கடந்த மாதம் டெல்லிக்குச் சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள பள்ளி ஒன்றைப் பார்வையிட்டு உள்கட்டமைப்பு வசதிகளைப் பார்த்தபிறகு டெல்லியிலுள்ள பள்ளியைப்போல தமிழ்நாட்டிலும் அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பை உருவாக்கவேண்டும் என்றார்.
தமிழக முதல்வர் விரும்பும் தரமான கட்டமைப்புடன் தமிழ்நாட்டில் தலைசிறந்த சில அரசுப் பள்ளிகள் உள்ளன. கல்வி மட்டுமின்றி ஒழுக்கம், கணினி, இணையம், கலை, இலக்கியம், விளையாட்டு, சிலம்பம், பரதம், நடனம், நாட்டியம், நாடகம், எழுத்து, பேச்சு என்று ஒரு மாணவன் என்னவெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டுமோ, அத்தனையும் ஒரே இடத்தில் பாகுபாடின்றி அத்தனை மாணவர்களுக்கும் கற்றுத் தரப் படுகிறது என்றால், அதுதான் முன்மாதிரிப் பள்ளி. அப்படியான இரு பள்ளிகள் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ளன.
அவற்றில் ஒரு அரசுப்பள்ளியான பச்சலூர் அரசுப் பள்ளி மாணவர்கள் தான் தமிழக முதலமைச்சரை "ஒருமுறை எங்கள் பள்ளிக்கும் வாருங்கள்' என்று அழைத்திருக்கிறார்கள்.
இந்தப் பள்ளிகள் பற்றி ஏற்கனவே நக்கீரன் செய்திகள், வீடியோக்களை வெளியிட்டிருக் கிறது. இத்தனை கட்டமைப்பு களையும் உருவாக்கி மாணவர்களைச் செதுக்கிவரும் தலைமை ஆசிரியர் ஜோதிமணி, 3 ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசின் "முதல் புதுமைப் பள்ளி' விருதை அப்போ தைய முதலமைச்சரிடம் பெற்றவர்.
2019-ஆம் ஆண்டு இடமாறு தல் பெற்று மாங்குடியிலிருந்து விடைபெற்று பச்சலூர் செல் லும்போது மொத்த மாணவ, மாணவிகளும் தலைமை ஆசிரியர் ஜோதிமணியை கட்டிப்பிடித்து, போக வேண்டாம் என்று கதறினார்கள் என்றால் மாணவர்களுக்கு அவர்மீதிருந்த நம்பிக்கையும் அன்பும் புரியும்.
இன்று பல பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும், இளைஞர்களுமாக தினமும் 500-க்கும் மேற்பட்டோர் பச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு கல்விச் சுற்றுலா வந்து பார்த்து வியப்பதுடன், தங்கள் ஊரிலும் இதுபோன்ற கட்டமைப்பை உருவாக்குவோம் என்று உறுதியேற்றுச் செல்கின்றனர்.
திருவரங்குளம் ஒன்றியம் வடகாடு புள்ளாச்சிகுடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இருபுறமும் சீராக வெட்டப்பட்ட செடிகளுக்கிடையே உள்ள நடைபாதை. வகுப்பறைகள், நடைபாதை, மைதானம், கலையரங்கம் என அனைத்துப் பகுதியிலுமுள்ள கண்காணிப்பு கேமராக்களின் திரை, தலைமை ஆசிரியர் அறையில். அனைத்து அறைகளையும் இணைத்து மைக், ஸ்பீக்கர். மொத்தத்தில் இது ஒரு கட்டுப்பாட்டு அறையாகத் திகழ்கிறது.
அருகிலுள்ள முழு ஏ.சி. வகுப்பறை, கணினி ஆய்வகம். ஒவ்வொரு வகுப்பறையிலும் ஸ்மார்ட் போர்டு, வெள்ளை போர்டு, (இங்கு சாக்பீஸ் பயன்படுத்துவதில்லை) ஃபில்டர் வாட்டர், சீப்பு கண்ணாடி, மாணவர் மனசு தபால் பெட்டி, மின்சாரம் நின்றாலும் கணினி இயக்கத்தை நிறுத்தாமல் இருக்க இன்வெர்ட் டர், புத்தகச் சுமையைக் குறைக்க மாணவர்கள் புத்தகம் வைக்க அலமாரி, மாணவர்களின் விளையாட்டுக்கான உடைகள்... இப்படி ஏராளம்.
ஒவ்வொரு செயலையும் செய்ய, கண்காணிக்க லீடர்கள். பள்ளி வளாகத்தை கூட்டும் துடைப்பங்கள்கூட அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மதிய உணவை ஒவ்வொரு மாணவரும் தங்கள் தேவைக்கேற்ப தாங்களே எடுத்துக்கொள்ளும் வசதி...… இப்படி ஒருநாள் முழுக்க பார்த்தும் முழுமையாக பார்க்க முடியவில்லை.
முதலில் மாங்குடி, இப்போது பச்சலூர்... இதுபோல எல்லா பள்ளிகளும் உருவாகவேண்டும் என்பதே நம் எண்ணம். அதனால் தான் தமிழக முதல்வரை ஒருமுறை வாருங்கள் அய்யா என்று அழைத்திருக்கிறார்கள் மாணவர்கள்.
கல்விப் பயணமாக பச்சலூர் வந்திருந்த எஸ்.ஏ. கருப்பையா, தமிழரசன் ஆகியோர் நம்மிடம், “"நாங்கள் தமிழகம் முழுக்க ஏராளமான பள்ளிகளைப் பார்த்திருக்கிறோம். ஒவ்வொரு பள்ளியிலும் ஏதாவது ஒரு சிறப்பு இருக்கும். இதுவரை இத்தனைச் சிறப்புக்களையும் கொண்ட ஒரு பள்ளியை வேறெங்கும் பார்த்ததில்லை. இதற்குக் காரணம் பள்ளித் தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள், பெற்றோர்கள்தான். அடுத்தது மாணவர்கள். எந்த மாணவனையும் அதட்டி வேலை வாங்கவில்லை.
பல பள்ளிகளில் ஏராளமான உபகரணங்கள் உள்ளன. அவை நாளடைவில் ஏதோ ஒரு அறையில் குப்பைகளைப்போல கிடக்கும். இங்கே அனைத்து உபகரணங்களையும் மாணவர்கள் பயன்படுத்துவதால் அவர்களும் சிறப்படைந்திருக்கிறார்கள், பொருளும் பழுதில்லாமல் உள்ளது. தமிழக முதலமைச்சர் உருவாக்க நினைக்கும் அரசுப் பள்ளி இதுதான். அதனால் பச்சலூர் பள்ளி மாணவர்கள் கோரிக்கை வைத்ததுபோல இந்தப் பள்ளிக்கு அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்களை முதலில் கல்விப் பயணமாக அனுப்பிப் பார்த்தபிறகு இதுபோல செயல்படுத்த நடவடிக்கை எடுக்கலாம்.
தலைமை ஆசிரியர் ஜோதிமணி முதலில் உருவாக்கிய மாங்குடி அரசுப்பள்ளி பற்றிய நக்கீரன் வீடியோவை டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் சக அதிகாரிகளிடம் காட்டி.. தமிழ்நாட்டில் ஒரு கிராமத் தில் குறைந்த செலவில் இத்தனை கட்டமைப்புடன் ஹைடெக் பள்ளியை எப்படி உருவாக்க முடிந்தது என்று விவாதித்தும் இருக்கிறார் என்பது இந்த ஆசிரியருக்குக் கிடைத்திருக்கும் பெருமை''’என்றனர்.