பா.ஜ.க. தூண்டுதலால் பத்திரிகையாளர் கைது!

திருவாரூர் மாவட்டம் -முத்துப்பேட்டை, ஆசாத் நகர் பகுதியிலுள்ள மீன் சந்தையால் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் இடையூறு ஏற்படுவதாகக் கூறி, ஜூன் 20-ம் தேதி முதல் ஹெச்.ராஜா தலைமையில் போராட்டம் நடத்தப்போவதாக பா.ஜ.க.வினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த, "மாலை முரசு' தொலைக்காட்சியில் சப்-எடிட்டராகப் பணிபுரியும் ஜகுபர் அலியின் மகன் நூருல் அகமது இந்தப் போராட்டத்தை தனது முகநூல் பக்கத்தில் விமர்சித்திருந்தார்.

அந்தப் பதிவில், ""போராட்டம் நடத்தும் அனைவரையும் சமூக விரோதிகள், பயங்கரவாதிகள் என விமர்சித்து வந்த பா.ஜ.க.வினரே போராட்டம் நடத்துவது பலருக்கு நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. சாகும்வரை உண்ணாவிரதமிருப்பார்களா,…இல்லை சாக்குப்போக்குச் சொல்லி இடையிலே முடிப்பார்களா’எனவும் குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

இதற்கெதிராக பா.ஜ.க. மாவட்டத் தலைவர் மாரிமுத்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, ரம்ஜானுக்கு ஊருக்கு வந்திருந்த நூருல்அகமதை கைது செய்து விசாரித்து, இரவு 10 மணிக்கு அவரது சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளது காவல்துறை.

-இரா.பகத்சிங்

அனில் அகர்வால்தான் முதல் குற்றவாளி! -மேதா பட்கர்

Advertisment

தூத்துக்குடி வந்த சமூகவியல் செயல்பாட்டாளரான மேதாபட்கர், ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்திப் போராடிய மக்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதலில் காயம்பட்டவர்களை, அரசு மருத்துவமனையில், சந்தித்து ஆறுதல் சொன்னார்.

பின்னர் நம்மிடம்...

""மகாராஷ்ட்ராவின் ரத்னகிரியிலும், ஒடிசாவின் பூரியிலும் விரட்டப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்தில் சட்டவிதிகளுக்கு முரணாக அனுமதிக்கப்பட்டதற்குக் காரணமே மத்திய மாநில அரசுகள்தான். தங்களின் வாழ்வாதாரத்திற்காகப் போராடிய அப்பாவி மக்கள் போலீசால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்கள், சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். இதில் சமூக விரோதிகளோ, நக்சலைட்டுகளோ ஈடுபடவில்லை. இதில் முதல் குற்றவாளியே அனில் அகர்வால்தான். தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்திற்கு இந்தச் சம்பவத்தைக் கொண்டுசெல்வேன்'' என்கிறார் மேதாபட்கர்.

-பரமசிவன்