தி.மு.க. கூட்டணியில் உள்ள ம.தி.மு.க., "இந்த முறை 1 லோக்சபா, 1 ராஜ்யசபா சீட் ஒதுக்க வேண்டும்; உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடமாட்டோம்; தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம்' என தி.மு.க.விடம் தெரிவித்தது. இதை ஏற்காத தி.மு.க., ஒரே ஒரு லோக்சபா சீட்தான், அதுவும் உதயசூரியன் சின்னம் தான் என அழுத்தம்திருத்தமாக சொல்லிவிட்டது. வைகோ அப்-செட்டானார். இதனையறிந்து வைகோவுக்கு தூது அனுப்பினார் எடப்பாடி பழனிச்சாமி. இதனால் தி.மு.க.-ம.தி.மு.க. கூட்டணி முறிகிறதா? என அரசியலில் பரபரப்பு பரவிய நிலையில், ம.தி.மு.க.வின் அவசர செயற்குழுக் கூட்டத்தை 07-03-24-ல் கூட்டி விவாதித்தார் வைகோ. தி.மு.க.வுடன் நடந்த பேச்சு வார்த்தை விவகாரங்களை விவரித்துப் பேசிய வைகோ, "கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டித்தான் சொந்த சின்னத்தில் (பம்பரம்) போட்டியிட விரும்புவதை தி.மு.க.விடம் தெரிவித்தும் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்'' என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். அ.தி.மு.க.விடமிருந்து வரும் ஆஃபர் குறித்தும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், "கூட்டணி குறித்து எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்கவேண்டாம். தி.மு.க.வின் இறுதி முடிவு தெரிந்தபிறகு நம் நிலைப்பாட்டைத் தெரிவிப்போம்" என செயற்குழுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

dd

இதற்கிடையே ம.தி.மு.க.வுக்கு லோக்சபா, ராஜ்யசபாவில் தலா ஒரு சீட் வழங்கவும், தனிச் சின்னத்தில் போட்டியிட அனுமதியளித்தும் தி.மு.க. முடிவெடுத்திருப்பதாக அறிவாலயத் தரப்பில் சொல்லப்படுகிறது.

தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடுகள் இன்னும் முடிவுறாத நிலையில், தி.மு.க. தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார் முதல்வர் ஸ்டாலின். இழுபறிக்கான காரணத்தை தொகுதிப் பங்கீட்டுக் குழு விவரித்ததைக் கேட்ட ஸ்டாலின், சிலவற்றை அறிவுறுத்தியுள்ளார். இதற்காக சென்னை அறிவாலயம் வந்த முதல்வர், தி.மு.க.வின் முன்னாள் பொதுச்செயலாளர் மறைந்த பேராசிரியர் அன்பழகனின் நான்காம் ஆண்டு நிறைவு நாளை யொட்டி அவரது புகைப்படத்துக்கு மலரஞ்சலி செலுத் தினார். மு.க.ஸ்டாலினை தொடர்ந்து தி.மு.க.வின் மூத்த தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

-இளையர்

தி.மு.க. முன்னாள் துணை பொதுச்செயலாளர் சற்குணபாண்டியனின் மருமகளும், தி.மு.க. மாநில பிரச்சாரக் குழுவில் பொறுப்பு வகித்தவருமான சிம்லா முத்துச்சோழன், வியாழன் (7-3-2024) அன்று காலையில் எடப்பாடியை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தார். இவர் 2016ல் ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெ.வை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்.

Advertisment

fd

சமீபத்தில் மா.செ.வாக ஆர்.டி.சேகர் நியமிக்கப்பட்டதிலிருந்து வடசென்னை தி.மு.க.வில் சலசலப்பு எழுந்தபடியேயிருக்கிறது.

-கீரன்