மோசடிக் கும்பலால் அல்லாடும் ஐம்பொன் சிலை!
பழனிமலை முருகனின் ஐம்பொன் சிலை மோசடி வழக்கில் ஸ்தபதி முத்தையா, கோவில் இணைஆணையராக இருந்த ராஜா உட்பட நான்குபேரை கைது செய்தார் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல். அறநிலையத்துறை ஆணையராக இருந்த தனபாலையும் வீட்டுக் காவலில் வைத்து விசாரித்துவரும் ஐ.ஜி., அரசு தரப்பிலிருந்து இந்த வழக்கிற்கு இடைஞ்சல் வருவதாகவும் கோர்ட்டிலேயே தெரிவித்தார். ஐம்பொன் சிலை மோசடி வழக்கு கும்பகோணம் கோர்ட்டில் நடந்து வருவதால், ஏ.டி.எஸ்.பி. ராஜாராம் தலைமையிலான போலீஸ் படை கடந்த 11-ஆம் தேதி பழனிக்கு வந்தது. கோவிலின் இணை ஆணையர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் யாகபூஜை செய்தபின், ஐம்பொன் சிலையின் எடையும் சரிபார்க்கப்பட்டு, பக்காவாக பேக்கிங் செய்தபின் கும்பகோணம் கொண்டு செல்லப்பட்டார் பழனி முருகன். நீதிபதி முன்பாக பேக்கிங்கை பிரித்து சிலையை ஒப்படைத்தனர் போலீசார். கோர்ட் உத்தரவுப்படி, திருநாகேஸ்வரத்தில் இருக்கும் பாதுகாப்பு வைப்பறையில் பழனிமுருகன் ஐம்பொன் சிலை வைக்கப்பட்டுள்ளது.
-சக்தி
நெல்லை பதற்றம்!
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையில் 8-ந் தேதி நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது ஆதரவாளர்களுடன் சென்றார் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன். அதே திருமணத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்திருந்தார் பசுபதி பாண்டியன் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளர் கண்ணபிரான். திருமண வீட்டில் பசுபதி பாண்டியனின் ஃப்ளக்ஸ் போர்டும் ஜான்பாண்டியனின் ஃப்ளக்ஸ் போர்டும் ஒரே சைஸில் இருந்துள்ளன. இதனால் இரு தரப்பும் டென்ஷனாகி கைகலப்பில் இறங்கியது. பின்னர், திருமணம் முடிந்து ஊர் திரும்பும்போது ஆழ்வார்திருநகரி அருகே ஜான்பாண்டியனின் கார் வரிசை மீது கற்களை வீசித்தாக்கியுள்ளனர். ஆனாலும் கோபம் குறையாமல், அன்றைய தினம் இரவு 7:30 மணியளவில், ஜான்பாண்டியனின் வீட்டில் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுத் தப்பிவிட்டனர். பதற்றம் அதிகமானதை அடுத்து, உதவி கமிஷனர் கிருஷ்ணசாமி தலைமையிலான தனிப்படை, கண்ணபிரானையும் பாலமுருகனையும் கைது செய்தது. “வழக்கு ஒன்றிற்காக அடுத்தவாரம் நெல்லை கோர்ட்டுக்கு சுபாஷ் பண்ணையார் வருவதால் போலீஸ் தரப்பு கூடுதல் பதட்டத்தில் உள்ளது.
-பரமசிவன்
தேர்தலுக்கு ரெடியாகும் தி.மு.க.!
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு, 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தீர்ப்பு எப்படி வந்தாலும், எடப்பாடி ஆட்சி நீடிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை என்பது மு.க.ஸ்டாலினின் கணிப்பு. அதனால் தி.மு.க.வின் அடித்தளமான பூத் கமிட்டியை ஸ்ட்ராங்காக அமைக்கும் பணியையும் ஆரம்பித்துள்ளார். இந்தப் பணியை மேற்கொள்ள கோவி.செழியன், தாயகம் கவி, டி.ஆர்.பி.ராஜா, அன்பில் மகேஷ், இ.கருணாநிதி, எழிலரசன், ஆஸ்டின், இன்பசேகரன், ஈஸ்வரப்பா, ரவிச்சந்திரன், கார்த்திகேயன், செங்கம் கிரி ஆகிய 12 பேர் அடங்கிய குழுவை அமைத்து, அவர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தக் குழுவினருக்கு 40 எம்.பி. தொகுதிகளையும் பிரித்துக் கொடுத்துள்ள ஸ்டாலின், எல்லா தொகுதிகளுக்கும் விசிட் அடித்து, முறையான பூத் கமிட்டி இருக்கிறதா, இல்லை ஏனோதானோவென இருக்கிறதா என்பதை கண்காணித்து ஆகஸ்ட்டுக்குள் பட்டியல் தரும்படி கூறியுள்ளாராம். அந்தக் குழுவினர் கொடுக்கும் லிஸ்ட்படி மா.செ.க்கள், ந.செ.க்கள், கி.செ.க்கள் மீது ஆக்ஷன் பாயலாம் என்பதுதான் உ.பி.க்கள் மத்தியில் பரவலாக ஓடிக்கொண்டிருக்கும் பேச்சு.
-ஜீவாதங்கவேல்