கொரோனா ஊரடங்கில் திருட்டு, வழிப்பறி போன்ற கொள்ளை சம்பவங்கள்கூட குறைந்திருக்கின்றன. ஆனால் உயிர், உடைமை, பணம், வேலை வாய்ப்பு என ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையே இழந்துநிற்கும் கொள்ளைநோய் சூழலிலும்கூட ஈவு இரக்கமில்லாமல் கொள்ளை அடித்திருக்கிறது அதிமுக அரசு என்று அதிர்ச்சியூட்டுகிறார்கள் லஞ்ச ஊழலுக்கு எதிரான அமைப்பினரும் ஆர்.டி.ஐ. செயற்பாட்டாளர்களும்.

c

ரேபிட் கிட் மோசடி!

Advertisment

கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை பரிசோதிக்கும் பிசிஆர் டெஸ்ட் அதிகம் செலவாகிறது என்பதால்தான் குறைந்த செலவில் விரைந்து கண்டுபிடிக்கும் ரேபிட் கிட் எனப்படும் பரிசோதனை கிட்டுகளை கொள்முதல் செய்தது தமிழக அரசு. அதாவது, சைனாவிலிருந்து மேட்ரிக்ஸ் லேப் என்கிற நிறுவனம் இறக்குமதி செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் ஒரு கிட்டை 225 ரூபாய்க்கு வாங்குகிறது. அந்த, மேட்ரிக்ஸ் லேப் நிறுவனத்திடமிருந்தே நேரடியாக தமிழக அரசு கொள்முதல் செய்திருந்தால் குறைவான விலையில் வாங்கியிருக்கமுடியும். ஆனால், சென்னை கோடம்பாக்கத்திலுள்ள இன்னொரு நிறுவனமான SHAN BIOTECH & DIAGNOSTICS என்கிற டீலர் மூலமாக வாங்குகிறது தமிழக அரசு. அந்த, நிறுவனமோ 225 ரூபாய்க்கு சைனாவிலிருந்து வாங்கப்பட்ட ரேபிட் கிட்டை 600 ரூபாய்க்கு பலமடங்கு விலை கூடுதலாக விற்கிறது. கமிஷன் கொள்ளை அடிப்பதற்காக தமிழக அரசு விலை கூடுதலாக வாங்கியது என்பதுதான் உண்மை. (இதை தொடக்கத்திலேயே அம்பலப் படுத்தியது நக்கீரன்)

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகமான ஐ.சி.எம்.ஆருக்கு ரேபிட் கிட்டை சப்ளை செய்த டெல்லி நிறுவனத்துக்கும் வியாபார ரீதியில் பிரச்சனை ஏற்பட்டதால் கோர்ட்டுக்கு செல்கிறார் கள். அப்போதுதான், ஒரு ரேபிட் கிட்டின் விலை ரூபாய் 225க்குத்தான் சைனாவிடமிருந்து வாங்கப்பட்டிருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவல் பட்டவர்த்தனமாகத் தெரியவருகிறது. டெல்லி ஹைகோர்ட் நீதிபதி, 225 ரூபாய்க்கு வாங்கிய ரேபிட் கிட்டை அதிகபட்சமாக 400 ரூபாய்க்குள் கூட விற்றுக்கொள்ளுங்கள். இதற்குமேல் விலை வைத்து மாநில அரசுகளுக்கோ ஐ.சி.எம்.ஆருக்கோ விற்கக்கூடாது என்று ஒரு உத்தரவை பிறப்பிக்கிறார்.

""சட்டீஸ்கர் மாநிலத்தில்கூட ஒரு கிட்டை 337 ரூபாய்க்குத்தான் வாங்கியிருக்கிறார்கள். ஆனால், தமிழக அரசின் டி.என்.எம்.எஸ்.சி. எனப்படும் மருத்துவசேவை கழகம் ரேபிட் கிட்டை 600 ரூபாய்க்கு வாங்கி, மாபெரும் கொள்ளை அடித்திருக்கிறது'' என அறப்போர் இயக்கம் போன்ற அமைப்புகள் கடுமையாக எதிர்த்து குரல் கொடுத்தனர். அதற்குப்பிறகுதான், பத்திரிகையாளர் கள் சந்திப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரைப் பார்த்து ஒரு கிட்டோட விலை எவ்வளவு என்று பலமுறை கேள்வி எழுப்பினார்கள். அவர் கடைசி வரை கிட்டின் விலையைச் சொல்லாமல் மழுப்பினார். பல லட்சம் கிட்கள் கொள்முதல் செய்ததில் ஒரு கிட்டில் மட்டுமே 250 ரூபாயிலிருந்து 300 ரூபாய் கொள்ளை அடித்தனர் ஆட்சியாளர்கள். ஆனால், ரேபிட் எதிர்பார்த்த அளவுக்கு கொரோனா பரிசோதனை யில் சரியான ரிசல்டை கொடுக்காததால் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

தொழிலாளர்களுக்கான முட்டையில் ஊழல்!

கொரோனா பேரிடர் காலத்தில் வெளி மாநிலத் தொழிலாளர்கள் மற்றும் வேலையில்லா மல் பசியில் வாடும் ஏழைத் தொழிலாளர்களுக்கு அம்மா உணவகத்தின் மூலம் உணவு வழங்கப்படும் என்று அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. வரவேற்கவேண்டிய பயனுள்ள அறிவிப்பு இது. ஆனால், ஆர்.டி.ஐ. மூலம் இதிலும் அதிர்ச்சித் தகவல் அம்பலமாகியிருக்கிறது.

s

ஒருநாளைக்கு 1000 பேருக்கு சமைக்கிற அளவுக்கு அம்மா உணவகத்துல போதிய வசதி இல்ல. அதனால, பக்கத்துல இருக்கக்கூடிய ஹோட்டல்களில் மொத்தமாக ஆர்டர் செய்து அவர்களுடைய பசியைப் போக்குகிறோம்’என்று ஏழைத் தொழிலாளர்களின் வயிற்றில் அடித்திருக் கிறார்கள் நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகள்.

எடுத்துக்காட்டு… ஆவடி மாநகராட்சிக்குள் பல ஓட்டல்கள் இருக்கும்போது ஸ்ரீ பெரும்புதூர் மண்ணூர் கூட்ரோட்டிலுள்ள ஸ்ரீ கணேஷ்பவனில் உணவு வழங்க ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள். காலை டிஃபன் 30 ரூபாய், மதிய உணவு 40 ரூபாய் என வாங்கிய உணவை ஒருநாளைக்கு எத்தனை பேருக்கு வழங்கினார்கள் என்ற கணக்கு இல்லை. இதில், ஒரு வேக வைத்த முட்டை 7 ரூபாய் 50 பைசா என்றும் ஒரு வாழைப்பழத்தை 3 ரூபாய் 50 பைசாவுக்கு என்றும் குறிப் பிட்டிருக்கிறார்கள். மார்க்கெட் ரேட்டில் ஒரு முட்டையின் விலை சுமார் 3 ரூபாய் 80 பைசா. மொத்தமாக, 1000 முட்டை என வாங்கும் போது இன்னும் குறை யும். இவர்கள் உணவு வழங்கிய ஏப்ரல், மே மாதங்களில் ஒரு முட்டை 50 பைசா 1 ரூபாய்க்கெல் லாம் என மிகக் குறைந்த விலை யில் விநியோ கிக்கப்பட்டிருக் கிறது. முட்டை டிரான்ஸ்போர்ட், வேகவைப்பதற்கான கேஸ் செலவு எனக் கணக்கில் எடுத்துக் கொண்டாலும்கூட, ஒரு முட்டைக்கு 4 ரூபாய் அதிகமாக பில் போட்டு கொள்ளையடித்திருக் கிறார்கள். இதில், பில் காட்டப்பட்ட ஸ்ரீ கணேஷ்பவன் என்பது உயர்தர சைவ ஹோட்டல் என்பதுதான் ஹைலைட்.

அதேமாதிரி, வாழைப்பழம் மொத்தமாக வாங்கும்போது 50 பைசா விலிருந்து 1 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதிக பட்சமா 1 ரூபாய் 50 பைசா என பில் போட்டிருக்கலாம். ஆனால், 3 ரூபாய் 50 பைசா என கிட்டத்தட்ட ஒரு வாழைப்பழத்துக்கு 2 ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். ஒருநாளைக்கு 1,000 வாழைப்பழம் என 2 மாதங் களுக்கு ஆவடி மாநகராட்சியில் வழங் கப்பட்ட வாழைப்பழத்தில் மட்டுமே இவ்வளவு கொள்ளை அடித்திருக்கிறார் கள் என்றால்… தமிழகம் முழுக்க நகராட்சி, மாநகரட்சிகளில் எவ்வளவு கொள்ளையடித்திருப்பார்கள் என்று கேள்வி எழுப்புகிறார்கள் இந்த கொள் ளையை ஆர்.டி.ஐ. மூலம் கண்டுபிடித்த சமூக செயற்பாட்டாளர்கள்.

வெஜிடேரியன் ஹோட்டலிலிருந்து ஆவடி மாநகராட்சிக்கு முட்டை விற்றிருக்கிறீர்களே எப்படி என்று ஸ்ரீ பெரும்புதூர் மண்ணூர் கூட் ரோட்டிலுள்ள ஸ்ரீ கணேஷ்பவன் உரிமையாளர் ஜெகதீஷை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, ""ஆவடியில் டிஃபன், மதிய உணவு, முட்டை, வாழைப்பழத்திற்கு மற்ற இடங்களில் அதிகமாக செலவாகும் என்றதால் என்னிடம் ஆர்டர் கொடுத்தார்கள். இன்னும் சொல்லப்போனால் எனக்கு வரவேண்டிய பணமே இன்னும் வரவில்லை. எங்களுடைய ஸ்பைசி கிச்சன் என்கிற நான் வெஜ் ஹோட்டல்மூலம் முட்டை விநியோகம் செய்தோம்'' என்றவரிடம் அப்படி யென்றால் ஸ்பைசி கிச்சன் பெயரில் அல்லவா பில் கொடுத்திருக்கவேண்டும் என்ற கேள்விக்கு அவரிடம் சரியான பதில் இல்லை.

இதுகுறித்து, ஆவடி மாநகராட்சி எஸ்.ஓ. மோகனை தொடர்புகொண்டு கேட்டபோது, ""அப்போதைய நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன்தான் இந்த ஹோட்டலுக்கு ஆர்டர் கொடுத்தார். தற்போது, மாறுதல் ஆகிவிட்டார். மேலும், ஆர்.ஓ. எனப்படும் ரிவின்யூ ஆஃபிசர் இந்திராணி கொரோனா சிகிச்சையில் உள்ளார். அதனால், ஏ.ஆர்.ஓ. ஜானிடம் கேளுங்கள்'' என்றார். நாம், ஆவடி மாநகராட்சி ஏ.ஆர்.ஓ. ஜானை தொடர்புகொண்டு கேட்டபோது, “எனக்கு எதுவும் தெரியாது’’ என்று விளக்கம் சொல்ல மறுத்துவிட்டார்.

சி.எம். இன்சூரன்ஸ் புறக்கணிப்பு!

ss

கொரோனாவைக் காரணம் காட்டி தனியார் மருத்துவமனைகள் இஷ்டத்துக்கு பொதுமக்களிடம் கொள்ளையடிக்க ஆரம்பித்தார்கள். அதனால், ஏ-1, ஏ-2, ஏ-3. ஏ-4 என்று தனியார் மருத்துவமனைகளை வகைப் படுத்தி கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயித்தது தமிழக அரசு. இதில், இன்சூரன்ஸ் அதிகாரிகளும் தனியார் மருத்துவமனைகளும் சேர்ந்து மிகப்பெரிய கொள்ளையடித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, நம்மிடம் பேசும் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், ""ஏ-1, ஏ-2 பெரிய மருத்துவமனைகளில் ஒருநாளைக்கு ஐ.சி. யூ கட்டணம் 15,000 ரூபாய், ஜெனரல் வார்டில் 7,500 ரூபாய். ஏ-3, ஏ-4 சிறிய மருத்துவமனைகளில் ஒருநாளைக்கு ஐ.சியூ கட்டணம் 10,000 ரூபாய். ஜெனரல் வார்டுக்கு 5,000 ரூபாய் என தமிழ அரசு நிர்ணயம் செய்திருந்தது. ஆனால், பிரபல இண்டர் நேஷனல் மருத்துவமனை என்று சொல்லிக்கொள் ளும் மியாட் மருத்துவமனையில் 2 நாட்கள் ஐசியூ, இரண்டு நாட்கள் ஜெனரல் வார்டில் கொரோனா சிகிச்சையில் இருந்த நோயருக்கு அரசாங்கக் கணக்குப்படி பார்த்தால் 45,000 ரூபாய்தான் கட்டணம் செலுத்தவேண்டும். ஆனால், 2 லட்சத்து 85,000 ரூபாய் பில் போட்டிருக்கிறார்கள்.

நோயரின் குடும்பத்தாரோ சி.எம். இன்சூரன் ஸில் 2 லட்சத்து 85,000 ரூபாயை எடுத்துக்கொள் ளுங்கள் என்றபோது அதில் கவர் ஆகாது என்று மறுத்துவிட்டது மியாட் நிர்வாகம். சி.எம். இன்சூரன்ஸ் அதிகாரிகளும் மறுத்துவிட்டார்கள். அறப்போர் இயக்கம் மூலம் சட்டப்போராட்டம் நடத்தியபிறகுதான். கட்டணத்தை குறைத்ததோடு சி.எம். இன்சூரன்ஸும் க்ளியர் செய்தார்கள். தலை நகரத்தில் போராடியதால் கூட்டுக்கொள்ளை தடுக் கப்பட்டது. வெளிமாவட்டங்களில் நிலைமை வேறு.

தமிழகம் முழுக்க இருக்கிற தனியார் மருத்துவமனைகளோடு சேர்ந்து முதலமைச்சர் காப்பீடு திட்ட அதிகாரிகள் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம், நோயாளிகளிட மிருந்து நேரடியாக வசூல் செய்தால் மருத்துவ மனைக்கு கொள்ளை லாபம்தானே? இதுவரைக்கும், மியாட் மருத்துவமனைமீது இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை'' என்று குற்றஞ்சாட்டுகிறார்.

தகரத்திலும் அபாரம்!

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் தெருக்களில் தகரம் அடிக்க ஆரம்பித்து, அவர்கள் வீட்டுக் கதவைத் திறக்கமுடியாதபடி தகரம் அடிக்கும் மனித உரிமை மீறல் செயலை நகராட்சிகள்- மாநாகராட்சிகள் செய்துவந்தன. தகரம் அடித்தது கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்ற அல்ல. அதிலும் கொள்ளையடிக்கத்தான் என்ற அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தடுப்பில் உள்ள ஒரு தகர ஷீட்டுக்கான வாடகை 8 ஆயிரத்து 500 ரூபாய். ஒரு தெருவில் 5 தகர ஷீட் வைத்து தடுப்புச்சுவர் அமைக்கிறார்கள் என்றால் அதன் மொத்த வாடகை விலை 42 ஆயிரத்து 500 ரூபாய். இந்த, தகரத் தடுப்பை விலைக்கு வாங்கியிருந்தாலே இவ்வளவு செலவு ஆகியிருக்காது. ஆனால், கொள்ளை யடிப்பதற்காகவே வாடகைக்கு வாங்கியதாக கணக்குப் போட்டிருக்கிறார்கள் நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகள். சென்னையில மட்டுமே ஒரு மண்டலத்துக்கு சுமார் 66 லட்ச ரூபாய் கணக்கு காண்பித்திருக்கிறார்கள். அதுவும், ஒரு இடத்தில் வைக்கப்பட்ட தடுப்புச்சுவரைதான் இன்னொரு இடத்திலேயும் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள். தமிழகம் முழுக்க தகரத்தில் மட்டுமே பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது.

அதுவும் சென்னையில் ஒரு தகரத்தின் வாடகைவிலை 8,500 ரூபாய். பூந்தமல்லி, நகராட்சியிலோ ஒரு தடுப்புக்கு 10,000 ரூபாய் வாடகை எனவும் ஆவடி மாநகராட்சியில் 12,000 ரூபாய் வாடகை எனவும் பில் போட்டு கொள்ளையடித்திருக்கிறார்கள்.

(மேலும் பல கொள்ளைகள் வரும் இதழில்...)

-மனோ சௌந்தர்