ர்வதேச அளவில் காலணி ஏற்றுமதியில் ஈடுபட்டிருக்கும் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், ஃபரீதா குழுமத்திற்குச் சொந்த மான 20 இடங்களில் வருமான வரித்துறை கடந்த ஆகஸ்ட் 23 முதல் 27 வரை 5 நாட்கள் சோதனை நடத்தியது. பெரியள வில் சோதனை நடத்திவிட்டு வழக்கமாக மீடியாக்களுக்கு தரும் செய்திக் குறிப்பைக்கூட வருமான வரித்துறை வெளியிடவில்லை.

இந்நிலையில், ஃபரீதா குழுமத்துக்குச் சொந்தமான ஆம்பூர் சின்ன வரிகத்திலுள்ள ஒரு தொழிற் சாலையில் செப்டம்பர் 26-ஆம் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தொழிற்சாலை 5 யூனிட்கள் கொண்டது. 20,000, 50,000 சதுரஅடிகள் கொண்ட இரு குடோன்கள் எரிந்துள்ளன. திருப்பத்தூர், வேலூர், இராணிப் பேட்டை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவைக்கப்பட்டு 100-க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீ அணைப்பதில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., ஆம்பூர் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரடியாக வந்து தீயை அணைக்கும் பணியை வேகப்படுத்தினர். 12 மணி நேரத்துக்குப் பின்பே தீ அணைக்கப்பட்டது.

ff

இதுகுறித்து ஆம்பூர் தொழிலதிபர்கள் வட்டாரங்களில் பேசியபோது, "ஃபரீதா குழுமம் காங்கிரஸ், தி.மு.க. தலைமைக்கு நெருக்கமானது. கே.எச். நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவர் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான சிதம்பரத்துடன் படித்தவர். இந்தியாவில் முக்கிய காலணி ஏற்றுமதி தொழிலதிபர்கள். இவர்கள் 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸுக்கு தேர்தல் நிதி தருவார்கள் என நினைத்தே ரெய்டு நடத்தியது. மற்றொரு காரணம், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னைக்கு அருகில் தோல் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கியுள்ளார். அதனை டெவலப் செய்யவும், அந்த நிறுவன வளர்ச்சிக்காகவும் உலகம் முழுவதும் பிஸினஸ் செய்யும் மற்ற நிறுவனங்களுக்கு நெருக்கடி தருகிறார்களோ எனவும் சந்தேகிக்கிறோம்''’ என்கிறார்கள்.

இது விபத்தா, திட்டமிட்ட சதியா என்கிற சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 3 ஷிப்டும் செயல்படும், சுமார் 2000 தொழிலாளர்கள் வேலை செய்யும் தொழிற்சாலை இது. காலணி பாட்டம் தயாரிக்கும் யூனிட்தான் தீப்பிடித்து எரிந்துள்ளது. தொடக்கத்திலேயே தொழிலாளர்கள் தீயை அணைக்க முயற்சித்தும் முடியவில்லை. பல கோடி மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து கருகியுள்ளன. தீ, வேஸ்டேஜ் குடோனில் பிடித்தது, கெமிக்கல் குடோனில் உருவானது என மாற்றிமாற்றி தகவல் சொல்கிறார்கள்.

இது எப்படி நடந்தது என அறிய தொழிற் சாலையில் பதிவான சி.சி.டி.வி. பதிவுகளைக் கேட்கிறது காவல்துறை, நிறுவனத் தரப்பிலிருந்து தரமறுப்பதாகக் கூறப்படுகிறது. முழுமையாக தீ இன்னும் அணையவில்லை, ஆடிட்டரை வைத்து கணக்கு பார்த்துவிட்டு அதன்பின் புகார் தருகிறோம் என்கிறார்களாம். இதுகுறித்து வருமானவரி புலனாய்வுப் பிரிவும் விசாரிக்கிறது.

Advertisment