ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி 28-ஆம் தேதி அதிகாலை காலமானார். ஈரோடு அருகே உள்ள பூந்துறை என்கிற கிராமம்தான் இவரது பூர்வீகம். தி.மு.க. விலிருந்து வைகோ பிரிந்துவந்தபோது வைகோவுக்கு தளபதியாக நின்றவர் கணேசமூர்த்தி. ஒருமுறை எம்.எல்.ஏ., மூன்று முறை எம்.பி. என மக்கள் பணியிலும் சிறந்து விளங்கியவர். ஈழ ஆதரவு நிலைப்பாட்டுக்காக ஜெயலலிதா ஆட்சியில் வைகோவுடன் கணேசமூர்த்தியும் பொடா சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டார்.
கடந்த 24-ஆம் தேதி, மன உளைச்சல் காரணமாக விஷமருந்தியதால், ஈரோடு தனியார் மருத்துவமனையிலும், அடுத்து கோவையிலுள்ள கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையிலும் அட்மிட் செய்யப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி 28-ஆம் தேதி உயிர் பிரிந்தது. கணேசமூர்த்தியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த கோவைக்கு விமானம் மூலம் வந்த வைகோ, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, "எம்.பி சீட் கிடைக்காததால்தான் தற்கொலை செய்துகொண்டார் என்று சொல்வதில் ஒரு சதவிகிதம் கூட உண்மையில்லை. "தி.மு.க. 2 சீட் ஒதுக்கினால் எனக்கு வாய்ப்பளியுங்கள். ஒரு சீட் கொடுத்தால் துரை.வைகோ நிற்கட்டும்' என்றுதான் கணேசமூர்த்தி கூறியிருந்தார். கணேசமூர்த்தியின் இறப்பு தலையில் இடி விழுந்ததுபோல் இருக்கிறது. கொள்கையும் லட்சியமும் பெரிது என வாழ்ந்தவர் கணேசமூர்த்தி'' என்று குறிப்பிட்டார். பின்னர், கணேசமூர்த்தியின் உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி செலுத்தினார். கணேசமூர்த்தியின் மறைவு தமிழ்த் தேசியவாதிகள் பலருக்கும் மிகுந்த துயரத் தைக் கொடுத் திருக்கிறது.
-ஜீவாதங்கவேல்
தமிழகத்தில் வேட்புமனுத் தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. தேர் தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். மொத்தம் 1403 மனுக்கள். அதிகபட்சமாக கரூர் தொகுதி யில்தான் 62 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை 28-ந் தேதி தேர்தல் ஆணையம் பரிசீலித்தது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் தனித்தனி தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதால் அவர்கள் முன்னிலையில் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில், உரிய விதிகளின்படி விண்ணப்பம் பூர்த்தி செய்யப் படாதது, தேவையான டாகுமென்டுகள் இணைக்காதது என பலரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த நிலையில், இரண்டு இடத்தில் வாக்குரிமை இருப்பதாகச் சொல்லி, சேலம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் மனுவை நிறுத்தி வைத்தார் தேர்தல் அதிகாரி. இந்த சம்பவம் தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தியது!
-இளையர்
கோவையில் பா.ஜ.க.வில் களமிறங்கிய அந்த நபரின் மனைவியின் சொத்து மதிப்பாக ரூபாய் இரண்டரைக் கோடி என்று குறிப்பிட்டிருக்கிறார்களாம். அதே நபர் கடைசியாக கரூரில் போட்டியிட்டபோது, மனைவியின் சொத்து மதிப்பாக 89 லட்ச ரூபாய்தான் காட்டப்பட்டதாம். இந்த இடைப்பட்ட காலத்தில் இந்த சொத்து மதிப்பு எப்படி இந்த அளவுக்கு உயர்ந்தது என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.
-பிரகாஷ்