ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மாநிலமான மேற்கு ஆஸ்திரேலியாவில், கடந்த மார்ச் மாதம் 13-ஆம் தேதி, அம்மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், ஆஸ்திரேலியாவிலேயே முதல்முறையாக தமிழர் ஒருவர் வெற்றி பெற்றது, தமிழர் கள் அனைவரும் பெருமை கொள்ளக் கூடிய நிகழ்வாகும். தமிழகத்தின் ஊட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட டாக்டர் ஜெகதீஷ் கிருஷ்ணன், மேற்கு ஆஸ்திரேலியத் தலைநகரான பெர்த் மாநகரில் உள்ள ரிவர்ட்டன் (Riverton) என்ற தொகுதியின் சட்டமன்ற உறுப் பினராக பொதுத்தேர்தலில் தேர்ந் தெடுக்கப்பட்டார்.
ஆஸ்திரேலியத் தேர்தல் முறை
இந்தியாவில் ஒற்றை வாக்கு தேர்தல் முறையில் தேர்தல் நடத்தப்படுகிறது. ஆனால், ஆஸ்திரேலியாவில் முன்னுரிமை வாக்கு (Preferential voting) முறையில் தேர்தல் நடைபெறுகிறது.
இந்தியாவில் ஒரு வாக்குச்சீட்டின் வாக்கு மதிப்பு ஒன்று. ஆனால், முன்னுரிமை வாக்கு முறையில், ஒரு வாக்குச் சீட்டின் மதிப்பு ஒன்றுக்கும் மேல். வாக்குச்சீட்டில் போட்டி யிடும் வாக்காளர்களின் பெயர்கள் அச்சிடப்பட்டிருக்கும். வேட்பாளர்கள் வழங்கும் மாதிரி வாக்குச்சீட்டை (படம்) வாக்குச்சாவடிக்குள் எடுத்துச்சென்று அதைப்பார்த்தே வாக்காளர்கள் வாக்களிக்கலாம்.
வாக்களிப்பவர்கள், அனைத்து வாக்காளர்களுக்கும் அவர்கள் விரும்பும் வரிசையில் 1, 2, 3, 4… என்று வாக்களிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையில், எந்தெந்த வேட்பாள ருக்கு 1 என்று வாக்களிக்கப்பட்டுள்ளதோ அந்த வாக்கு களை முதலில் பிரித்தெடுப்பார்கள். பிறகு, இரண்டு முதன்மை அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் வாக்குகளை எண்ணுவார்கள். சில நேரங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் கூட அதிகமான முதல் வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவது உண்டு.
இந்த முறையில், முதல் வாக்கு எண்ணிக்கையிலேயே எந்த வேட்பாளர் 50%க்கும் அதிகமான வாக்குகளைப் பெறு கிறாரோ அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். மாலை 6.00 மணிக்கு வாக்குப் பதிவு முடிந்தவுடன் அந்தந்த வாக்குச்சாவடிகளிலேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும். வேட்பாளர்களின் வாக்கு எண்ணிக்கை உடனுக்குடன் அறிவிக்கப்படும். பத்து சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட உடனேயே யார் வெற்றி பெறுவார்கள் என்பதை யூகித்து விடலாம். இரவு 9.00 மணிக்கு எந்தக் கட்சி வெற்றிபெற்றது என்பது தெரிந்துவிடும். ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தல் நடத்தி, மே மாத முதல் வாரத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் அவலமெல்லாம் இங்கில்லை.
வாக்களிக்காவிட்டால் அபராதம்
வாக்குரிமை உள்ளவர்கள் அனைவரும் கட்டாயமாக வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைப் பதியவும் வேண்டும், கண்டிப்பாக வாக் களிக்கவும் வேண்டும். வாக்களிக்க முடியாவிட்டால் அதற்குண்டான காரணத்தைக் கூறவேண்டும். அக்காரணம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால் தேர்தல் ஆணையம் அபராதம் விதிக்கும். முதல் முறை வாக்களிக்கத் தவறினால் அபராதம் 20 ஆ. டாலர் (சுமார் ரூ. 1100). இரண்டாம் முறை வாக்களிக் கத் தவறினால் அபராதம் 50 ஆ. டாலர் (சுமார் ரூ.2750). ஆகவே, வாக்குப் பதிவு முடிந்த உடனேயே எவ்வளவு பேர் வாக்களித்துள்ளார்கள், அதன் வெற்றி இலக்கு என்ன என்பது தெரிந்துவிடும்.
ஒருவேளை எவருக்கும் 50% வாக்குகள் கிடைக்காவிட்டால், அந்த வேட்பாளர்களுக்கு 2 என்று வாக்கிடப்பட்ட வாக்குகளை எண்ணிக் கணக்கில் சேர்ப்பார்கள். இரண்டுக்குப் பிறகு, 3, 4 என்று வாக்கு எண்ணிக்கை தொடரும். நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை, இந்தக் கட்டுரை எழுதப்படும் (11/04/2021) வரை, 91% மட்டுமே முடிவடைந்துள்ளது.
ரிவர்ட்டன் தொகுதியின் தொழி லாளர் கட்சி வேட்பாளர் டாக்டர் ஜெகதீசன்“டாக்டர். ஜக்ஸ்’’ என்றே இங்கு அழைக்கப்படுவார். டாக்டர் ஜக்ஸ், முதல் சுற்று வாக்கு எண்ணிக் கையிலேயே 59% (15,157) வாக்குகளைப் பெற்று தனக்கு அடுத்தபடியாக 41% (10,537) வாக்குகள் பெற்ற லிபரல் கட்சி வேட்பாளர் அந்தோணி ஸ்பேக்நோலோவை வெற்றிகொண்டார். நக்கீரன் சார்பாக டாக்டர் ஜக்ஸ் நமது நல்வாழ்த் துக்களைத் தெரிவித்து, அவரை அவரது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சந்தித்தோம்.
டாக்டர் ஜக்ஸிடம் ""உங்களைப் பற்றிக் கூறுங்கள்''’எனக் கேட்டபொழுது, ""என்னுடைய சொந்த ஊர், ஊட்டி கோத்தகிரிக்கு அருகில் உள்ள திம்பட்டி என்னும் கிராமத்தின் கண்ணேரி மூக்கு என்னுமிடம். தந்தையார் கிருஷ்ணன். தாயார் சரசுவதி. என் தாயாரை பச்சியம்மாள் என்றே அப்பகுதி மக்கள் அறிவார்கள். எங்கள் பாட்டியார் பெயர் ருக்கியம்மாள். அவர்கள் அனைவருக்கும் உதவும் எண்ணம் கொண்ட பெருமனம் படைத்தவர்கள். அவர்களின் அரவணைப்பிலேயே வளர்ந்த எனக்கும், மற்றவர்களுக்கு நம்மால் இயன்ற அளவிற்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உருவாகி அது என் இயல்பாகவே ஆகி விட்டது. நாங்கள் ஒரு நடுத்தர குடும்பம். கடினமாக உழைத்துத்தான் முன்னேறினோம்''’என்றார்.
அவருடைய கல்வி மற்றும் குடும்பத்தைப் பற்றிக் கூறும்பொழுது, ""நான் கோத்தகிரி அரசுப் பள்ளியிலும், குன்னூர் செயின்ட் ஆன்டனி பள்ளி, பின்னர் கோவை பாரதி மெட்ரிகுலேஷன் பள்ளியிலும் படித்தேன். பின்னர் மைசூரில் உள்ள ஜே.எஸ்.எஸ். மருத்துவக் கல்லூரி யில் மருத்துவம் படித்தேன். என் மனைவி யும் ஒரு மருத்துவர். அவர் பெயர் யாமினி. என்னுடைய மகள் தீக்ஷனா பல்கலையில் வணிக மேலாண்மை படிக்கிறார். மகன் சிரீதர் மருத்துவம் படிக்கிறார். எனக்கு 49 வயதாகிறது. படித்து முடித்தவுடன், வடஆற்காடு மாவட்டம் வேலூர், கோத்தகிரி, கர்னாடகாவில் உள்ள முருகப்பா குழுமத்தின் காடமனே எஸ்டேட் ஆகிய இடங்களில் பணியாற்றிவிட்டு 2004-ல் இங்கிலாந் தில் இலண்டன் மாநகரத்தில் மருத்துவராகப் பணியாற்றினேன். 2006-ல் மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் மாநகருக்குக் குடியேறினேன். என்னுடைய மாமனார் டாக்டர் தோணன் அவர்கள், குடியாத்தத்தில் வாழ்கிறார். இன்றும் மருத்துவப் பணி செய்துவருகிறார். அவர் வாங்கும் கட்டணம் வெறும் 10 ரூபாய் மட்டுமே''’என்றார்.
ஏன் அரசியலுக்கு வந்தீர்கள்?
""நான் தமிழகத்தில் எந்த அரசியல் செயற்பாடுகளிலும் ஈடு பட்டவனில்லை. ஆனாலும் என்னுடைய குடும்பம் அரசியல் பின்புலம் கொண்ட குடும்பம். என்னுடைய தந்தையாரின் தாய்மாமா ஐ.ங.ராஜு மூன்றுமுறை காங்கிரஸ் கட்சியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.குண்டன் அவர்களும், கலைஞரின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த க.இராமச் சந்திரன் அவர்களும் என்னுடைய நெருங்கிய உறவினர்கள்.
ஆஸ்திரேலியாவில், பொது மருத்துவர் களுக்கான சங்கத்தின் நிர்வாகக் குழுவில்(Royal Australian College of General Practitioners) 12 ஆண்டுகள் இயக்குநராகவும், ஆஸ்திரேலிய பொது மருத்துவர்கள் அலையன்ஸ் (AGPA) என்ற மருத்துவ நிலையங்களின் உரிமையாளர்களுக்கான அமைப் பின் நிறுவன இயக்குநராகவும், ஆஸ்திரேலிய -இந்திய மருத்து வர் கழகத்தின் தலைவராகவும், பெர்த் இந்து கோயில் தலைவ ராகவும் இருந்துள்ளேன். மருத்துவமுறை ஆட்சிமன்றக் குழு வின் (Clinical Senate) உறுப்பினராகவும், கர்ட்டின் பல்கலைக் கழகத்தின் (Curtin University) பகுதி நிலை இணைப் பேரா சிரியராகவும் பணியாற்றியுள்ளேன். அதுமட்டுமின்றி, பெர்த் நகரத்தில் 10 மருத்துவ நிலையங்களை சொந்தமாகவும், 27 மருத் துவ நிலையங்களில் பங்குதாரராகவும் உள்ளேன். இப்படிப் பல வகைகளிலும் மக்களோடு தொடர்புடைய பணிகளை ஆற்றி வந்ததால் முழு நேர பொதுத்தொண்டாற்ற முடிவெடுத்து என்னுடைய மருத்துவ நிலையங்களில் இருந்த பொறுப்புகளை விட்டு விலகி மேற்கு ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சியில் சேர்ந்தேன். மாநிலப் பொதுத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கிடைத்தது''’’ என்கிறார் டாக்டர் ஜெகதீஷ்.
தொழிலாளர் கட்சியை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?
""மேற்கு ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சி சாமானியர் களுக்கான கட்சி. இக்கட்சியில், இன பேதம், நிற பேதம் ஆகியவை கிடையாது. இந்த நாட்டில், பல நாடுகளிலும் இருந்து குடியேறிய அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை, பொறுப் புணர்வு, வேலை வாய்ப்புகளை எப்பொழுதும் உருவாக்குதல் போன்ற கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் கட்சி தொழிலாளர் கட்சி மட்டுமே. மேற்கு ஆஸ்திரேலிய முதல்வர் மார்க் மெக்கோவன், மக்களுக்கான முதல்வர். அவரது தலை மையின்கீழ் பணியாற்ற எனக்கு இந்த பெருவாய்ப்பு கிட்டி யுள்ளது''’’ எனப் பெருமிதம் கொள்கிறார் டாக்டர் ஜெகதீஷ்.
மேற்கு ஆஸ்திரேலியாவில், கோவிட் 19 என்ற கொடிய நோய்க்கான முதல் பரிசோதனையை டாக்டர் ஜெகதீஷ் செய்துள்ளார். அது மட்டுமன்றி தன்னுடைய சொந்த செலவில் முதல் கோவிட் மருத்துவ நிலையத்தை பெர்த் நகரில் திறந்து மக்கள் பணியாற்றியவரும் இவரே. அதன்பின் ஆஸ்திரேலிய மைய அரசு பொருளுதவியில் மேலும் இரண்டு கோவிட் மருத்துவ நிலையங்களையும் நடத்திவருகிறார். இப்படிப் பலவகையிலும் மக்கள் பணியாற்றிக்கொண்டிருந்த டாக்டர் ஜெகதீஷ், வேட்பாளராகத் தெரிவு செய்த மாநில முதல்வர் மார்க் மெக்கோவனுக்கு (Mark McGowan) பெர்த்தில் வாழும் தமிழ்ச் சமுதாயம் தனது நெஞ்சார்ந்த நன்றிகளையும், வரலாறு காணாத வெற்றிபெற்ற மேற்கு ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. டாக்டர் ஜெகதீஷின் மக்கள் பணி சிறக்க நம் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.