விசாரணை அதிகாரியாக அரசு நியமித்தது.
சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதியிடம் விசாரணை நடத்துவதற்காக வந்த கனகராஜிற்கு தடபுடலான விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. மீன் குழம்பு, மீன் வறுவல், மட்டன் குழம்பு, மட்டன் வறுவல் என தடபுடலான அசைவ விருந்துக்குப்பின்னர், ஜெயபாரதி மீது எந்த குற்றமும் இல்லை என அறிக்கை தயார் செய்ய முடிவு செய்துள்ளார் அவர். கிளை சிறைக் காவலர்களிடம் விசாரணை நடத்திய டி.ஐ.ஜி. கனகராஜ், மாதம் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பது தொடர்பாக விசாரித்ததோடு, அப்படியெல்லாம் நடக்கவில்லையென்று மிரட்டி எழுதிக் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
டி.ஐ.ஜி. ஜெயபாரதி மீது ஏற்கெனவே கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தவிர புதிதாகவும் சில குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தமிழகத்தில், குறிப்பாக திருச்சி மண்டலத்திலுள்ள சிறைகளில் வசிக்கும் 30 ஆயிரம் சிறைக் கைதிகளுக்கு விநியோகம் செய்யும் சலவை சோப்பு, குளியல் சோப்பு உள்ளிட்டவற்றில் முதல் தரமான மூலப்பொருட்களைப் பயன்படுத்துவதாகக் கூறி, தரமற்ற மூலப்பொருட் களைக் கொண்டு தயாரிக்கும் சோப்புகளை அனுப்பி வைக்கிறாராம். இதில் ஒவ்வொரு மாதமும் சுமார் 15 லட்சம் ரூபாய் வருமானம் அவருக்கு வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் சிறைக்குள் இருக்கக்கூடிய கைதிகளுக்கு, நாள் ஒன்றுக்கு ஐயாயிரம் பீடிக்கட்டுகள் சிறைக்குள் விற்பனை செய்யப்படு கிறது. ஒரு பீடிக்கட்டுக்கு 10 ரூபாய் வீதம் நாள் ஒன்றுக்கு ஐந்தாயிரம் பீடிக் கட்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் வருமானம் பெறுவதாகவும் கூறப்படுகிறது. இப்படி பல ஊழல் குற்றச்சாட்டுகள் இவர் மீது இருக்கும் பட்சத்தில், தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளராக இருக்கும் ஆண்டாள் மீது திருப்புவதற் கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மத்திய சிறை கண்காணிப்பாளரான ஆண்டாள் மிகவும் நேர்மையான அதிகாரியாக பணியாற்றிவரும் நிலையில் இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்களில் இவரது பெயரை சேர்க்கத் திட்டமிட்டுள்ளனராம்.
டி.ஐ.ஜி. கனகராஜை செல்போனில் தொடர்புகொண்டு, "டி.ஐ.ஜி. ஜெயபாரதி மீதான குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக வந்துள்ளீர்களா?'' என்று கேள்வி எழுப்பியதற்கு, "நான் என்னுடைய சொந்த வேலையாகத்தான் வந்தேன்'' எனக்கூறி இணைப்பை உடனே துண்டித்தார். விசாரணை அதிகாரியாக வந்த டி.ஐ.ஜி. கனகராஜ், இவருடைய பேட்ஜ்மேட் என்பதால் விசாரணையில் எந்த ஒரு உண்மைத்தன்மையும் இல்லாமல் பெயரளவில் மட்டும் விசாரணை நடத்தப்பட் டுள்ளது. இதில் எப்படி நீதி கிடைக்கும் என்று பல சிறைக்காவலர்கள் மனம் குமுறுகிறார்கள்.