பா.ஜ.க. ஆதரவாளரும் நடிகையுமான கௌதமி, அழகப்பன் மீது தொடுத்த மோசடி வழக்கில் கௌதமி தரப்பு வழக்கறிஞர் முன்வைத்த வாதங்களை ஏற்று அழகப்பனுக்கும் வழக்கில் தொடர்புடைய மற்றவர்களுக்கும் முன்ஜாமீன் கொடுக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
நில மற்றும் பண மோசடியின் அடிப்படை யில் நடிகை கௌதமி கொடுத்த புகாரில் மு.சொ. அழகப்பன், அவரது மனைவி நாச்சாள் அழகப்பன், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, பாஸ்கர், சதீஷ்குமார் ஆகிய 6 பேர் மீது 5 பிரிவுகளின்கீழ் காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்ததோடு, அழகப்பனின் வீட்டிலுள்ள 11 அறைகளுக்கும் சீல் வைத்திருந் தனர். இந்நிலையில் அழகப்பன் தரப்பில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. நடிகை கௌதமி யின் அனுமதியோடே நிலங்கள் விற்கப்பட்டது, பணம் அவருக்கு முறையாக ஒப்படைக்கப்பட்டது, நில விவகாரங்களில் அவருக்குத் தெரிந்தே பங்குதாரர்கள் சேர்க்கப்பட்டனர் என அழகப்ப னின் தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடினர்.
இதனை மறுத்த கௌதமி தரப்பு வழக்கறி ஞர், “"புகார்தாரரின் வங்கிக்கணக்கிலிருந்து குற்றம் சாட்டப்பட்டவர்களின் வங்கிக் கணக்குக்குச் சென்ற தொகைகள் கண்டறியப்பட வேண்டும். குற்றம்சாட் டப்பட்டவர்கள் எவரும் விசாரணைக்கும் ஆஜராகவோ ஒத்துழைக்கவோ இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பலராமன் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அவர் 1-வது குற்றவாளியான சி.அழகப்பனுக்கு ரூ.2,00,00,000/- கொடுக்கப்பட்டதாக வாக்குமூலம் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
சோதனை நடத்தப்பட்டதில் அழகப்பனிட மிருந்து பல வெற்று முத்திரைத் தாள்கள் கைப்பற்றப்பட்டிருக்கிறது. விசாரணை தொடர்ந்து நடந்துவருவதாலும், மேலும் பல ஆவணங்கள் சேகரிக்கப்படவும், சாட்சிகள் விசாரிக்கப்படவும் வேண்டுமென்பதாலும் இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கினால் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடு வார்கள்''” என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி. கார்த்தி கேயன், “"நடிகை இருபதாண்டுகள் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர், 2004-ஆம் ஆண்டு அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இந்தக் கால கட்டத்தில் அறிமுகமான தயாரிப்பாளரும், நில விற்பனை-வாங்கல் விஷயத்தில் அறிமுகமுள்ளவ ரான அழகப்பன், கௌதமியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார். நோயின் தாக்கத்திலிருந்த கௌ தமி, அவரை பவர் ஆப் அட்டர்னியாக நியமித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஐங்குணம் கிராமத்தில் நிலம் வாங்குவதற்கு 55 லட்சம் பெறப்பட்ட நிலையில், 6 லட்சத்துக்கு மட்டுமே நிலம் வாங்கப்பட்டிருந்தது. தவிரவும், அழகப்பனின் மனைவியும் நிலத்தை வாங்கியதாக பத்திரத்தில் இடம்பெற்றிருந்தது என்பது பிரதான குற்றச்சாட்டு.
அதேபோல நீலாங்கரையில் வாங்கிய 15,895 சதுர அடி இடத்திலும் அழகப்பனின் மனைவி தரப்பிலிருந்து பணம் எதுவும் தரப் படாமலே அவர் பங்குதாரராக ஆக்கப் பட்டிருந்ததோடு, 2-வது குற்றம்சாட்டப் பட்டவரின் பெயரிலேயே பெரும்பங்கு நிலம் பதியப்பட்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தி லுள்ள நிலத்தை விற்றதன்மூலம் வந்த பணம் ரூ.83 லட்சத்தைக் கொடுக்காமலே ஏமாற்றிவிட்டார்.
ஏப்ரல் 2014-க்கும் டிசம்பர் 2022-க்கும் இடையில் தொகை குறிப் பிடப்படாத, கையெழுத்திட்ட செக்கு களைப் பயன்படுத்தி 5,96,43,000-ஐ கணக்குகளிலிருந்து தனது தனிப்பட்ட கணக்குகளுக்கு அழகப்பன் மாற்றிக் கொண்டார். இவையனைத்தும் புகார்தாரரின் குற்றச்சாட்டுகளாகும்.
06-02-2021 தேதியிடப்பட்ட மறுஉறுதிப்படுத்தல் கடிதம், ஏறக் குறைய 4 ணீ ஆண்டுகளுக்கு முன்பு 02.08.2016 அன்று வாங்கிய முத்திரைத் தாள்களில் எழுதப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்துக்கு கையெழுத்து வாங்கப் பட்டதாக எதிர்மனுதாரர் குறிப்பிடும் தேதியில், கொட்டிவாக்கத்திலுள்ள மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்தார் மனுதாரர். இந்நிலையில் மறுஉறுதிப்படுத்தல் கடிதத்தை அவரால் ஒருபோதும் எழுதியிருக்க முடியா தென்பது தெரிகிறது. இதன்மூலம் 1-வது குற்றசம்சாட்டப்பட்டவர்களும் மற்றவர்களும் புகார்தாரரின் உடல்நிலை யைப் பயன்படுத்தி அவரது பணம் மற்றும் சொத்துக்களை ஏமாற்ற சதி செய்தனர் என்பது தெளிவாகிறது.
புகார்தாரரின் நோய்க்கு ஆளான நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, 2-வது, 3-வது மற்றும் 4-வது குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்கள் மனுதாரரோடு சேர்ந்து சொத்தை வாங்கியவர்களாக போலியாகச் சேர்க்கப் பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவரின் ஒவ்வொரு செயலிலும், புகார்தாரரை ஏமாற்றுவதற்காக நேர்மையற்ற நோக்கம் வெளிப்பட்டுள்ளது.
மறுஉறுதிப்படுத்தல் கடிதத்தில், முதல் இரண்டு ஸ்டாம்ப் பேப்பர்கள் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த முத்திரைத்தாள் விற்பனையாளரான ஏ.தேவமனோகரியிடமிருந்தும் மூன்றாவது முத்திரைத்தாள் அரும்பாக்கத்திலுள்ள வி.ஜெயராணி என்ற மற்றொரு விற்பனையாளரிடமிருந்தும் வாங்கப்பட்டுள்ளது. நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது முத்திரைத் தாள்கள், ஏ.தேவமனோகரியிட மிருந்து வேறொரு தேதியில் வாங்கப்பட்டிருக்கின்றன. ஏழாவது முத்திரைத்தாள் மற்றொரு தேதியில் எஸ்.கீதாராணி என்ற மற்றொரு முத்திரை விற்பனையாளரிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது. ஏழு பக்கங்களுள்ள ஆவணமானது, வெவ்வேறு தேதிகளில், வெவ்வேறு முத்திரைத்தாள் விற்பனையாளர் களிடமிருந்து வாங்கப்பட்டு தட்டச்சு செய்யப்படும் என்பது நினைத்துக்கூட பார்க்கமுடியாதது.
குற்றம்சாட்டப்பட்டவரின் தரப்பு வழக்கறிஞர், குற்றம்சாட்டப்பட்டவர்கள் அப்பாவிகள் எனக் குறிப்பிட்டார். இவர்கள் ஆவணங்கள் உருவாக்குவதிலும் பங்கு பெற்றிருக்கின்றனர். குற்றம்சாட்டப்பட்ட ஓட்டுநர் பல்வேறு இடங்களில் சாட்சி யாகக் கையெழுத்திட்டுள்ளார். புகார்தாரரையும், அவரது மகளையும் நேரடியாக மிரட்டவும் செய்துள்ளார்.
தனித்தனி புலனாய்வு அமைப்புகளால் பதிவு செய்யப் பட்ட இரண்டு வழக்குகளிலும் குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் தனிப்பட்ட ஆதாயத்திற் காக மோசடி, முறைகேடு மற்றும் நிதியைப் பயன் படுத்தியதையும் உண்மைகள் வெளிப்படுத்து கின்றன. இந்த உண்மைகளை கருத்தில்கொண்டு மனுதாரர்கள் ஒவ்வொருவருக்கும் முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது''” என தீர்ப்பளித்தார்.