திராவிட இயக்க இதழியல் வரலாற்றில் அடுத்தகட்டப் பாய்ச்சலாக, தி.மு.க. இளைஞரணி சார்பில் கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தையும், திராவிட இயக்க ஆய்வுகளைச் செழுமைப்படுத்த இளம் ஆய்வாளர்களுக்கான நிதி நல்கைத் திட்டம் ஆகியவற்றை வியாழக்கிழமை (07-08-2025) அறிவாலயத்தில் தொடங்கி வைத்து முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் 8 புதிய நூல்களை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். துணைமுதல்வர் உதயநிதி தலைமையில் நடந்த இந்த விழாவில், முதல்வர் வெளியிட்ட நூல்களை அமைச்சர் துரைமுருகனும், கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தின் இலச்சினையை நக்கீரன் ஆசிரியரும், கலைஞர் நிதிநல்கைத் திட்டத்தின் இலச்சினையை திராவிட இயக்க ஆய்வாளர் சு.திருநாவுக்கரசும் பெற்றுக்கொண்ட னர்.
இதற்கு முன்னதாக, கலைஞரின் 7-ஆம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. அண்ணாசாலையிலுள்ள கலைஞரின் சிலைக்கு கீழே அலங்கரிக்கப்பட்டிருந்த கலைஞரின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் ஸ்டாலின். அவரது தலைமையில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலிருந்து கலைஞர் நினைவிடம்வரை அமைதிப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. தி.மு.க.வின் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என பலரும் கலந்துகொண்டனர். தமிழகம் முழுவதும் கலைஞரின் நினைவு நாளை அனுஷ்டித்தனர் தி.மு.க. உடன்பிறப்புகள்.