மக்களை தங்கள் கையாலே, தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ளச் செய்யலாம். கண்ணை குத்திக் கொள்ள வைக்கலாம். வீட்டிலும் வங்கியிலும் நிலமாகவும் பொன்னாகவும் வைத்திருக்கும் பணத்தை கொண்டுவரச் சொல்லி பட்டை நாமம் போட்டுவிடலாம். இதற்கெல்லாம் அதிகமாக எதுவும் செய்யவேண்டியதில்லை. அவர்களின் ஆசையைத் தூண்டி விட்டால் போதும். பேராசைக் குப் பலியாகி ஆண்டாண்டுக் காலமாக சேர்த்த சொத்துக்களை இழந்த இன்னொரு கதை இது.
தமிழகம் முழுவதும் இருந்தும் திருச்சி எல்பின் நிறுவனத்தின் மீது புகார்கள் வந்து குவிந்துகொண்டிருக்கின்றன. வழக்குப் பதிவு செய்வதில் காவல்துறை திணறிவருகிறது.
பலரும் லட்சங்களில் ஏமாந்திருக்க, தற்போது கோடியில் ஏமாந்து நிற்கும் இளை ஞர் மிதுன் கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.
12 ஆயிரம் கட்டினால் மளிகைச் சாமான்கள், சமையலறைப் பொருட்கள் என்பது உள்ளிட்ட பல கவர்ச்சிகரமான திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து அவர்களை ஆசை வலையில் விழ வைத்துள்ளனர். அதேபோல் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 10 மாதங்களுக்கு மாதம் 10 ஆயிரம் தவணை முறையிலும், எல்பின் நிறுவனத் தலைவரின் பிறந்தநாள் அன்று (மே 15) 4 லட்சம் என மொத்தம் 5 லட்சம் வழங்கப்படும் என்ற இந்த அறிவிப்பை நம்பி டெல்டா மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பல கோடிகளை முதலீடு செய்து ஏமாந்திருக்கின்றனர்.
மிதுன், கடந்த 2019-ல் ஆரம்பித்து 2021 மார்ச் வரை கொஞ்சம் கொஞ்சமாக சுமார் 73 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். தன்னுடைய நண்பர்கள், உறவினர்கள் என்று பலரிடமும் இந்த நிறுவனத்தைக் குறித்து சொல்லி அவர்களையும் முதலீடு செய்ய வைத்திருக்கிறார். மொத்தம் 2 கோடியே 18 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அந்த பணம் குறித்து திரும்ப கேட்டபோது, அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி இன்று காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.
அவர் புகார் கொடுத்த ஒருசில நாட்களிலேயே, ஒரு காலத்தில் காவல் துறைக்கே கடுக்காய் கொடுத்து மிரள வைத்த பிரபலமான சிவகாசி ஜெயலட்சுமி, தானும் ஏமாற்றப்பட்டதாக மன்னார்புரத்தில் அமைந்துள்ள எல்பின் நிதி நிறுவனத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தனக்கு அந்த நிறுவனம் அல்வா கொடுப்பது பற்றி விளக்கிய ஜெயலட்சுமி, “முதலில் நான் உறுப்பினராக பணம் கட்டி இந்த நிறுவனத்தில் சேர்ந்தேன். அதன்பின் நூற்றுகணக் கானவர்களை இந்த நிறுவனத்தில் உறுப்பினராக்கி உள்ளேன். இதுவரை என் சார்பில் 3.50 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
நான் செலுத்திய பணமனைத்தும் 2 வருடத்தில் முதிர்வடைந்து கட்டிய பணத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாகக் கிடைக்கும் என்று கூறினார்கள். ஆனால் இதுவரை எந்த பணமும் திருப்பித் தரப்படவில்லை. அவர்கள் கொடுத்த காசோலையும் ரிட்டர்னாகிவிட்டது. என்னுடைய பணம் திரும்ப கிடைக்கும்வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று கூறியவரை நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், பேசி சமாதானம் செய்து பணத்தை ஏற்பாடுசெய்து தருவதாகக் கூறி கால அவகாசம் கோரியுள்ளனர்.
எல்பின் நிறுவனத்தின் மீது பொருளாதார குற்றப்பிரிவிற்கு இதுவரை 55 புகார்கள் வந்துள்ளன. அதில் பெரும்பாலான புகார்கள் பதிவுத் தபால் மூலம் பெறப்பட்டுள்ளது. அனைத்து புகார்கள் தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப் பட்டுள்ள நிலையில்... அந்நிறுவனத்தின் தலைவர் ராஜா மற்றும் மேலாண் இயக்குநர் ரமேஷ் ஆகிய இருவரும் முன்ஜாமீன் பெற்றுள்ளனர்.
இதே பண மோசடி வழக்கில் மயிலாடுதுறை, திருப்பூர் கிளை தலைவர்கள் உள்பட இந்நிறுவனத்தின் ஏஜென்டுகள் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் பணமோசடி செய்த இந்நிறுவனத்தின் கிளை அதிகாரிகள், ஏஜென்ட்டுகள் கைது செய்யப் பட்டுள்ளனர். நிறுவன உரிமையாளர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
காவல்துறை தரப்பில் செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்து புகார் கொடுக்க அழைப்பு விடுத்தும் பலர் முன்வரவில்லை. பாதிக்கப்பட்டவர்களை தொலைபேசியில் அழைத்த அந்நிறுவனத்தினர், புகார் கொடுத்தால் பணம் திருப்பித் தரமாட்டோம் என்று கூறுவதால் பலர் புகார் கொடுக்க முன்வரவில்லை.
திருச்சி காவல்துறை ஆணையர் மற்றும் மத்திய மண்டல காவல்துறை தலைவர் அலுவலகங்களில் கொடுக்கப்பட்டுள்ள புகார்கள், பொருளாதார குற்றப்பிரிவிற்கு கொண்டுவரப்பட்டு முழுமையாக விசாரணையை துவங்க உள்ளதாக, காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. திருச்சி மாவட்ட கமிஷனர் அருண் கவனத்துக்கு இந்த மோசடி விவகாரம் வந்துள்ள நிலையில், “"தவறு செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது'’என்று உறுதியளித்துள்ளார்.