மிரட்டல் கடிதம்!

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இரண்டு விதமான தீர்ப்புகளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழங்கியபோது, "சபாநாயகரின் உத்தரவு ‘செல்லாது' என தீர்ப்பளித்தவர் நீதிபதி எம்.சுந்தர். இந்நிலையில், "குடும்பத்துடன் கொல்லப்படுவீர்கள்' என அவருக்கு மிரட்டல் கடிதம் சென்றிருக்கிறது. இந்தத் தகவல் ஊடகங்களில் வெளியான நிலையில், வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் இதனைத் தெரிவிக்க, சுந்தர் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

Advertisment

judges

"சுந்தருக்கு மட்டுமல்ல, மூன்றாவது நீதிபதி சத்யநாராயணாவுக்கும் சேர்த்தேதான் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது' என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சூசகமாக தெரிவித்திருப்பது, அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-ஜீவாபாரதி

அமைச்சர் பறக்கவிட்ட சமாதானக் கொடி!

"பிஸ்கோத்து கணக்கு! பட்டாசு லஞ்சம்! கலெக்டர் - டி.ஆர்.ஓ. மோதல்!'’ என்னும் தலைப்பில் கடந்த ஜூலை 7-10 இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். விருதுநகர் மாவட்டம் முழுவதும், இச்செய்திக்கான நக்கீரன் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இது தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கண்ணில்பட, கடந்த 7-ஆம் தேதி, விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானத்தையும், விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தகுமாரையும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகைக்கு அழைத்தார். ""மாவட்டத்தில் முக்கிய பொறுப்புகளை வகிக்கும் அதிகாரிகளாகிய உங்களுக்குள் மோதல் வரலாமா? நன்றாக செயல்படக்கூடியவர் சிவஞானம் என்பதால், இந்த மாவட்டத்துக்கு அவரே கலெக்டராக வரவேண்டும் என்று நான்தான் முயற்சி எடுத்து கொண்டுவந்தேன். ஒரு நல்ல கலெக்டரோடு இணைந்து பணியாற்றுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்கு முதல்வர் வருகிறார். ஒற்றுமையாக செயல்படுங்கள்''’என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம், தற்காலிகமாக கலெக்டருக்கும் டி.ஆர்.ஓ.வுக்கும் இடையில், சமாதானக் கொடியைப் பறக்கவிட்டிருக்கிறார் அமைச்சர்.

-சி.என்.இராமகிருஷ்ணன்