அதானி நிறுவனத்தின் மீதும் இந்திய பங்குச் சந்தை தலைவர் மாதவி புச் மீதும் ஹிண்டன்பர்க் நிறுவனம் கிளப்பிய குற்றச்சாட்டின் புழுதியே அடங்கவில்லை, அதற்குள் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் நிதிமோசடிக் குற்றச்சாட்டில் சிக்கி, செபியால் 625 கோடி அபராதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
இந்நிறுவனம் 2008-ல், வீட்டுக் கடன், கட்டுமானம் சம்பந்தப்பட்ட தொழில்களுக்காக கடன் கொடுப்பதற் காக தொடங்கப்பட்டது. இதன் நிதித் தேவைகளுக் காக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு, நிதி திரட்டப்பட்டது. ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் வழங்கிய மொத்தக் கடன் 14,500 கோடி. அதில் 12,500 கோடி வரை தனக்கு வேண்டப்பட்ட நிறுவனங்களுக்கே கொடுத்திருக்கிறது.
இந்த முறைகேடு விவகாரங்கள், 2018-வாக்கிலேயே நடந்துவிட்டன. இதில் 2,700 கோடியை வாராக்கடன் என்று சொல்லி கழித்தும்விட்டார்கள். ஆனால் இந்த நிறுவனத்துக்கு கடன்கொடுத்த நிறுவனங்களில் ஒன்றான பாங்க் ஆப் பரோடா, தனது சொந்த ஆடிட்டர்கள் மூலம் இந் நிறுவனத்தின் கணக்கை தணிக்கை செய்யும் போதுதான் விஷயம் அம்பலமானது. வெளிப்படையாக சம்பந்தப்பட்ட நிறுவனமே மோசடி செய்திருப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள்.
சரி, கண்டுபிடித்தாயிற்று என்ன செய்திருக்கிறது செபி?
ரிலையன்ஸ் நிறுவனமும், அம்பானி உள்ளிட்ட மோசடியாளர்களும் பங்குச் சந்தை பக்கம் வர ஐந்தாண்டுகளுக்கு தடைவிதித்திருக் கிறார்கள். அனில் அம்பானி முதல் அவரது நிறுவனத்தில் பணியாற்றிய மூத்த அதிகாரிகள், கடன் வாங்கிய நிறுவனங்கள் வரை ஒவ்வொரு வருக்கும் ஐந்து கோடி முதல் 25 கோடி வரை அபராதம் விதித்திருக்கிறார்கள். முன்னாள் ரிலையன்ஸ் பைனான்ஸ் அதிகாரிகள் அமித் பாப்னா, ரவீந்திர சுதால்கர், பிங்கேஷ் ஆர் ஷா ஆகியோருக்கு முறையே ரூ.27 கோடி, ரூ.26 கோடி, ரூ.21 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் யூனிகார்ன் எண்டர்பிரைசஸ், ரிலையன்ஸ் எக்ஸ்சேஞ்ச் நெக்ஸ்ட் எல்.டி., ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் லிமிடெட், ரிலையன்ஸ் கிளீன்ஜென் லிமிடெட், ரிலையன்ஸ் பிசினஸ் பிராட்காஸ்ட் நியூஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் பிக் என்டர்டெயின் மென்ட் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட மீதமுள்ள நிறுவனங்களுக்கு தலா ரூ.25 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை புரியும்படிச் சொன்னால், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸின் வலது கை கடன் கொடுக்கும். இடது கை கடன் தேவை என விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளும். கொஞ்ச நாள் கழித்து நட்டமாகிவிட்டது எனச் சொல்லி கடனைத் திரும்பக் கட்டமுடியவில்லை என நழுவிக்கொள்ளும். ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் இப்படியாக திரும்ப வராத கடன் என்று சொல்லி 2,700 கோடிக்கு அரசிடம் சலுகையும் பெற்றிருக்கிறார்கள்.
இதற்கான மாஸ்டர் மைண்ட் என அனில் அம்பானியை குறிப்பிட்டிருக்கிறது செபி. செபியின் 222 பக்க அறிக்கை, “அனில் திருபாய் அம்பானி குரூப்பைச் சேர்ந்த பல்வேறு கிளை நிறுவனங்களுக்கு இவர்கள் பெருந்தொகையை திட்ட மிட்டுக் கடனாக அளித்துள்ளார்கள். அது திரும்ப வரவில்லை. கடன் வாங்கியவர்களில் சிலர் குறைந்த வருவாயுடையவர்கள் அல்லது வருவாயே இல்லாதவர்கள். சிலருக்கு கடன் கேட்டு விண்ணப்பித்த அன்றே கடன் கொடுக்கப் பட்டிருக்கிறது, சிலருக்கு கடன் விண்ணப்பம் தரப்பட்ட தேதிக்கு முன்பேகூட கடன் அளிக்கப்பட்டிருக்கிறது என கணக்குகளை ஆடிட் செய்தவர்களின் கண்டுபிடிப்புகள் அம்பலப் படுத்தியிருக்கின்றன.
இன்னும் ஒரு வேடிக்கை என்னவெனில், கடன் கேட்டு அனுப்பப்பட்ட பல மின்னஞ் சல்களில் ரிலையன்ஸின் அடா குருப்பின் ரிலையன்ஸ் எனும் பெயர் இருந்திருக்கிறது, பல்வேறு கடன் விண்ணப்பதாரர்களின் அலுவலக முகவரிகள் ஒரே முகவரியாக இருந்திருக்கிறது அதாவது என்ன நடந்துவிடும் பார்த்துக் கொள்ளலாம் என்ற தொனியில் தவறைக்கூட முறையாகச் செய்யவில்லை. தெரிந்தே தவறு செய்திருக்கிறார்கள் என இந்த நிதி மோசடியைப் பற்றி விமர்சிக்கிறார்கள்.
முதலில் இது ஒரு பப்ளிக் லிமிடெட் கம்பெனி. அதாவது, மக்களிடம் நிதி திரட்டி நிறு வனத்துக்கான முதலீடு திரட்டப்பட்டிருக்கிறது. இவர்களது மோசடியின் மூலம், இந்த நிறுவனத்தின் பங்கை வாங்கிய லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் நட்டப்பட்டிருக்கிறார்கள். இரண்டாவதாக, கணிசமான தொகையை பொதுத்துறை வங்கிகளிலும் திரட்டியிருக்கிறார் கள். ஆக, இந்த மோசடியின் மூலம் பொதுத்துறை வங்கிகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த விவகாரத்தில் செபியின் நடவடிக்கை மிகத் தாமதம். அதுமட்டுமல்லாமல் இத்தனை பெரிய குற்றத்துக்கு வெறும் அபராதமும், ஐந்தாண்டு பங்குச் சந்தையில் ஈடுபடத் தடை என்பதும் மட்டும் போதாது. உண்மையில் இந்த விவகாரத்தை அனில் அம்பானி உள்ளிட்ட, ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸின் முக்கிய நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்தே செபி நடவடிக்கை எடுத்திருக்கவேண் டும். அதுதான் சரியான அணுகுமுறை! மாறாக, செபியின் தடைக்கு எதிராய் அனில் அம்பானி மேல்முறையீடு செய்திருக்கிறார்.
ஆட்சியின் உச்சத்தில் இருப்பவர்களின் கரிசனம் அதானி, அம்பானி மீது தொடரும்வரை தட்டிக் கேட்கவேண்டிய விஷயங்களை தடவிக் கேட்பதுதான் நடந்துகொண்டிருக்கிறது.