விருதுநகர் மாவட்டத்தில் மட்டுமல்ல.. தமிழகத்தில் வேறு மாவட்டங்களில் பட்டாசு வெடிவிபத்து ஏற்பட்டு மரணங்கள் நிகழ்ந்தாலும், இறந்தவரது குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டு, நிதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், “நிவாரணம் அறிவிப்பதில் மட்டுமே வேகம் இருக்கிறது. அந்த நிதியைப் பெறுவதற்குள் பட்டாசுத் தொழிலாளர் குடும்பங் கள் படும் அவஸ்தைகளைச் சொல்லி மாளாது’ என ஆதங்கத்துடன் நம்மைச் சந்தித்தார், சிவகாசியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ராஜேஸ்வரன்.
“கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி, சிவகாசி பக்கத்துல இருக்கிற விளாம்பட்டி மாடர்ன் பயர் ஒர்க்ஸ் வெடிவிபத்துல கருப்பசாமியும் தங்கவேலும் சம்பவ இடத்துலயே இறந்துட்டாங்க. வழக்கம்போல, ரூ.3 லட்சம் நிவாரணம்னு முதலமைச்சர் அறிவிச்சாரு. ஆனா.. அந்த ரெண்டுபேர் குடும்ப மும் நிதி கிடைக்காம கலெக்டர் ஆபீஸுக்கு மனு மேல மனு போட்டாங்க. நானும் அவங்ககூட போனேன். ரொம்ப அலையவிட்டாங்க. ஏன் இப்படி நடக்குதுன்னு கலெக்டர் ஆபீஸ்ல இருக்கிற எல் செக்ஷன்ல (விபத்து நிவாரண நிதி பிரிவு) கேட்டேன். அங்க ஒரு மேடம் சொன் னாங்க.. 2014ல் இருந்து 2023 வரைக்கும் பட்டாசு விபத்துல இறந்த 167 பேர் குடும்பத்துக்கு இன்னமும் நிவாரண நிதி கொடுக்கல. ஏன்னா.. வட்டாட்சியர், கோட்டாட்சியர் ஆபீஸ்ல இருந்து, இறந்தவரோட வாரிசுதாரர்கள் யார் யாருங்கிற சரியான தகவல் தரல. இன்னொரு விஷயம் என்னன்னா.. பட்டாசு விபத்து மரணங்களுக்கு அரசுத் தரப்புல இருந்து தனியா நிதி ஒதுக்குறது இல்ல. இறந்தவங்க குடும்பம் சளைக்காம அலைஞ்சாங்கன்னா.. நிதி கிடைக்கிறதுக்கு வாய்ப்பு இருக்குன்னு ரூட்ட சொன்னாங்க.
நாங்களும் விடாம அலைஞ்சோம். அப்ப அந்த ரெண்டு குடும்பத்துக்காக அதே எல் செக்ஷன்ல பேசும்போது, அதெல்லாம் சீனியாரிட்டி பிரகாரம்தான் இவங்களுக்கு பணம் வரும். கருப்பசாமி, தங்கவேலுக்கு முன்னால வெடிவிபத்துல இறந்தவங்க குடும்பங்கள் நெறய பெண்டிங்ல இருக்கும்போது, இவங்களுக்கு எப்படி உடனே தரமுடியும்?னு கேட்டாங்க.
இதுல இன்னொரு கொடுமை என்னன்னா.. நிவாரண நிதியை அமைச்சர் கையாலதான் கொடுக்கணும்னு ரொம்ப லேட் பண்ணுறாங்க. கொடுக்கிற நிதியை காலம் தாழ்த்தாம கொடுத்தா, இறந்தவங்க குடும்பத்துக்கு ரொம்ப உதவியா இருக்கும்ல. இதையெல்லாம் மனசாட்சியோட நினைச்சுப் பார்க்கிறது இல்ல. விபத்துல கருப்பசாமி யும் தங்கவேலும் இறந்து மூன்றரை மாசத்துக்கு பிறகுதான், தொடர்ந்து போராடுன ராஜேஸ்வரிக் கும் காளீஸ்வரிக்கும் செக் கொடுத்திருக்காங்க. ஆனா.. இறந்த எத்தனையோ தொழி லாளர்கள் குடும்பம் நிதியை எப்படி வாங்குறதுன்னு தெரியாம, அலையவும் முடியாம, நொந்துபோயி நிதி வாங்குற முயற்சியவே கைவிட்டுட்டாங்க.
நானும் தகவல் உரிமைச் சட்டம் மூலம் விபரங்கள் பெறுவதற்காக, சிவகாசி, விருதுநகரைச் சுற்றி எத்தனை பட்டாசு ஆலைகள் இருக்கு? எத்தனை தொழிலாளர்கள் வேலை பார்க்கி றாங்க? 2016-ல் இருந்து வெடிவிபத்துல இறந்தவங்க, காயப்பட்டவங்க விபரம்.. அரசு அறிவித்த நிவாரணத்தொகை, கிடைக்கப்பெற்ற வாரிசுதாரர் கள் விபரம்னு.. நெறய கேள்விகள் கேட்டிருந்தேன். அதுக்கு பொதுத்தகவல் அலுவலர்கிட்ட இருந்து எனக்கு என்ன பதில் வந்துச்சுன்னா.. ஒரு பொது அதிகார அமைப்பின் ஆதாரங்களை உரிய விகிதத்துல இல்லாம.. திசைதிருப்புற மாதிரி கேட்டதாவும், அன்றாட அலுவலகப் பணிகளுக்கு குந்தகம் விளைவிச்சதாவும், புதிதாக தகவல்களை உருவாக்கித் தரமுடியாதுன்னும் தெரிவிச்சு, உயிரோட்டமான என்னோட கேள்விகளை அலட்சியப்படுத்திட்டாங்க''’என்றார் பரிதவிப் புடன்.
விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி தனி தாசில்தார் ஸ்ரீதரிடம் பேசினோம். “"எல்லா வெடிவிபத்து உயிரிழப்புகளுக்கும் முதலமைச்சரிடமிருந்து நிவாரண நிதி அறிவிப்பு வராது. 10 பேருக்கு அறிவிப்பு வரும். 10 பேருக்கு வராது. அறிவிப்பு வராத கேஸ்களுக்கு, இறந்தவங் களோட வாரிசுதாரர் விபரங்களோடு, உரிய சான்றிதழ்களை இணைத்து, முதலமைச்சர் நிவாரண நிதி வழங்குறதுக்கு பரிந்துரைத்து அனுப்புவோம். பட்டாசு விபத்து மரணங்களுக்கு தனி நிதி ஒதுக்கீடு இல்லை. 167 குடும்பங்களுக்கு நிவாரணம் கிடைக்கலைன்னு சொல்லுறது என்ன கணக்கோ? இந்த அளவுக்கு பென்டிங் இருக்கிறதுக்கு வாய்ப்பே இல்ல. முதலமைச்சர் அறிவித்தும் நிதி கிடைக்காத குடும்பங்கள் எதுவும் இருக்காது''’என்று உறுதியாகச் சொன்னார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தரப்பிலோ "அமைச்சர் கையால்தான் நிதி தருவோம் என்று ஒருபோதும் தாமதப்படுத்துவதில்லை. அமைச்சர் தொடர்ந்து பிஸியாக இருந்தால், கலெக்டரே சம் பந்தப்பட்ட குடும்பத்தினர் கையில் காசோலை யைக் கொடுத்துருவாரு''’என்று சொன்னதோடு, சில புகைப்படங்களையும் காண்பித்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அரசு அலுவலகங்களில் தாமதங்களும் வீண் அலைக்கழிப்புகளும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்''’என்று கூறியும் கூட, அரசு அலுவலர்கள் பலரும், மக்களிடம் தங்களது வழக்கமான முகங்களையே காட்டிவருவது வேதனை யளிக்கிறது.